வியாழன், 26 ஜூலை, 2012

வெனிசுலாவில் ஒரு புரட்சிகர தொழிலாளர் சட்டம்...!

            லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனை கொண்ட அரசுகள் பின்பற்றிவரும் கொள்கைகள், நவீன தாராளமயமாக்கலுக்கும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கும் எதிரான மாற்றுக் கொள்கைகளை வழங்கி வருவதைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாட்டுத் தீர்மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.      
            2012 மே தினத்தன்று வெனிசுலாவின் சாவேஸ் அரசால் வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் சட்டம் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்துகின்றது. இந்தச் சட்டம் வேலை என்பதை ஒரு சமூக நிகழ்முறையாக வரையறை செய்கிறது. குறைந்தபட்ச ஊதியம், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, பணியிடத்தில் சமத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்கிறது. இந்தச் சட்டம் வெனிசுலா மக்களின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து, தாம் மிகவும் திருப்தி அடைவதாகக் கியூபாவின் மகத்தான தலைவராகிய பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.  
        
அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பின் வருமாறு வரிசைப்படுத்தலாம்.
         வீட்டு வேலை என்பது மதிப்பைக் கூட்டுவது மற்றும் செல்வத்தையும் நல்வாழ்வையும் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளாதார நடவடிக்கையே. எனவே குடும்பப் பெண்களுக்கும் சமூகப்பாதுகாப்பு உரிமை சட்டப்படி வழங்கப்படும்.
           வேலை என்ற சமூக நிகழ்முறையின் முக்கியக் குறிக்கோள்களாவன: முதலாளித்துவச் சுரண்டல் வடிவங்களைக் கட்டுப்படுத்துவது நம்முடைய பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த கூடிய விதத்தில் பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்வது, செல்வத்தை நியாயமானமுறையில் பகிர்வதன் மூலம் மனிதத்தேவைகளை நிறைவு செய்தல், மக்களின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கான அடிப்படைத்தளமாகக் குடும்பம் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில், பொருளாதார, சமூக, ஆன்மிக நிலைகளை உருவாக்குவது, வேலை என்னும் சமூக நிகழ் முறை பின்வருபவற்றை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மை, பொருளாதார இறையாண்மை, ஒரு கவுரவமான வாழ்க்கைக்கான மனிதவள மேம்பாடு, மக்களின் வாழ்க்கைத்தரம், உணவு இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உயர்த்தும் தன்மையில் அமைந்த பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை அறிவுக்குப் பொருத்தமான வகையில் பயன்படுத்துவது ஆகியவை.
         நிறுவனங்கள் தங்கள் பணிகளை வேறு ஒருவரிடம் அளிப்பது தடைசெய்யப்படும். இதன் பொருள் யாதெனில், பொது வேலை அல்லது பணியானது நிரந்தரமானதாகவும் அந்த நிறுவனத்தின் உற்பத்தியோடு நேரடி யாகத் தொடர்பு உடையதாகவும் இருக்குமானால், அதனை ஒப்பந்த முறை மூலம் வேறு ஒருவரிடம் ஒப்படைக்கக்கூடாது, ஒப்பந்த தொழிலாளிகளுக்கு நிரந்தரத் தொழிலாளிகளுக்குரிய நியாயமான உரிமைகளை மறுபதற்கே இது செய்யப்படுவதாகக் கருதப்படுவதால், இது தடை செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட தேசிய குறைந்தபட்சக் கூலியைவிடக் குறைவாக வழங்குவது அனு மதிக்கப்படமாட்டாது. சமவேலைக்குச் சம ஊதியத்தை ஒவ்வொரு நிறுவனமும் வழங்க வேண்டும்.
             ஒரு தொழிலாளி நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டால் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகலாம். சமபளத்தை வழங்குமாறு நீதிபதி ஆணையிடுவதற்கு இது உதவிசெய்யும், மூன்று நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்படாவிட்டால் முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நீதிபதி ஆணையிடமுடியும், அந்த உத்தரவும் பலன் அளிக்கவில்லை என்றால் அந்த முதலாளிக்கு 6 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனமும் நிதி ஆண்டின் இறுதியில் வரி செலுத்தியபிறகு எஞ்சும் நிகர வருவாயின் 15 சதவீதத்தைத் தொழிலாளிக ளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். இது குறைந்தபட்சமாகத் தொழிலாளியின் ஒரு மாதசம்பளத்துக்கு ஈடாகவும், அதிகபட்சமாக நான்கு மாதச்சம்பளம் வரையிலும் இருக்கலாம். சரியான தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்வதற்காக நிறு வனத்தின் வரவு-செலவுக்கணக்குகளைப் பரிசீலிப்பதற்கான உரிமை தொழிலாளிகளுக்கு உண்டு.
                 சட்டவிரோதமான முறையில் ஒரு தொழில் நிறுவனம் மூடப்படுமானால், தொழிலாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நிறுவனத்துக்குள் நுழைந்து பணிகளை மீண்டும் துவக்குமாறு உத்தரவிடுவதற்குத் தொழிலாளர் நல அமைச்சருக்கு உரிமை உண்டு. கடன் சுமைக்கு ஆளாகும் நிறுவனங்களில், தொழிலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் பிற சமூகப் பாதுகாப்புப் பயன்கள் போன்றவற்றுக்கு அடமான கடன்கள் உள்ளிட்ட கடன்களை விட முன்னுரிமை அளிக்கப்படும். தொழிலாளிகளுக்குக் கிடைக்கவேண்டிய பயன்களை உத்தரவாதம் செய்வதற்காக முன்கூட்டியே முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அனுமதிக்கப்படும்.
            வார வேலை நாட்கள் ஐந்தாக நிர்ணயிக்கப்படும். தொழிலாளிகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை உண்டு. ஒரு நாளுக்கு எட்டுமணி நேரமும் வாரத்துக்கு 40மணிநேரமும் வேலைநேரமாகக் கணக்கிடப்படும். இரவு வேலை நேரம் நாளொன்றுக்கு ஏழுமணி நேரமாகவும் வாரத்துக்கு 35 மணிநேரமாகவும் கருதப்படும்.
            வீடுகளில் வேலை பார்க்கும் தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், ஆயாக்கள் ஆகியோரின் பணிநிலைகளும் இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டுவரப்படும்.
            சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட் களை சட்டப்படி பெறுவதற்கான உரிமை விவசாயத்தொழிலாளருக்கும் உண்டு. வாரத்தில் 40மணி நேரத்துக்கும் மேலாகவோ அல்லது நாளொன்றுக்கு 8மணிநேரத்துக்கு மேலாகவோ அவர்கள் வேலை செய்யக்கூடாது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் ஓய்வு பெறும் உரிமை அவர்களுக்கு உண்டு. விவசாய உற்பத்திக்கிளை ஒன்றில் ஒரு விவசாயத் தொழிலாளி ஒரு குறிப்பிட்ட நிலத்தில் தனியாக விவசாயம் செய்து வந்தால் இந்த வேலைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தவுடன் அந்த நிலத்தில் தங்குவதற்கான உரிமை உண்டு. அந்த உரிமையை அவர் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்றால் அவரது உற்பத்திப் பொருளுக்கு ஈடான மதிப்பு அவருக்கு வழங்கப்படும்.
           நாட்டு வளர்ச்சிப் பணியில் பங்கேற்பதற்கான உரிமை உரிய வயதை எட்டிய இளைஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சமூக உற்பத்தி நிகழ்முறையில் மாணவர்களாக, பயிற்சியாளர்களாக, கல்விச் சலுகைக் கட்டணம் பெறுவோராக, தொழிலாளர்களாக அரசு இணைக்க வேண்டும். நியமனத்துக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எவரையும் கருவுறுதல் தொடர்பான மருத்துவச்சான்றை அளிக்குமாறோ அல்லது மருத்துவப்பரிசீலனைக்கு உட்படுமாறோ நிறுவனம் எதுவும் கேட்கக்கூடாது. பிரசவத்துக்கு முன்னர் 6வாரங்களுக்கும் பிரசவத்துக்குப் பின்னர் 20 வாரங்களுக்கும் பிரசவகால விடுப்பு வழங்கப்படும். இக்காலத்தில் நோய்வாய்ப்படும் தாய்மார்களின் விடுப்புக்காலம் அதிகரிக்கப்படும். இக்காலத்துக்கு முழுச் சம்பளமும் பிற பயன்களும் வழங்கப்படும்.
                தங்களின் விருப்பப்படி சங்கம் சேரும் உரிமை தொழிலாளர்களுக்கு உண்டு. தொழிற் சங்க நடவடிக்கையானது அரசால் அங்கீ கரிக்கப்பட்ட ஒரு உரிமையாகும். தொழிற்சங்கங்களைத் துவக்குவதற்கோ, அவற்றுக்கு நிதி அளிப்பதற்கோ, தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு ஊறு விளைவிக்கவோ, குறிப்பிட்ட சங்க உறுப்பினருக்கு எதிராகப் பாரபட்சம் காட் டவோ முதலாளிகளுக்கு அனுமதி கிடையாது. தொழிலாளி விரோத நடவடிக்கைகள் சுட்டிக் காட்டப்பட்டால் 72மணி நேரத்துக்குள் அவை நிறுத்தப்பட வேண்டும். தவறினால் தண்ட னைக்குள்ளாக நேரிடும்.
         தொழிலாளருக்கு வேலை நிறுத்த உரிமை உண்டு. வேலைநிறுத்த காலத்தில் பணியிடங் களிலேயே தங்க அனுமதி உண்டு. கோரிக்கைகளைச் சமர்ப்பித்த பிறகு 120 மணி நேரம் கழித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். வேலை நிறுத்தத்தால் தொழிலாளியின் பணிக்காலம் பாதிக்கப்படமாட்டாது. வேலை நிறுத்தக்காலத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் இடங்களில் புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தவோ, வேறு இடங்களிலிருந்து பணி மாற்றல் மூலம் கொண்டுவரவோ அனுமதி இல்லை.
             1999ன் பொலிவாரிய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப்பின் சாவேஸ்அரசாங்கம் கொண்டுவந்துள்ள மிக முக்கிய ஆவணமாக இது கருதப்படுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பைப்போலவே இந்தச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறைந்தபட்ச மாத சம்பளத்தை 32.5 சத வீதம் அளவுக்கு உயர்த்தியுள்ள சாவேஸ் அரசின் நடவடிக்கையையே அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் ஒரு கருத்துப்போராட்டத்தை வெனிசுலாவில் துவக்கியுள்ளன என்பதுடன், அவை தொழிலாளி வர்க்கத்தை மேலும் முற்போக்கான திசையில் இட்டுச்செல்லும் தன்மை கொண்டவையாக உள்ளன. தொழிலாளிகளின் உரி மைக்காகப் போராடுவோருக்குக் கிடைத் துள்ள ஒரு பேராயுதமாக இது இருக்கும். இப் போராட்டம் எவ்வாறு நடத்தப்படும்; எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது தொழிலாளி வர்க்கத்தின் வலிமை மற்றும் அதன் அரசியல் முதிர்ச்சியைச் சார்ந்துள்ளது.
               சர்வதேச தொழிலாளர் இயக்கத்துக்கு இந்தப் புரட்சிகர சட்டத்தின் மூலம் மாற்றுக்கான ஒரு ஆயுதத்தை வெனிசுலா வழங்கியுள்ளது. இச்சட்டத்தைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்குகின்றன. அவர்கள் அஞ்சி நடுங்கட்டும். புரட்சிகர சிந்தனைக்கான காலம் வந்து விட்டது. அதனால் அதன் முன்னேற்றத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.

ஆதாரம்: 

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’
(21/27 மே 2012) 

தமிழாக்கம் :  கி.இலக்குவன்

கருத்துகள் இல்லை: