செவ்வாய், 3 மார்ச், 2015

தொடப்பக்கட்டை வாங்குவதற்கு மக்களிடமே வசூல் செய்கிறார் மோடி...!

                 சென்ற பிப்ரவரி 28-ஆம் தேதியன்று நரேந்திரமோடி தலைமையிலான ''அகாஜுகா'' ஆட்சியின் முதலாவது முழு பட்ஜெட் பாராளுமன்றத்தில், அவரது கூட்டாளியும், நிதியமைச்சருமான அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பட்ஜெட்டில், இந்தியாவில் வாழ்க்கை நடத்துவதற்கே கஷ்டப்படும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ரூ.5,90,000 கோடியளவிற்கு வரிச்சலுகையும், மானியமும் தாராளமாக அள்ளித்தந்து தன்னை ''கார்ப்பரேட்டுகளின் அடியாள்'' என்று துணிச்சலாக அடையாளம் காட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் உண்டுக்கொழுத்திருக்கும் நம் நாட்டு ஏழை ஜெனங்கள்  கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த வருமானத்தையும், சிறுசிறு சேமிப்புகளையும் கொஞ்சமும் அச்சமில்லாமல் அள்ளி எடுத்து அபகரித்து ஒட்டாண்டியாக்கியிருக்கிறார்.
              தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து இலாபம் கொழிக்கும் மோடியின் செல்லங்களுக்கு ''கார்ப்பரேட் வரி'' 5% அளவிற்கு குறைப்பு, மூலதன முதலீட்டு வரி (Wealth Tax) முழுமையாக ரத்து என சலுகைகளாக அள்ளி வீசியிருக்கிறார். ஆனால் சாதாரண மக்களுக்கு சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக மோடி மிகவும் துணிச்சலாக உயர்த்தியிருக்கார். இதனால் சாதாரண மக்கள் வாங்கும் மருந்துகளின் விலை மேலும் உயரும். ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிடும் உணவிற்கான விலையும் உயரும். எங்கெல்லாம் சேவை வரி வசூலிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இனி மக்களிடம் கூச்சப்படாமல் 2% அதிகமாக வசூலிக்கப்படும் என்கிற கொடுமையான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில்  வெளியிட்டிருக்கிறார்.
              இதுமட்டுமல்லாமல், ''தொடப்பக்கட்ட வரி'' என்ற புதிய வரியை சாதாரண மக்கள் மீது திணித்திருக்கிறார். மக்களிடமிருந்தே  வரியை வசூல் செய்து அந்த பணத்தை  நாட்டை சுத்தம் செய்யவும், கங்கையை சுத்தம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ளும் துப்புக்கெட்ட அரசை நடத்துகிறார் மோடி. மக்களிடம் சேவை வரியாக வசூலிக்கப்படும் 14% தொகைக்கு இன்னும் கூடுதலாக ''தூய்மை இந்தியா'' திட்டத்திற்காக  2% மேல் வரியாக வசூலிக்கப்படுமாம். என்ன கொடுமை சார் இது...? இவங்க வாங்குகிற தொடப்பக்கட்டைக்கெல்லாம் நாம்ப ஏன் காசு தரனும்...? நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.

கருத்துகள் இல்லை: