செவ்வாய், 29 மே, 2012

பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு - மத்திய மாநில அரசுகளின் வக்கிரபுத்தி...!

             கடந்த ஒரு வாரமாகவே புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் பெட்ரோல் - டீசல்
தட்டுப்பாடு என்பது மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த வாரம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியோடு பெட்ரோலின் விலையை லிட்டருக்கு  7ரூபாய் 50 காசு உயர்த்தியது. இந்த விலையேற்றம் என்பது முன்னெப்போதும் செய்யாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதால், மக்கள் மத்தியில்  மத்திய அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தை உண்டுபண்ணியது. மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் அதிருப்திக்கு உள்ளாகினர் என்பது
கண்கூடாக பார்த்த உண்மை. பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து தலைமை அறிவிப்பதற்கு முன்பே பல அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் ஆங்காங்கே கூட்டாகவும், தனித்தனியாகவும் போராட்டங்களை நடத்தினர் என்பதும் நாம் கண்ட உண்மை.
             மக்களின் அதிருப்தியையும், கோபத்தையும் புரிந்து கொண்ட மத்திய - மாநில அரசுகள் ஒரு தந்திரத்தை பயன்படுத்தினர். அது தான் இருக்கோடுகள் தத்துவம். போடப்பட்ட ஒரு கோட்டை சிறியதாக்க வேண்டுமென்றால், அதன் பக்கத்தில் அதைவிட  பெரியக் கோட்டை போட்டால், முதலில் போட்ட கோடு என்பது சிறியதாகிவிடும். அது போல் தான்  இந்திய மக்கள் பெட்ரோல் விலை உயர்வினால் பெரும் அல்லல்களுக்கும், துயரங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உள்ளாகி அவதியுறும் போது, அவர்களுக்கு  அதை விட பெரிய கஷ்டத்தை கொடுத்து அவதிப்பட செய்தால் முதலில் கொடுத்த கஷ்டம் சிறியதாகிவிடும் என்கிற வக்கிரபுத்தியோடு தான் மத்திய - மாநில அரசுகள் சேர்ந்து செயற்கையாகவே பெட்ரோல் - டீசல்    தட்டுப்பாட்டை உருவாக்கி வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்பதும் விலை அதிகமாக கொடுத்தாலும் பரவாயில்லை. எனக்கு பெட்ரோல் கிடைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு    மக்கள்  தள்ளப்பட்டிருக்கிறார்கள்   என்பதும் தான் உண்மை.
              மத்திய - மாநில அரசுகளின் இந்த செயல்  பொறுப்பற்றத் தன்மையையும், வக்கிரபுத்தியையும்  தான் காட்டுகிறது. ஆட்சியாளர்களின் இந்த செயல் என்பது அந்தக் கால சினிமா வில்லன்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஒரு பெண்ணின் குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு, நான் சொல்வது போல் உன்னை எனக்கு விருந்தாக்கவில்லை என்றால் உன் குழந்தையை சாகடித்து விடுவேன் என்று சொல்லி மிரட்டியே அந்த பெண்ணை அனுபவிக்கும் சினிமா வில்லன்களின் வக்கிரபுத்தி தான் நம் நினைவுக்கு வருகிறது. இந்த செயலுக்கும் ஆட்சியாளர்களின் இன்றைய செயல்களுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

திங்கள், 28 மே, 2012

சிம்லாவில் புதிய வரலாறு படைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...!

              நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிம்லா மாநகராட்சிக்கான  மேயர் மற்றும் துணைமேயர் பதவிக்கான நேரடித் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். சஞ்சய் சௌஹான் மேயராகவும், தோழர். திகந்தர் பன்வார் துணை மேயராகவும் அதிக வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தன் கை வசம் வைத்திருந்த சிம்லா மாநகராட்சியை காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியிடம் இழந்திருக்கிறது என்பதையும்,  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பதையும் இந்திய மக்கள்  கவனிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அம்மாநில ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சிக் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.              மேலும் மேயரையும், துணைமேயரையும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் தேர்தல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் ஹிந்தி மொழி பேசும் பகுதியில் வாழும் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மாநகராட்சியின் ஆட்சி அதிகார பொறுப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால் இது அம்மாநில  மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 
           வேட்புமனு தாக்கல் செய்தது முதல் கடைசி நாள் பிரச்சாரம் வரை சிம்லா மக்கள் 
காட்டிய ஆர்வமும் உற்சாகமும் வெற்றியை பறை சாற்றியது என்ற சொல்லலாம். இந்த 
வெற்றியின்  மூலம்   சிம்லா மாநகராட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஊழலும், சந்தர்ப்பவாதமும், தேசத்துரோகமும் நிறைந்த காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதா கட்சியையும் மக்கள் தூக்கி எறிய  தொடங்கிவிட்டார்கள்  என்பதை தான் இந்த தேர்தல் வெற்றி சிறப்பாக காட்டுகிறது. 
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றியை தந்த சிம்லா மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஞாயிறு, 20 மே, 2012

மாணவர்களின் கேள்விக்கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் மம்தா வெறிபிடித்து ஓட்டம்...!

        தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனல் CNN-IBN நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு விவாத நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. மம்தா மேற்கு வங்க முதல்வராக  பொறுப்பேற்று, ஓர்  ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். விவாதத்தில் பங்குபெற  ஜாதவ்பூர் மற்றும் பிரெசிடென்சி பல்கலைக்கழகங்களில்   பயிலும்  மாணவ - மாணவியர்களும் வந்திருந்தனர்.
            இந்த நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும், மாணவ - மாணவியர்களும் கேட்ட கேள்விகளுக்கு கடுகடுப்பாக இருந்தாலும் மம்தா  துவக்கத்தில் பொறுமையாகவே  பதிலளித்து வந்தார். நேரம் போகப்போக சூடேறிப் போனார். ஒரு கட்டத்தில்,  மம்தா குறித்து கார்ட்டூன் வரைந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழக  பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா கைது செய்யப்பட்டது குறித்தும், மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும்  மாணவ - மாணவியர்  சரமாரியாக கேள்வி கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல்  மம்தா கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். வெறிப்பிடித்தவர் போல் கத்தினார். மாணவர்களைப் பார்த்து ''நீயெல்லாம் மார்க்சிஸ்ட்... மாவோயிஸ்ட்....எஸ்.எப்.ஐ... மார்க்சிஸ்ட் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது'' என்று ஒருமையில் அழைத்து உரத்தக் குரலில் கத்தினார். ''ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் அழைத்ததற்கான காரணம் என்ன..? வேறு மாணவர்களை ஏன் அழைக்கவில்லை?'' என்று கூச்சல் போட்டு கொண்டே நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறினார். பாதியிலேயே நிகழ்ச்சி பரப்பரப்பானது. தொலைக்காட்சியின் துணை ஆசிரியர்  சாகரிகா கோஷ்  எவ்வளவோ சமாதானம் படுத்தியும் மம்தா சமாதானம் ஆகவில்லை.  வெறி பிடித்தவர் போல் மம்தா கத்திக்கொண்டே வெளியேறினார்.    
            இந்நிகழ்ச்சியை பார்த்து நாடே பரப்பரப்பானது. 
               சட்டமன்றமும், மக்கள் கூடும் இடங்களும் தங்களின் புகழ் பாடும் பஜனை 
மடங்களாக  இருக்கவேண்டும் என்று தான் மம்தா மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதும், தங்களுக்கு எதிரான  விமர்சனங்களை ஆக்கப்பூர்வமானதாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.  இப்படி சகிப்புத் தன்மையே இல்லாதவர்கள் ஓராண்டு என்ன... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.

ஞாயிறு, 13 மே, 2012

சச்சின் மாநிலங்களவை உறுப்பினர் ஆக தகுதியானவரா...?

            இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள பெயர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் இவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.தற்போது பரிந்துரைக்கப்பட் டுள்ள சச்சின், ரேகா, அனு ஆகா ஆகிய மூவருமே மகாராஷ்டிரா மாநிலத்தவர் என்பதும் விரைவில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் எதிர்பாராத இணைப்புச் சம்பவங்கள் அல்ல. அவை தெரிந்து தான் இணைக்கப்பட்டுள்ளன.
              சச்சின் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமா என்பதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. முரண்பட்ட கருத்துக்களில் அவருக்கு எதிரானவையே ஏராளம். எந்தவொரு நிகழ்வு குறித்தும் இதுவரை கருத்து கூறாத சச்சின் நாடாளுமன்ற உறுப்பினரான பின் மட்டும் கூறி விடப் போகிறாரா? சர்ச்சைகள்அவருடைய கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து அவர் மட்டுமே கவலைப்பட வேண்டும். சாதனைகளுக்காக மட்டும் ஆடும் நபர்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அதுபோல் சச்சினும் பல சர்ச்சைகளைத் தவிர்த்து வருகிறார். “மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனைச் சும்மா இருக்கவிடுவதில்லை” என்ற சொலவடைக்கு உயிர் கொடுப்பது போல் சச்சினும் சிலவற்றில் சிக்கியுள்ளார். 
ஷூமேக்கர் சச்சினுக்கு வழங்கிய பெர்ராரி கார்
             மதுரை உயர்நீதிமன்றத்தில் சச்சின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சச்சினுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமைக்காவில் நடந்த விருந்து ஒன்றில் மூவண்ணக் கொடி வரையப் பட்ட கேக் ஒன்றை சச்சின் வெட்டியதன் மூலம் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்துவிட்டார். எனவே அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சினை எம்.பி. ஆக நியமித்தது தவறு என்று மேலூரைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2003ம் ஆண்டில் அவருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி 360 மாடனா ரக காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. இதற்கு அவர் இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்க வேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்தார். அன்றைய காங்கிரஸ் அரசு அவருக்கு வரி விலக்கு அளித்தது. அரசிடம் வரிவிலக்கு பெற்ற காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.
           இதற்கு சச்சின் அரசுக்கு மூலதன லாப வரி கட்டவேண்டும். ஆனால் கட்டவில்லை. சச்சின், பந்த்ராவில் ரூ.80 கோடி மதிப்பில் ஒரு சொகுசு மாளிகையைக் கட்டியுள்ளார். 2011 ம் ஆண்டில் அவர் அந்த வீட்டுக்கு குடி ஏறினார். மும்பை மாநகராட்சி அவருக்கு தண்டம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியிடம் குடியிருப்பு தகுதிச் சான்றிதழ் பெறாமல் குடியேறியதற்கு ரூ.4.35 லட்சம் தண்டம் கட்டுமாறு மும்பை மாநகராட்சி கூறியது. அவருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் அரசு மாநகராட்சி ஆணையரிடம் பரிந்துரை செய்தது. நோட்டீசைப் பெற்றுக்கொண்ட சச்சின் தண்டத்தொகையைக் கட்டிவிட்டார். பல விளம்பரங்களுக்கு மாடலாகச் செயல்பட்ட சச்சின், விளம்பரங்களில் தான் ஒரு நடிகர் மட்டுமே. கிரிக்கெட் ஆட்டக்காரர் இல்லை என்று வாதாடி ரூ.2 கோடி வரிவிலக்குப் பெற முயன்றார்.
           இவர் உலகிலேயே மிகப் பெரும் பணக்கார கிரிக்கெட் வீரர். அதுமட்டுமல்ல தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டுள்ளார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரமும், கார் செலவுகளுக்காக (இவரிடம் 40 கார்கள் உள்ளன) ரூ.1,42,824 - ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். வருமானவரித்துறை இவற்றை நிராகரித்து விட்டது. தற்போது இவர் எம்.பி.ஆக விரும்புவது எதற்காக என்பதை யூகிக்க முடிகிறது. காங்கிரஸ் சில அரசியல் காரணங்களுக்காக சச்சினுக்கு எம்.பி. பதவி அளிக்க முன் வந்துள்ளது. சச்சினும் தற்சார்பு நலன்களுக்காக அதை ஏற்றுக்கொள்ளத் துணிந்துவிட்டார் என்பது தான் உண்மை. 
நன்றி : தீக்கதிர் / 13.05.2012

ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலித்த மக்கள் மாமன்றத்தின் மணிவிழா...!


         1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13  - ஆம் தேதி அன்று  இந்திய அரசியல் வரலாற்றில்  நடந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை  பொன்னேழுத்துக்களால் எழுதப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.  ஆம்... அன்று தான் இந்திய பாராளுமன்றக் கட்டிடத்தில் முதல் மாநிலங்களவை தொடங்கிவைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 1950 - இல் நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தப்பட்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய டாக்டர். ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக பதவி எற்றுக்கொண்டதும் இதே நாளில் தான் என்பதும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது மக்களவை உருவானதும் இதே 
நாளில் தான் என்பதும்   குறிப்பிடத்தக்கது.
             இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் என்பது தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 
பதவியேற்ற முதல் நிகழ்ச்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் அரங்கேறியது. அன்றும் இன்றும் இந்த நாள் நம் தேசத்தின் திருநாள்.

டாக்டர். ராஜேந்திர பிரசாத் 1952 - ஆம் ஆண்டு மே மாதம் 13 - ஆம் இந்திய பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.




பதவியேற்புக்குப் பின்பாராளுமன்றத்திலிருந்து 
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்கிறார்.


               அன்றையிலிருந்து இன்று வரை கடந்த அறுபது ஆண்டுகாலமாய் இரு அவைகளும் 
கொண்ட பாராளுமன்றம் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்று  சொல்லலாம். அது மக்களுக்கு தேவையா அல்லது தேசத்திற்கு உகந்ததா என்றெல்லாம் 
சீர்தூக்கிப் பார்க்கப்பட்டதா என்று கேட்டால் வெறும் கேள்விக்குறித் தான் மிஞ்சும். 
ஆட்சியாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால் 
சுயநலத்துடன் தங்கள் இஷ்டப்படி பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதும் அதை   
நடைமுறைப்படுத்துவதுவுமாகத்    தான் இன்றுவரை இருக்கிறார்கள்.  எப்போதெல்லாம் மக்களுக்கெதிராக அல்லது தேசத்திற்கெதிராக மத்திய அரசு செயல்படுகிறதோ அப்போதெல்லாம் மிகசொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் 
இடதுசாரிகள் மட்டும் தான் பாராளுமன்றத்தில்  எரிமலையாய் வெடித்து எழுவார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத்தில் இன்று
வரை இரு அவைகளிலுமே பாராளுமன்றக்கூட்டம் நடைபெறும்  அனைத்து நாட்களிலும்   அனைத்துக்  கூட்டங்களிலும் நூறு சதவீதம்  பங்கேற்பவர்கள் இடதுசாரிகள் தான் என்பதை அந்த பாராளுமன்றத் தூண்களும், கூட்டம் நடைபெறும் மண்டபங்களும் கண்டிப்பாக எடுத்துச்  சொல்லும். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை - மக்கள் ஜனநாயகத்தை மதிக்கக்கூடியவர்கள் இடதுசாரிகள் மட்டுமே என்பதை நாம் 
மறந்துவிடக்கூடாது.
             ஆட்சியாளர்களின் சரியான பணிகளை  பாராட்டவேண்டிய சமங்களில் பாராட்டியும்,
 அவர்களின் தவறான போக்குகளை இடித்துரைக்க வேண்டிய சமயங்களில் இடித்துரைத்தும் 
பாராளுமன்றத்தில் பாரபச்சமில்லாமல் நடந்து கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே 
என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு ஆட்சியாளர்களால் பாராளுமன்ற 
ஜனநாயகம் என்பதே மதிக்கப்படாமல்,பாராளுமன்றம் என்பது ஒரு சம்பிரதாய 
சடங்குகள் நடக்குமிடமாக மாறிவருகிற  சூழ்நிலையில்,   பாராளுமன்ற ஜனநாயகத்தை 
மதித்து, அதன் நடவடிக்கைகளில் அக்கறையையும் நம்பிக்கையையும் வைத்து இன்றுவரை  மக்கள் மாமன்றத்தின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் இடதுசாரிகள்  தான் என்பதை உணர்ந்து  இந்த நல்ல நாளில் நாடு இடதுசாரிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தவேண்டும்.       

செவ்வாய், 8 மே, 2012

இந்தியாவை வட்டமிடுகிறது அமெரிக்க கழுகு....!

இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு....  
   
           அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பல்வேறு திட்டங்களை 
எடுத்துக்கொண்டு இந்தியாவிற்கு பறந்து வந்திருக்கிறார். அதுவும் வந்தவர் நேரிடையாக தலைநகரில் இறங்கவில்லை. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
கட்சியின் தலைமையிலான இடதுசாரி அரசை சகித்துக்கொள்ள முடியாத அமெரிக்க 
''பிணந்திண்ணி கழுகு'',  தாங்கள் செய்த பல்வேறு  மகாசதிவேலைகளால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை நேரில் காண ஹிலாரி கிளிண்டன் 
நேரிடையாக கொல்கத்தாவிற்கு வந்து  இறங்கினார். அதுமட்டுமல்ல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவை பாராட்டிப் பாராட்டி புளகாங்கிதம் அடைந்தார்.
                  மம்தாவோ வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார். எசமானியம்மா மம்தாவை தூக்கி வைத்து அம்புட்டு பாராட்டிட்டாங்கலாம். அம்மணியை பிடிக்கவே முடியலைங்க. மம்தா அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை எல்லாம் கேட்டு ஹிலாரி கிளிண்டன் மம்தாவை பாராட்டிப் பூரித்துப் போய்ட்டாங்களாம். மேற்கு வங்க நூலகங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகைகள் வாங்க தடை, பள்ளிப் பாடப் புத்தகங்களில் காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ் சம்பந்தப்பட்ட பாடங்கள் நீக்கம், கேலிச்சித்திரம் வெளியிட்ட கல்லூரிப் பேராசிரியருக்கு சிறை தண்டனை, இடதுமுன்னணி அரசு வழங்கிய நிலங்கள் ஏழைகளிடமிருந்து பறிப்பு போன்ற மம்தா ஆட்சியின் சாதனைகளை பார்த்து பூரிப்படைந்து ஹிலாரி கிளிண்டன் மம்தாவின் மீது பாராட்டு மழையாக  பொழிந்திருக்கிறார். அதற்கு பரிசாக ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முதலீடுகளை வாரி வழங்கியிருக்கிறார். 
                 இது ஒரு பக்கம் நடந்தாலும், இன்னொரு பக்கம் இப்படி மம்தாவை பாராட்டுவதன்  மூலம் அவரை வசியம் பண்ணும் வேலையும் நடந்தது. மம்தா தான் அரசியல் பிழைப்பை நடத்த அவ்வப்போது ''இடதுசாரி'' முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாட வேண்டியிருக்கிறது. அதன் காரணமாகத்தான்,  சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை நுழைக்க மத்திய அரசு முயற்சிக்கும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு காட்டிவந்தார். அதனால் ஹிலாரி கிளிண்டன் மம்தா அக்காவிடம் இதற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் என்று
தாஜா பண்ணியிருக்கிறார். 
                மம்தாவின் மேற்கு வங்க  அரசு ஹிலாரி கிளிண்டனை பாசத்தோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்கும் பொருட்டு,  ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலக 
கட்டடங்கள் அனைத்தும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது.
           அதுமட்டுமல்ல, இந்தியா - வங்கதேசம் சம்பந்தப்பட்ட தீஸ்டா நதிநீர்ப் பிரச்சனை பற்றியும் ஹிலாரி கிளிண்டன் மம்தாவிடம் பேசியிருக்கிறார் என்பதும் இங்கே 
குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் ''பெரியண்ணன்'' தனத்தை தான்  காட்டுகிறது. இது போன்ற உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததால், ஹிலாரி கிளிண்டன் அப்படி எதையும் பேசவில்லை என்று பம்மியிருக்கிறார். 
              பிறகு தலைநகருக்கு பரந்த அமெரிக்க கழுகு ஹிலாரி கிளிண்டன், அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உட்பட பிரதமர் மன்மோகன் சிங் 
மற்றும் மத்திய அமைச்சர்களை  சந்தித்திருக்கிறார். ஈரான் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் நிர்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்காவின் இதுபோன்ற  நிர்ப்பந்தம் காரணமாகவே  ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது என்பதையும்,   ஈரானுடனான குழாய் வழி எரிவாயு திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது என்பதையும் யாரும் மறந்துவிடமுடியாது. 
                 இந்திய நாட்டின் பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் அமெரிக்காவின்  இது போன்ற தலையீடுகளையும், நிரபந்தங்களையும் இந்திய குடிமக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கவேண்டும். அமெரிக்காவின் இதுபோன்ற நிர்பந்தங்களுக்கு  எஜமான விசுவாசத்தோடு ஆட்சியாளர்கள் அடிபணிந்தால் எதிர்காலத்தில் இந்திய மக்களின் வாழ்வாதாரம் என்பது 
கேள்விக்குறியாகிவிடும்.

திங்கள், 7 மே, 2012

நூற்றாண்டு விழா காணும் உழைப்பாளர் நாளிதழ் ‘பிராவ்தா - உண்மை’ - உலக தொழிலாளர்களை ஒன்றுபட அழைக்கிறது...!

            புரட்சியாளர் மாமேதை  லெனின் 1912 - ஆம் ஆண்டு மே மாதம்  5 - ஆம் தேதியன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - இல்  தொடங்கி வைத்த ரஷ்ய உழைக்கும் மக்களின் நாளிதழான ‘பிராவ்தா’வின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சத்தமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் மாஸ்கோவில் நடத்தப்பட்டன.
             ரஷ்யப்புரட்சிக்கு முன்பே தொடங்கப்பட்ட  'பிராவ்தா’  1917 - ரஷ்யப்புரட்சிக்கு மிகப்பெரிய பங்குவகித்தது. 'பிராவ்தா’-வின் பொருள் ''உண்மை''. இன்றும் ரஷ்ய உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. ''உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்'' என்று மாமேதை லெனின் ஒலித்துவிட்டுச் சென்றக்குரலை இந்த நூறு வயதிலும் 'பிராவ்தா’ இன்றும் மாறாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
                1912 முதல் 1991 வரை சோவித் யூனியனில் சோவித் கம்யூனிஸ்ட் கட்சி - மத்தியக்குழுவின் அதிகாரபூர்வப் பத்திரிக்கையாக இருந்தது. 1991 - இல் சோவித் யூனியன் சிதறுண்டு போனப்பிறகு ரஷ்யாவின் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின் 'பிராவ்தா’ நாளிதழுக்கு தடைவிதித்ததால் மூடப்பட்டது. அதன் பிறகு 1997 -இல் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உயிர்த்தெழுந்தது.
                  மாஸ்கோவிலுள்ள 'பிராவ்தா’ - வின் பத்திரிகை அலுவகத்தில் அன்று மாமேதை லெனினும், அவரது மனைவி நடேழ்ட  க்ருப்ஸ்கயா  ஆகியோர்  ''பத்திரிகை ஆசிரியர்'' பணி செய்த  அலுவலக அறையை  இன்றும் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது.     
                 அது மட்டுமல்ல,  'பிராவ்தா’ நாளிதழின் தற்போதைய ஆசிரியர் போரிஸ்  கொமொத்ஸ்கி அவரது மாஸ்கோ அலுவலகத்தில் அவரது இருக்கைக்குப் பின்னால் சோவியத்தின் சிற்பி மாமேதை லெனின் 'பிராவ்தா’நாளிதழை வாசிப்பது போன்ற பெரிய அளவிலான படத்தை வைத்து மரியாதை செலுத்துகிறேன் என்று கூறுவது கேட்கும் போதும் மெய்சிலிர்க்கிறது.
                   
                
            இப்படிப்பட்ட மாபெரும் நாளிதழின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 
மாஸ்கோவில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சி முகமறியா வீரர்களின் கல்லறையில் அஞ்சலியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உலகநாடுகளில் உள்ள  சகோதர கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
            ரஷ்யக் கூட்டமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜுகானோவ் தலைமையில் இளைஞர்களும் முதியவர்களுமான தொண்டர்கள் செங்கொடி ஏந்திய வண்ணம் வீரமுழக்கங்களுடன் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரஷ்ய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரும்புரட்சியின் ராணுவத் தளபதியாகக் கருதப்பட்ட நாயகன் மார்ஷல் ஜுகானோவின் நினைவுச்சின்னத்தின் முன்னே ஜுகானோவ் புகழஞ்சலி செலுத்தினார். அதையடுத்து சர்வதேச கம்யூனிஸ்ட் இதழ்களின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.
              சோவியத் யூனியன் சிதறுண்டபோது உருவான பல்வேறு நாடுகளில் இயங்கும் கம்யூனிஸ்ட் இதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் பதிப்புகளின் பிரதிநிதிகள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு நடத்தும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி, லோக்லஹார் ஆகியவற்றின் சார்பில் லோக்லஹார் இணையாசிரியர் ராஜேந்திரகுமார் சர்மா விழாவில் கலந்து கொண்டார். சிபிஐ இதழ்களின் சார்பில் ஷமீம் பைய்ஸீ பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
                 இந்நிகழ்ச்சிகளை பார்க்கும் போது உண்மையான  மக்கள் புரட்சிக்கு, சமூக விடுதலைக்கு, விழிப்பான அரசியலுக்கு பள்ளிக்கூடாமாய், பாடமாய், ஆயுதமாய் விளங்கிய 'பிராவ்தா’ நாளிதழ்  இன்னும் பல நூறு ஆண்டுகள் அதே சிலிர்ப்புடன் வாழும்... ஏகாதிபத்தியத்தினாலோ அல்லது முதலாளித்துவத்தினாலோஅதற்கு என்றும் மரணமில்லை 
என்பது தான் ''உண்மை''.

செவ்வாய், 1 மே, 2012

மனநிறைவைத் தந்த மே தின விழா...!

                   இன்று வழக்கம் போல் மே தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக 
எல். ஐ. சி. முகவர் சங்க அழைத்திருந்தோம். காலை 9 -க்கு கொடியேற்றப்படும் என்று அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் 8 மணிக்கே தோழர்களைப் பார்த்ததும் மனதில் உற்சாகம் பிறந்தது. அதில் நேற்று தான் எல். ஐ. சி - யில் புதிதாக முகவர் பணிக்கு சேர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் வந்திருந்த தோழர்களும் உண்டு. தோரணம் ஓட்டுவது, மேலே ஏறி   கட்டுவது, பள்ளம் தோண்டி புதிதாக கொடிக்கம்பம் நடுவது போன்ற அத்தனை வேலைகளையும்  புதிய 
தோழர்கள் உட்பட வந்திருந்த தோழர்கள் அனைவரும் வரிந்து கட்டி செய்தது என்பது மேலும் மிகுந்த உற்சாகத்தை  கொடுத்தது என்றால் அது மிகையாகாது. முகவர் கட்சிக் கிளையின் செயலாளர் 60 வயதை தாண்டிய மூத்தத் தோழர். அவரும் உற்சாகமாய் ஓடி ஆடி வேலை செய்தார். .
              இப்படி எல்லா வேலைகளையும் முடிப்பதற்கே 10.30 மணி ஆகிவிட்டது.  அது வரையில் வந்திருந்தவர்களில் யாரும் காலை உணவு சாப்பிடவில்லை. 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி முதலில் விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றப்பட்டது. பிறகு சி. ஐ. டி. யூ கொடியையும், அதன் பிறகு முகவர் சங்கக்கொடியையும் ஏற்றிவைக்கப்பட்டன. 
                 இந்நிகழ்ச்சியில், மே தின வரலாற்றையும், அமெரிக்காவில் மே தினத்தை ஒட்டிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தைப் பற்றியும், தொழிலாளர்கள் மற்றும் முகவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டன. வந்திருந்தத் தோழர்கள் எல்லோரும் உற்சாகமாய் பேசினார்கள். 11.30 மணிக்கு கூட்டம்  முடிந்தது. அனைவருக்கும் காலை சிற்றுண்டி அதன் பிறகு தான் வழங்கப்பட்டது. 
                  ஒவ்வொரு ஆண்டும் மே தின விழாவின் உற்சாகம் கூடிக்கொண்டேப் போகும். இன்றும் அப்படித்தான். எல். ஐ. சி ஊழியர்களின் மிக அதிகமான ஊதிய உயர்வுக்கும், பணிப்பாதுகாப்புக்கும் காரணமாய் இருக்கும் ஊழியர் சங்கத்தின் கொடி புதுச்சேரியில் வழக்கம் இன்றும் ஏற்றப்படவில்லை என்பது வேதனையானது.                        
         ஆனால் நிரந்தர வருமானமோ அல்லது பணிப்பாதுகாப்போ இல்லாத முகவர்கள் அதிக 
அளவில் கூடியது என்பது அவர்கள் தங்களது சங்கத்தின் மீதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையாகும்.

 மே தினம் வாழ்க.... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக...
                                                                        
   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கிய நவரத்தினங்களில் முதல் ரத்தினம் தோழர். பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா...!

  தோழர் - பி. சுந்தரய்யா நூற்றாண்டு விழா
               
             1964 - ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட ஏழாவது கட்சி மாநாட்டில், கட்சி தொடங்குவதற்கு முன்னோடிகளாக இருந்த - நவரத்தினங்களாக கருதப்பட்ட ஒன்பது தலைவர்களில் முதன்மையானவர் தோழர். பி. சுந்தரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. கட்சியின் மாநாட்டில் தலைமைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் தோழர். பி. சுந்தரய்யா, தோழர். பி. டி. ரணதிவே, தோழர். ப்ரோமோத் தாஸ்குப்தா, தோழர். இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், தோழர். எம். பசவபுன்னையா, தோழர். ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தோழர். பி. ராமமூர்த்தி, தோழர். ஏ. கே. கோபாலன் மற்றும் தோழர். ஜோதி பாசு போன்ற தோழர்கள் தான் கட்சியின் தலைமைக்குழுவில்  நவரத்தினமாக ஜொலித்தவர்கள். இவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டதால் தான் கட்சியின் ஆரம்ப கால பொதுச்செயலாளராக தொடர்ந்து மூன்று முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தான் இவரின் தனி சிறப்பு. 1964  - ஆம் ஆண்டிலிருந்து 1978 - ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்த்தார். 
                   தனது 17 - ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரல் கொடுத்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ்காரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாலும், பின்னர் உறுதிமிக்க கம்யூனிஸ்டாகவே இறுதி வரை வாழ்ந்தார். அவருடைய சொந்த மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, நாடு முழுதும்  கட்சியைக் கட்டுவதற்கு அவர் அல்லும் பகலும் அயராது வேலை செய்தார் என்பதை கட்சித் தோழர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இவரது கடுமையான உழைப்பென்பது கட்சிக்குள்ளிருந்த இளைஞர்களையும், வெளியிலிருந்த இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்தது.
              உழைப்பாளி மக்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து போராடிய தன்னலமற்றத் தலைவர் - பி.எஸ்.என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அருமைத் தோழர் - பி. சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டு 2012 மே 1 -  இன்று முதல் தொடங்குகிறது. ஒரு நிகரற்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவரான தோழர். பி. சுந்தரய்யாவின் வாழ்வையும் பணியையும் நினைவுகூர்ந்து கொண்டாட  நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பு இதுவாகும். அவரது நூற்றாண்டு விழாவில் அவரின் நினைவை போற்றுவோம்.