சனி, 23 மார்ச், 2013

புதுச்சேரி பிரஞ்ச் - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தோழர். வீ. இராமமூர்த்தி மறைந்தார்....!

           பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முதுபெரும் தோழரும், புதுச்சேரி ''தீக்கதிர்'' நாளிதழின் நிருபர் தோழர். ஆர். முருகன் அவர்களின் தந்தையாருமான தோழர். இராமு என்கிற வீ. இராமமூர்த்தி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு காலமானார். பிரஞ்ச் -இந்திய விடுதலைப் போராட்டத்தில் தோழர். வ. சுப்பையா மற்றும் தோழர். டி. கே. இராமானுஜம் ஆகியத் தோழர்களோடு இணைந்து புதுச்சேரியின் விடுதலைக்காக போராடியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பக்கால உறுப்பினரான இவர், கட்சியின் முடிவின்படி தன் இறுதிக்காலம் வரை அரசிடமிருந்து விடுதலைப்போராட்ட வீரர்களுக்கான பென்ஷனை பெறாதவர். சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாமல், புதுச்சேரி பாரதிபுரத்தில் பொது சாக்கடையின் பக்கத்தில் சிறு குடிசையில் வாழந்து வந்தார். சாக்கடை நாற்றத்தோடும், கொசுக்களோடும் தான் அவர் கடைசி வரை வாழ்ந்திருக்கிறார் என்பதை பார்க்கும்போது என் நெஞ்சம் வெடித்துப்போனது. கடைசி வரையில் கட்சிப் போராட்டங்களில் கலந்துகொள்வதிலும், கட்சிக் கிளைக் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் அவர் தவறியதே இல்லை. புத்தகங்களை படிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் படித்த புத்தகங்களை மற்றத் தோழர்களுக்கும் கொடுத்து படிக்கச் செய்வார். தேசத்தின் மீதும், கட்சியின் வளர்ச்சியின் மீதும் மிகுந்த அக்கறை காட்டியவர். கடைசிக்காலம் வரையில் யாருடைய உதவியையும் எதிர்பாராமல் வறுமையில் வாடினாலும், இறுதிவரையில் ஒரு மார்க்சிஸ்டாகவே வாழ்ந்து மறைந்தார். அதனால் தான் அதிசயமாய் சுதந்திரப் போராட்ட வீரன் பகத் சிங் மறைந்த நாளிலேயே இவரும் மறைந்திருக்கிறார். அவரது மறைவு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாபெரும் இழப்பு ஆகும்.
         மறைந்தத் தோழருக்கு என் கண்ணீர் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: