ஞாயிறு, 30 டிசம்பர், 2012

புதுச்சேரியில் உலாவரும் ''சிதம்பர ரகசியம்''...!



          கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியில் மாநிலம் முழுதுமே எல்லா வங்கிகளிலும், ரேஷன் கடைகளிலும், ஆதார் கார்டு மையங்களிலும், ஜெராக்ஸ் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.
        மக்கள் தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டுட்டு தினமும் இந்த நான்கு இடங்களிலும் கூடிவிடுகின்றனர். இந்த இடங்களில் தங்கள் வேலை முடிந்தவுடன் எதோ சாதனை புரிந்தது போன்று ''அப்பாடி.... வந்த வேலை முடிந்தது...." என்று பெருமூச்சி விட்டு செல்கின்றனர். புதுச்சேரியில் தான் இதை பார்க்கமுடிகிறது. எதற்காக இப்படி அலைமோதுகிறார்கள் இந்த மக்கள்...?
           மத்திய அரசு வருகிற ஜனவரி 1 - ஆம் தேதி - புத்தாண்டு தினத்தன்று ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை தொடங்கவிருக்கிறது. இந்த என்பது மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஆகிய புத்திசாலிகளின் மூளைகளில் உதித்த உன்னத திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், இதுவரையில் மத்திய அரசு ரேஷன் பொருட்களுக்கும், சமையல் எரிவாயுக்கும் கொடுத்துவந்த மானியத்தை இனிமேல் நம் கைகளிலேயே தந்துவிடுவார்களாம். அரசு தருகிற அந்த ''கொஞ்சப்'' பணத்தோடு, நாம் ''நிறைய'' நம் பணத்தையும் சேர்த்து இதுவரையில் ரேஷன் கடையில் வாங்கி வந்த பொருட்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். இந்த திட்டம் என்பது நம் பாக்கெட்டை காலிப் பண்ணுவதற்கான வேலை தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் வாங்கப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். அதேப்போல் நாம் வாங்கப்போகும் எரிவாயுவின் விலை உயர உயர அரசு கொடுக்கும் மானியம் உயராது. அது அப்படியே தான் இருக்கும். விலைவாசிக்கு தகுந்தாற்போல் நம் பாக்கெட்டும் காலியாகும். ''கையில வாங்கினேன் பையிலப் போடல... காசுப் போன இடம் தெரியல...'' என்ற மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் தான் ஞாபகம் வருகிறது.
         பலகீனமாக இருந்த நாய்க்கு அது வாலை வெட்டி அதுக்கே சூப் வெச்சி கொடுக்கிற கதை தான் இது. நாய் வாலை  வெட்டி நாயிற்கே சூப் வெச்சிக் கொடுத்தா அந்த திட்டத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள் தெரியுமா...''உங்கள் வால் உங்கள் வாயில்...'' அது போல் தான் இந்த ''உங்கள் பணம் உங்கள் கையில்...'' என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
           ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டப்படி மக்களுக்கு தங்கள் கையில் பணம் கிடைக்க வேண்டுமென்றால், இப்போது தங்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்தாக வேண்டும். அது தான் அந்த நான்கு இடங்களிலும் தினமும் அவ்வளவுக் கூட்டம் கூடுகிறது.
          பேருல தான் உங்கள் பணம் உங்கள் கையில் - னு  இருக்கே தவிர, அரசு பணத்தை மக்கள் கையில்  தரமாட்டார்கள். குடும்பத்தலைவரின் வங்கிக்கணக்கில் தான் போடுவார்களாம். மாதம் தோறும் அந்த குடும்பத்தலைவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கடைக்குப் போயி சரக்கு வாங்கிகிட்டு வருவாராம். ஆனால் அந்த குடும்பத்தலைவர் எந்தக் ''கடைக்கு'' போயி என்ன ''சரக்கை'' வாங்கிகிட்டு வாருவார் என்பது அந்த குடும்பத்தலைவிக்குத் தான் தெரியும்.
          அந்தப் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு இல்லாதார்கள் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கிறார்கள். அதனால் அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம். ரேஷன் கடையில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் ஜெராக்ஸ் காப்பியும், ஆதார் கார்டின் ஜெராக்ஸ் காப்பியும் தரவேண்டும். அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம். ஆதார் கார்டு இல்லாதவர்கள் ஆதார் மையங்களில் கூடுகிறார்கள். அதனால் அங்கே மக்கள் கூட்டம். இவை எல்லாவற்றுக்கும் வங்கிப் புத்தகம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை - இவைகளின் ஜெராக்ஸ் காப்பி தேவை. அதனால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம்.
          இத்தனை இடங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதால் தான் புதுச்சேரியே ஒரே பரபரப்பாக இருக்கிறது.
           இந்த திட்டத்தை ஆரம்பத்தில் மத்திய அரசு 50 மாவட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்துகிறது. அந்த ஐம்பதில் ஒன்று புதுச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் புதுச்சேரியையும் ஐம்பதில் ஒன்றாக சேர்த்தார்கள் என்பதில் தான் ''சிதம்பர ரகசியமே'' இருக்கிறது. அது என்ன ''சிதம்பர ரகசியம்''...? இரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லை. புதுச்சேரியில் இன்று வெளிப்படையாக பேசப்படுகின்ற இரகசியம் தான்.
          சென்ற 2009 - ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் சிவமான கங்கையில் ருத்திரத்தாண்டவம் ஆடியவரால் வெற்றிபெற முடியாமல் போனது என்பதும், மறு எண்ணிக்கை என்ற பெயரில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டது என்பதும், அது சம்பந்தமான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் மக்கள் மறந்திருக்க முடியாது. வருகின்ற 2014 - ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அந்த சிவமான கங்கைக்காரரான ருத்திரத்தாண்டவத்தாரால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் டெபாசிட்டுக் கூட வாங்கமுடியாது என்ற செய்தி அம்பலத்திற்கு வந்ததையடுத்து, ''பிரதமர் வேட்பாளர்'' என்று கூட அறிவிக்கப்படலாம் சொல்லப்படுகின்ற அவர் நிச்சயம் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரது பார்வை புதுச்சேரியில் விழ, பின் அவரது பாதத்தை புதுச்சேரியில் பதிக்க தொடங்கினார். கடந்த காலங்களில் மோகன் குமாரமங்கலம், பாலாபழனூர் போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை புதுவை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்பதால், புதுச்சேரி தான் ருத்திரத்தாண்டவத்தாருக்கு பாதுகாப்பான தொகுதி என்ற அடிப்படையில்  காங்கிரஸ் கட்சியும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
          அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகத் தான் ''உங்கள் பணம் உங்கள் கையில்'' திட்டத்தை முதல் கட்டமாக புத்தாண்டு தினத்தன்றே தொடங்குவதற்கு, தாண்டவத்தாரே புதுச்சேரிக்கு நேரில் வங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
          இந்தத் திட்டத்தின் மூலம் அவர்  ''உங்கள் பணம் உங்கள் கையில்'' என்பதைப் போல் ''உங்கள் ஓட்டு எங்கள் பையில்'' என்று தேர்தல் நேரத்தில் ''காசு போட்டா ஓட்டுப்போடும் எந்திரமான மக்களிடம்'' போய்  நிற்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

கருத்துகள் இல்லை: