புதன், 29 ஏப்ரல், 2015

சாலை போக்குவரத்தில் வரப்போகும் ஆபத்து...!


             ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம், தகுதி சான்றிதழ், புதிய வாகனங்களுக்கான பதிவு எண், நெம்பர் பிளேட் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை இதுவரையில் RTO என்று சொல்லக்கூடிய மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் தான் கொடுக்கப்பட்டு வந்தது. இனி அப்படி கொடுக்கப்படமாட்டாது. மேற்கண்ட அந்த பணிகளை இனிமேல் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் தான் செய்யப் போகிறார்களாம்.

அதனால் இனிமேல்...
  
        (1) புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்குபவர்களும், பழைய உரிமம் வைத்திருப்பவர்களும் தனியாரிடம் தான் உரிமம் பெறவேண்டும். ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்கள் கூட  மீண்டும் புதிதாக விண்ணப்பித்து பெறவேண்டும். இனி பழைய உரிமம் செல்லாது.
          (2)  ஓட்டுனர் பயிற்சியை இப்போது நடத்துவது போல் தனி நபரோ அல்லது பயிற்சி பள்ளியோ நடத்தக்கூடாது. வாகனங்கள்  தயாரிக்கும் நிறுவனங்களே இனி பயிற்சிப்பள்ளியை நடத்துமாம்.
                (3) இரண்டு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பழுது ஏற்பட்டாலோ அல்லது சர்வீசுக்கோ வழக்கம் போல் உங்களுக்கு தெரிந்த ஒர்க் ஷாப்பில் எல்லாம் விடக்கூடாது. வாகனம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் சர்வீஸ் ஸ்டேஷனில் தான் விடவேண்டும். டியூப் பஞ்சர் ஆனாக்கூட இதே நிலைமை தான். 
            (4) வாகனங்களுக்கு மாற்றப்படும் உதிரி பாகங்களை வழக்கம் போல் உதிரிபாகங்கள் விற்கும் உங்களுக்கு வேண்டிய கடையில் வாங்கி பயன்படுத்தக்கூடாது. அதையும் வாகனம் தயாரிக்கும் கம்பெனியில் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். கடையில் வாங்கினால் பயன்படுத்தினால் சிறை தண்டனை அல்லது ஆயிரக்கணக்கில் அபராதம் கொடுத்து அழவேண்டும்.
     (5) புதிதாக வாகனம் வாங்கினால் நிறுவனமே  வாகனக்கடன் தருவது என்பது வழக்கம். இனி அதுமட்டுமல்லாமல், ஓட்டுனர் உரிமம், பதிவு எண், நெம்பர் பிளேட், சாலை வரி, வண்டிக்கு இன்சூரன்ஸ், ஓட்டுகிற ஆளுக்கு இன்சூரன்ஸ் எல்லாற்றையும் அவர்களே ஏற்பாடுகள் செய்துவிடுவார்கள். அவைகளுக்கான கட்டணம் ஆயிரக்கணக்கில்  வசூல் செய்வார்கள்.
      (6)  இனிமேல் உங்கள் இருசக்கர வாகனத்திற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி., என்று சொல்லக்கூடிய தகுதி சான்றிதழ் பெறவேண்டும். அத தகுதி சான்றிதழ் கொடுக்கும் இடம் நெடுஞ்சாலைகளில் கட்டணக் கொள்ளையடிக்கும் ''டோல் கேட்'' என்பதும் ஒரு அதிர்ச்சியான தகவல்.
   (7)  சிறு சிறு போக்குவரத்து விதிகளை மீறினாலோ, விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது குடிபோதையினால் விபத்து ஏற்பட்டாலோ ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். கிரிமினல் குற்றவாளியை போல் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் செய்யப்படுவார்கள்.
      (8) நடத்துனர் என்ற பணியே இனி கிடையாது. அந்த பணியை அந்நிய நாடுகளில் உள்ளது போல் ஓட்டுனரே பார்த்துக்கொள்வார்.
    (9) அதுமட்டுமா அரசு போக்குவரத்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் சென்றுவிடும். டெம்போ மற்றும் ஆட்டோ போக்குவரத்துகளும் கூட அவர்கள் கைகளுக்கே சென்று விடும்.
         இதெல்லாம் எந்த நாட்டுல என்று கேட்கிறீர்களா...?  நம்ப நாட்டுல தான். மோடி இந்த நாட்டு மக்களுக்கு கொடுக்கப்போகும் இன்னொரு மோசமான பரிசு. அது தான் சாலை போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2015. இந்த மசோதா பாராளுமன்றத்திற்கு வரப்போகிறது.

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உச்சக்கட்டத்தில் மம்தாவின் வெறியாட்டம்

         

 
             









               மேற்குவங்க மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஆண்டுகள் முடியுறும் வேளையில் மாநிலத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அறிவிக்கப்பட்டு சென்ற வாரம் அதற்கான தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடைபெற்றன. தேர்தல்களை ஜனநாயகத்திற்கு உட்பட்டு, நியாயமான முறையிலும், நேர்மையான முறையிலும் அமைதியுடன் நடத்தவேண்டிய மம்தாவின் தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நியாயத்தையும், நேர்மையையும் காற்றில் பறக்கவிட்டு, அராஜகத்தையும், அட்டுழியங்களையும் கட்டவிழ்த்து விட்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடத்தியிருக்கிறது. 
            பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் தன் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 36 ஆண்டுகளாக மாநிலத்தில் கோலோச்சியிருந்த இடதுசாரிகளை இறக்கிவிட்டு, மம்தாவை அரியணையில் ஏற்றிய மக்கள்  இன்று மம்தாவின் மீது அதிருப்தியில் இருப்பதால் வெற்றிபெறுவது சிரமம் என்ற நிலையில் மம்தா இந்த உள்ளாட்சி தேர்தலை அராஜகமான தேர்தலாக நடத்தி சாதனை புரிந்திருக்கிறார்.
  வாக்காளர்கள் ஓட்டுப்போடாத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மீறி ஓட்டுப்போட வரும் பொதுமக்கள் மீது   மம்தா கட்சியை சேர்ந்த ரவுடிகளே கையெறி குண்டுகளை வீசுவதும், துப்பாக்கிகளால் சுடுவதுமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர். அந்த ரவுடிகளுக்கு மம்தாவின் காவல்துறையே துணைக்கு நின்றது. காவல்துறையினரே அமைதியான முறையில் ஓட்டுப்போட வரும் பொதுமக்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். பல இடங்களில் பொதுமக்களே இந்த அராஜக கும்பலுக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.
                அதுமட்டுமல்லாமல் மம்தாவின் ரவுடிகள் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவது, துரத்தியடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கு கள்ளவோட்டு போடுவது போன்ற அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். மம்தா கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களை மிரட்டியிருக்கின்றனர். இவர்கள் பேச்சை மீறி நிற்கும் இடதுசாரி வேட்பாளர்களை கொலை வெறியுடன் தாக்கியிருக்கின்றனர்.
           இப்படியாகத்தான் மம்தா உள்ளாட்சித் தேர்தலை மிக அருமையாக நடத்திஇருக்கின்றார். முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து வெளிப்பட்ட மம்தாவின் வெறியாட்டம் இன்று உச்சத்தை தொட்டுயிருக்கிறது.
               அவசர நிலை காலத்தில் மேற்குவங்க மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே நடத்திய  காட்டாட்சியை விட இன்றைக்கு மம்தா நடத்தும்  ஆட்சி காட்டுமிராண்டித்தனமாகவும் அராஜகமாகவும் உள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆணவத்தின் உச்சத்தில் - அராஜகத்தின் உச்சத்தில் வெறியாட்டம் போடும் மம்தாவிற்கு மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகு தொலைவில்  இல்லை.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

வீரஞ்செறிந்த போராட்டங்களை நோக்கி முன்னேறுவோம்...!


கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி,          
                                     பொதுச்செயலாளர்,               
                                     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                     
             மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது 21-வது அகில இந்திய மாநாட்டில், இந்திய ஆளும் வர்க்கங்களால் பின்பற்றப்படும் தற்போதைய கொள்கைகளுக்கு மாற்றாக திட்டத்தின் அடிப்படையில், தற்போதைய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியை, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக முன்னணியால் அகற்றும் குறிக்கோளுடன், கட்சியையும், வர்க்க-வெகுஜன அமைப்புகளையும் வலுப்படுத்துவதற்கான உறுதியையும், இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதற்காக வலுவான மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துவதற்கான உறுதியையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
                  நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பன்முகத் தாக்குதல்களிலிருந்து அவர்களை விடுவித்திட இது ஒன்றே வழியாகும்.

முழுமையான உட்கட்சி விவாதம்                

           கட்சியின் மாநாடு, அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மற்றும் அரசியல் தீர்மானம் ஆகிய இரு முக்கிய தீர்மானங்களை முழுமையாக விவாதித்து நிறைவேற்றியுள்ளது. இவற்றின் வரைவுகள் இரு மாதங்களுக்கு முன்பே `பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ இதழில் வெளியிடப்பட்டு, முழுமையாக உட்கட்சி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், கட்சிக் கிளைகளிலிருந்தும் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது முறையே 1432 திருத்தங்களும், 136 திருத்தங்களும் வரப்பெற்று அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அகில இந்திய மாநாடு அவற்றில் 29-ஐ ஏற்றுக்கொண்டிருக்கிறது.
             அதேபோன்று வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 2,552 திருத்தங்களும், 248 பரிந்துரைகளும் வரப்பெற்றன. அவற்றில் 74 ஏற்றுக்கொள்ளப்பட்டன. அகில இந்திய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், மாநாட்டுப் பிரதிநிதிகள், அரசியல் - நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 259 திருத்தங்களையும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 473 திருத்தங்கள் மற்றும் 5 பரிந்துரைகளையும் முன் வைத்தனர். இவற்றில் அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை மீது 11 திருத்தங்களும், வரைவு அரசியல் தீர்மானத்தின் மீது 55 திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஸ்தாபன பிளீனம்                  

            இத்தீர்மானங்கள் மீதான பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஏராளமாக எழுத வேண்டியது அவசியமாகும். சாராம்சத்தில், அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறது. போராட்டங்களில் இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான முறையில் வலுவாக இருந்தால் தான், இவ்வாறு இடது ஜனநாயக முன்னணியை வலுவாகக் கட்டுவதும் சாத்தியமாகும். எனவே, இத்தீர்மானங்களின் அடிநாதமாக இருப்பது, கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகளை இன்னும் வலுப்படுத்துவது என்பதேயாகும். எனினும் இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால், கட்சி ஸ்தாபனத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், வர்க்க, வெகுஜன அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையின்கீழ் மேற்கொண்டுள்ள முடிவுகளின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு, அத்தகைய ஆய்வு மிகவும் அவசியமாகும். இந்தக் குறிக்கோளை எய்துவதற்காக, கட்சியின் அகில இந்திய மாநாடு இந்தாண்டு இறுதிக்குள் ஸ்தாபனம் குறித்து ஒரு பிளீனத்தை (சிறப்பு மாநாடு) நடத்திடவும் தீர்மானித்திருக்கிறது.

சுரண்டல்களுக்கு எதிராகஇரண்டு கால்கள்            

        மக்கள் எதிர்கொள்ளும் பன்முகப்பட்ட பிரச்சனைகள் மீது பெரும் போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு, பொருளாதாரச் சுரண்டல் சார்ந்த பிரச்சனையுடன் சமூக ஒடுக்குமுறைப் பிரச்சனையையும் ஒன்றிணைத்து கூர்மையான திட்டமிடலை மேற்கொள்வது அவசியமாகும். தற்போதைய இந்திய சமூகத்தில், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் ஆகியோர் மீது ஏவப்பட்டுள்ள சமூக ஒடுக்குமுறை வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் அத்தகைய வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய அம்சம் ஆகும். இந்தியாவில் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் ஒரு கால் என்றால், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மற்றொருகால் ஆகும்.
       இவ்விரு போராட்டங்களும் பின்னிப்பிணைந்து வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்படுவது அவசியம் என்கிற நமது புரிதலை கட்சியின் 21-வது மாநாடு மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு முக்கிய கவனம் தரப்படவில்லையெனில் அது, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை, பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடும். விளைவு, நாட்டு மக்களில் சுரண்டப்படும் பெருவாரியான மக்களை விடுவிப்பதற்குரிய விதத்தில் வர்க்கப் போராட் டங்களை நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
            எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் குறிக்கோளை விரைவில் எய்த வேண்டுமானால் இவ்விரு கால்களின் மீதும் முதலில் நின்று, நடந்து, பின்னர் ஓட வேண்டியது அவசியம் என்று கட்சியின் அகில இந்திய மாநாடு அழுத்தமாக வலியுறுத்திக் கூறி இருக்கிறது. 

மக்கள் இயக்கமே நமது பலம்!                   

          கட்சியின் சுயேச்சையான பலம் மற்றும் அதன் தலைமையின்கீழ் கட்டமைக்கப்படும் மக்கள் இயக்கங்களின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்தல்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடங்கள் கிடைத்திருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கை உறுதி செய்திருக்கிறது. கடந்த கால அனுபவம் நமக்கு அதைத்தான் எவ்விதப் பிசிறுமின்றி நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது. அத்தகைய பலத்தின் அடிப்படையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முறையில் தேர்தல் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்தது.

தேர்தல் உடன்பாடுகள்              

          அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வறிக்கையானது, மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடனான தேர்தல் கூட்டணிகள் மட்டுமே ஆளும் வர்க்கங்களின் தற்போதைய ஆட்சிக்கு அடிப்படை மாற்றாகஅமைந்திட முடியாது என்பதையும் காட்டியிருக்கிறது. மாநிலக் கட்சி களுடன் தொகுதி உடன்பாடுகள்கூட கட்சியின் சுயேச்சையான வலுவின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
          எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன பலம் மற்றும் போராட்டங்களில் வலுவான தலையீடுகள் ஆகியவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதன் அடிப்படையிலேயே கட்சியின் அரசியல் நடைமுறை உத்தி அமைந்திட வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் சில மாநிலங்களில் மாநிலக்கட்சிகளுடன் சில உடன்பாடுகள் தேவைப்படலாம். ஆயினும், அத்தகைய தேர்தல் உத்தி அடிப்படையில் இடது ஜனநாயக முன்னணியை வலுப் படுத்துவதற்கான குறிக்கோளை எய்துவது நோக்கி முன்னேற முடியாது.
              இதனை நமது சுயேச்சையான பலம் மற்றும் போராட்டங்களில் தலையிடக் கூடிய தகுதியை ஒருமுகப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே எய்திட முடியும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல் தீர்மானமானது, ஒரு பக்கத்தில் மிகவும் மூர்க்கமான முறையில் பின்பற்றப்படும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மறுபக்கத்தில் மிகவும் வெறித்தனமாகக் கட்டவிழ்த்துவிடப்படுகிற மதவெறிக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தவேண்டியதன் தேவையை அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
          மோடி அரசாங்கமானது, நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் அடிப்படை வாழ்வாதாரங்களைக் காவு கொடுத்து சர்வதேசமற்றும் இந்திய மூலதனம் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்து தருகிறது. அதே சமயத்தில், அந்நிய நேரடி மூலதனம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய விதத்தில் அனைத்துத்துறைகளையும் அவசர அவசரமாகத் திறந்து விட்டுக்கொண்டும் இருக்கிறது. “வளர்ச்சி’’ “வளர்ச்சி’’ என்று ஆட்சியாளர்கள் என்னதான் தம்பட்டம் அடித்தாலும், இதன்பின்னே மறைந்திருக்கும் உண்மையான நோக்கம் என்னவெனில், நாட்டையும், நாட்டின்வளங்களையும் அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம்ஈட்டுவதற்காகத் தங்குதடையற்ற சுரண்டலுக்கு முழுமையாகத் திறந்துவிடுவதேயாகும். இவற்றின் காரணமாக நம் நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கை மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொள்ளை லாப வேட்டையால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்; பெரும்பணக்காரர்களுக்கும், ஏதும் இல்லாதவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அபாயகரமான முறையில் விரிவடைந்து கொண்டிருக்கிறது. 

விவசாயியின் துயரம்                       

             நம் விவசாயத்தைப் பற்றிக்கொண்டுள்ள நெருக்கடி தொடர்வதிலிருந்து இதனை நன்கு காண முடியும். வட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை காலம் தவறி பெய்திருப்பதன் காரணமாக, பயிர்கள் முழுமையாக நாசம் அடைந்து, விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனை, கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிற விவசாயிகளைப் பாதுகாப்பதே ஆகும். ஆனால் அதற்குப் பதிலாக, மோடி அரசாங்கமானது மிகவும் கருணையற்ற முறையில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது விவசாயிகளின் வாழ்வில் மேலும் கூடுதலாக துன்பதுயரங்களை ஏற்படுத்துவதுடன், நம் ஒட்டுமொத்த விவசாயத்துறையில் காணப்படும் நெருக்கடியை மேலும் ஆழமாக்கிடும்.
தொழிலாளியின் அவலம்
           நாட்டிலுள்ள தொழிலாளர் நலச் சட்டங்களில், உழைக்கும் மக்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த கொஞ்சநஞ்ச உரிமைகளைக்கூடப் பறிக்கும் விதத்தில், பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவருதல் உட்பட எண்ணற்ற தொழிலாளர்நல விரோதச் சட்டங்களைக் கொண்டுவர ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் மோடி அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை உக்கிரப்படுத்திடும்.

விஷம் கக்கும் மோடி அரசு             

            அதேபோன்று, மோடி அரசாங்கமானது, இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களுக்கு எதிராகவும், நாட்டிலுள்ள மதச்சிறுபான்மையினரின் உயிர் வாழ்விற்கு எதிராகவும், மதவெறி நஞ்சைக் கக்கிக்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பலவும் மறுமதமாற்றம் என்றும், காதலுக்கு எதிரான `புனிதப் போர்’ என்றும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மோடி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களும், ஆளும் பாஜக எம்பி-க்களும் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக விஷத்தைக் கக்கும் பேச்சுக்களை தங்குதடையின்றித் தொடர்ந்து மேற் கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெயரளவிற்குக்கூட உறுதி அளிப்பதற்கு, மோடி அரசாங்கம் முன்வரத் தயாராயில்லை. அரசின் இத்தகைய அடாவடித்தனம் மதச்சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பின்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய இழிமுயற்சிகளின் மூலமாக, ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் இந்து வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை அடைந்திட முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இவர்களது முயற்சிகள், நம் இந்தியக்குடியரசின் அடித்தளங்கள் மீது கருணையற்ற முறையில் ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள் மட்டுமல்ல; மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் அரிக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும்போது அவர்களின் ஒற்றுமையை மத அடிப்படையில் சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் சதியும் ஆகும்.

எதேச்சதிகார ஆட்சியை நோக்கி...              

           இப்படியாக, மோடி அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரத் தாக்குதல்களுடன் மதவெறி நஞ்சையும் இணைத்து, மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது மேலும் கூடுதலாக, மோடி அரசாங்கமானது தன்னுடைய குறிக்கோள்களை எய்துவதற்காக, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளைக் கூட சிதைத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. நம் ஜனநாயகக் கட்டமைப்பினை சிதைத்து சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் ஓர் எதேச்சதிகார ஆட்சிமுறையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற அறிகுறி தெரியத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு, இந்திய நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள மேற்படி மும்முனைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன் கடும் எதிர்ப்பினைப் பிரகடனம் செய்திருக்கிறது. இம்மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களின் வாழ்வையும் சூறையாடக்கூடிய `திரிசூலமாக’ மாறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடுத்திடும் என்றும் 21வது அகில இந்திய மாநாடு உறுதிபட அறிவித்திருக்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாக்கக் கூடிய அதே சமயத்தில், நாட்டு மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலையில் முன்னிலும் பன்மடங்கு செயலூக்கத்துடன் இறங்கிடும். 
நன்றி : தீக்கதிர்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தானே சொரிந்துகொள்ளும் ''கவிப்பேயரசு'' வைரமுத்து...!



                  ''கவியரசு'' கண்ணதாசன் மறைவிற்கு பிறகு தனக்குத்தானே ''கவிப்பே(ய)ரரசு'' என்று முடிசூடிக்கொண்ட திரைப்படப் பாடலாசிரியர்  வைரமுத்து எப்போதுமே அற்பப்பலனுக்காக அலைந்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும், புகழின் உச்சியில் உள்ளவர்களையும் கூச்சப்படாமல் சுகமாக சொரிந்து விடுவதில் வல்லவர். அப்படி அடுத்தவர்களை சொரிந்து விடும்போது, தனக்கு தானே அதைவிட சுகமாக இரத்தம் வரும் வரை சொரிந்து கொள்வார். சுயவிளம்பர போதை தலைக்கேறி திரிபவர். அந்த சமயத்தில் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் யாரும் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வார். தனக்கு நிகராகவோ, தன்னை விட அதிகமாகவோ யாரும் வளர்ந்துவிடாமல் அவர்கள் வளர்ச்சியை வெட்டிவிடுபவர் தான் இந்த வைரமுத்து. இவரது துறையிலேயே இவரைவிட வேகமாக வளர்ந்துவந்த இவரது மனைவி பொன்மணியையே மேலும் வெளியே தெரிந்துவிடாமல் இத்தனைக்காலமாக அமுக்கி வைத்து, தன் மகனை மட்டும் வளர்த்துவிடும் ஆணாதிக்க சிந்தனை மேலோங்கியவர். 
               விருதுகளுக்காகவும், பட்டங்களுக்காகவும் பல்வேறு வார்த்தைஜால வித்தைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்பவர்.  மத்திய அரசின் இன்னும் பெரிய விருதுகளுக்காக காத்திருப்பவர். அதனால் தான் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்-யை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருது கொடுத்து பாராட்டுவிழா நடத்தினார். 
            அப்படிப்பட்ட வைரமுத்து தான் அண்மையில் மறைந்த தமிழ் இலக்கிய ஜாம்பவான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தன்னை பாராட்டி அளித்ததாக ஒரு பொய்யான வாழ்த்துக் கடிதத்தை குமுதம் வார இதழில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். ஜெயகாந்தன் எழுதியதாக சொல்லப்பட்ட அந்த கடிதம் ஜெயகாந்தனின் வழக்கமான  நடையிலோ மொழியிலோ இல்லை என்றும், மேலும் அவர் சில காலமாக எழுதுவதற்கும், கையெழுத்துப் போடுவதற்கு இயலாத உடல்நிலையிலும், சூழ்நிலையிலும் இருந்தார் என்றும், இந்த கடிதம் ஜெயகாந்தன் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது மகள் திருமதி.தீபலட்சுமி மறுத்திருக்கிறார். 
                இறந்து போன ஒரு பெரிய மனிதரின் பெயரால் ஒரு மலிவான விளம்பரம் செய்து எதை அடையப்போகிறார் இந்த கவிப்பேயரசு...?

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

சிபிஐ(எம்) - ன் புதிய தலைமைக்குழு உறுப்பினர்களை வாழ்த்துகிறோம்...!

 

                இன்று விசாகப்பட்டினத்தில் நிறைவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது அகில இந்திய மாநாட்டில் வரும் மூன்று ஆண்டுகளுக்கு கட்சிக்கு வழிகாட்டும்  பதினாறு பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம். 
                 அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்நாடு மாநிலச்செயலாளர்   தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்  என்பது நம்மக்கெல்லாம் பெருமையையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.  1998-ஆம் ஆண்டு இவரது அரசியல் வகுப்பு ஒன்று தான் நான்  செங்கொடி இயக்கத்திற்குள் நுழைவதற்கு காரணமாய் அமைந்தது. அற்புதமான ஆசிரியர். என்னுடைய அரசியல் ஆசான் கட்சியின் உச்சி வரை உயர்ந்து நிற்கிறார் என்பதில் பெருமையாய் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஆளுமை தேசத்தின் ஆளுமையாய் விஸ்வரூபம் எடுக்கிறது.
           தோழரின் புதிய பணி  சிறக்க எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பிலும் புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 
         வாழ்க தோழர். ஜி. ராமகிருஷ்ணன்..!                 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளரை வரவேற்போம்...!

 
                 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் இன்று வரை ஆறு நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இறுதி நாளான இன்று வரும் மூன்று ஆண்டுகளுக்கான கட்சியின் புதிய மத்தியக்குழு உறுப்பினர்களையும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தோழர்.சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் அமைப்பு விதிப்படி ஒருவர் மூன்று முறை மட்டுமே கட்சிப்பொறுப்பில் இருக்கமுடியும் என்பதால், கடந்த மூன்று மாநாடுகளில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.பிரகாஷ் காரத் அவர்களுக்கு பதில் தோழர்.யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி மக்களுக்கான போராட்டங்களை மேலும் முன்னெடுத்துச்செல்லும். கட்சி இன்னும் வீறுகொண்டு எழும். அதற்காக வழிகாட்டவிருக்கும்  புதிய பொதுச்செயலாளர், புதிய  அரசியல் தலைமைக்குழு  மற்றும் புதிய மத்தியக்குழு ஆகியோர் பின்னால் நாம் அணிவகுத்து நிற்போம். ஒன்றுபடுவோம்... போராடுவோம்... வெற்றிபெறுவோம்... புதியதோர் உலகம் செய்வோம்...
              புதிதாய் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் தோழர்.சீத்தாராம் யெச்சூரி வாழ்த்தி வரவேற்போம். புரட்சிகர நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம். வாழ்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி....!

அட்சய திருதியை வேட்டிகள் - இந்த ஆண்டின் புதிய கண்டுபிடிப்பு

                  
                 ஒவ்வொரு ஆண்டும் இந்த சித்திரை மாதம் வந்தா ''அட்சய திருதியை'' வரும். அது வருவதற்கு முன்பே இந்த நகைக்கடைக்காரங்க தொந்தரவு தாங்கவே  முடியாது. அப்பப்பா... தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், செய்தித்தாள்களிலும் ''அட்சய திருதியை அன்று எங்க கடையில நகையை வாங்குங்க... சேதாரம் இல்லை... செய்கூலி இல்லை... முன் பணமா கட்டிடுங்க... வட்டியும் இல்லை...'' அப்படி...  இப்படி... என்று ஒரே நொடிக்கு ஒரு முறை ஒரே நச்சரிப்பு தான். அன்றைக்கு நகைகள் வாங்கினால் அந்த ஆண்டில் நிறைய நகைகளை வாங்குவார்களாம். இப்படியொரு பொய்யை கிளப்பிவிட்டுடுவாங்க. நம்ம ஆளுங்களோ இருக்கிற நகையை வெச்சியாவது கடன் வாங்கி அன்றைய தினம் புதிய நகையை வாங்குவார்கள். பின்னாளில் கடனுக்கு வைத்த நகையை  மீட்ட முடியாமல் போய்விடும். 
              இருபது ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அட்சய திருதியை வந்தது. ஆனால் அன்றைய தினம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை யாரும் கிளப்பிவிடவில்லை. ஆனால் இன்றைக்கு தாராளமயமும், உலகமயமும் மக்களிடம் பொய் சொல்லி இலாபம் சம்பாரிக்க சொல்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தான் நாடு முழுதும் தங்க நகை வியாபாரத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள மிக பெரிய நகைக்கடை நிறுவனங்கள் மக்களின் பணத்தையே குறிவைத்து துணிந்து அப்படியான பொய் கதைகளை அவிழ்த்துவிட்டு கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றன. அதை நம்பி அப்பாவி மக்களும் ஏமாந்து போகிறார்கள். 
                    இந்த கூட்டத்தை துணிக்கடைக்காரங்க பார்த்தாங்க. நாமும் எதையாவது கதையை சொல்லி ஏன் இலாபம் சம்பாதிக்கக்கூடாது என்று யோசித்தார்கள். அவங்க பங்குக்கு அட்சய திருதியை பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைக்கு புதிய ஆடைகளை வாங்கினால், ஆண்டு முழுதும் புதிய ஆடைகள் சேருமாம். 
               இப்போது இந்த ஆண்டு தமிழகத்தில் வேட்டிகளை தயார் செய்து விற்பனை செய்யும் ஒரு பெரிய நிறுவனம் அட்சய திருதியை அன்று அவங்ககிட்ட வேட்டியை வாங்கி அட்சய திருதியை மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்து அந்த வேட்டியை மத்தவங்ககிட்ட கொடுத்தா பேஷா இருக்குமாம். சகல சவுபாக்கியத்தையும் பெற்று ஷேமமா வாழலாமாம். இப்படியொரு விளம்பரம் இன்றைக்கு பத்திரிகைகளில் வந்திருக்கு. பெரிய நிறுவனங்களின் இலாபம் மக்களை மூளைச் சலவை செய்வது தான். அதன் விபரீதத்தைப்பற்றி பார்க்காது.

பெண்கள் படிப்பதில் எத்தனை தடைகள்...!






                 இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வங்கிகளில் அவ்வளவாக கூட்டம் இருக்காது. இருக்கின்ற கொஞ்ச அளவிலான கூட்டம் கூட சில எண்ணிக்கையில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். பெண்களின் எண்ணிக்கை என்பது ஒன்றிரண்டு தான் இருக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்கெலெல்லாம் நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப்பட்ட பின், பெண்கள் வங்கி கணக்குகள் தொடங்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் அதிக அளவில்  பெண்களை பார்க்கமுடிந்தது. வங்கி போன்ற பொது இடங்களில் வருகை புரியாமல் வீட்டிலேயே புழுங்கி இருந்த இலட்சக் கணக்கான பெண்கள் வங்கிகளுக்கு வருவதும், சேமிப்பு கணக்கில் பணம் போடுவதும், கடன் வாங்குவதும், கடனை நேர்மையாக திருப்பி கட்டுவதும் போன்ற வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிறகு மத்தியில் அப்போது ஆட்சி செய்தவர்களும் சரி, இப்போது ஆட்சி செய்பவர்களும் சரி பல்வேறு பொருளாதார மாற்றங்களை மக்களின் கருத்தைக் கேட்காமலேயே, பொது மக்களுக்கு சமையல் கேஸ், மண்ணெண்ணெய், அரிசி போன்ற ரேஷன் பொருட்கள் ஆகியவற்றுக்கு கொடுக்கப்படும் மானியத் தொகையையும், முதியோர் பென்ஷன் போன்றவற்றையும் இனி அவரவர் வங்கிக் கணக்கில் தான் போடப்படும் என்று முடிவெடுத்ததினால், அதுவரையில் வீட்டிலேயே இருந்து வந்த மற்ற பெண்கள் இலட்சக்கணக்கானோர் வங்கிக்கணக்கை துவக்கவேண்டிய கட்டாயத்தை  மத்திய - மாநில அரசுகள் ஏற்படுத்தி விட்டன. எனவே அதுவரையில் நமக்கு வங்கிக் கணக்கே தேவையில்லை. அதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்றிருந்த பெண்களும் வங்கி கணக்கை தொடங்க கட்டாயமாக்கப்பட்டனர். இந்த பெண்களை பொறுத்த வரையில் வங்கி கணக்கு என்பது ஒரு வேண்டாத தொல்லை. கடந்த காலங்களில் வயதானவர்களுக்கு மாதம்  பொறந்தா பென்ஷன் பணம் மணி ஆர்டர் மூலமாகவோ, அங்கன்வாடி மூலமாகவோ அவர்களை தேடி வந்துவிடும். இதுவரையில் சமையல் எரிவாயுவிற்கு மானியத்தை கழித்துக்கொண்டு தான் பணம் பெற்றுக்கொண்டார்கள். இதுவரையில் மண்ணெண்ணையையும் அரிசியையும் ரேஷன் கடைகளில் ஒழுங்காகத்தான் போட்டுகிட்டிருந்தாங்க. அதை எல்லாத்தையும் நிறுத்திபுட்டு எரிவாயுக்கான மானியத் தொகையையும், மண்ணெண்ணெய் அரிசிக்கான தொகையையும் வங்கிக் கணக்கில் மட்டுமே தரப்படும் என்று மத்திய அரசு கட்டயப்படுத்தியதால், நாட்டிலுள்ள பெரும்பான்மையான பெண்கள் வங்கிக் கணக்கை ஆரம்பிச்சிட்டு மாதம் பொறந்தா வங்கி வாசலில் வந்து நிற்க வேண்டியதாய் போய்விட்டது. 
          இவைகளினால் என்னாச்சு...? இப்போது எல்லா வங்கிகளிலும் ஆண்களை விட பெண்களின் கூட்டமே அதிகம் காணப்படுகிறது. இதுவும் வரவேற்கத்தக்க மாற்றமே. மழைக்குக்கூட வங்கி பக்கம் ஒதுங்காத பெண்கள் அவர்களுக்கு தொல்லை தான் என்றாலும் இப்போது மாதம் தோறும் வங்கிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுல என்ன கொடுமை என்றால், அப்படி வரும் பெரும்பாலான பெண்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். தாய் மொழியை கூட படிக்க முடியாத அவர்களை இப்படி ஒரு நாள் வங்கியில் வந்து நிறுத்துவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. அப்படி மாதந்தோறும் நான் வங்கிக்கு போகும் போதெல்லாம், அந்த பெண்கள் படிப்பறிவு இன்மையால் தங்களின் பண வரைவு சீட்டை வைத்துக்கொண்டு அதை செய்வதற்கு படித்த ஆட்களை தேடி அல்லாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். நாமும் பொறுமையுடன் அந்த சீட்டை பூர்த்தி செய்துக்கொடுத்தால், அவர்களது இடது கை பெருவிரல் தன்னிச்சையாக - ஒரு அணிச்சை செயலாக ''நீல நிற மையை'' தேடும். கொஞ்சும் கூச்சமில்லாமல் பெருவிரலை அதில் ஒற்றி எடுத்து வரைவு சீட்டில் அவசர அவசரமாக பதித்து, பணத்தை பெறுவதற்கு கவுண்டரை நோக்கி ஓடுவார்கள்.
               இந்த காட்சிகளை எல்லா வங்கிகளிலும் தினமும் பார்க்கலாம். இந்த பெண்கள் ''நாம் படிக்கவில்லையே... நம்மால் வரைவு சீட்டை கூட எழுத முடியவில்லையே... கையெழுத்து போடாமல் ''கைநாட்டு'' வைக்கிறோமே'' என்று ஒரு போதும் வேதனை பட்டதுமில்லை... அதற்காக வெட்கப்பட்டதுமில்லை. ஆனால் அதைப் பார்த்த நாம் தான் வேதனைப்பட்டோம். சமூகத்தில் இன்னும் படிப்பறிவில்லாமல் இருக்கிறார்களே என்று வெட்கப்பட்டோம்.
             முதலில் எழுதப்  படிக்க தெரியாத படிப்பறிவில்லாத அந்த பெண்களுக்கு  எழுத, படிக்க, கையெழுத்துப் போட கற்றுத்தரவேண்டும். அவர்கள் எழுதுவதற்காக வங்கிகளிலோ மற்ற இடங்களிலோ அடுத்தவர்கள் தயவை எதிர்ப்பார்த்து நிற்கக்கூடாது என்றெல்லாம் சிந்தித்தோம். சரி அவர்களுக்கு எழுத்தறிவு வகுப்பெடுப்பது தான் சிறந்ததாக இருக்கொமென்று முடிவெடுத்தோம். மீண்டும் ''அறிவொளி இயக்கத்தை'' தூசித்தட்டி தொடங்குவோம். அதையும் ''பெண்களுக்கு கல்வி கொடுக்கவேண்டும். கல்வி ஒன்றினால் மட்டுமே சமூக விடுதலையை அடையமுடியும்'' என்று முழங்கிய  புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125-ஆவது பிறந்தநாளன்று தொடங்குவது தான் பொருத்தமாக இருக்குமென்று சென்ற ஏப்ரல் 14-ஆம் தேதியன்று புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் நடத்துவது என்றும் முடிவாக்கப்பட்டது.
                  படிப்பதற்கு பெண்களை வரவழைக்க வேண்டுமே... என்ன செய்வது...? உற்சாகத்துடன் களத்தில் இறங்கினோம். பாண்டிச்சேரி இலாசுபேட்டை பகுதியில் உள்ள பின் தங்கிய மக்கள், உழைப்பாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளான சலவையாளர் நகர், சேத்திலால் நகர், மடுவுபேட், சாமிபிள்ளை தோட்டம், கொட்டுபாளையம் ஆகிய வசதியற்ற குடும்பங்கள் வாழும் இடங்களுக்கு வீடுவீடாக நடந்தே சென்றோம். ஒவ்வொரு வீடாக பெண்களை சந்தித்து எழுத படிக்க தெரிந்து கொள்ள மாலை நேர வகுப்பிற்கு வாருங்கள். எழுத படிக்க தெரிந்துகொண்டால் வங்கிகளில் நீங்களாகவே சுதந்திரமாக யாருடைய தயவுமில்லாமல் தன்னிச்சையாக வரைவு சீட்டுகளை எழுதலாம். அதில் உங்கள் கையெழுத்தையும் இடலாம். என்றெல்லாம் சொல்லி, இதுவரையில் அர்த்தமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கையை பயனுள்ள வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள். வாருங்கள் படிக்கலாம். என்றெல்லாம் அழைத்தபோது அவர்களும் உற்சாக மிகுதியில் ''வருகிறோம்.. வருகிறோம்'' என்று சொன்ன போது அவர்களது முகத்தில் ஒரு வகையான நம்பிக்கை ஒளி தெரிந்தது. நமக்கும் உற்சாகமாய் இருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம்.
              பெண்களுக்கான அந்த எழுத்தறிவு வகுப்பை நடத்தி பாடம் சொல்லித் தருவதற்கு, பள்ளி ஆசிரியர்கள் திருமிகு.ஆர்.ஜெயராமன் அவர்களும், திருமிகு.வத்சலா அவர்களும், திருமிகு.ஹேமாவதி அவர்களும், திருமிகு.கே.ரமணன் அவர்களும் மிகுந்த ஆவலுடன் ஒப்புக்கொண்டனர். இவர்களெல்லாம் அந்த காலத்தில் அர்ப்பணிப்புணர்வுடன் அறிவொளி இயக்கத்தை வளர்த்தவர்கள். அறிவொளி இயக்கத்தோடு வாழ்ந்தவர்கள். இன்றைக்கும் இந்த வகுப்பிற்கும் இவர்களே பொருத்தமானவர்கள் என்று தேர்ந்தெடுத்தோம். இந்த இயக்கத்திற்கு ''மீண்டும் அறிவொளி இயக்கம்'' என்று பெயரிட்டோம்.
              திட்டமிட்டபடி டாகடர் அம்பேத்கரின் பிறந்தநாளான சென்ற 14-ஆம் தேதி சிறப்பாக தொடங்கப்பட்டது. வருகிறேன் என்று சொன்ன பெண்களில் சிலபேர் வந்திருந்தார்கள். மற்றவர்கள் இன்று தமிழ் புத்தாண்டு, கோயிலுக்கு போய்விட்டார்கள்... நாளை வருவார்கள் என்று சொன்னார்கள். அன்றே முதல் வகுப்பும் தொடங்கப்பட்டது. வந்திருந்த பெண்களுக்கு கட்டணம் பெறாமல் சிலேட்டுகளும், எழுது பொருட்களும் கொடுக்கப்பட்டன. பெண்களும் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் பெற்றுக்கொண்டார்கள். தினமும் வகுப்பிற்கு வாருங்கள் என்று அழைத்தால் வரமாட்டார்கள் என்பதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வந்தால் போதும் என்றெல்லாம் சொல்லி அனுப்பினோம். ஒரு நாள் விட்டு அடுத்த வகுப்பு வந்தது. ஒரே ஒரு பெண் மட்டும் வந்திருந்தார்கள். வெகு நேரம் காத்திருந்தோம். யாரும் வருவதாக தெரியவில்லை. என்ன காரணம் என்று வந்திருந்த அந்த அம்மாவிடம் கேட்டபோது தான் தெரிந்தது. அந்த பெண் ''இன்று பிரதோஷம்.. எல்லோரும் கோயிலுக்கு போயிருப்பாங்க.. நானும் போகணும்னு'' என்று சொல்லி விட்டு வந்திருந்த அந்த ஒரு பெண்மணியும் கிளம்பிவிட்டது. எனவே அன்றைக்கு வகுப்பில்லை. பாடம் சொல்லித்தர வந்திருந்த ஆசிரியர் தோழர்.ஆர்.ஜெயராமன் அவர்கள், அந்த காலத்து அறிவொளி இயக்க அனுபவங்களை எல்லாம் சொல்லி, ஆரம்பத்தில் இப்படித் தான் இருக்கும். மக்களிடம்  பேசிப்பேசி நாம்ப தான் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். வாங்க மீண்டும் அவர்களை சந்தித்து பேசுவோம் என்று உற்சாகமூட்டினார்.
              அடுத்து இன்றும் வகுப்பறையை திறந்து வைத்து அந்த பெண்களின் வருகைக்காக காத்திருந்தோம். இன்றும் யாரும் வரவில்லை. அப்போது தான் தெரிந்தது இன்று அமாவாசை என்று. அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம்,  வெள்ளிகிழமை, விசேஷ நாட்கள் போன்ற நாட்களில் இந்த பெண்கள் கோயில், பூசை, வழிபாடு என்று மும்முரமாய் இறங்கிவிடுவார்கள் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டோம். ஆணாதிக்க சமூகம் பெண்களுக்கு கல்வியை கொடுக்காமல்,  எப்படியெல்லாம் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதை எங்கள் கண்முன்னே பார்த்தோம்.
           இவைகள் மட்டுமில்லாமல், வீட்டிலிருக்கும் ஆண்கள் பெண்களிடம், ''இனிமேல் என்னத்த படிக்கப்போற... இப்போ படிச்சி என்ன செய்யப்போற... அதெல்லாம் ஒன்னும் படிக்க போகவேண்டாம்...'' என்றெல்லாம் ஆதிக்க உணர்வுடன்  ''தடையுத்தரவு'' போட்டிருக்கிறார்கள் என்றும் அந்த பகுதிகளிலிருந்து தகவல்கள் வந்தது.
             என்றாலும், இப்படிப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து அந்த பெண்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டும் என்று மீண்டும் முயற்சி செய்கிறோம். பிற்போக்குத்தனமான மதவெறி பிடித்த தீவிரவாதிகள் மத்தியில், மலாலா என்ற 17 வயது சிறுமியால் பெண்களை அழைத்து வந்து கல்வி கொடுக்க முடிகிறதென்றால்,  இங்கே நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்ற உணர்வு எனக்குள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. 

புதன், 15 ஏப்ரல், 2015

விரிவான இடதுசாரி ஒற்றுமையை உருவாக்குவோம்...! - பிரகாஷ்காரத்


           விசாகப்பட்டினத்தில் துவங்கிய கட்சியின் 21-வது அகில இந்திய மாநாட்டை துவக்கிவைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் ஆற்றிய உரை :- 
               ஆந்திர மாநில விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா ஆயுதப்போராட்டம் நடைபெற்ற மண்ணில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அகில இந்திய மாநாட்டை நடத்துகிறது.
         இந்த நேரத்தில் அந்தவீரமிகு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களுக்கும், ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதில் அரும்பாடுபட்ட தலைவர்கள் பி.சுந்தரய்யா, எம்.பசவபுன்னையா, சி.ராஜேஸ்வரராவ் ஆகிய தலைவர்களுக்கும் நம் மரியாதை செலுத்துகிறோம். தேசிய அரசியலில் நம்முன் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள நிலையில் 21வது அகில இந்திய மாநாட்டைநாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டாக நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதை நேரில் கண்டு வருகிறோம். அந்த சக்திகள் பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் என சகல துறைகளிலும் ஊடுருவி உள்ளது.

கார்ப்பரேட் - மதவெறி கூட்டு                  

            முதலாவதாக, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டு நிறுவனமாக செயல்படத் தொடங்கிவிட்டது. இதில், பிரதான கூட்டாளி என்ற முறையில் ஆர்எஸ்எஸ் அரசின் அனைத்து முடிவுகளிலும் அதிகமாக தலையிடுகிறது. இரண்டாவதாக, மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், பதவிக்கு வந்த மோடி அரசு தனதுஅலுவலகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்வா சக்திகளின் அலுவலகமாக மாற்றிவிட்டது.
            மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அது ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயலுக்கேற்ப மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டது. அந்தநிறுவனங்கள் தங்களது புதிய தாராளமய, பொருளாதாரக் கொள்கைகளை மோடி அரசாங்கத்தின் மூலம் மிகத்தீவிரமாக அமல்படுத்த தொடங்கிவிட்டன. கடந்த10 மாதங்களுக்குள் நாட்டின் வளத்தை மோடி அரசு மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது.

பலன் பெற்றது யார்?                    

             கனிம வளங்கள், நிலக்கரி சுரங்கங்கள், காப்பீடு, ரயில்வே, நிலம் என அனைத்தும் மிகப்பெரிய உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம்தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரி 5 விழுக்காடாக குறைக்கப்பட்டதோடு, சொத்து வரி முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.
             மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் யார் பலன் அடைந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முதலாளியான கவுதம் அதானியின் சொத்து மட்டும் 2014ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டிற்குள் 25ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஒருபுறம் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, மறுபுறம் உழைக்கும் மக்கள் மீதும் அவர்களின் உரிமைகள் மீதும் கொடூர தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற துயரத்திலும், இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற கவலையிலும் விவசாயிகள் உள்ளனர்.மேலும், வேளாண் மற்றும் பாசனத்துறை மீதான தனது முதலீட்டை அரசு கணிசமாக குறைத்துக் கொண்டுவிட்டது.
              எதிர்பார்க்காத பருவத்தில் பெய்த மழையால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, அதனால் நஷ்டம் அடைந்த பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதும் அரிதாக மாறிவிட்டது.

பழங்குடி மக்களை வெளியேற்றத் திட்டம்                    

               சாமானிய மக்களுக்கோ கடுமையான விலைவாசியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை. தொழிலாளர் நலச்சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. புதிய சுரங்கம் மற்றும்கனிம வளச்சட்டத்தை இயற்றி பழங்குடி மக்களை அவர்களது இருப்பிடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.

அனைத்துத் துறையிலும் மதவெறி                  

                 மூன்றாவதாக, இந்துத்துவா சக்திகள் தங்களின் மதவாத செயல்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதற்கான வழிகளை மோடி அரசு திறந்து விட்டுள்ளது. கல்வித்துறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் கற்றுக் கொடுக்கிறது. ஆராய்ச்சி மற்றும்கலாச்சார நிறுவனங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கிறது. மறுபுறம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கக்கூடிய பிரச்சாரம் தீவிரமாக நடைபெறுகிறது. மறு மதமாற்றம் சிறுபான்மை மக்களின் தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அம்மக்களின் உணவு மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அத்துமீறல்கள், மாட்டிறைச்சி மீதான தடை ஆகியவை இதில் அடங்கும்.

பெண்கள் நடமாட்டத்தை ஒடுக்க சதி                    

              பொது வாழ்விலும், பொது இடங்களிலும் பெண்களின் நடமாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது சமூக ரீதியாகவும், உடைக்கட்டுப்பாடு போன்றவற்றை திணிப்பதிலும் இந்துத்வா சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

அமெரிக்காவுக்கு சேவகம்                  

              இறுதியாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச்சேர வேண்டும் என்று துடிக்கும் மோடி அரசு அதற்கேற்ப தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி வருகிறது. அந்தக் கொள்கைகள் வலதுசாரி சக்திகளின் செயல்பாடுகளை எதிரொலிக்கும் வகையில் உள்ளன. ஆசியாவில் தனது கொள்கைகளை விரிவாக்கத் துடிக்கும் அமெரிக்காவுடன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோடி அரசு, அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து நமது பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீடுகளுக்காக மேலும் திறந்துவிட்டதோடு, அறிவுச்சொத்துரிமை விஷயத்திலும் இந்தியாவின் நலன்களை பலி கொடுத்துவிட்டது.

தீவிரம் அடையும் போராட்டங்கள்                

              தங்களது வாழ்வுரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கெனவே உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினர் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்திற்கு எதிராகவிரிவான இயக்கங்கள் தொடங்கி உள்ளன.
             தொழிலாளர் நலச்சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன.ஏற்கெனவே, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி மசோதாவை எதிர்த்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை எதிர்த்துஅத்துறையில் உள்ள ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
         இதேபோல் மோடி அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவினரும் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெருக்களில் இறங்கியுள்ளனர்.

முரண்பாடு முற்றும்             

                 தனியார் பெரு நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஆதரவான மோடி அரசின் கொள்கைகளால் வரும் நாட்களில் உழைக்கும் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் ஏற்படப்போகிறது. எனவே, இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைத்து வலதுசாரி சக்திகளின் சவால்களை முறியடிப்பது குறித்து கட்சியின் மாநாடு விவாதிக்க உள்ளது.

மேற்குவங்கத் தோழர்களுக்கு பாராட்டு                  

            நம் நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தனித்தும், இடதுசாரி அணியையும் வலுவாக கட்டும் கடமை நம் முன் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி சக்திகளுக்கு குறிப்பாக, மேற்குவங்கத்தில் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து நாம் மீண்டு வரவேண்டி உள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும்இந்த வேளையில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டு இயக்கங்களை நடத்தி வரும் ஆயிரக்கணக்கான நமது கட்சி ஊழியர்களையும், இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களையும் பாராட்டுகிறோம். தற்போதுகூட, அம்மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களில் ஆளும் கட்சி கொடூரமான வன்முறையை ஏவி உள்ளது. இதில் நமது தோழர்கள் சுபாஷ் முகோபாத்தியாயா, மனேஷ் முகர்ஜி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குணமடைய மாநாட்டின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டு எழுவோம்!          

            கடந்த அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் உயிர் நீத்த 99 தோழர்களின் தியாகம் வீண்போகாது. மக்களின் ஆதரவோடு நாம் மீண்டெழுந்து இத்தகைய சக்திகளை தோற்கடிப்போம்.

அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!        

            நாட்டில் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், இடதுசாரி ஒற்றுமையை மேலும் விரிவுபடுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் நாம் உள்ளோம். விரிவான இடதுசாரி அணியில் அனைத்து இடதுசாரி கட்சிகளும், குழுக்களும், தனி நபர்களும் இணைய வேண்டும். இடதுசாரி கட்சிகளின் வெகுஜன அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டி உள்ளது. வலுவான இடதுசாரி ஒற்றுமை உருவானால், மற்ற ஜனநாயகசக்திகளை நம்மால் திரட்டி வலுவான இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்க முடியும். எனவே, கட்சியின் 21வது மாநாடு கட்சிக்கு புதிய வழியை காட்டும். அந்த வகையில் இந்த மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கவும், இடது மற்றும் ஜனநாயக மாற்றை உருவாக்கவும், கட்சிக்கு இம்மாநாடு வழிகாட்டும். வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவோம். விரிவான இடது ஒற்றுமையை கட்டுவோம். இடது மற்றும் ஜனநாயக மாற்று அணியை உருவாக்கும் பணியை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு தோழர்.பிரகாஷ்காரத் பேசினார்.

நன்றி : தீக்கதிர்

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

Com. Prakash Karat pays tributes to Dr.Ambedkar...!





Courtesy :10TV

Inaugural Address of Com.Prakash Karat at 21st Congress of CPI(M)




               “I specially thank the leaders of the five Left parties who are present here on the dias for accepting our invitation to attend this session. Your presence here is testimony to the growing resolve of the Left forces in the country to unite and work and to struggle together.

           I greet the working class and the working people of Visakhapatnam district who have made such a big contribution to the hosting of this Party Congress. We are holding the Congress in Andhra Pradesh which has the glorious legacy of the historic Telangana armed struggle of the peasantry. On this occasion, we pay our respectful tribute to the leaders of this struggle and the builders of the Communist movement in the united Andhra Pradesh, P.Sundarayya, M.Basavapunniah, C.Rajeswara Rao and other pioneering leaders.   
           For the last nearly one year, we have witnessed the unfolding of the right wing offensive in the country which spans the economic, political, social and cultural spheres. What are the underpinnings of this rightwing thrust?
            Firstly, we have a political party, the Bharatiya Janata Party, in power at the Centre which is but a political extension of the Rashtriya Swayamsewak Sangh. Thus, the Modi government is a joint enterprise of the RSS and the BJP with the parent partner holding the majority stake in this joint venture...
            Secondly, the BJP won the Lok Sabha elections and the Modi government was propelled into office by the twin forces of big bourgeois corporate support and the exertions of the RSS-led Hindutva forces...
            Thirdly, the Modi government has opened the way for the Hindutva forces to advance their communal agenda...
            Finally, the rightwing agenda is reflected in the foreign policy with the Modi government actively seeking to ally with US imperialism....
           Today is the birth anniversary of Dr. Babasaheb Ambedkar, the architect of the Indian Constitution and the beginning of the observance of his 125th birth anniversary. What the BJP and the RSS are set to do is demolish the secular democratic foundations of the Indian Constitution. Nathuram Godse, the assassin of Gandhiji, is being glorified by the leaders of the BJP-RSS combine. The repeated use of ordinances, the intolerance shown to the secular and democratic intelligentsia and cultural artists are all portents of an authoritarian type of regime.
            Our Party Congress will focus on the central theme of how to counter the right wing offensive; to organise struggles and sustained movements of the working class, peasantry, agricultural workers and other oppressed sections of the people; to develop local struggles on sustained basis and link them to the overall struggle against the neo-liberal policies. The Party will actively take up social issues and fight for the rights of the women, adivasis, dalits and the minorities. The CPI(M) will work for the broadest mobilization of the secular and democratic forces against the communal danger.
              I greet the people, mainly the adivasis, who are struggling against their displacement from their lands and habitat by the Polavaram project. More than two lakh people will be affected. Both our Party committees in Telangana and Andhra Pradesh are firmly with the tribal people in this struggle.
              The CPI(M) extends its full support and solidarity with Cuba. The United States have been compelled to establish diplomatic relations with Cuba which is an important breakthrough. However, the US has not lifted the economic blockade against Cuba which has been in force for the last five decades. We demand an immediate end to this illegal embargo.
           At the present juncture, it is absolutely vital to build and expand the independent strength of the CPI(M) and the Left. We have to overcome the reverses suffered by the CPI(M) and the Left in the recent period particularly in West Bengal. From this forum of the Party Congress, I greet the tens of thousands of our Party and Left cadres and supporters who are courageously facing the Trinamool Congress terror tactics and defending the movement...We have paid homage to the 99 martyrs who laid down their lives in West Bengal since our last Party Congress. Their sacrifices will not go in vain. We shall overcome and we shall prevail with the support of the people.
           In the context of the right wing offensive, it is imperative that we widen and strengthen Left unity. All the Left parties, groups and individuals should be brought together on a broad Left platform. We should take steps to establish coordination between the Left-led mass organizations. It is by forging strong Left unity that we can rally all other democratic forces and go forward towards building a Left and democratic alliance.

வலிமை மிக்க கட்சியை கட்டுவோம்...! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

         
                வரவிருக்கும் காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பின்பற்றப்பட வேண்டிய அரசியல்-நடைமுறை உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானம் விளக்கி இருக்கிறது. சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்திருப்பதுடன், இன்றுள்ள நிலைமைகள் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் - நடைமுறை உத்தி மற்றும் பணிகள் என்ன என்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கிறது. 

வலதுசாரிகளின் தாக்குதல்                   

           இந்தியாவில் 2014 மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகியுள்ள நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் புதிய அரசியல் நிலைமைகள் குறித்தும் தீர்மானம் கவனம் செலுத்தியுள்ளது. பாஜக பெரும்பான்மை பெற்று மோடி அரசாங்கம் அமைந்திருப்பது வலதுசாரித் தாக்குதலுக்கு வழிவகுத்துத்தந்துள்ளது. இத்தாக்குதல்கள் இரு விதங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உந்தித்தள்ளுவதில் காட்டும் வெறித்தனமான ஆர்வம். இரண்டாவது, இந்துத்வா மதவெறி சக்திகளின் பன்முகப்பட்ட நடவடிக்கைகள். 

நிச்சயமற்ற நிதி மூலதனம்                  

         இவ்வாறு இந்தியாவில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டிருப்பதற்கு சர்வதேச நிலைமையின் இரு அம்சங்கள் நேரடியான காரணிகளாக அமைந்திருக்கின்றன. 2008ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து எப்போது மீள்வோம் என்று தெரியாது நிச்சயமற்ற தன்மை தொடர்கிறது. இத்தகைய நிலைமையானது, சர்வதேச நிதி மூலதனத்தையும், ஏகாதிபத்தியத்தையும் உலக அளவில் நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் தீவிரமாக உந்தித்தள்ள இட்டுச்சென்றிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததன் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார நிலைமைகளிலிருந்து மீள்வதற்காக இந்திய ஆளும் வர்க்கங்களும் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றன. 

சீனாவுக்கு எதிரான அமெரிக்கத் திட்டம்                 

         சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஆசியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இத்தகைய அமெரிக்காவின் செயல்உத்தி நடவடிக்கைகளில், இந்தியா ஒரு கேந்திரமான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான கேந்திரக் கூட்டணி நடவடிக்கைகள் வலதுசாரிப்பக்கம் போவதற்கு ஒரு தூண்டுவிசையாக அமைந்திருக்கிறது.

அவசரச் சட்ட ஆட்சி                 
       
          மோடி அரசாங்கத்தின் கடந்த பத்து மாதகால ஆட்சி, பெருமுதலாளிகளின் கட்டளைக்கிணங்க நடந்துகொண்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்துவிட்டிருப்பது, நிலக்கரித்துறையை பொதுத்துறையிலிருந்து தனியாருக்கு மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திருப்பது, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்தி அதன் மூலம் அதிக நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்க முன்வந்திருப்பது - ஆகிய அனைத்தும் நவீன தாரளமயக் கொள்கைகளை முன்னிலும் வேகமாக எடுத்துச் செல்வதற்கான தெளிவான அறிகுறிகளாகும். அதேபோன்று நாட்டிலுள்ள ஒருசிலர் சுகபோகமாக வாழ்வதற்கு, நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய விதத்தில் சிக்கன நடவடிக்கைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற நவீன தாராளமயக் கொள்கையின்மீதும் மோடி அரசாங்கம் நம்பிக்கை வைத்திருக்கிறது. பொதுச்செலவினங்களைக் குறைத்திருப்பதும், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகத்துறைகளுக்கு அளித்துவந்த பட்ஜெட் ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்திருப்பதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நேரடித் தாக்குதலை விளைவிப்பவைகளாகும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது, குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் பாதியாக்கப்பட்டிருக்கின்றன. உணவுப் பாதுகாப்புச் சட்டம், வன உரிமைகள் சட்டம் போன்ற சில சட்டங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒருசில உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்திடவும் மோடிஅரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற அவசரச்சட்ட ஆட்சி, அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை நோக்கி விரைவாக சென்றுகொண்டிருப்பதை எடுத்துக் காட்டும் எச்சரிக்கை மணியாகும். 

அதிகரிக்கும் பதற்றம்              

        வலதுசாரித் தாக்குதலின் மற்றோர் அம்சம், இந்துத்வா திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக பல்வேறு வடிவங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவதாகும். பாஜக அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-சுடன் மிகவும் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு பிரிவினரும் மிகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்த நிலைமைகளில் மிகப் பெரிய அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளும் பசுவதை, ‘காதல் ஜிகாத்’ மற்றும் வங்கதேசத்தினர் ஊடுருவல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமைகளை அதிகரித்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அமெரிக்கக் கூட்டணி              

            அதிகார மையத்தின் வலதுசாரித் திருப்பம், மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறது. அணிசேராக் கொள்கையிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருப்பது, அயல்துறைக் கொள்கையில் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது 1990களின் ஆரம்பத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தொடங்கிய போதே ஆரம்பித்துவிட்டன. மோடி அரசாங்கம் அவற்றை முன்னிலும் வேகமாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடன் ஐமுகூ அரசாங்கம் கொண்டிருந்த கேந்திர கூட்டு உறவுகளை மோடி அரசாங்கம் மேலும் தீவிரமானமுறையில் மேற்கொண்டு வருகிறது. இந்திய - அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஆசியா - பசிபிக்மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் குறித்த ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இது, அமெரிக்கா ஆசியாவில் மேற்கொள்ளவிருக்கும் அடாவடி நடவடிக்கை களுக்கு இந்தியா பக்கபலமாக நிற்கும் என் பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் மோடி ஜப்பானுடனும், ஆஸ்திரேலியாவுடனும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கட்டியெழுப்பவும் கோரி இருக்கிறார். இவ்வாறு ஏற்படும் உறவுகளுடன், அமெரிக்காவின் அணுகுமுறையும் சேர்ந்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டணி அமைவதற்கு வழிவகுத்திருக்கிறது.

முறியடிப்பது எப்படி?            

           வரைவு தீர்மானத்தின் சாரம், இவ்வாறு தொடுக்கப்பட்டுள்ள வலதுசாரித் தாக்குதலை எப்படி முறியடிப்பது, அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி என்ன என்பவை களேயாகும். நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை உத்தி, மக்கள் திரளின் பல்வேறு பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மீது இயக்கங்களையும் வெகுஜனப் போராட்டங்களையும் கட்சியும், வெகுஜன அமைப்புகளும் வளர்த்திட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. எண்ணற்ற வெகுஜன அமைப்புகள், தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் இயக்கங்களையும், போராட்டங்களையும் வளர்த்தெடுப்பதற்கான திசைவழியை வரைவு தீர்மானம் அளித்திருக்கிறது. 

தத்துவார்த்தப் போராட்டம்                    

             வரைவு தீர்மானம், இந்துத்வா சக்திகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தை கூறுகிறது. மதவெறி சக்திகள், சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் மற்றும் கல்வி அமைப்புகள் என பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முன்வந்திருப்பதை முறியடிப்பதற்கான உத்திகளைத் துல்லியமான முறையில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் - நடைமுறை உத்திகளுக்கான ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி இருந்தது. இதன் அடிப்படையில், கட்சிக்கும், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கும் ஐந்து பரிந்துரைகளை வரைவு தீர்மானம் அமைத்துத் தந்திருக்கிறது. இவற்றில், மதவெறி சக்திகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் அறிவுஜீவிகள் மற்றும் கலாச்சாரப் பகுதியினரை ஒருங்கிணைத்தல், ஜனநாயக மதச்சார்பற்ற கல்வியைப் பாதுகாத்திட கல்வி முறையில் தலையிடல், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்குத் திட்டமிடல், குறிப்பாக தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ளுதல், மதவெறி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்படும் சாதிய மற்றும் மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராக கலாச்சார மற்றும் சமூக நடவடிக்கைகளை வளர்த்தெடுத்தல், நிறைவாக, பழங்குடியினர் பகுதிகளிலும் தலித்துகள் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கை களை எதிர்த்து முறியடிக்கக்கூடிய விதத்தில் அமைப்பை வளர்த்தெடுத்தல் ஆகியவையும் அடங்கும். 

பாஜக எதிர்ப்பே பிரதானம்                   

              பாஜக மற்றும் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதே பிரதானக்கடமை என அரசியல் நிலைப்பாடு வகுக்கப்பட்டிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும், மக்களின் வாழ் வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான போராட் டங்களுடன் ஒருங்கிணைப்பதுடன், மத வெறிக்கு எதிராகவும் மற்றும் பாஜக-ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கு எதிரான அரசியல்-தத்துவார்த்த போராட்டங்களையும் ஒருங்கிணைத்திடவும் அறைகூவி அழைக்கிறது.

காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும்                   

             பாஜகவிற்கு எதிராக போராட்டத்தின் பிரதான திசை வழி இருந்திடும் அதே சமயத்தில், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றி வந்த காங்கிரசை எதிர்ப்பதும் தொடரும். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளும் மற்றும் அதன் ஊழலும் தான் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது. எனவே, காங்கிரசுடன் எவ்விதமானப் புரிந்துணர்வோ அல்லது தேர்தல் கூட்டணியோ வைத்துக் கொள்வதை கட்சியின் அரசியல் நிலைப்பாடு நிராகரிக்கிறது.
இடதுசாரி ஜனநாயக மேடை                   
               அரசியல் நிலைப்பாடு ஒரு புதியதிசை வழியையும் தற்போது சேர்த்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பிராந்தியக் கட்சிகளின் தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதையும் வலியுறுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகளின் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் மற்றும் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்பதையும் அரசியல் நிலைப்பாடு உறுதிப்படுத்தி இருப்பதுடன்  அதன் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக மேடையைச் சுற்றி அணிதிரட்ட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது. இதுவரை கடைப்பிடித்து வந்த அரசியல் - நடைமுறை உத்தியை மறு ஆய்வு செய்ததன் வெளிப்பாடு இதுவாகும்.
சுயேச்சையான பலத்தைப் பெருக்குவோம்!                   
                  அரசியல் நிலைப்பாடு, கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருக்கிறது. கட்சியும், இடதுசாரி சக்திகளும் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய சூழ்நிலையில், கட்சியின் சுயேச்சையான வலுவைத் தக்கவைத்துக்கொண்டு மேலும் விரிவுபடுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட ஒன்றுபட்ட போராட்டங்களும் கூட்டு இயக்கங்களும் ஒரு முக்கியமான தேவையாகும்.
            மக்கள் பிரச்சனைகள், தேசிய இறையாண்மையைப் பாதுகாத்தல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட மேடைகளும், வெகுஜன இயக்கங்களும் இதர ஜனநாயக சக்திகளுடனும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடனும் நடத்தப்பட வேண்டும். வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் இவ்வாறு ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்துவதன் நோக்கமே, காங்கிரஸ், பாஜக மற்றும் இதர முதலாளித்துவக் கட்சிகளின் பின் உள்ள மக்களை கூட்டு இயக்கத்திற்குள் கொண்டுவர முயல்வதேயாகும்.

இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம்!                 
                இடது மற்றும் ஜனநாயக முன்னணியைப் படிப்படியாக அமைத்திடுவதை நிறைவேற்றுவதற்கு, இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிட வேண்டியது அவசியம். கட்சியின் தேர்தல் உத்திகள் கட்சியை வலுப்படுத்துவதற்கும், இடது மற்றும் ஜனநாயக சக்தி களை அணிதிரட்டுவதற்கும் உதவக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும். கட்சியின் சுயேச்சையான வலுவை அதிகரித்திட வேண்டும், விரிவாக்கிட வேண்டும், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும் மற்றும் இடதுசாரி மற்றும் ஜனநாயகக் கூட்டணியை அமைத்திட வேண்டும் என்பவைகளே அரசியல் நடைமுறை உத்தியின் ஆணி வேராக அமைந்திருக்கிறது.
உள்ளூர் பிரச்சனைகளில் போராடுவோம்!                

                  கட்சியை சுயேச்சையான முறையில் விரிவாக்கம் செய்வதற்கு வர்க்க மற்றும் வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஸ்தலப்பிரச்சனைகள் மீது தொடர்ந்து போராட்டங்கள் மேற்கொள்வது, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடனான இணைப்புச் சங்கிலியாக அமையும்! கட்சி சமூகப் பிரச்சனைகள் மீதும் நேரடியாகத் தலையிட்டு, போராட்டங்களைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவோம்!             
             கட்சியின் சுயேச்சையான வலுவை விரிவுபடுத்துவது என்பது, மேற்கு வங்கத்திலும் வெகுஜன ஆதரவு தளத்திலும் அரிப்புஏற்பட்டிருப்பதை சரி செய்து முன்னேறு வது என்றும் பொருளாகும். கட்சி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், திரிணாமுல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்திலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை முறித்துக்கொண்டு முன்னேறவும், மக்களின்வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளின் மீது மக்களைத் திரட்டிடவும், மதவெறியர்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை முறியடித்து முன்னேறவும் வேண்டியிருக்கிறது.
              கேரளாவிலும் கட்சி தன் ஆதரவு தளத்தை கெட்டிப்படுத்துவதுடன், இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்திடவும் வேண்டியிருக்கிறது. திரிபுராவில், கட்சி தன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நற்பணிகள் அங்கே கட்சியின் செல்வாக்கு விரிவடைவதற்கு உதவி இருக்கிறது. இந்த செல்வாக்கை மேலும் கெட்டிப்படுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களிலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாத்திடவும் மிகவும் விழிப்புடன் இருந்திட வேண்டும்.
அனைத்து இடதுசாரிகளையும் ஒருங்கிணைப்போம்!               
            இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது என்பதும் வரைவு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றுமொரு பணியாகும். இதற்கு அனைத்து இடதுசாரிக் கட்சிகளையும், குழுக்களையும் மற்றும் தனிநபர்களையும் ஒரு பொதுவான இடதுசாரி மேடைக்குக் கொண்டுவந்து, அதனை விரிவுபடுத்துவதும் அவசியமாகும். தற்சமயம், ஆறு இடதுசாரிக்கட்சிகள் கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைந்திருக்கின்றன. இதனை மேலும் விரிவான இடதுசாரி மேடையைக் கட்டக்கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தேவை. 

தமிழில் : ச. வீரமணி

நன்றி : தீக்கதிர்