சனி, 13 ஜூலை, 2013

மலாலா - துப்பாக்கிகளுக்கு மத்தியில் ஒரு வெள்ளை புறா...!



           ஜூலை 12 - மலாலா தினம். சென்ற ஆண்டு ஐ.நா அறிவித்தது. அந்த நாள் பாகிஸ்தானிய புரட்சிப் பெண் மலாலா யூசுப் சாய் பிறந்தநாள். பாகிஸ்தானில் மலாலா தான் வாழும் பகுதியில் பெண்களை ஊக்குவித்து கல்வி கற்கச் செய்தார் என்பதற்காக, சென்ற ஆண்டு பிற்போக்கு தீவிரவாதிகளான தாலிபான்களின் தோட்டாவுக்கு டாட்டா காட்டி மரணப்படுக்கையிலிருந்து திரும்பி வந்தவர். மதத்தின் பேரால் பெண்கள் புத்தகத்தை தொடக்கூடாது என்று சொல்லும் பிற்போக்குத்தனமான தீவிரவாதக் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு தீரமிக்க வெள்ளைப் புறாவாக காட்சியளித்தார் என்பதற்காகவே - உலகில் மற்ற சிறுமியர்களுக்கு உதாரணமாக வாழ்கிறார் என்பதற்காகவே ஐ.நா சபை அவரது பிறந்தநாளை மலாலா தினமாக அறிவித்து அவரது தீரமிக்க செயலை கவுரவப்படுத்துகிறது.
அதேப்  போல் இந்த ஆண்டும், மலாலா தினத்தன்று - ஜூலை 12 - ஆம் தேதியன்று ஐ.நா.சபை மலாலாவின் பிறந்தநாளை மலாலாவை ஐ.நா.சபைக்கே வரவழைத்து கொண்டாடியது என்பது உலகமே அவரை கொண்டாடியது போல் இருந்தது. ஐ. நா. சபையில் நூற்றுக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அனைவரும் அவரது உரையை கூர்ந்து கவனித்தார்கள். ஐ.நா பொதுச்செயலாளர் பான் - கீ- மூன் கூட மலாலாவின் உரையை கூர்ந்து கவனித்தார். ஒரு சிறுமியின் உரையில் அப்படியொரு முதிர்ச்சியை உலகம் பார்த்தது.
          நேர்கொண்ட பார்வை... கம்பீரமான குரல்... யாருக்கும் அஞ்சாத உரை... பாரதியின் புதுமைப்பெண்ணாய் மலாலாவை பார்த்தேன். தன்னை சுட்ட எதிரிகளை பகைமைப் பாராட்டவில்லை. மாறாக அவர்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்று பேசியது என்பது அவரது பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும், அவரது சிந்தனையில் முதிர்ச்சியையும் காட்டியது. பாகிஸ்தான் என்ற குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், தன்னுடைய பேச்சில் உலகத் தலைவர்களை எல்லாம் கோடிட்டுக் காட்டினார். பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னாவை மட்டும் சுட்டிக்காட்டி தன்  பார்வையை சுருக்கிக்கொள்ளாமல் புத்தர், காந்தி, அன்னை தெரசா, ஏசு கிறிஸ்து, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்று உலகளாவிய தலைவர்களையெல்லாம் மேற்கோள்காட்டிப் பேசியதன் மூலம் அவர் நிறைய படிக்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
         மலாலா தன் எழுச்சியுரையின் முடிவில் உலக மாற்றத்திற்கான மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டு முடித்திருப்பது இன்றும் நம் மனதை விட்டு அகலவில்லை. அவர் சொன்ன அந்த வார்த்தைகள் பசுமரத்து ஆணி போல் பதிந்துவிட்டன. அவர் உச்சரித்த அந்த வார்த்தைகள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
''ஒரு ஆசிரியர், ஒரு குழந்தை, ஒரு புத்தகம், ஒரு பேனா - இவைகளால் உலகத்தை மாற்றமுடியும்'' - இந்த வார்த்தைகள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை: