செவ்வாய், 4 அக்டோபர், 2011

நரவேட்டை நரேந்திர மோடியின் முகத்திரையை கிழித்த போலீஸ் அதிகாரியை பழி தீர்ப்பது காட்டுமிராண்டித்தனமானது...!

                 குஜராத் முதல்வர் நரவேட்டை நரேந்திர மோடி தான் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் என்று ஒரு பக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய மக்களுக்கு மூளைச் சலவை செய்து பட்டையை கேளப்புகிறது. இன்னொரு பக்கம்,   அம்பானி, டாடா போன்ற இந்திய பெரும்முதலாளிகளும் மோடிக்கு லாலி பாடி ஒத்து ஊதுகிறார்கள்.
              குஜராத்தில் 2002 - ஆம் ஆண்டு சிறுபான்மை முஸ்லிம் மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த நரேந்திர மோடி, திடீரென்று  புனிதராக வேடமணிந்து அண்மையில் உண்ணாவிரதம் இருந்ததை நாடே பார்த்து கேலி செய்தது.  பக்கம் பக்கமாக தரப்பட்ட விளம்பரங்களுக்கு விசுவாசமாக ஊடகங்களும்  மோடியை உயரத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கின்றன.
                   மக்கள் ஒற்றுமைக்காக தன்னுடைய இன்னுயிரையே தியாகம் செய்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமலும், வெட்கமில்லாமலும்  போய் நின்றார், காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் குருகுலத்தில் பாலபாடம் படித்த நரேந்திர மோடியை  நாடேப் பார்த்து ஆச்சரியப் பட்டது.
            மோடி திருந்திவிட்டார், மனம் வருந்திவிட் டார் என்று நற்சான்றிதழ் தரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது செயற்கையாய் அணிந்த சாந்தசொரூபி முகமூடி யை கலைத்துவிட்டு, நரேந்திர மோடி தன்னுடைய உண்மையான -  இயல்பான கொலைவெறி முகத்தை மீண்டும் காட்டத்தொடங்கியிருக்கிறார்.  
                அண்மையில்,குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் பட் என்கிற ஐபிஎஸ் அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், கைதும் செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டியிருக்கும் நிகழ்வு என்பது நாட்டு மக்களின் பார்வை மீண்டுமொரு முறை நரேந்திர மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறது.அதுமட்டுமல்லாது,  அந்த போலீஸ் உயர் அதிகாரியினுடைய வீடு இரண்டு முறை அடுத்தடுத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பது அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் செயலாகும். “என்னுடைய கணவரின் உயிருக்கு ஆபத்து என்றும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை அடித்தே கொன்றுவிடுவார்கள்” என்றும் அச்சத்தோடு சஞ்சீவ் பட்டின் துணைவியார் பதறுவதை இந்திய மக்கள் பதற்றத்துடன் பார்க்கிறார்கள்.
              சஞ்சீவ் பட் செய்த குற்றம் என்ன? குஜராத்தில் 2002 - ஆம் ஆண்டு  சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள்  படுகொலை கொடூரங்களை  அரங்கேற்றிக் கொண்டிருந்த போது, முதலமைச்சர் நரேந்திர மோடி, மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினரை கண்டு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த மோசமான - காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுகளை விளக்கி உச்சநீதிமன்றத்திலும்  சஞ்சீவ் பட் மனு ஒன்றை அளித்திருந்தார்.
                 இதனால் எரிச்சலடைந்த நரேந்திர மோடி,  தன்னுடைய பிரதமர் ஆசை என்ற பேராசையில் போலீஸ் அதிகாரி மண்ணை அள்ளி போட்டுவிடுவாரோ என்ற பயத்தில் தான் சஞ்சீவ் பட்டுக்கேதிரான வேட்டையில் இறங்கியிருக்கிறார் என்பதை நாடே அறியும்.
                    சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய், முன்னாள் காவல் துறை தலைவர் ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் போன்றவர்கள் கூட சஞ்சீவ் பட்டை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு கெடுபிடி செய்யப்படுகிறது. நேற்று கூட கைது செய்யப்பட்ட சஞ்சீவ் பட்டை விடுதலை செய்யும்படி மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சஞ்சீவ் பட்டின் கைது செய்யப்பட்டதை  கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அவரை உடனடியாக விடுதலை  செய்து தகுந்த பாதுகாப்பும் தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.              
             இதுதான் ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கிற மோடி ஆட்சியின் இலட்சணம். இந்த கேடு கெட்ட ஆட்சி இந்தியா முழுவதும் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்பவர்கள் நாட்டையே கொலைக்களமாக்க விரும்புகிறார்கள் என்பதே பொருள். ரத யாத்திரை அத்வானிகளிடமும், உண்ணாவிரத மோடிகளிடமும், இந்த தேசத்தை காப்பாற்ற மதச் சார்பற்ற சக்திகள் மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய காலமிது.

கருத்துகள் இல்லை: