வெள்ளி, 3 ஏப்ரல், 2015

மாணவர்களை குறிவைக்கும் பயங்கரவாத அரசுகள்...


                 அண்மையில்  இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயகபூர்வமாகவும், அமைதியான முறையிலும் பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரை அம்மாநில அரசுகள் காவல்துறையை ஏவிவிட்டு  காட்டுமிராண்டித்தனமாகவும், கண்மூடித்தனமாகவும் தாக்கியிருப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதுவும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் கடந்த பதினைந்து நாட்களில் நடைபெறும் சம்பவங்களாகும். 

     சென்ற மார்ச் 18-ஆம் தேதியன்று சிம்லாவில் இமாச்சல பிரதேச இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான  இருபால் இளைஞர்கள் கல்விக்கட்டணத்தை குறைக்கவேண்டியும், பல்கலைக்கழக பட்ஜெட் நிதியை உயர்த்தவேண்டியும் - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னனுமதியும் பெற்று   மாநில சட்டமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி நடத்திய போது, யாரும் எதிர்பாராத விதமாக அம்மாநில காங்கிரஸ் கட்சி அரசு காவல்துறையினர் கூட்டத்தின் உள்ளே புகுந்து மாணவ-மாணவியர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்கள் நடத்தி கூட்டத்தை விரட்டியடித்தனர். அத்தாக்குதல்களில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றம் செயலாளர் உட்பட மாணவ-மாணவியர் பலபேரை காவல்துறையினர் தடியால் தாக்கி காயமடையச்செய்தனர்.          
    

            அதேப்போல் நேற்று ஏப்ரல்2-ஆம் தேதி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் கொல்கத்தா காவல்துறையினரால் கொல்லப்பட்ட மாணவர் தலைவர் தோழர்.சுதிப்தோ குப்தாவின் நினைவுநாளை முன்னிட்டும், இதுவரையில் காவல்துறையின் மீது நடத்தப்படாமல் இருக்கும் விசாரணையை நடத்தக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்களால் முன்னனுமதிப் பெற்று அமைதியான முறையில் நடத்தப்பட்ட பேரணியில் மம்தாவின் காவல்துறையினர் உள்ளேப் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி பேரணியில் கலந்துகொண்ட இருபால் இளைஞர்களை விரட்டியடித்ததில், நிறைய இளைஞர்கள்   இரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர்.




               இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களிலும் அந்த இரு மாநில அரசுகளும் காவல்துறையை பயன்படுத்தி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயகப்பூர்வமாகவும், அமைதியான முறையிலும் போராடும் மாணவர்களை தாக்குவது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றதாகும். இது அமைதிக்கு எதிராக அமைதியை குலைக்கும் வண்ணம் அரசுகளே நடத்தும் பயங்கரவாதச் செயலாகும். அதே சமயத்தில் மாணவர்கள் எடுத்துரைக்கும் நியாயங்களை சந்திக்க முடியாமல், அவர்களையே எதிர்த்து தாக்குவது என்பது கோழைத்தனமானதும் ஆகும். நியாத்திற்காக போராடும் மாணவ-மாணவியரை அடித்து நொறுக்கிவிட்டால் உண்மை ஊமையாகிவிடும் என்றும், இளைஞர்களின் போராட்டக்குணம் அடங்கி, அவர்கள் வீரமிழந்து கோழையாகி வீழ்ந்துவிடுவார்கள் என்றும் கனவு காண்கிறார்கள் ஆட்சியாளர்கள். மாறாக நம் வீர இளைஞர்கள் அடிக்க அடிக்க அடக்குமுறைக்கு எதிராக எரிமலையாய் வீறுகொண்டு எழுவார்கள் என்பது தான் உண்மை.  இந்த இளைஞர்களின் வீரத்தின் முன்னால் இந்த பயங்கரவாத அரசுகள் ஒரு நாள் நொறுங்கிப்போகும் என்பதும் உண்மை.

கருத்துகள் இல்லை: