ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மத்திய அரசு அனுமதிக்கும் ஐ. பி. எல். கிரிக்கெட் சூதாட்டம் - பணக்காரர்கள் சூதாடினால் குற்றமில்லையோ...?

               ''இந்தியன் பிரிமியர் லீக்'' என்று சொல்லக்கூடிய இந்திய கிரிக்கெட் சூதாட்ட வேலைகள் கோலாகலமாக தொடங்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளான 2 ஜி - ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் போன்ற மெகா ஊழல்களுக்கு முன்னோடியாக  நாட்டையே உலுக்கிய அன்றைய மத்திய அமைச்சர் சசி தரூர் சம்மந்தப்பட்ட ''ஐபிஎல்'' கிரிக்கெட் ஊழல் விவகாரம்  இன்னும் உரிய தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்ட  நிலையில், 5வது ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டு வீரர்களை ஏலம் விட்டு விலைக்கு வாங்கும் இழிவான வியாபாரத்தில் மீண்டும் பெரும் பணக்காரர்கள் இறங்கியுள்ளனர் வெட்கக்கேடானது.  
                     கிரிக்கெட் என்ற  விளையாட்டின் பெயரால் நடைபெறும் இந்த வியாபாரச் சூதாட்டத்தில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா ரூ.10 கோடி அளவிற்கு விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.  பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்த ஏலத்தில் ஜடேஜா உட்பட 144 கிரிக்கெட் வீரர்களின் திறமைகள்  பேரம் பேசப்பட்டு விற்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தை எப்படி மத்திய அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரியவில்லை. கடந்த முறை ஏலம் போன தமிழ்நாட்டைச் சார்ந்த வி.வி.எஸ். லஷ்மணனை தற்போது யாரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லையாம் கவலையோடு சொல்கிறார்கள். 
            இது கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமல்ல கிரிக்கெட் விபச்சாரம். கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் மங்கிப்போய் விட்டால் ''விலைபோக'' மாட்டார்கள். லாட்டரிச்சீட்டு, சீட்டாட்டம், கோழிச்சண்டை, விபச்சாரம் போன்ற சமூகக் குற்றங்களை செய்பவர்களை சட்டம் தண்டிக்கிறதே. ''ஐ. பி. எல்'' போட்டி மட்டும் ஒரு சூதாட்டம் இல்லையா...? பணக்காரர்கள் ஆடும் இந்த கிரிக்கெட் சூதட்டத்திற்குப் பின்னால் மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இருப்பது என்பது நியாயம் தானா...?  சென்ற ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஊழல்களுக்கு தீர்வுக்காணப்படாமல் - சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கபடாமல் இன்றைக்கு மீண்டும் இந்த போட்டியை அனுமதிப்பது என்பது அரசின் தருதலைதனத்தை தான்  காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: