சனி, 19 அக்டோபர், 2013

மத்திய அரசின் கோமாளித்தனமும், மோடியின் பகுத்தறிவு வேஷமும்....!

   
      உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவிலிருந்து சுமார் 50 கி. மீ. தொலைவில் உள்ள உன்னாவ் என்ற ஊரின் காட்டுப் பகுதியில் இருக்கும் டோண்டியா கேடா எனும் கிராமத்தில் 19 - ஆம் ஆம் நூற்றாண்டில் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் எனும் அரசரின் கோட்டை இருந்ததாகவும், தற்போது பகலில் கூட பொதுமக்கள் செல்லமுடியாத வகையில் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது வரையில் பொதுமக்களே செல்லாத அந்த இடத்திற்கு தற்போது மத்திய அரசின்  அகழ்வாராய்ச்சி நிபுணர்களும், நடமாடும் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும், இவர்களுடன் பொதுமக்களும் என ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் இருக்கிறார்கள். நாட்டின் அனைவரின் பார்வைகளும் அங்கு தான் இருக்கின்றன. காரணம் அங்கு ''தங்கப்புதையல் வேட்டை'' நடைபெறுகிறது.
         ''தங்கப்புதையலா...!'' என்று வாயை பிளக்கவேண்டாம். சாதாரணமாக ''உங்க வீட்டில் புதையல் இருகிறது'' என்றும், ''உங்க நிலத்தில் புதையல் இருக்கிறது'' என்றும் சாமியார்களும், ஜோசியக்காரர்களும் சாதாரண பாமரமக்களிடமும், படிப்பறிவில்லாத மக்களிடமும் தான் பிழைப்புக்காக பொய் சொல்லுவார்கள். இது போல் நம் நாட்டில் விழிப்புணர்வில்லாத பொதுமக்கள் ஏமாறுவது என்பது இயற்கை. ஆனால் மத்திய அரசே யாரோ சாமியார் தன் கனவில் வந்ததாக சொல்லுவதையெல்லாம் நம்பி தன்  நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறது என்பது கோமாளித்தனமாக இருக்கிறது. மத்திய அமைச்சர்களோ அல்லது மத்திய அரசு அதிகாரிகளோ அறிவுப்பூர்வமாக அல்லது அறிவியல்பூர்வமாக சிந்திக்காமல் மூளையை கழட்டி வைத்துவிட்டார்களோ என்று சந்தேகமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. தங்கப்புதையல் கிடைக்கவேண்டுமென்றால் ''உயிர் பலி'' கொடுக்கவேண்டுமென்று சாமியார்கள்  சொன்னால், இந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதையும் செய்யத் துணிவார்களோ....?  இதுபோன்ற மூடநம்பிகைகளை அரசே நம்புவது என்பதும், அதை மக்களிடையே பரப்புவது என்பதும் அறிவுடைமைச் செயலாகாது. முட்டாள்தனமானது.
          இது ஒருபுறமிருக்க. இன்னொரு புறம், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நேற்று சென்னை வந்த நரேந்திர மோடி மத்திய அரசின் இச்செயலை கிண்டலடித்து பேசியிருக்கிறார். ''சாமியார் சொன்ன புதையல் வேட்டையை நிறுத்திவிட்டு, சுவிஸ் வங்கியில் இந்திய பணக்காரர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்யட்டும்'' என்று மோடி மத்திய அரசை கிண்டலடித்து பேசியது என்பது நகைச்சுவையாக இருந்தது. சாத்தான் வேதம் ஓதினால் ஆச்சரியப்படலாம். ஆனால் மோடி வேதம் ஒதுவதைப்பார்த்து ஆச்சரியப்பட தேவையில்லை.
           மோடி பிரதமர் பதவிக்காக வேதம் ஓதுவதும், வேஷம் போடுவதும் அன்றாட நடவடிக்கையாக போய்விட்டது. ஓட்டுக்காக பொதுமக்களை கவர நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்தாற்போல் மோடி வேஷம் போடுவதை தவறுவதே இல்லை. இஸ்லாமியர்களை கவருவதற்கு ஷர்வாணி அணிவதும், அவருடைய ஆட்களுக்கே இஸ்லாமியர் வேடமிட்டு அவரது பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செய்வது, சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் சாதாரண கழிப்பறைக்கே வக்கில்லாத மக்களிடம்''முதலில் கழிப்பறை... பிறகு தான் கோயில்'' என்ற வீரவசனம் பேசுவதும் மோடிக்கு கைவந்தக் கலை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
          அதேப்போல் தான், நேற்றைய தினம் சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில்- தந்தை பெரியார் வாழ்ந்த பூமியில் பேசும் போது, ''பகுத்தறிவாளர்'' வேஷம் போட்டு பேசியது என்பது அவர் முன்பு போட்ட வேஷங்களை விட ''பகுத்தறிவாளர்'' வேஷம் நம்மை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சிரிக்கவும் செய்துவிட்டது. ''பகுத்தறிவாளர்'' மோடியைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்கத்தோன்றுகிறது. அயோத்தி இராமன் பிறந்த இடம் என்பதும், சேது சமுத்திரத்தின் குறுக்கே வாருவது இராமர் பாலம் என்பதும் மூடநம்பிக்கை தான் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் ஏன் உணரவில்லை என்பது தான் நமது கேள்வி....?
       

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தமிழன் ஏமாளியாக உள்ள வரை சேது திட்டம் வராது .
ராமன் கட்டியது என்று சொல்லி காதில் பூ வைத்து கொண்டு பஜனை பாடி கொண்டு இருக்கலாம் ..இவ்வளவு மிதித்தும் தமிழன் பார்பான் காலை சுற்றி வருவது கண்டு அவனுக்கே சற்று வெட்கமாக இருக்கும். அவனே இந்த இனத்தை இனி மேலும் மிதிக்க ஒன்றும் இல்லை என்று விட்டால் தான் இந்த இனம் விடிவு பெரும்