செவ்வாய், 17 மே, 2011

தேர்தல் முடிவு : இடதுசாரிகளின் ஆதரவு தளம் சரிந்துவிடவில்லை

               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு          கூட்டம் புதுதில்லியில் மே 16ம் தேதி திங் களன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் முடிவுகள் குறித்து:            

              வரலாற்றுச் சாதனையாக 34 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சி செய்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பெரும்           தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து விரிவான ஆய்வு செய்வதன் மூலம் பொருத்தமான முடிவுக்கு வருவது என்றும் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து களைவது என்றும் கட்சியின் அரசியல் தலைமைக் குழு முடிவு செய்துள்ளது.
            30 ஆண்டு கால ஆட்சியில் இடதுமுன்னணி அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இருந்தபோதும் அரசியல் ரீதியாகவும் அரசு நிர்வாக ரீதியாகவும் கட்சி அமைப்பு ரீதியாகவும் சில குறைபாடுகள் இருந்துள்ளன. மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற மன நிலை உருவாகியதற்கான சூழல் குறித்து முறையான மதிப்பீடு செய்யப்படும். கட்சி இதுகுறித்து கவனமாக பரிசீலனை செய்து, மக்களிடமிருந்து தனிமைப்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை சரி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். 
            தேர்தல் முடிவால் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணியின் தளம் சரிந்துவிட்டது என்று எழுதுபவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் என்பதோடு மட்டுமின்றி இந்த மதிப்பீடு தவறு என்று நிரூபிக்கப்படும். தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டபோதும், இடதுமுன்னணிக்கு ஆதரவாக         96 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 41 சதவீதவாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. ஆதரவுத் தளத்தை விஸ்தரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுமுன்னணியும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றும். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தையும், மக்கள் நலன் காப்பதற்கான போராட்டத்தையும் கட்சி மற்றும் இடதுமுன்னணி உறுதியுடன் நடத்தும்.

கேரளம் :

             கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசின் பணிகளுக்கு மக்கள் பரவலான அங்கீகாரத்தை அளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவு உணர்த்துகிறது. இடது ஜனநாயக முன்னணிக்கு 45.13 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஐக்கிய ஜன நாயக முன்னணிக்கு கிடைத்த வாக்குகளை விட 0.89 சதவீதம் மட்டுமே குறைவாகும். மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பாதுகாக்கவும் உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்துச்செல்லவும் இடதுஜனநாயக முன்னணி இடையறாது பணியாற்றும்.

                மேற்குவங்கத்தில் இடதுமுன்னணிக்கு ஆதரவாகவும் கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணிக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களுக்கு அரசியல் தலைமைக்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

நன்றி :தீக்கதிர்

கருத்துகள் இல்லை: