சனி, 5 ஜனவரி, 2013

அண்ணா அறிவாலயம் சங்கர மடமானது - தளபதிக்கு பட்டாபிஷேகம்...!


         திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணாவின் மறைவிற்கு பிறகு கட்சியை தன்  சொந்தக்கட்சியாக மாற்றிக்கொள்ள மக்களிடமும், கட்சித் தொண்டர்களிடமும் செல்வாக்குடன் திகழ்ந்த எம்.ஜி.ஆரை வெளியேற்றி பின் ஆட்சி செய்யும் வாய்ப்பையே  இழந்து விட்ட தற்போதைய (நிரந்தர) தலைவர்  கருணாநிதி, எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் மீண்டும் ஆட்சி செய்யும் வாய்ப்பை பெற்றவுடன் சோர்ந்திருந்தவர் துளிர்த்து எழுந்தார்.  காய்ந்த மரமாக இருந்த திமுக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தவுடன், கழகத்தை தன் குடும்பக்கட்சியாக மாற்ற நினைத்து, அதற்கு தடையாய் இருந்த வைகோவை வெளியேற்றினார். கட்சியை தன் குடும்பச்சொத்தாக மாற்றினார். இதனை எதிர்க்க கட்சிக்குள் இப்போது யாரும் இல்லை நிலையை உருவாக்கினார். அனால் திமுக தலைமைக்கான வாரிசு சண்டையை அவரால் அடக்க முடியவில்லை. கருணாநிதியின் அடுத்த வாரிசு அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியா...? அல்லது தளபதி அண்ணன் ஸ்டாலினா...? தொண்டர்களே குழப்பத்திலிருந்தார்கள். அவ்வப்போது தொண்டர்களிடம் ஒரு பட்டிமன்றமே நடக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
               அந்தப் பட்டிமன்றத்திற்கு கழகத் தலைவரே இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தீர்ப்பு வழங்கினார். மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்த வைபவ விழாவில் பேசும் போது, ''திமுக  சங்கரமடமில்லை'' என்று ஒரு காலத்தில் சொன்ன கருணாநிதி அதை மறந்து ''திமுகவின் தலைமைக்கு தனது அடுத்த வாரிசாக தளபதி ஸ்டாலின் இருப்பார்'' என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு என்பது கட்சிக்குள்ளேயே ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் தந்தது. குறிப்பாக அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரி அதிர்ந்தே போய்விட்டார். ''மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டாபிஷேகமா....?'' என்று கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். கட்சித் தொண்டர்கள் தாங்கள் யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் ஒரு பக்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நீண்ட மெகா சீரியலின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல தமிழக மக்கள் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
              தலைவரின் அறிவிப்பால் அவரது குடும்பம் இரண்டுபட்டுக் கொண்டிருக்கிறது. குடும்பக்கட்சி இரண்டுபடுமா... ? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: