திங்கள், 6 மே, 2013

60 ஆண்டுகளாக நீடிக்கும் இலங்கைப் பிரச்சனை - அரசியல் தீர்வே நிரந்தரத் தீர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் 
தோழர். ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் ஆற்றிய உரை :-       

        தமிழ் வளர்ச்சிக்கான குரல்தமிழ் மக்களுக்கும், தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய பணி மகத்தானது. மொழிவழி மாநிலக் கோரிக்கை எழுப்பிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழகத்தை மொழிவழி மாநிலமாக அறிவிக்கக்கோரி தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், என்.சங்கரய்யா ஆகியோர் பல ஆண்டுகள் போராடியுள்ளனர். அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இருந்தன. ஆனால், தமிழகத்தில் மொழிவழி மாநிலமாக உருவாக்கியப் பெருமை கம்யூனிஸ்டுகளைத் தான் சேரும். ஒன்றுபட்ட சென்னை ராஜதானிக்கு சென்னை எனப்பெயர் சூட்ட வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்போது சென்னையோடு ஆந்திராவின் பல பகுதிகள் இருந்தன. ஆனாலும், அவை சென்னைக்குச் சொந்தம் என தைரியமாக குரல் கொடுத்தவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யா. மொழிவழி மாநிலம் அமைந்த போது ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக தோழர் பி.ராமமூர்த்தி இருந்தார். 1952 - ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலில் மதுரைச்சிறைச்சாலையில் இருந்தே தோழர் பி.ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து தோழர் ப.ஜீவானந்தம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது தமிழக சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் தான் பேச முடியும். ஆனால், ஆங்கிலத்தில் பேச மாட்டோம்: தமிழில் தான் பேசுவோம் என பேசிய பெருமை பி. ராமமூர்த்தியையும், ப.ஜீவானந்தத்தையும் சாரும். சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்று 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த விருதுநகர் தியாகி சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். அவரது உடலை கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்று இறுதி நிகழ்ச்சியை நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ராமமூர்த்தி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முதல் முதலாக குரல் கொடுத்தார்.
        மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, நாங்கள் முன்மொழிய வேண்டிய தீர்மானத்தை பி.ராமமூர்த்தி முன்மொழிந்தார். அதை ஆதரிக்கிறேன் என்று பேசிய பேச்சுகள் நாடாளுமன்ற குறிப்புகளில் உள்ளது. தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைத் தரக்கூடிய நெய்வேலி அனல் மின்நிலைய துவக்கப்பணிகள் துவங்கிய போது, பீறிட்ட நீருற்றை நிறுத்த முடியாமல் பணிகளைக் கைவிட்டனர். ஜெர்மனியில் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பி.ராமமூர்த்தி அந்த நாட்டின் உதவியோடு நெய்வேலி அனல் மின் நிலைய பணிகளை முடிக்க அயராது பாடுபட்டார். மேட்டூர் அணைக்கட்டு, சேலம் உருக்காலை, திருச்சி பெல் தொழிற்சாலை உருவாகியதில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்களிப்பு உள்ளது . 1967 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், என்.வரதராஜன் ஆகியோர் ஆற்றிய பணி மகத்தானது.  
          கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கைத்தமிழர் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. இலங்கைத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், இலங்கை அரசுடன் இணைந்து, இந்திய ராணுவத்தை வெளியேற வைத்தனர். அதன்பிறகு, நார்வே நாட்டினர் முன்னிலையில் சமரசப் பேச்சுக்கான முயற்சியும் தோல்வியில் முடிந்ததால், போர்மூளும் ஆபத்து ஏற்பட்டது.
             2008,2009 - ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசித்தாக்கியது. ஐ.நா.மன்றத்தின் அலுவலகத்தின் மீதும் குண்டு வீசப்பட்டது. யுத்தம் முடிந்து 4 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி அனைவரின் நெஞ்சையும் பதறவைத்தது. இலங்கையில் 50 ஆயிரம் தமிழர்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இளைஞர்கள் பற்றிய தகவல் இல்லை. ஐ.நா. பொதுச்செயலாளர், கொழும்பு சென்ற போது ராஜ பக்சே அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரபரவல் அளிக்கப்படாது. வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி தமிழர்களுக்கு வழங்க முடியாது என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜபக்சே திமிராக அறிவித்தார்.
          அண்மையில் தமிழகத்தில் மாணவர்கள், வாலிபர்கள் மத்தியில் போராட்ட அலை எழுந்தது. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல இயக்கங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது. சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் தீர்வு என சில அமைப்புகள் சொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. பூர்வீக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கையில் மூன்று பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் யாரும் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் ஈழம் என்ற கோரிக்கை சாத்தியமா? இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வது அந்த நாட்டு மக்களின் முடிவாகும். பிரச்சனைகளைத் தீர்க்க நடை முறை சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார முற்றுகை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைக்கிறார்கள்.
          இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெறும் ஜவுளி வர்த்தகத்தை நடத்துபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்த பொருளாதார முற்றுகையால் அவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இந்தியா, இலங்கைக்கு நட்பு நாடு என கருதக்கூடாது என்ற கோரிக்கையையும் சிலர் முன்வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெறும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. இலங்கை நட்பு நாடு இல்லையென்று கருதினால், தமிழர்கள் பகுதியில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை எப்படி அமல்படுத்துவது? இலங்கையில் உள்ள சிங்களர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல.
         இலங்கையில் உயர்கல்வி தனியார் மயமாக்க நடைபெற்ற முயற்சியை எதிர்த்து சிங்களர், தமிழர் மாணவர்கள் ஒன்றிணைந்து சர்வாதிகார ராஜபக்சேயின் முடிவை மாற்றியமைத்தனர். இப்படிப்பட்ட ஒற்றுமை உணர்வு வளர்க்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதற்கு சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா ராஜ்ய ரீதியான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதியில் அதிகார பரவல் ஏற்பட இந்தியா அரசு உதவ முன்வர வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். தமிழர்களுக்கு சமஅந்தஸ்து, அதி காரப்பரவல், அடிப்படை உரிமைகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Tamil Eelam is possible and that to be decided by the Srilankan Tamil people not by Indian Tamil Nadu politician.Tamil people of Srilanka
knows what they want. Do not trust
your openion on that people.Indian
politician never understand the ground reality of Eelam Tamils. When they are under militry aggression how could you expect them to say that we want Tamil Eelam.
M.Baraneetharan.

baleno சொன்னது…

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதனால் தமிழர்களே அதிகளவு பாதிக்கப்படுவர் என ஜி.ராமகிருஷ்ணன் தெரித்த கருத்து பத்திரிக்கைகளில் காணகூடியதாக இருந்தது.

சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இலங்கையில் தனி ஈழம் அமைவது தான் தீர்வு என சில அமைப்புகள் சொல்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வது அந்த நாட்டு மக்களின் முடிவாகும்.
பிரச்சனைகளைத் தீர்க்க நடை முறை சாத்தியமுள்ள கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

தமிழ்பேரினவாத வெறி பிடித்து இலங்கை மக்களை பட்டினி போடவும் தயாராகிவிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி ஒரு அறிவுபூர்வமாக சிந்திக்கும் அரசியல்தலைவரான அவருக்கு எங்கள் வணக்கங்கள்.