புதன், 28 மார்ச், 2012

போப்போர்ஸ் பீரங்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆயுத பேர ஊழல் - இன்றும் பணம் ராணுவம் வரை பாய்கிறது...!











                  அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1980 - களில்  நடைபெற்ற போப்போர்ஸ் பீரங்கி ஊழல்...  ராஜீவ் காந்தியும் அவரது குடும்பம் மற்றும் இத்தாலிய நாட்டு தொழிலதிபர் கோட்ரோச்சி சம்பந்தப்பட்ட ஊழல்... இன்றைக்கு அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனையில்லாமல் தப்பித்து விட்டார்கள். இன்று போப்போர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணை என்பது புதைக்குழிக்குள்  போய்விட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள். 
                    அடுத்து  1991  - ஆம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியாட்சியின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற 
கார்கில் போரில் மரணமடைந்த நமது நாட்டுப் படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு அன்றைய பாஜக அரசு சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. ( நம் நாட்டில் சவப்பெட்டி செய்வதற்கு ஆளில்லையாம் ) சாதாரணமாக ஒரு பெட்டிக்கு ஆகிற விலையை விட பலமடங்கு தொகையை கொடுத்து இறக்குமதி செய்தது. சவப்பெட்டியிலேயும் பல கோடி ஊழல். சவப்பெட்டியிலேயும், சுடுகாட்டுக்கூரையிலேயும் ஊழல் செய்கிற ஆட்சியாளர்களைத் தான் நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள். அவங்க வெட்கப்படுகிறார்களோ இல்லையோ நாம் வெட்கப்படவேண்டும். இப்போது அந்த சவப்பெட்டி ஊழல் விசாரணை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. மக்களும் அதை மறந்துவிட்டார்கள்.
                 அதே பாஜக கூட்டணியில் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மெகா ஊழல்.... அது ஆயுத பேர ஊழல்...  அந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமதா கட்சியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசின் ''கேர்ள் பிரெண்ட்'' ( GIRL FRIEND ) ஜெயா ஜெட்லி என்ற அம்மையார் பெர்னாண்டசின் படுக்கையறையில் ஆயுத வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம் பெற்றதை நாமெல்லோரும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.  அந்த ஊழல் விசாரணையும் காற்றோட போயாச்சி... மக்களும் அதையும் மறந்துவிட்டார்கள்...
                  இப்போது மன்மோகன் சிங் அலங்கோல ஆட்சியில் நடைபெறும் ஊழல் அலங்கார அணிவகுப்பில் இன்னொன்றும் புறப்பட்டு கிளம்பியுள்ளது.  இது இந்திய இராணுவத்தில் இன்னொரு புதுவகையான ஊழல். இது இராணுவ  அணிவகுப்பில்  வைக்கப்பட்ட கண்ணிவெடி போன்றது. இதற்காக தேசமே தலை குனிகிறது.
                  இராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனப் பிரதிநிதி தனக்கு ரூ. 14 கோடி இலஞ்சம் தர முன் வந்ததாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதியே வெளிப்படையாக பத்திரிகை ஒன்றிற்கு  அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதைக் கண்டு நாடே அதிர்ந்துள்ளது. 
                இராணுவம் நிர்ணயித்துள்ள தரத்தை விட குறைவான தரத்தில் உள்ள 600 வாகனங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் ரூ. 14 கோடியைத் தருவதாக அந்த குறிப்பிட்ட நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்,   இராணுவத் தலைமைத் தளபதியிடமே ஒரு நபர் வந்து இலஞ்சம் அளிப்பது தொடர்பாக பேச்சு நடத்துகிறார் என்றால்  அவருக்கு எந்த அளவுக்கு துணிச்சல் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தனது  பேட்டியில் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி. கே. சிங் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு முன்பிருந்தவர்கள் இப்படித்தான் அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்றும், தனக்குப் பிறகு வருபவர்களும்  பணம் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அந்த நபர் தன்னிடம் தெரிவித்ததாகவும்  ஜெனரல் வி. கே. சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
                இது மட்டுமல்ல இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் கூறியிருந்தார். இலஞ்சம் கொடுக்க முன்வந்த இந்த விஷயத்தை 2010 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லிவிட்டேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். 
              நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால்...? 
           1 . இத்தனை மாதங்களாக பாதுகாப்பு அமைச்சரோ அல்லது மத்திய அரசோ இலஞ்சம் கொடுக்க வந்த நபர் மீது ஏன் விசாரணை நடத்த உத்திரவிடவில்லை...? 
      2 . தளபதி  இந்த தகவலை என்னிடம் சொல்லும் போது அதைக்கேட்டு அதிர்ந்து போனேன்... உறைந்து போனேன்... என்றெல்லாம் சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் நியாயமாக - உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டாமா...?   
          3   . இத்தனை மாதங்கள் கழித்து இப்போது இந்த விஷயத்தை வெளியிட்ட தலைமைத் தளபதி ஏன் முன்பே வெளியிடவில்லை...?  தனது வயது பிரச்சனையில் அரசு தனக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்போது இந்த விஷயத்தை வெளியாக்கிவிட்டாரோ..?
            4 .  பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ராணுவ அதிகாரி லெப். ஜெனரல் தேஜீந்தர் சிங் தான் தனக்கு 14 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்க வந்தவர் என்று அப்போதே தெரிந்திருந்தும் மத்திய அரசும், பாதுக்காப்புத்துறை அமைச்சரும், தலைமைத் தளபதியும் இன்று வரை அவர் மீது விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காததேன்...? 
            இப்படியெல்லாம் கேள்விகள் மக்களுக்கு எழுகின்றன. மத்திய அரசு தான் பதில் சொல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை: