சனி, 14 ஜனவரி, 2012

மொத்தத்தில் உங்கள் ஆட்சியே ஒரு அவமானம் தான் மிஸ்டர் மன்மோகன் சிங்..!

                    பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பு ஆகியவற்றுக்கு எதிரான குடிமக்கள் அமைப்பின் ஆய்வு அறிக்கையை சென்ற செவ்வாய்க்கிழமை  10 - ஆம் தேதியன்று புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். இந்தியாவில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 42 விழுக்காட்டினர், ஊட்டச் சத்துக் குறைபாடுகளுடன் எடை குறைவாக இருப்பதாகவும், இவர்களில் 59 விழுக்காட்டினர் உடல்வளர்ச்சிக் குன்றியவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு  பிரதமர் மன்மோகன் சிங் பேசிய போது நம் நாட்டில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன்  பிறப்பதென்பது  ஒரு தேசிய அவமானம் என்று தெரிவித்தார்.  இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான விஷயம் பாருங்கள். ஒரு நாட்டை ஆளும் பிரதமரே இப்படி பேசியிருக்கிறார் என்பது மட்டுமல்ல. கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பிரதமருக்கு இப்போது தான் இது  தெரிகிறது என்றால்  இதை விட ஒரு வெட்கக்கேடான விஷயம் வேறு இருக்கமுடியாது என்று தான் சொல்லவேண்டும். 
              மன்மோகன் சிங்கின் இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஆரம்பக் காலம் தொட்டே நாடு தாறுமாறாகத் தான் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டையே உலுக்கிய ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்ட இந்திய கருப்புப்பணம்,
தாறுமாறான விலைவாசி உயர்வு, பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கு மானியம் மற்றும்  வரிச்சலுகைகள் , சாதாரண மக்களுக்கு வருமானம் கூடாமல் வரிச்சுமைகள் மட்டும்  கூடுவது, சீரழிந்து போகும் போத விநியோகமுறை  போன்ற இவைகளெல்லாம்  நாட்டின் அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 
            அதிகரித்துக்கொண்டேப் போகும் வேலையில்லாத் திண்டாட்டம், தேவைக்கேற்றாற்போல் உயராத ஊதியம், விண்ணைமுட்டும் விலைவாசி, கூடிக்கொண்டேப் போகும் வரிச்சுமைகள் - இவைகளினால் வாங்கும் சக்தி குறைந்து,  வறுமையும், வறியவர்களும் அதிகரித்துக்கொண்டே  போகின்றனர். வறுமையில் உள்ளவர்கள் மேலும் கடுமையான வறுமைக்குத் தள்ளப்படுவது தான் 59 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல், உடல்வளர்ச்சிக் குன்றி நோஞ்சான் குழந்தைகளாய் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். இதை பிரதமர் மன்மோகன் சிங் அறியாததல்ல. வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆகவேண்டும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவேண்டும். இது தான் அவர் ஆட்சியின் கொள்கையாகும். இது இந்த ஆட்சியின் அவமானமில்லையா..? 
                         இது மட்டுமல்ல, மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் பசியில் வாடும் மக்களுக்கு கிடைக்காமல் மக்கிப்போகியும், எலிகளுக்கு தீனியாகவும் வீணாகிப் போகிறது. இப்படி  வீணாகிப் போகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்கு விநியோகம் செய்யலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேள்வி கேட்டபோது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கோபப்பட்டார். மக்கி வீணாகும் தானியங்களை வறுமையில்  வாடும் மக்களுக்குத் தரப்படாமல் அவர்கள் பசியால் செத்துக்கொண்டிருப்பதை வேடிக்கைப்பார்ப்பது தான் மத்திய அரசின் கொள்கை முடிவா...? இது இந்த ஆட்சியின் அவமானமில்லையா..?   
                ஆம்... வீணாகும் தானியங்களை வறுமையில் வாடும் மக்களுக்கு தரக்கூடாது என்பது அரசின் முடிவு என்பதை மன்மோகன் சிங் தெரிந்தோ தெரியாமலோ அன்றே வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். உண்மை தான் இது தான் இவர் ஆட்சியின் கொள்கை  முடிவு என்பதை மறந்துவிடாதீர்கள்.
               இதில் மிகப்பெரிய சூழ்ச்சியே இருக்கிறது என்பதை நீங்கள் நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும். மேலே சொன்ன அத்தனையையும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் திட்டமிட்டே செய்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த  விஷயத்தைப்  பொறுத்தவரையில், மன்மோகனின் அமெரிக்க ஏகாதிபத்திய எசமானின் கட்டளைப்படி தான் மன்மோகன் நடந்துகொள்கிறார்.  
                இதிலிருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி என்னவென்றால், ஐந்து வயதுக்குபட்ட குழந்தைகளுக்கு இந்த ஐந்து வயதுக்குள் கட்டாயமாக கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், அந்தந்த வயதில் இருக்கவேண்டிய உடல் வளர்ச்சியுமில்லாமல்  நோஞ்சான் குழந்தைகளாக இருந்தால் தான், அவர்களுக்கு அந்த ஐந்து வயதுக்குள்    கிடைக்கவேண்டிய மூளை வளர்ச்சி என்பது கிடைக்காமல் போய்விடும். அப்போது தான் பள்ளிக்கு செல்வதும், பாடங்கள் படிப்பது என்பதும் இல்லாமல் மந்தமாக போய்விடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை என்பது மேலும் குறைந்து போகும். குழந்தைகளின் இயற்கையான சிந்தனைத்திறனும் குறைந்துபோகும். அப்போது தான், நாட்டைப்பற்றிய சிந்தனையோ, சமூகத்தைப் பற்றிய சிந்தனையோ வளராமல் போகும். அதனால், எது நடந்தாலும் கேள்விக்கேட்க மாட்டார்கள். ஆடு மாடுகளை போல் வளர்ந்துவிடுவார்கள். அடிமைகளைப்போல் குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள். இது தான் 2020 - இல் வருங்கால இந்தியா என்பதை மறந்துவிடாதீர்கள்.
             அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்தியா ஒரு பலவீனமான நாடாக பலம் இழந்துவிடும். இப்போது இருக்கும் 59 சதவீத ஊட்டச்சத்து இன்றி, எடை குறைந்து, உடல் வளர்ச்சி இல்லாமல் இருக்கும்  இந்த குழந்தைகளின் எதிர்காலத்தில் ராணுவத்தில் கூட சேரமுடியாது போகும். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்திய ராணுவமும் பலமிழந்து இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு ஈராக் நாட்டை சீரழித்த அமெரிக்க இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஈராக் நாட்டின் மீது பொருளாதார தடைவிதித்ததால், உயிர் காக்கும் மருந்துகள் கூட அந்த நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் போனது. அதனால் அன்று ஐந்து வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் மருந்துகள் கிடைக்காமல், கொடிய நோயினால் இறந்துபோனார்கள். அதன் பலன் என்ன தெரியுமா...? இருபது ஆண்டுகள் கழித்து இன்று இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களே அந்த நாட்டில் இல்லாமல் போய்விட்டார்கள். இன்று அந்த தேசத்தை காப்பதற்கு போராடுவதற்கு இளைஞர்கள் இல்லாமல் போனதால் தான் அமெரிக்காவின் கையில் சிக்கி சீரழிந்து போனது. இதே சூழ்ச்சியை தான் அமெரிக்கா நம் நாட்டிலேயும் செய்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
                    மொத்தத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியே ஒரு அவமானம் என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை: