செவ்வாய், 3 ஜனவரி, 2012

யாருக்காக ஆட்சி செய்கிறார் மன்மோகன் சிங்...?

              சென்ற வாரம் 26 - ஆம் தேதி அன்று  தமிழகத்தில் இருவேறு இடங்களில் நடந்த இருவேறு நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால் உங்களுக்கும்  நிச்சயம் வயிற்றெரிச்சலாக தான் இருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த இரண்டு இடங்களில் ஒன்று மதுரை... இன்னொன்று காரைக்குடி... 
              காரைக்குடி விஷயம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் மதுரை விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால் அதில்  ஒன்றும் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்பது தான் உண்மை.
             அப்படி என்ன மதுரையில் நடந்தது...?
             இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறை சென்ற ஒருவர் சிறையில் ''செக்கிழுத்தாரே'' அது உங்களுக்கு நினைவிருக்கிறதா...? இந்த தேசத்தை அடிமைப்படுத்தி வெள்ளைக்காரர்களுக்கு போட்டியாக, தன் சொத்துக்களை எல்லாம்  விற்று கப்பல் வாங்கி விட்டாரே அவரை நினைவிருக்கிறதா...? இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடிச் சிறைச் சென்று, பின் விடுதலை பெற்று வெளியே வரும் போது, இன்று ஊழல் செய்து சிறை சென்று விடுதலையாகி வரும் போது பெருந்திரளாக வந்து வரவேற்பது போல் அல்லாமல், தியாகி. சுப்பிரமணிய சிவா  அவர்களால் மட்டுமே வரவேற்கப்பட்டாரே.... அவரையாவது நினைவிருக்கிறதா...? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்... ''செக்கிழுத்தச்செம்மல்'' - ''கப்பலோட்டியத்தமிழன்'' என்றெல்லாம்  இந்த தேசத்தின் விடுதலை வரலாறு வாயார அழைத்ததே... அவர் தான் ''வ. உ. சி'' அன்று அழைக்கப்பட்ட ''வ. உ. சிதம்பரம்'' ஆவார்.  இப்போதாவது இவரை நினைவுக்கு வந்ததா...?
               அப்படிப்பட்ட மாமனிதனின் பேரப்பிள்ளைகள் இன்று வறுமையில் வாடி நடுத்தெருவில் நிற்கிறார்கள். மதுரையில் வறுமையின் காரணமாக குடிசையில் வாழும் வ.உ.சி. - யின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் தனலட்சுமி, சங்கரன், ஆறுமுகம் ஆகிய மூவரும் வறுமையின் காரணமாக மதுரையில் தீர்த்தக்காடு என்ற குடிசைப்பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வாழ்கின்றனர். இவர்கள் மூவரும் வருமானத்திற்கும், சாப்பாட்டுக்கும் வழி தெரியாமல் தவித்தபோது, மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகியபோது ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு தன் சொந்த பணம் கொஞ்சமும், மாவட்ட நிதியிலிருந்து ரூ.5000 -த்தையும், தேசவுடமையாக்கப்பட்ட  வங்கியிலிருந்து ரூ. 20,000 - த்தையும் ஏற்பாடு  செய்து அவர்கள்  இட்லிக்கடை வைத்து பிழைப்பு நடத்த அந்த ஆட்சியாளர் உதவி செய்திருக்கிறார். 
                  பெரும் செல்வந்தரான வ. உ. சி, இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துக்களை எல்லாம் துறந்து போராடினார். இந்த தேசம் விடுதலை பெற்றதில் மிகப்பெரிய பங்காற்றியவர் வ. உ. சி.,  ஆனால் விடுதலைபெற்ற பின் இந்நாள் வரை இந்த தேசமும், மக்களும், ஆட்சியாளர்களும் அவரை கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டனர். அப்படித்தான், அவரது வாரிசுகளையும் இன்றைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமலேயே. இருக்கின்றனர்.
             இது இப்படி இருக்க... இன்னொரு பக்கம் பாருங்கள்... காரைக்குடியில் அப்போல்லோ மருத்துவமனை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இரண்டையும்  பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்க வந்தது என்பது இன்னொரு கோபமூட்டும் நிகழ்ச்சி....
             ஏன்... மருத்துவமனையை திறந்துவைக்கிறது நல்ல விஷயம் தானே என்று நீங்கள் கேட்கலாம்..?  நல்ல விஷயம் தான்... மக்களின் வரிப்பணத்தை செலவு செய்துகொண்டு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு வருவது போல் காரைக்குடிக்கு வந்து  இந்த இரு தனியார் மருத்துவமனைகளை திறந்து வைத்தார் என்பது தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
                அது மட்டுமல்ல அந்த திறப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் போது இந்த இரு மருந்தவமனைகளும் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் பெறும் வருமானத்திற்கு   வருமான  வரியிலிருந்து விலக்கு  அளிக்கப்படும்  என்ற அறிவிப்பு வெட்கக்கேடானது... ஏற்கனவே மருத்துவம் என்ற பெயரால், மக்களிடமிருந்து கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த மருத்துமனை முதலாளிகளுக்கு மேலும் மேலும் கொள்ளையடிக்க முறைகேடான வரிச்சலுகை தான் இது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
              ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்களை  பார்க்கும் போது, ஒரு பக்கம் இந்த தேசத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் கொடுத்து அவர்களை கண்டுகொள்வதையும், இன்னொரு பக்கம்... இந்த தேசத்தின் விடுதலைக்காக  போராடியவர்கள் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடுவதை  கண்டுகொள்ளாமல் விட்டு ஒதுங்கிகொள்வதையும் பார்க்கும் போது பிரதமர் மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி செய்கிறார்....? என்ற கேள்வி தான் நம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது....

1 கருத்து:

சத்ரியன் சொன்னது…

இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது நண்பா.

அரசியல்வாதிகளுக்கு பணக்காரர்கள் தான் முக்கியம்.

காசில்லாதவர்களைப் பற்றி கவலைப்பட்டால், அரசியல்வாதிகளின் சுவிஸ் வங்கி கணக்கில் தொகை அதிகரிக்குமா என்ன?