வெள்ளி, 27 ஜனவரி, 2012

புதுவை ''யானாம்'' - உழைக்கின்ற கூட்டம் கொதிப்படைந்து போனால்....!

               யானாம் - புதுச்சேரி பிரஞ்ச் காலணியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிறு பகுதி. புதுச்சேரியை பொறுத்தவரை பல பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறிய  மாநிலம். இங்கு  பல்வேறு வரிச் சலுகைகளும், மானியங்களும், இலவசமாக இடமும், இலவச மின்சாரமும், குடிநீரும், மிக குறைந்த சம்பளத்திற்கு மனிதவளமும், கண்டுகொள்ளப்படாத தொழிலாளர் சட்டங்களும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மிக குறைவான இலஞ்ச  செலவுகளும் - ஆகிய அனைத்தும்  ஒட்டு  மொத்தமாக ஒரே இடத்தில் வசதியாக கிடைக்கும் மாநிலமாக புதுச்சேரி இருப்பதால் இங்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே  பெரிய - சிறிய தொழிற்சாலைகளை தொடங்கி இலாபத்தைக் குவிக்கின்றனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர்ஸ், வேர்ல்பூல், நெய்செர், எல் அண்ட் டி, ஜெனரல் ஆப்டிகல்ஸ், குட் நைட், ஏ. டி. எம் மெஷின் - போன்ற பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கே தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
                 அப்படித்தான், ஆந்திர மாநிலத்தின் இடையே இருக்கும் புதுச்சேரி பகுதியான யானாம் பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ''ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட்''  ஒன்று பிரசித்திப்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கம் அமைத்து, தனகளது பணி நிரந்தரத்திற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் இருபது நாட்களாக போராடி வருகின்றனர். இந்த உரிமைக்கான போராட்டத்தை சகித்துக்கொள்ள முடியாத நிர்வாகம்,   தொழிற்சங்கத் தலைவர் எம். எஸ். முரளி மோகன் உட்பட சில தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினர்.                         போராடிய தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன்யும்  மற்றும் சில தொழிலாளர்களையும் , அந்த தொழிற்சாலை முதலாளிகளின் அடிவருடிகளாக இருக்கும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அங்கு ''நடந்தது'' என்னவென்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தலைவர் முரளி மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீஸ்காரர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதைக்கேட்ட தொழிலாளர் தோழர்கள் கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். தலைவன் கொல்லப்பட்டதால் கோபமுற்ற உழைப்பாளிகள், கொலைக்குக் காரணமான காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். தொழிலாளர்களை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தொழிலாளி இறந்துவிட்டதாக கூட சொல்லப்படுகிறது.   
                      அதேப்போல்,  ரீகேன்சி செராமிக்ஸ் லிமிடெட் - இன் தலைமை அதிகாரி கே. சி. சந்திரசேகர் வீடும் தாக்குதலுக்கு  உள்ளானது மட்டுமல்லாது, அவரே அவரால் ஏமாற்றமடைந்த  அந்த தொழிலாளர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டார் என்பது கொதித்தெழுந்த மக்கள் விழித்தெழுந்தால் என்னாகும் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம் ஆகும்.

கருத்துகள் இல்லை: