ஞாயிறு, 25 நவம்பர், 2012

காசு கொடுத்து மக்கள் வாயை மூடி ரேஷன் கடைகளை இழுத்து மூடுவதற்கு மன்மோகன் சிங் திட்டம்..!



















             பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங் -  ப.சிதம்பரம் -  அலுவாலியா கூட்டாளிகள் அடுத்து பொது விநியோக முறையை சீரழித்து ரேஷன் கடைகளை இழுத்து மூடும் வேலைக்கு தற்போது அச்சாரம் 
இட்டிருக்கிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதிப்பது என்ற அரசின் தான்தோன்றித்தனமான - தறுதலைத்தனமான திட்டத்திற்கு எதிராகவே தற்போது பாராளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்களின் உணவு பாதுகாப்பிற்கு வெட்டு வைக்கும் வகையில் இன்னொரு தருதளைத்தனத்தை அரங்கேற்ற மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் - அலுவாலியா கூட்டணி 
துடித்துக்கொண்டிருக்கிறது. இந்திய பெருமுதலாளிகள் வயிறு வெடிக்கும் அளவிற்கு 5 இலட்சம் கோடிக்கு மேல் மானியத்தை கொட்டிக் கொடுக்கும் மன்மோகன் சிங், காலாகாலமாக  ரேஷன் உணவு பொருட்கள்,  பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்றவற்றிற்கு சாதாரண மக்களுக்கு கொடுக்கப்படும் சிறு தொகையிலான மானியத்திற்கு மட்டும் ''பணம் என்ன மரத்திலா காய்க்கிறது..." என்று கேள்விக் கேட்கிறார்.
            அப்படி சிறு மானியத்தின் மூலம் இயங்கும் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டி மக்களுக்கு கொடுக்கப்படும் அந்த சிறு மானியத்தைக் கூட வெட்டுவதற்கு மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் துணிந்திருக்கிறார்கள். இதன் மூலம் தற்போது ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் உணவு பொருட்கள் விநியோகம் நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக, அந்த உணவு பொருட்களுக்கு  அரசு இதுவரை கொடுத்து வந்த மானியத்தொகையை வரும் புத்தாண்டு முதல் - ஜனவரி 2013 முதல்  நேரடியாக பொது மக்களின் கைகளிலேயே கொடுத்துவிடுவார்களாம். அந்த தொகையுடன் அவர்கள் தங்களது காசை கூட சேர்த்து வெளிச்சந்தையில் வாங்கிக்கொள்ளவேண்டுமாம். ஆண்டு ஒன்றுக்கு இப்படியாக சேரும் மானியத்தொகை என்பது 32,000 ரூபாயாம். பொது மக்களின் நாக்கில் மன்மோகன் சிங் தேனைத் தடவுகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். காசு கொடுத்து மக்களை மயக்கும் திட்டத்தில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்த மக்களை மயக்கும் வேலைகளின் விளைவுகள் தான் என்ன என்பதையும் மக்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ளவேண்டும்.

ஒன்று :   இந்த மானியத் தொகையை மக்கள் கைக்கு கொடுக்கும் இந்த புதிய முறை எத்தனை  நாளைக்கு நீட்டிக்கும் என்று தெரியவில்லை. ''பணம் காய்க்கும் மரம் அரசிடம் இல்லை''    என்று  சொல்லி திடீரென நிறுத்திவிடுவார்கள்.  
இரண்டு:    ரேஷன் கடைகளை இழுத்து மூடுவதற்கான சுலபமான வழி இது. இனி நாட்டில் ரேஷன் கடைகளோ, உணவுப் பொருட்கள் விநியோகமோ நாட்டில் இருக்காது.
மூன்று:  ரேஷன் கடைகளே இருக்காது என்கிற போது, உணவு பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கிடங்கில் பாதுகாத்து மக்களுக்கு ரேஷன் கடைகளின்     மூலம் விநியோகம் செய்ய உதவி புரியும் இந்திய  உணவுக் கழகம் இனி  மூடப்படும்.
நான்கு:  இது வரையில் மக்கள் ரேஷன் கடைகளில் எப்போது உயராத  ஒரே  விலைக்கொடுத்து தான் பொருள் வாங்கிவந்தார்கள்.  ஆனால் அரசு கொடுக்கும் மானியத் தொகையும் உயராது. ஒரே மாதிரியான தொகையை தான் அரசு கொடுக்கும். ஆனால் வெளிச் சந்தையில் நாளுக்கு ஒரு விலை விற்கும். தினமும் விலை உயர்ந்து கொண்டே போகும். மக்கள் தன்  கை காசை அதிகமாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் ''பணவீக்கம்'' என்பது மேலும் மேலும் அதிகரிக்கும்.
ஐந்து:      உணவுக் கழகமே மூடப்படும் நிலையில், ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து வந்த பன்னாட்டு பெருமுதலாளிகள் கையில் கொள்முதல் முழுதும் சென்று விடும். விவசாயிகளுக்கோ அல்லது உற்பத்தியாளருக்கோ நியாயமான விலை கிடைக்காமல் போய்விடும்.
ஆறு:        எதிர்காலத்தில் ''உணவு பாதுகாப்பு'' என்பது கேள்விக்குறியாகிவிடும்.
ஏழு:          நாட்டில் மிகப்பெரிய உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும்.
எட்டு:         மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ''உணவு உரிமை'' என்பது மயக்க ஊசிப் போடாமலேயே ஆட்சியாளர்களால் ''மயக்கி'' பறிக்கப்படும்.  
 இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை..!

கருத்துகள் இல்லை: