செவ்வாய், 1 மே, 2012

மனநிறைவைத் தந்த மே தின விழா...!

                   இன்று வழக்கம் போல் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக 
எல். ஐ. சி. முகவர் சங்க அழைத்திருந்தோம். காலை 9 -க்கு கொடியேற்றப்படும் என்று அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் 8 மணிக்கே தோழர்களைப் பார்த்ததும் மனதில் உற்சாகம் பிறந்தது. அதில் நேற்று தான் எல். ஐ. சி - யில் புதிதாக முகவர் பணிக்கு சேர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வந்திருந்த தோழர்களும் உண்டு. தோரணம் ஓட்டுவது, மேலே ஏறி   கட்டுவது, பள்ளம் தோண்டி புதிதாக கொடிக்கம்பம் நடுவது போன்ற அத்தனை வேலைகளையும்  புதிய 
தோழர்கள் உட்பட வந்திருந்த தோழர்கள் அனைவரும் வரிந்து கட்டி செய்தது என்பது மேலும் மிகுந்த உற்சாகத்தை  கொடுத்தது என்றால் அது மிகையாகாது. முகவர் கட்சிக் கிளையின் செயலாளர் 60 வயதை தாண்டிய மூத்தத் தோழர். அவரும் உற்சாகமாய் ஓடி ஆடி வேலை செய்தார். .
              இப்படி எல்லா வேலைகளையும் முடிப்பதற்கே 10.30 மணி ஆகிவிட்டது.  அது வரையில் வந்திருந்தவர்களில் யாரும் காலை உணவு சாப்பிடவில்லை. 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி முதலில் விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றப்பட்டது. பிறகு சி. ஐ. டி. யூ கொடியையும், அதன் பிறகு முகவர் சங்கக்கொடியையும் ஏற்றிவைக்கப்பட்டன. 
                 இந்நிகழ்ச்சியில், மே தின வரலாற்றையும், அமெரிக்காவில் மே தினத்தை ஒட்டிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தைப் பற்றியும், தொழிலாளர்கள் மற்றும் முகவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டன. வந்திருந்தத் தோழர்கள் எல்லோரும் உற்சாகமாய் பேசினார்கள். 11.30 மணிக்கு கூட்டம்  முடிந்தது. அனைவருக்கும் காலை சிற்றுண்டி அதன் பிறகு தான் வழங்கப்பட்டது. 
                  ஒவ்வொரு ஆண்டும் மே தின விழாவின் உற்சாகம் கூடிக்கொண்டேப் போகும். இன்றும் அப்படித்தான். எல். ஐ. சி ஊழியர்களின் மிக அதிகமான ஊதிய உயர்வுக்கும், பணிப்பாதுகாப்புக்கும் காரணமாய் இருக்கும் ஊழியர் சங்கத்தின் கொடி புதுச்சேரியில் வழக்கம் இன்றும் ஏற்றப்படவில்லை என்பது வேதனையானது.                        
         ஆனால் நிரந்தர வருமானமோ அல்லது பணிப்பாதுகாப்போ இல்லாத முகவர்கள் அதிக 
அளவில் கூடியது என்பது அவர்கள் தங்களது சங்கத்தின் மீதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையாகும்.

 மே தினம் வாழ்க.... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக...
                                                                        
   

கருத்துகள் இல்லை: