ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

மக்களுக்கான மருத்துவ சேவையை கை கழுவுகின்றன மத்திய - மாநில அரசுகள்...!

                    புதுடெல்லியில் தேசிய போலியோ தடுப்பு சம்பந்தமான இரண்டு நாள்  கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உட்பட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 
            கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய மன்மோகன் சிங், பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள் நோயாளிகளுக்கு காப்பீடு திட்டத்தையும், வெளி நோயாளிகளாக வருவோருக்கு இலவச மருத்துவம் அளிக்கும் வகையிலும் நமது பொது மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். 
             மருந்து மற்றும் மருத்துவ செலவுகளெல்லாம் உயர்ந்துகொண்டே போகிறதாம். இது ஏழைகளை பாதிக்கிறதாம். புள்ளிவிபரங்கள் எல்லாம் எடுத்து சொல்லி, வரும் 12 - வது ஐந்தாண்டு திட்டத்தில்   கல்வி மற்றும்  சுகாதாரத் துறைகளில் தனி கவனம் செலுத்தப்படும் என்று மிகுந்த அக்கறையோடு பேசியிருக்கிறார். ஆண்டின் மொத்த வருமானத்தில் சுகாதாரத் துறைக்கு செலவிடும் தொகையை 2.5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
             இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்... ஏழை - எளிய மக்கள் இனிமேல் வெளி நோயாளிகள் பிரிவில் இலவசமாக மருத்துவம் பெற்றுக்கொள்ளலாமாம். அனால், உள் நோயாளிகளுக்கு மட்டும் இலவச மருத்துவம் மற்றும் சிகிச்சை கிடையாது. அதற்காக அவர்களுக்கு  இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அளித்து எதிர்காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உள் நோயாளியாக தனியார் மருத்துவமனைக்கு கட்டயாமாக அனுப்பப்படுவர்.
                இதிலிருந்து மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் உள்நோக்கம் என்னவென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இது வரை அரைகுறையாவது அரசு செய்துவந்த மருத்துவ சேவை என்ற அரசின் கடமையை தனியாருக்கு கைமாற்றும் வேலை தான் இது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 
                 தன் மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளை செய்து தரவேண்டிய அரசாங்கம், அவைகள் அனைத்தையும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை கூசாமல் செய்துவருகிறது.
                கொஞ்சமாகவாவது, தன் கையில் வைத்திருந்த மருத்துவ சேவையை வெளி நோயாளி - உள் நோயாளி என இரண்டாக பிரித்து, வெளிநோயாளிகளுக்கு அரசே இலவசமாய் மருத்துவம் கொடுக்கும் எனவும், உள் நோயாளிகள் என்றால் அவர்களை தனியார் பார்த்துக் கொள்வார்கள்  என்றால் இதையெல்லாம் செய்யாமல் ஒரு அரசு எதற்கு...?
உள் நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு என்பது தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடேயாகும். இதை மத்திய - மாநில அரசுகளே செய்கிறது என்பது தான் மகா கேவலமான விஷயமாகும்.
             அப்படியென்றால் யாருக்காக இந்த அரசுகள் செயல்படுகின்றன...? என்பது தான் நமது கேள்வி.... மக்களுக்காகவா...? தனியார் முதலாளிகளுக்காகவா..?

கருத்துகள் இல்லை: