சனி, 24 நவம்பர், 2012

முற்போக்குக் கலை இலக்கியம் வளர்த்ததில் முன்னோடி - மார்க்சிய அறிஞர் தோழர் '‘பி.ஜி.’'


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் 
கலைஞர்கள் சங்கம் அஞ்சலி...!

        மார்க்சிய அறிஞரும், கேரளத்தின் மூத்த முற்போக்குக் கலை இலக்கியவாதியுமான பி.கோவிந்தப்பிள்ளை மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள திரைப்படக்கழக முன்னாள் தலைவரும், “பி.ஜி.” என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான கோவிந்தப்பிள்ளை, கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் வியாழனன்று (நவ.22) காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

          1926 மார்ச் 25 அன்று கேரளத்தின் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த புல்லுவழி கிராமத்தில் பிறந்தவரான தோழர் பி. கோவிந்தப்பிள்ளை, மாணவப்பருவத்திலேயே நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவர்.
          பின்னர் மார்க்சிய சிந்தனையாளராகப் பரிணமித்து, சிறந்த எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தவர். சிறையில் இருந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளையும் கற்றுக் கொண்டவர். கேரள மாநில முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய இடம் வகித்தவரான தோழர் பி.ஜி. மார்க்சிய கண்ணோட்டத்துடன் கலை இலக்கியப் பிரச்சனைகளையும் பண்பாட்டுத்தள நிகழ்வுகளையும் ஆராய்ந்தார். பிற்போக்குவாதிகளின் திசை திருப்பல்களுக்கு எதிராக, மக்கள் கலை இலக்கியத்தை வளர்ப்பதில் வெற்றிகரமாகப் பங்களித்தார்.
             ஆழ்ந்த வாசிப்பு ஆர்வம் கொண்டவரான பி.ஜி., அரசியல், சமுதாயம், தத்துவம், கலை-இலக்கியம் என பல்வேறு துறைகள் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டம் வரையில் படிப்பதிலும் எழுதுவதிலும் இடையறாது ஈடுபட்டிருந்தார். சுமார் 30,000 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறு நூலகத்தையே தமது இல்லத்தில் அமைத்திருந்தார் என்பதிலிருந்து, புத்தக வாசிப்பிலும் ஆய்விலும் அவருக்கு இருந்த காதலைப் புரிந்து கொள்ள முடியும். வளரும் கலை இலக்கியவாதிகளுக்கு அவரது இந்த ஈடுபாடு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.
              கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத் தலைவராகவும் செயல்பட்டு, சமுதாய அக்கறை கொண்ட திரைப்படங்கள் உருவாவதற்குத் துணை நின்றவரான பி.ஜி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தோடும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். நெல்லையிலும் திருப்பரங்குன்றத்திலும் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாடுகளிலும், திருச்சி குணசீலத்தில் நடந்த இலக்கிய முகாமிலும் கலந்துகொண்டு ஊக்கமளித்தார். தமுஎகச படைப்பாளிகளுக்கும் கேரள படைப்பாளிகளுக்கும் இடையே நட்புறவுப் பாலமாகச் செயல்பட்டார். தமிழகத்தின் பண்பாட்டுத் தள நிகழ்ச்சிப் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து கருத்துப் பரிமாற்றம் செய்துவந்தார்.
           அவ்வகையில் தோழர் பி.ஜி.யின் மறைவு தமுஎகச-வுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மக்கள் மீது நேயத்துடன் தத்துவார்த்தப் புரிதலிலும் புத்தக வாசிப்பிலும் தீவிர எழுத்திலும் முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்வதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். அன்னாருக்கு தமுஎகச தனது அஞ்சலியை சமர்ப்பிக்கிறது. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் கேரள முற்போக்குக் கலை இலக்கியவாதிகளுக்கும் மார்க்சிய இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி : தீக்கதிர்

கருத்துகள் இல்லை: