ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தமிழர்களை முட்டாள்களாக ஆக்குவதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்துப்போகிறார்கள்...?

               ஒரு பக்கம் ஐக்கிய நாடுகளின் சபையில் மனித உரிமைகள்  அமைப்பில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்திய அரசு, அடுத்து இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்படுவதை நேரில் பார்வையிடுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில்  அனைத்துக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்தியக் குழு  ஒன்றை இலங்கைக்கு அனுப்புவது என்று முடிவு செய்தது. அதற்காக அந்தக் குழுவில் காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை மத்திய அரசே முடிவு செய்து நியமித்திருந்தது. 
                இந்த முடிவை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட தமிழகக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும், குழுவை அறிவித்த நாளிலிருந்து இரவெல்லாம் தூங்காமல் குழம்பிக்கொண்டேயிருந்தன. 
             காரணம் பக்கத்து நாட்டு அரசு அனுப்பும் குழுவென்பதால், இலங்கை அதிபர் இராஜபக்சே சும்மா வெறுமனே பேசிவிட்டு எப்படியும் வெறுங்கையோடு அனுப்பமாட்டார்.  அறுசுவை விருந்தும், இராஜ உபசரிப்பும் நிச்சயம் நடைபெற வாய்ப்புள்ளது. அவ்வளவு தூரம் போயிட்டு கையை நனைக்காமல் வரமுடியாது.  அப்படியே  அந்த விருந்தில் கலந்துகொண்டாலும்,  அடுத்த நாளே இந்திய - இலங்கை பத்திரிகைகளில் புகைப்படத்தோடு செய்தி வெளியாகிவிடும். இது தான் இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிற லட்சணமா என்று தமிழக மக்கள் திமுக - அதிமுக முகத்தில் காறித்துப்புவார்கள் என்கிற பயம் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், முன்னால் முதல்வர் கருணாநிதிக்கும் வந்துவிட்டது. 
               சென்ற முறை இதேப்போல் இந்தியாவிலிருந்து சென்ற குழுவில் இடம்பெற்ற திமுகவை சேர்ந்த டி. ஆர். பாலு, கனிமொழி, திருமாவளவன் கூட்டத்தினர் அதிபர் இராஜபக்சே அளித்த விருந்தில் பங்குகொண்ட ''திருக்காட்சிகள்'' பத்திரிகைகளில் வந்ததையும், அதைப்பார்த்த தமிழக மக்கள் காறித்துப்பியதையும், இன்னும் முகத்தில் எச்சில் காயாமல் வழிந்து கொண்டிருக்கும் திமுகவும், அதைப் பார்த்து சந்தொஷப்பட்டுப்போன அதிமுகவும் இன்னும் மறக்கவில்லை என்பது அவர்கள் இருவரும் எடுத்த ஒரே மாதிரியான முடிவிலிருந்து தெரிகிறது. 
               தமிழக மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் என்னன்னா...? இப்படியான முடிவுகளை எடுப்பதில் மட்டும் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எப்படி ஒத்து போகிறார்கள் என்று தெரியவில்லையே. ஒரு வேளை இவர்களை நம்பி ஓட்டுப்போடும் நாம் தான் முட்டாள்களோ...? என்று விழிக்கிறார்கள்.          

கருத்துகள் இல்லை: