செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே என்ன மகாத்மாவா..? - அன்னா - காங்கிரஸ் - பா. ஜ .க இணைந்து நடத்தும் கூட்டு நாடகம்..!

                    ஊழல் என்பது இந்தியாவில் காலம் காலமாக  ஒரு அங்கிகரிக்கப்பட்ட தொழிலாக செம்மையாக நடந்துகொண்டே தான் இருக்கின்றன.  ஆனால் பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் மட்டுமே ஊழலை எதிர்த்து பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராடிவந்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டுமென்றும் வலியுறுத்தி வந்தனர். அப்போதெல்லாம் மத்திய அரசு அதை பற்றி கண்டுகொள்ளாமலே இருந்து வந்தது.
                     ஆனால்  சமீப காலமாக, மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்ததிலிருந்து புற்றிலிருந்து பாம்புகள்  ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வருவது போல் ஏகப்பட்ட ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியே அம்பலமாவதைப் பார்த்து மக்களே அதிர்ந்து போயிருக்கிறார்கள். அப்போது தான்  கதைகளில் வருவது போல் - இதிகாசத்தில் கம்சனை ஒழிக்க அவதாரம் எடுத்த கிருஷ்ண பரமாத்மா போல் - இந்தியாவில் ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே அவதாரம் எடுத்தது போல் ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றனர். நாடெங்கும் அவரின் பெயரால் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் முளைத்துவிட்டன. அன்னா ஹசாரே ஒரு மகாத்மாவைப் போல் காட்சித் தருகிறார். ஏதாவது ஒரு கதாநாயக நடிகர்களுக்குப் பின்னாலேயே சென்று பழக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே ஒரு கதாநாயகனாக - இந்தியன் தாத்தாவாக தெரிகிறார்.
                      பா. ஜ. க. -வும், சில அரசு சார்பற்ற நிறுவனங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும்  அன்னா ஹசாரெக்குப்  பின்னால் இருந்துகொண்டு இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அன்னா ஹசாரே டெல்லியில்
நடைபெறும் ஊழலை மட்டுமே எதிர்த்து போராடுவார். ஆனால் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் - குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் கர்நாடகா மாநில  முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பற்றியோ அல்லது குஜராத் மாநில முதலமைச்சர் மோடியைப் பற்றியோ அல்லது   ஊழல் செய்து  கொள்ளை இலாபம் சம்பாதித்த அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, டாடா, கலாநிதி மாறன்  போன்ற கார்ப்போரேட்  முதலாளிகளைப்  பற்றியோ  வாயை திறக்க மாட்டார்.
                            இந்தியாவில்  ஒரு பக்கம்  ஊழல்  ஆறு    வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது அரசின் பணம் - மக்களின் பணம் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேப் போகும் விலைவாசியோ மக்களை பிழிந்தேடுக்கிறது. இன்றைக்கு   மக்களின் கவனமெல்லாம் - பார்வையெல்லாம் - சிந்தனையெல்லாம் இவை இரண்டின்  மீது  தான்   பதிந்திருக்கிறது. மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை மன்மோகன் சிங் நன்கு அறிவார்.
                      ஆக குழம்பிப் போயிருக்கும் மக்களை திசைத்திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு மன்மோகன் சிங் தள்ளப்பட்டிருக்கிறார்.  மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பவேண்டி தான்  பாரதீய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு பாராளுமன்றத்தை முடக்கும் நாடகத்தையும், அன்னா ஹசாரேவுடன் சேர்ந்துகொண்டு உண்ணாவிரதம் - கைது நாடகத்தையும் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதா கட்சியும் சேர்ந்து நடத்துகிறார்கள் என்பதை மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.

8 கருத்துகள்:

Sritharan சொன்னது…

Yes. Anna Hazare is a 'Mahatma'! I could understand your de spire. You are dragging him into unwanted debate,just to smear his cause. Anna never demand anything for himself. He never given any clean chit to anybody. He never after any party's support. RSS & BJP came forward in support of Anna voluntarily. If possible publish facts,do not misguide people.

Sritharan சொன்னது…

Yes,Anna Hazare is Mahatma. Publish facts. Do not misguide people. People can't be fooled any more.

Ethi raj சொன்னது…

Comrade I need the answer for Sritharan Questions

baappu சொன்னது…

ஆம்!
அண்ணா ஹஸாரே இந்துத்துவ மற்றும் பெருமுதலளிகளின் ஏஜன்ட் தான். அவரது மகாரஷ்ட்ர காந்திகிராமத்தின் ஆட்சி மற்றும் நடைமுறை வரலாறு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் அவர் ஆட்சியாளர்களுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது லோக்பால் பில்லில் என்.ஜி.ஓ க்களை சேர்க்க கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைத்தவர்.

ஜனநாயகத்திலும், நாடாளுமன்ற அரசியலிலும் நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

baappu சொன்னது…

ஆம்!
அண்ணா ஹஸாரே இந்துத்துவ மற்றும் பெருமுதலளிகளின் ஏஜன்ட் தான். அவரது மகாரஷ்ட்ர காந்திகிராமத்தின் ஆட்சி மற்றும் நடைமுறை வரலாறு அதைத்தான் உணர்த்துகிறது. மேலும் அவர் ஆட்சியாளர்களுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது லோக்பால் பில்லில் என்.ஜி.ஓ க்களை சேர்க்க கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக வைத்தவர்.

ஜனநாயகத்திலும், நாடாளுமன்ற அரசியலிலும் நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தவர்.

puduvairamji.blogspot.com சொன்னது…

நண்பர் ஸ்ரீதரன் அவர்களுடைய கருத்துக்களுக்கு
நண்பர் பாப்பு அவர்களின் கருத்துக்களே பதிலாகவும்
தெளியுரையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பா.சதீஷ் சொன்னது…

அன்புள்ள ராம்ஜி
நீங்கள் சொல்வது போல் அன்ன ஹசாரே போராடுவது லோக்பால் என்ற புதிய சட்டம் உருவாக்கதானே ? அது டில்லி க்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவிற்கும் ஆன ஒரு ஊழல எதிப்பு சட்டமல்லவா? ஒரு கட்டத்தில் ஆளும் எதிர்கட்சிகளின் கூட்டு ஏற்பட்டு ஊழல மறைக்கபடுவதை தடுக்க சமூக ஆர்வலர்களும் பொது மனிதர்களும் இடம் பெரும் ஒரு அமைப்பாக லோக்பாலை உருவாக்கவே அவர் போராடுகிறார் அல்லவா? நீங்கள் அதை கொண்டு அவர் டில்லி க்கு மட்டும் போராடுகிறார் என்கிறீர்கள் ? லோக்பால் இந்திய முழுதும் செயல்படும் ஒரு மத்திய சட்டமஅல்லவா? மனித உரிமை சட்டம் போல?

Annamalai சொன்னது…

அண்ணா ஹஸாரே யை குறைத்து மதிப்பிட்டு விட்டோம் என்று,
காங்கிரஸ் விழித்து கொண்டு அறிவு ஜீவிகளையும் ,கணினி வல்லுனர்களையும்
களத்தில் இறக்கி உள்ளது என்று செய்திகள் வருகிறது.வலைத்தளம் மற்றும் பிற
கணினி ஊடகங்கள் மூலம் எதிர் பிரச்சாரம் செய்ய அமர்த்தி உள்ளார்கள்
நீங்கள் ஒரு வேளை அந்த குழுவை சார்ந்தவராக இருக்கலாம் .