சனி, 17 டிசம்பர், 2011

சச்சினுக்கு ''பாரத ரத்னா'' விருது - இது சரியோ...? இது முறையோ...?

                    சூதாடிகளுக்கும், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கும் இந்தியாவின் மிக உயரிய பரிசு ''பாரத ரத்னா''  விருது கொடுப்பது சரிதானா..? முறை தானா...?  
              சச்சின் ஒரு விளையாட்டு வீரர். அதுவும் உலகம் முழுதும் அனைவராலும் விளையாடப்படும் விளையாட்டுமல்ல... உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் விளையாட்டுமல்ல... வெறும் பத்து நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு. அதனால் தான் ஒலிம்பிக் போட்டி போன்ற உலக அளவிலான போட்டிகளில் இதுவரை கிரிக்கெட் சேர்க்கப்படவில்லை.
                அப்படிப்பட்ட விளையாட்டில் சாதனை செய்தாரா என்றால்... சாதனை செய்திருக்கிறார்... நாமெல்லாம்  பெருமைப்படத்தக்க அளவில் சாதனை புரிந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அனால் அவை அத்தனையும் ஒரு  தனிமனித சாதனை... 
             அவர் அப்படிப்பட்ட சாதனைகள் புரிவதற்காகவே, ஆட்சியாளர்களால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு செய்திருக்கும் சாதனைகள் தான் அத்தனையும். இதே போல் வாய்ப்புகள்  கிரிக்கெட் ஆடும் அத்தனைப் பேருக்கும் கொடுக்கப்பட்டால் அவர்களும் தனிமனித சாதனைகளை அவர்களது ஆட்டத்தில் செய்துகாட்டுவார்கள்.
                 அதுமட்டுமல்ல, இன்றைக்கு உலகமய சூழலில் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக கிரிக்கெட் என்பது ஒரு சூதாட்டமாக மாறிவிட்டா சூழலில் - கிரிக்கெட் என்பது பணம் கொட்டுகிற விளையாட்டாக மாறிவிட்ட சூழ்நிலையில்  கிரிக்கெட் என்பது சாதனை படைக்கும் களமாக இல்லாமல், மனம் சேர்க்கும் - சொத்து சேர்க்கும் கஜானாவாக மாறிவிட்டது. 
               அப்படி சம்பாதித்த பணத்திற்கு சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் அரசுக்கு கட்டவேண்டிய வரியை சரியாக - முறையாக - நியாயமாக கட்டியிருப்பார்களா....? என்றால்... இல்லை... இல்லவெ இல்லையெ...! இவர்களுக்கு அரசாங்கமே இவர்களுக்கு கொடுக்கும்  வரிச்சலுகையை இவர்கள் அனுபவிப்பது மட்டுமல்லாது... தங்களுக்கு வரும் வருமானத்தை முறையாக அரசுக்கு காட்டுவதுமில்லை.... முறையாக கட்டவேண்டிய வரியையும் இதுவரை கட்டியதுமில்லை...
              இவர் ஒரு நேர்மையான இந்திய குடிமகன்  இல்லை என்பதுமட்டுமல்ல, ஓர் உண்மையான இந்திய குடிமகனாகவும் அவர் நடந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். பெப்சி, பூஸ்ட், மெட் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இவர் தான் நிறுவனத் தூதராக இருந்து, அந்த கம்பெனிகளின் விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தவர் என்பதையும் இந்த நாடு அறியும். இப்படிப்பட்டவர் எப்படி ஓர் உண்மையான இந்தியக் குடிமகனாக இருக்கமுடியும் என்று சொல்லுங்கள்.
              இப்படிப்பட்டவருக்குத் தான் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
             இதுவரை கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்துவந்தது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு சென்ற நவம்பர் 16-ம் தேதி அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய  விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
            இப்படிப்பட்ட இவருக்கு தான், இந்த உயரிய விருதினை தருவதற்காகவே, பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் மத்திய அரசு இப்போது புதிய திருத்தம் செய்துள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் பாரத ரத்னா பரிசு வழங்க தான் இந்த மாற்றம் என்று பொதுவாக சொல்லியிருந்தாலும் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் டெண்டுல்கருக்காக தான் இந்த மாற்றம் என்றால் அதில் நியாயம் இல்லை.
                             சென்ற 1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களை பற்றி சிந்தித்தவர்களும், தேசத்தை பெருமைக்குல்லாக்கியவர்களுமான சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாசாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்  ஆகிய  இவர்களில் தொடங்கி, இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
             கடந்த காலங்களில் இந்த உயரிய விருதினை ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், அமார்த்தியா சென், ஜெயபிரகாஷ் நாராயண், டாக்டர் அப்துல் கலாம், டாக்டர் அம்பேத்கர், எம். எஸ். சுப்புலட்சுமி, பண்டிட் ரவி சங்கர், உஸ்தாது பிஸ்மில்லாகான், மொரார்ஜி தேசாய், எம். ஜி. ராமச்சந்திரன், ராஜீவ் காந்தி,  லதா மன்கேஷ்கார், அன்னை தெரசா, கான் அப்துல் காபார் கான், நெல்சன் மண்டேலா.... போன்ற உலகின் - தேசத்தின் - சமூகத்தின் உயர்ந்த தலைவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த உயரிய விருதினை பெறுவதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு மேலே சொன்னவர்களில் ஏதாவது ஒரு தகுதியாவது உண்டா...? என்பதை அவரே தன்னை எடைபோட்டுப்பார்க்கவேண்டும்.

3 கருத்துகள்:

வெங்கடேசன் சொன்னது…

சரியான நெத்தியடி !

வெங்கடேசன் சொன்னது…

சரியான நெத்தியடி !

கார்த்தி சொன்னது…

என் தன்னலமற்ற தலைவன், கல்வி கண் கொடுத்த தலைவன் கருப்பு காந்தி "காமராசனுக்கு" இது கொடுக்காத போதே "பாரத ரத்னா" அதற்குண்டான மரியாதையை இழந்து விட்டது.... இனி இதை நாய்க்கு கொடுத்தல் என்ன? பேய்க்கு கொடுத்தால் என்ன?