சனி, 19 செப்டம்பர், 2015

மீண்டும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார் ரங்கசாமி...!


கேளிக்கூத்தாகும் புதுச்சேரி அரசியல்...!

             புதுச்சேரியில் 2011- சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் ஒன்றாக தேர்தலை சந்தித்து, தேர்தல் வெற்றிக்கு பின்னர் கூட்டாளியாக இருந்த அதிமுகவை கழட்டிவிட்டு, ஒரே ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவோடு நேற்று வரையில் ''அலங்கோல'' ஆட்சி செய்து வந்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே மாநிலங்களவைத்தேர்தல் என்பது ஒரு சோதனைக்காலமாக ஆகிவிட்டது.   புதுச்சேரியில் உள்ள ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு  முன்பே பாரதீய ஜனதாக்கட்சியின் அகில இந்திய தலைவர்  அமித்ஷா புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியை சந்தித்து இராஜ்யசபா சீட்டை தங்கள் கட்சிக்கு விட்டுக்கொடுக்கும்படியும்,  அதற்கான தொகையும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் இருப்பதால், அமித்ஷாவிற்கு வளைந்து கொடுக்காத ரங்கசாமி  தானே தன்னுடைய வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்து, வேட்பாளரையும் தேடி கண்டுபிடித்து, தன் கட்சியின் சக நிர்வாகிகளுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் சொல்லாமலும், செய்தியாளர்களுக்கும் தெரியாமலும்   தேர்தல் வேட்புமனு கொடுக்கும் கடைசிநாள் வரை  மனசுக்குள்ளே வைத்திருக்க, அதற்குள் முதலமைச்சர் மீது நீண்ட காலமாக நம்பிக்கை இழந்து, வேண்டாவெறுப்பாக அவரோடு ஒட்டிக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்களை மோப்பம் பிடித்த  திமுகவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் - அவர் புதுச்சேரியில் மருத்துவக்கல்லூரி ஒன்றும், நட்சத்திர ஓட்டல் ஒன்றும் நடத்திவரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆசைப்பட, தான் வெற்றி பெறுவதற்கு தேவையான எண்ணிக்கையிலான  அந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு   கோடிகளையும், ஓட்டல் சொர்க்கத்தையும்  காட்டி திருப்திப்படுத்த, தான் மனசுக்குள் வைத்திருக்கும்  தனது  காரைக்கால் தொழிலதிபர் நண்பனை மாநிலங்களவை உறுப்பினர் ஆக முடியாமல், வாய்ப்பை தன்னுடைய பறிக்கப்படும் சூழ்நிலையை புரிந்துகொண்ட ரங்கசாமி, தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அதிருப்தியாளர்களுக்கோ, அவர்களை வளைத்து போட்டுக்கொண்ட தமிழக தொழிலதிபருக்கோ வெற்றிபெறும் வாய்ப்பு கிடைத்துவிடாமலிருக்க கடைசியில் யாரும் எதிர்பாராதவிதமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தன்னுடைய பழைய தேர்தல் கூட்டாளியான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.   
            இராஜ்யசபை தேர்தல் சீட்டை அதிமுகவிற்கு விட்டுக்கொடுத்த ரங்கசாமி, தான் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி அழகு பார்க்க நினைத்த தனது நண்பனை அதிமுகவில் சேரவைத்து, அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யவும் வைத்தார். நேற்றுவரையில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள், பதவிக்காகவும், பணத்துக்காகவும் அவசரகால கூட்டணி அமைத்ததன் மூலம் புதுச்சேரி மக்களையும், அரசியலுக்கே சம்பந்தமில்லாத - ஊர், பேர் தெரியாத ஒரு தொழிலதிபரை தன்னுடைய கட்சியின் வேட்பாளராக ரங்கசாமி அறிவித்ததன் மூலம் ரங்கசாமி கட்சித் தொண்டர்களையும், ரங்கசாமி  தன் கட்சிக்கு அனுப்பிவைத்த அவரது நண்பரையே வேட்பாளராக ஜெயலலிதா ஏற்றுகொண்டதன் மூலம் அதிமுக தொண்டர்களையும் வடிகட்டின முட்டாள்களாக ஆக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். 

1 கருத்து:

nimiththigan சொன்னது…

ஃபோன் ஒயர் பிஞ்சி ரொம்ப நாளாயிடுச்சி..........