வியாழன், 16 ஜனவரி, 2014

நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா...!

                       ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன். எம்.ஜி.ஆருக்கே மரணமா...? எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது. காற்று - சமுத்திரம் - வானம் - எம்.ஜி.ஆர் இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு. அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது. 
             47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா...? இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன். "நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா...! உனக்கா மரணம்?" என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது. முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் - படபடவென்று வளர்ச்சி - மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி - அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி ! அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது - ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். 
                ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் ....... இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ; எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள். கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன். உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன். உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன். நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் உங்கள் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன். ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன். 
           பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் "நாடோடி மன்னன்" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன். "மன்னனல்ல மார்த்தாண்டன்" என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன். பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை. நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைத்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள். என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும். 
            இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள்; விறுவிறுப்பாய் விலைபோயிற்று. உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம். காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம். பொருளாதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான். இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான். அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை. அவனது வீரம் காயடிக்கப்பட்டது; காதல் கருவறுக்கப்பட்டது. இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன. நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள்; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன. வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன் என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான். 
கவிஞர் வைரமுத்து , எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த போது...!

கருத்துகள் இல்லை: