புதன், 29 பிப்ரவரி, 2012

இது மன்மோகன் சிங்குக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி...!

            
 எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை... செய்கின்றோம்... 
               
              நவீன தாராளமயக் கொள்கைகளை மேலும் மேலும் தீவிரமாக அமலாக்கி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 2  அரசுக்கு, நேற்று பிப்ரவரி 28 - ஆம்  தேதி வரலாறு காணாத வேலை நிறுத்தத்தின் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சி வேறுபாடின்றி, சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இந்த மகத்தான வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர்.
               அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் 10 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றனர். ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, தொமுச, சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும் பல்வேறு மாநிலங்களில் இயங்கும் பிராந்திய தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தின.
              தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக உலகெங்கிலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் உச்சத்தை எட்டிவரும் நிலையில், இந்தியாவிலும் வரலாற்றில் முதல்முறையாக அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு நின்று, தொழிலாளர் உரிமைகளுக்காக உரத்து முழக்கமிட்டுள்ளன.
               இந்திய பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக நிலக்கரி, இரும்பு, பெட்ரோலியம், தொலைதொடர்பு, பாதுகாப்பு, வங்கிகள், இன்சூரன்ஸ், மின்சாரம், போக்குவரத்து, துறைமுகம், ஏற்றுமதி-இறக்குமதி, அங்கன்வாடி, கட்டு மானம், செங்கல் சூளைகள், பீடித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான துறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் என 10 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் இந்த மகத்தான வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்துள்ளனர்.
                இந்த மகத்தான வேலைநிறுத்தப் போராட்டம் விலைவாசி உயர்வை கண்டித்தும், பொதுவினியோக முறையை விரிவுப்படுத்தவும், தொழிலாளர் சட்டங்களை கறாராக அமலாக்கவும், முறைசாரா தொழிலாளருக்கான சமூக பாதுகாப்புக்கான நிதியம் உருவாக்கவும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என தீர்மானிக்கவும், புதிய பென்சன் திட்டத்தை கைவிடவும், போனஸ், பணிக் கொடை போன்ற பணப்பயன்களுக்கான வருமான வரம்புகளை நீக்கவும், உலகதொழிலாளர் ஸ்தாபனத்தின் இணக்க விதிகளான தொழிற்சங்க உரிமை, கூட்டுபேர உரிமையை நிலைநிறுத்தவும் வலியுறுத்தி முழக்கமிட்டது.
              இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான பொது வேலைநிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய வரலாற்றில் இத்தனை பெரும் பொது வேலைநிறுத்தம் இதுகாறும் நடந்ததில்லை. இன்னும் குறிப்பாக ஆளும் கட்சி தொழிற்சங்கமும், பிரதான எதிர்க்கட்சியின் தொழிற்சங்கமும், இடதுசாரி தொழிற்சங்கங்களும், பிராந்திய முதலாளித்துவக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும் ஒரே குரலில், முதல்முறையாக பொது வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளன என்பதை பார்க்கும் போது இந்த அரசின் மக்கள் விரோத - தேச விரோத போக்கு என்பது மக்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது - வாட்டியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 

திங்கள், 27 பிப்ரவரி, 2012

அப்படியே வீட்டுக்கொரு மண்ணெண்ணெய் விளக்கையும் கொடுத்துடுங்க...!

             கடந்த ஏழு மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தான் ஆட்சி வந்தால் தமிழகம் மின்வெட்டுகள் இல்லாத மாநிலமாக பிரகாசிக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியிலும் முன்னைவிட கடுமையான அளவில் மின்வெட்டுகள் அமல்படுத்தப்பட்டு தமிழகம் மிக மோசமான நிலையில் இருண்டு கிடக்கிறது. 
                எதிர்காலத்தில் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் ''இருண்ட காலம்'' என்று தமிழ்நாடு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்துகொண்டு தான் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். முன்பெல்லாம் மொழிப் பிரச்சனை, நதி நீர் பிரச்சனை என போய் இப்போது மின்வெட்டுப் பிரச்சனையை  கையிலேடுத்துக்கொண்டுள்ளன. கொஞ்ச காலத்துக்கு இப்படியே ஓடும். மக்களுக்கு பழகிவிடும். பிறகு மறந்துவிடுவார்கள். அதற்குள் இந்த திராவிட கட்சிகள் வேறு பிரச்சனையை கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களை ஏதாவது ஒரு பிரச்சனையில் மூழ்கடித்து நிம்மதியை குலைத்தால் தான் இவர்கள் நிம்மதியாக மாறி மாறி ஆட்சி செய்யமுடியும்.
                    சமீபத்தில் தான் தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை காரணமாக, மின் விநியோகக் கட்டுப்பாட்டு முறைகளை தமிழக அரசும், மின்சார வாரியமும்  அறிவித்தன.   அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று  திங்கள்கிழமை முதல் மின்வெட்டு நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 4 மணி நேரம் மின்வெட்டு நேரமாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பு கூறுகின்றது. 
                  இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நெருங்கிவிட்ட சூழ்நிலையில், மின்வெட்டால்  மாணவ - மாணவியர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக,  மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
                   இந்த ஜெனரேட்டர்களை அரசே வாடகைக்குப் பெற்று வழங்கும் என்றும், அதை இயக்குவதற்கான டீசல் உள்ளிட்ட அனைத்துச் செலவைகளையும் அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
            இந்த தொடர் மின்வெட்டினால் வீட்டிலிருக்கும் போது படிக்கமுடியாமல் இந்த மாணவ - மாணவியர் கஷ்டப்படுவது முதல்வருக்கு தெரியாதா...? அந்த நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு எப்படி உதவுவார்...? இன்றைய இந்த பள்ளிப் பிள்ளைகள் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாராளுமன்றத்தேர்தலிலும், நான்கரை ஆண்டுகள் கழித்து வரப்போகும் தமிழக சட்டமன்றத்தேர்தலிலும் வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை இந்த இரு திராவிடக்கட்சிகளும் மறந்துவிடக்கூடாது.  

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

மக்களுக்கான மருத்துவ சேவையை கை கழுவுகின்றன மத்திய - மாநில அரசுகள்...!

                    புதுடெல்லியில் தேசிய போலியோ தடுப்பு சம்பந்தமான இரண்டு நாள்  கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உட்பட மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 
            கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய மன்மோகன் சிங், பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள் நோயாளிகளுக்கு காப்பீடு திட்டத்தையும், வெளி நோயாளிகளாக வருவோருக்கு இலவச மருத்துவம் அளிக்கும் வகையிலும் நமது பொது மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். 
             மருந்து மற்றும் மருத்துவ செலவுகளெல்லாம் உயர்ந்துகொண்டே போகிறதாம். இது ஏழைகளை பாதிக்கிறதாம். புள்ளிவிபரங்கள் எல்லாம் எடுத்து சொல்லி, வரும் 12 - வது ஐந்தாண்டு திட்டத்தில்   கல்வி மற்றும்  சுகாதாரத் துறைகளில் தனி கவனம் செலுத்தப்படும் என்று மிகுந்த அக்கறையோடு பேசியிருக்கிறார். ஆண்டின் மொத்த வருமானத்தில் சுகாதாரத் துறைக்கு செலவிடும் தொகையை 2.5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
             இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்... ஏழை - எளிய மக்கள் இனிமேல் வெளி நோயாளிகள் பிரிவில் இலவசமாக மருத்துவம் பெற்றுக்கொள்ளலாமாம். அனால், உள் நோயாளிகளுக்கு மட்டும் இலவச மருத்துவம் மற்றும் சிகிச்சை கிடையாது. அதற்காக அவர்களுக்கு  இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அளித்து எதிர்காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் உள் நோயாளியாக தனியார் மருத்துவமனைக்கு கட்டயாமாக அனுப்பப்படுவர்.
                இதிலிருந்து மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் உள்நோக்கம் என்னவென்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இது வரை அரைகுறையாவது அரசு செய்துவந்த மருத்துவ சேவை என்ற அரசின் கடமையை தனியாருக்கு கைமாற்றும் வேலை தான் இது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 
                 தன் மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளை செய்து தரவேண்டிய அரசாங்கம், அவைகள் அனைத்தையும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கும் வேலையை கூசாமல் செய்துவருகிறது.
                கொஞ்சமாகவாவது, தன் கையில் வைத்திருந்த மருத்துவ சேவையை வெளி நோயாளி - உள் நோயாளி என இரண்டாக பிரித்து, வெளிநோயாளிகளுக்கு அரசே இலவசமாய் மருத்துவம் கொடுக்கும் எனவும், உள் நோயாளிகள் என்றால் அவர்களை தனியார் பார்த்துக் கொள்வார்கள்  என்றால் இதையெல்லாம் செய்யாமல் ஒரு அரசு எதற்கு...?
உள் நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு என்பது தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொள்வதற்கான ஒரு ஏற்பாடேயாகும். இதை மத்திய - மாநில அரசுகளே செய்கிறது என்பது தான் மகா கேவலமான விஷயமாகும்.
             அப்படியென்றால் யாருக்காக இந்த அரசுகள் செயல்படுகின்றன...? என்பது தான் நமது கேள்வி.... மக்களுக்காகவா...? தனியார் முதலாளிகளுக்காகவா..?

சனி, 25 பிப்ரவரி, 2012

வங்கியில் இலட்சங்களை கொள்ளையடித்தால் என்கவுண்டர் - கோடிகளை கொள்ளையடிக்க அரசே அனுமதி..!

              பல்வேறு நிர்வாக கோளாறு காரணமாக நஷ்டத்தில் தள்ளாடும்  விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் எவ்வளவோ முயற்சிகளை செய்தார். பெருமுதலாளிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தாங்கமாட்டார்கள் என்று கண்ணீர் வடித்தார். விஜய் மல்லையா யார்...? என்று கேட்டால், இந்திய இளைஞர்களை வேறு சிந்தனைகள் எதுவுமில்லாமல் தன்னிலை மறந்து மயங்கச் செய்யும் மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சாராய வியாபாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அடுத்து அழகிய உள்நாட்டு - வெளிநாட்டு மாடல் அழகிகளை  தனி விமானத்தில் தன்னோடு அழைத்துக்கொண்டு ''ஊதாரி செலவுகளை'' செய்து உலகம் சுற்றும் ''ஊதாரி வாலிபன்'' 
            இது போன்ற ஊதாரி செலவுகளினால், இவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக‌வே கிங் பிஷர் விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல விமானங்கள் ரத்து செய்தது என்பதும் பத்திரிகைகளில் வந்த செய்தியாகும். 
             இப்படிப்பட்ட சூழலில் தனக்கு நிதியுதவி செய்யும்படி மத்திய அரசிடம் நேரடியாகவே கோரிக்கையை வைத்தார். அப்போது தான் பிரதமர் மேலே சொன்னது போல் வாய் மலர்ந்து கண்ணீர் விட்டார். ஒரு சமயத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல். ஐ. சி - யிடம் கூட  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யும்படி கேட்கப்பட்டதாகவும், எல்.ஐ.சி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
               இந்த சூழ்நிலையில்,  கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, நஷ்டத்தை ஈடுசெய்ய அரசுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி  ரூ.1200 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இதேப்போல மற்றொரு அரசுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரூ.160 முதல் 200 கோடி வரை நிதியுதவி அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது என்பது யாரும் எதிர்பாராதது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு பாரத ஸ்டேட் வங்கி  மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரண்டி வங்கிகளும்  உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும்  தெரிகிறது.
                  நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய கொள்ளையாகும். ஏற்கனவே விஜய் மல்லையா உட்பட பல பெருமுதலாளிகளும், அரசியல்வாதிகளும் அரசுத்துறை வங்கிகளிடம் வாங்கிய மொத்த கடன் தொகையான ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கும் மேலான கடன்கள் வங்கியிடம் திரும்பக் கட்டப்படாமல், அந்தத் தொகையும் அதோடு  அதன் வட்டியும் சேர்ந்து இரண்டு இலட்சத்திற்கும் மேலான தொகைகளை, நாமெல்லாம் சொல்லுவோமே ''காந்தி கணக்கு'' - அதில் சேர்க்கப்பட்டு அதற்கு மத்திய அரசாங்கத்தாலேயே ''வராக்கடன்'' என்ற பெயரும் சூட்டபட்டிருக்கும் சூழ்நிலையில், மேலும் மேலும் இப்படிப்பட்ட பெருமுதலாளிகளுக்கு நிதியுதவி அளிப்பது என்பது மத்திய அரசே அனுமதிக்கும் ''பகல் கொள்ளை''யாகும். 
              வேலையின்மை காரணமாக வங்கிகளில் கொள்ளையடித்தால் என்கவுண்டர் கொலை தான் தண்டனை என்று சொல்லுகிறது காவல்துறை. அரசின் அனுமதி பெற்று விஜய் மல்லையா போன்ற பெருமுதலாளிகள் செய்யும் கொள்ளைக்கு என்ன தண்டனை...?

என்கவுண்டர் என்பதும் கொடூரமான கொலையே - காவல் துறையே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது நியாயம் தான...?

              நேற்று முன்தினம் விடியற்காலை செய்தியைப் பார்த்தவுடன் ஒரே அதிர்ச்சியாக இருந்தது. தமிழக காவல்துறையின் வீர தீர செயலை பார்த்து தமிழகமே அதிர்ந்து போனது. இவர்கள் காக்கிச்சட்டையை அணிந்துகொண்டால், இரக்கம், கருணை இவைகளையெல்லாம் கழட்டி எறிந்துவிடுவார்களோ...? அதனால் தான் இந்த காக்கிச்சட்டைக்குள் எப்போதும் ஓர் இரத்த வெறி பிடித்த மிருகம் ஒளிந்துகொண்டே இருக்கிறது. அதனால் தான் தமிழக காவல்துறையில் விசாரணைக் கைதிகள் கொலை, அமைதியான போராட்டத்தில் துப்பாக்கி சூடு, என்கவுண்டர் கொலை, காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் போன்ற விரும்பத்தகாத நிகழ்ச்சிகளெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல் துறை மற்றும் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை,  திமுக ஆட்சி என்றாலும்,  அதிமுக ஆட்சி என்றாலும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.
                 அண்மையில் சென்னையில் நிகழ்த்தப்பட்ட இரண்டு வங்கி கொள்ளைகளை ஒட்டி யாரோ கொடுத்த தகவலின் பேரில், சென்னை வேளச்சேரி பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களை தமிழக காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது. அப்படியே காவல்துறையினர் சந்தேகிப்பது போல் அவர்கள் தவறிழைத்தவர்களாக கருதப்பட்டாலும், அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படாமல், காவல் துறையினரே சட்டத்தை எடுத்துக்கொண்டு சுட்டுக்கொன்றது என்பது மனிதகுலத்தை நேசிக்கும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
               அவர்கள் தான் குற்றவாளிகள் என்று காவல்துறையினர் உறுதியாக நினைத்திருந்தால், அவர்களை உயிரோடு பிடித்து கொள்ளை சம்பத்தப்பட்ட மற்ற தகவல்களையும் பெற்றிருக்கலாமே...? அப்படியென்றால் வேண்டாத விஷயம் வெளியே வராமலிருக்க அந்த ஐந்து பேரையும் கொன்று அவர்கள் வாயை மூடிவிட்டார்களோ... அல்லது
நாளுக்கொரு கொலை - கொள்ளைகள் என நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தை பார்த்து வாய் பிளந்து கிடக்கும் தமிழக மக்களின் வாயை  மூடுவதற்காக இந்த என்கவுண்டர் இரவில் நிகழ்த்தப்பட்டதோ..... என்ற சந்தேகம் தமிழக மக்களை தொற்றிக்கொண்டுள்ளது.
             வங்கியிலிருந்து சில  இலட்சங்களையே கொள்ளையடித்த இந்த ஐந்து இளைஞர்களை நோக்கிப் பாய்ந்த தமிழக காவல்துறையின் துப்பாக்கி குண்டு,  அரசு கஜானாவிலிருந்து - மக்கள் பணத்திலிருந்து பல இலட்சம் கோடிகளை கொள்ளையடிக்கும்  அதிகாரவர்க்கத்தை நோக்கிப் பாயுமா...?  மாறாக துப்பாக்கிகளை போட்டுவிட்டு வெட்கமில்லாமல் அவர்களுக்கு சல்யூட் அடிக்கும்.
            இனியாவது, மத்திய - மாநில அரசுகள் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், அதற்கேற்ற வருமானத்தையும் கொடுக்கட்டும். அப்போது தான் இது போன்ற கொள்ளைகளை தடுக்கமுடியும். இல்லையென்றால் வங்கிகளிலும், நகைக்கடைகளிலும், கோயில்களிலும் நடைபெறும் நிறுத்தமுடியாது. இது போன்ற  காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளால் கூட  இந்த வகையான கொள்ளைகளை தடுக்கமுடியாது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரினாமூல் காங்கிரஸ் கொலை வெறியாட்டம்


உன் உதிரம் தந்து 
செங்கொடி  காத்து 
நீ... 
மண்ணில் வீழ்ந்தாயே ...
தோழா... 




                 நேற்று மேற்குவங்க மாநில பர்துவான் நகரின் தேவான்டிகி பகுதியில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிரதீப் தா மற்றும்  கமல் கயேம் ஆகிய இருவரையும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் படுகொலை செய்தனர் என்கிற  செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. மிகுந்த கண்டனத்திற்குரியது. தோழர் பிரதீப் தா, சட்டமன்றத்தில் பர்துவான் (வடக்கு) தொகுதியைப் பிரதிநிதிதத்துவப்  படுத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
              மத்திய தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ள பிப்ரவரி 28 வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்றைய தினம்  நடந்த ஊர்வலத்திற்கு இந்த இரண்டு தலைவர்களும் தலைமை தாங்கிச் சென்றபோது இந்த கொடூரமான கொலைகள் நடத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமானது மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமானது.
                மேற்கு வாங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததிலிருந்து  இடதுசாரி தலைவர்கள், ஊழியர்கள் என திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் அல்லது  கொலை செய்யப்படுகிறார்கள் என்பது மம்தா பானர்ஜியின் இரக்கமற்ற ஈனச்செயலைத் தான் காட்டுகிறது. அந்த மாநிலத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை என்பது, இந்த இரு தலைவர்களையும் சேர்த்து  58 ஆக உயர்ந்திருப்பது என்பது மம்தாவின் ஆட்சியின் இலட்சணத்தைத் தான் காட்டுகிறது.
                மத்திய தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று வெற்றிகரமாக நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                இத்தகைய வன்முறை அரசியலையும் பயங்கரவாத அரசியலையும் எதிர்த்து நாடுமுழுவதும் உள்ள நல்லவர்கள் - நல்லிதயம் படைத்தவர்கள் ஓர் அணியில் அணி திரளவேண்டும்.

சி.பி.எம் மாநில மாநாடு - எழுச்சியுடன் துவங்கியது...சிறப்பு மலர் - 3

           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் பேரெழுச்சியுடன் புதனன்று துவங்கியது. உழைக்கும் மக்களின் உரிமைக்குரலாய் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டின் முதல் நிகழ்வான ஜோதி பெறும் நிகழ்ச்சி அபிராமி திரை யரங்கு அருகில் நடைபெற் றது. இசை நிகழ்வோடு துவங்கிய மாநாடு வங்கி ஊழியர் அமைப்பின் பீட் சேர்ந்திசைக்குழுவின் இசைநிகழ்வுடன் மாநாடு இனிதே துவங்கியது. இராஜராஜேஸ்வரியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தியாகி மணவாளன் எழுதிய “விடு தலைப்போரில் வீழ்ந்த மலரே“ என்ற பாடல் இசைக்கப்பட்ட போது நிலவிய அசாத்தியமௌனம் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியது. இராஜராஜேஸ்வரிக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான  தோழர். பிருந்தா காரத் பொன்னாடை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தார்.
                 கொடி, ஜோதிக்கு வரவேற்பு மதுரை வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக் கொடியைக் குழுத்தலைவர் தோழர். என்.நன்மாறனிடமிருந்து, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். என்.வரதராஜன் பெற்றுக்கொண்டார். வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகள் நாங்கள் என உலகிற்கு எடுத்துக்காட்டிய வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதியை குழுத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். வி.தம்புசாமியிடமிருந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர். கோ.வீரய்யன் பெற்றுக்கொண்டார். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கானப் போராட்டத்திற்காக தூக்குமேடை ஏறிய சின்னியம்பாளையம் தியாகிகளின் ஜோதியை குழுத்தலைவர் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். சி.பத்மநாபனிடமிருந்து, சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத்தலைவருமான தோழர். என். சங்கரய்யா பெற்றுக்கொண் டார். 1948 ஆம் ஆண்டு சேலம் சிறையில் 22 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீரத்தியாகிகளின் ஜோதியை குழுத் தலைவர் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். ஜி.ஆனந்தனிடமிருந்து முதுபெரும் தலைவர் தோழர். ஏ. அப்துல்வஹாப் பெற்றுக் கொண்டார்.
                    மாநாட்டுக் கொடியை எழுச்சிமிகு முழக்கத்திற்கு மத்தியில், கட்சியின் முதுபெரும் தலைவரும், மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர்.உமாநாத் ஏற்றிவைத்தார். தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட ஜோதிகளை ஏ.வி.முருகய்யன், வி.மாரிமுத்து, நாகைமாலி எம்.எல்.ஏ ஆகியோர் மாநாடு நடைபெறும் தோழர் ஜோதிபாசு அரங்கிற்கு எடுத்து வந்தனர்.
               பொதுமாநாடு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு கட்சியின் அகில இந்தியத்தலைவர்களும், மாநிலத்தலைவர்களும், மாநாட்டுப்பிரதிநிதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் பொது மாநாடு துவங்கியது.
                       இம்மாநாட்டிற்கு பெ.சண்முகம், கே.காமராஜ், மூசா, எஸ்.கே.பொன்னுத்தாய், ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமைக்குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈந்து கட்சியைக் காத்த மாவீரர்களுக்கும், காலமான முதுபெரும் தலைவர்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
               மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் வி.மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ்காரத் மாநாட்டினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவருடைய ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர். உ.வாசுகி தமிழில் மொழியாக்கம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

பிரதிநிதிகள் மாநாடு
        பொதுமாநாட்டினைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் பின் பிரதிநிதிகள் விவாதம் துவங்கியது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை, கே.வரதராசன், பிருந்தாகாரத், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஏ.கே.பத்மநாபன், சுதாசுந்தரராமன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி வரை நடை பெறுகிறது.

புதன், 22 பிப்ரவரி, 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது அவசியம் - தோழர் பிரகாஷ் காரத்

சிறப்பு மலர் - 2                

              இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 - வது தமிழ் மாநில மாநில மாநாடு நாகப்பட்டினம் வெண்மணி நகரில் எழுச்சியுடன் துவங்கியது. கட்சியின் மூத்தத் தோழரும் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர். ஆர். உமாநாத் அவர்கள் கட்சித் தோழர்களின் விண்ணைப் பிளக்கும் வாழ்த்து முழக்கங்களுக்கிடையில் செங்கொடியை ஏற்றிவைத்தார். கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் மாநாட்டினை துவக்கிவைத்து எழுச்சியுரையாற்றினார்.
           மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது என்பது இன்றைக்கு அவசியமான ஒன்றாகும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பின்பற்றும் புதிய தாராளமயக் கொள்கையினால் நாட்டில் உண்டான துயரங்களையும், மாபெரும் ஊழல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக கட்சியை கட்டவேண்டும் என்று தோழர். பிரகாஷ் காரத் தனது துவக்கவுரையில் கட்சித் தோழர்களை கேட்டுக்கொண்டார். 
                 அவர் மேலும் பேசுகையில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் அடிப்படையில் ஒரே மாதிரியான கட்சிகளே. ஊழலை பொறுத்தவரையில் இரண்டும் ஒத்தக்கட்சிகளே என்று கூறினார். 
             மார்க்சிஸ்ட் கட்சியினால் மட்டுமே ஊழல் அற்ற ஆட்சியை அளிக்க முடியும். மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். 
               முன்னதாக கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தோழர். கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். மேலும் மாநாட்டில் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கே. வரதராஜன், பிருந்தா காரத், எஸ். ராமச்சந்திரன், பி. வி. ராகவுலு போன்ற தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.     

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

தியாகபூமி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு - சிறப்பு மலர் -1

மாநாடு எதிர்கால தமிழகத்திற்கு வழி காட்டட்டும் - ஒளி ஏற்றட்டும்
          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20 - வது மாநாடு நாகப்பட்டினத்தில் வெண்மணி நகர், தோழர் ஜோதிபாசு அரங்கத் தில் (லலிதா மகால்) பிப்ரவரி 22 புதன்கிழமை கோலாகலமாகத் துவங்குகிறது. மகத்தான இந்த மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை 4 நாட்கள் உற்சாகப் பேரெழுச்சியோடு நடைபெறுகிறது. பிப்ரவரி – 25 பிற்பகல் 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடை பெறுகின்றன.

கொடியேற்றம் - – சேர்ந்திசை
            பிப்ரவரி 22 காலை 9 மணிக்கு, நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன்பு, 20வது மாநாட்டைக் குறிக்கும் வண்ணம் 20 செங்கொடிகளைத் தலைவர்கள் ஏற்றுகிறார்கள். அப்போது சென்னை ‘பீட்’ இசைக்குழுவினரின் சேர்ந்திசைப் பாடல்கள் எழுச்சியுடன் ஒலிக்கும்.

பொது மாநாடு

                    தொடர்ந்து தோழர் ஜோதி பாசு அரங்கத்தில் (லலிதா மகாலில்) பொது மாநாடு துவங்குகிறது. தோழர் லீலாவதி நினைவுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக்கொள்கிறார். வெண்மணி தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் பெறுகிறார். சேலம் சிறைத் தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் பெறுகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமைக்குழு தேர்வு நடை பெறுகிறது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அஞ்சலி தீர்மானம் முன்மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

                சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் நூல் வெளியிடுகிறார். தொடர்ந்து மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரதிநிதிகள் மாநாடு

                                    அன்று மதியம், 12 மணிக்கு மாநாட்டுக்குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

              இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22 மாலை 5 மணி முதல் பிப் ரவரி 25 பிற்பகல் 2 மணி வரை பிரதிநிதிகள் விவாதம் – நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் தொகுப்புரை வழங்குகிறார். பின்னர் புதிய மாநிலக்குழுத் தேர்வும், – அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வும் நடை பெறுகின்றன.

          பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நிறைவுரை ஆற்றுகிறார்.
        வரவேற்புக்குழுச் செயலாளரும் நாகை மாவட்டச் செயலாளருமான ஏ.வி.முருகையன் நன்றியுரை ஆற்றுகிறார்.

பிரம்மாண்டப் பேரணி
              மாநாட்டில் நிறைவாக 5000 செந்தொண்டர்கள், அகில இந்திய - மாநிலத் தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், இயக்கத் தோழர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணி பிப்ரவரி 25 பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் அண்ணா சிலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் புறப்படுகிறது.

மாபெரும் பொதுக்கூட்டம்

             அன்று மாலை 5 மணிக்கு பி.சீனிவாசராவ் திடலில் (வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடல்) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

            பொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை ஏற்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றுகிறார். மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம். எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் எழுச்சியுரை ஆற்றுகிறார்கள்.

             மாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளர் நாகைமாலி எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்று கிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ராஜீவ் காந்தி கொலையில் மறைந்திருக்கும் மர்மங்கள் நீண்டுகொண்டே போகிறது...!

         கடந்த இரண்டு நாட்களாக ஒரு செய்தி ஊடகங்களில் பெரிது படுத்தப்படாமல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின்  ஏற்பாட்டில் தான் ராஜீவ்காந்தி கொலை நடந்தது என்று இலங்கை நாட்டின் வீட்டு அமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச் பேசியிருப்பதை எந்தப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அல்லது இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று அலட்சியமாக விட்டுவிட்டனவா என்று தெரியவில்லை. 
               ராஜீவ் காந்தியின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் நீடித்துக்கொண்டே தான் போகிறது. கொலையில் தொடர்புடைய பலபேர் இன்னும் வெளியே நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 
                நேற்று முன் தினம்,  இந்திரா காந்தி குடும்பத்தினர் இருக்கும்போது தெற்காசியாவில் அமெரிக்கா பொருளாதாரா ரீதியாக செயற்பட முடியாது என்ற எண்ணத்தில், அமெரிக்க உளவு துறையான சி. ஐ. ஏ - வின்   திட்டத்தின்படியும், ஏற்பாட்டின்படியும்  ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இல்லை என்றாலும்  ராஜீவ் கொலை சம்பந்தமான விசாரணை முடிவில் இந்த செய்தி ஏன் சொல்லப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.    
                    ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகள் - விசாரனைகளின் முடிவுகள் முழுமையானது அல்ல என்பதும், பல பேர்களை காப்பாற்றவும், திருப்திப்படுத்தவுமே வழக்குகளும், விசாரணைகளும், அதன் முடிவுகளும் என்பது இந்த நாடு அறிந்ததே. 
                அமெரிக்க சி. ஐ. ஏ  தான் ராஜீவ் கொலையில் மூளையாக இயங்கியிருக்கிறது என்பதும், மற்றவர்கள் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 
              ராஜீவ் காந்தியின் மீது   அமெரிக்கா எரிச்சல் அடைந்ததற்கான காரணங்களில் ஒன்று தான் இலங்கை அமைச்சர் சொன்ன தகவல். இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. 
         கடந்த 1990  -  91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வளைகுடா போரில் எண்ணெய் நாடான குவைத்துக்காக அமெரிக்கா இராக்குடன் போர் செய்த போது, அமெரிக்காவின் போர் விமானத்திற்கு இந்தியாவில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது இந்தியாவில் மிக குறுகிய காலமே பிரதமராக இருந்த எஸ். சந்திரசேகர் தான் அந்த எரிபொருளை நிரப்புவதற்கு அனுமதி அளித்தார். இந்த ஈனச்செயலை இடதுசாரி கட்சிகள் மிகக் கடுமையாக கண்டித்தன. அதேப்போல் எரிபொருள் நிரப்பிய இச்செயலை ராஜீவ் காந்தியும் எதிர்த்தார். இதனால் ராஜீவ் காந்தியின் மீது அமெரிக்கா எரிச்சலும் கோபமும் அடைந்தது.
                 அது மட்டுமல்ல, 80 - களில் இந்தியாவினுள்  அமெரிக்காவின் ராட்சசக் குழந்தைகளான புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயம், உலகமயம், தனியார்மயம் நுழைந்த காலக்கட்டம் என்பது, இந்திர காந்தியின் மறைவுக்குப்பின் ராஜீவ் காந்தி பிரதமராக ஆட்சி செய்த காலக்கட்டமாகும். அவைகளில், தனக்கு சாதகமான புதிய  பொருளாதாரக் கொள்கை, இறக்குமதி போன்றவற்றில் தாராளமயம் போன்றவற்றை ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டாலும், இன்சூரன்ஸ் - வங்கித்துறைகளில்  திணிக்கப்பட்ட தனியார்மயத்தில் மட்டும்  அவர் ஆர்வம் காட்டவில்லை. இன்சூரன்ஸ் துறை அவரது தாத்தாவால் தேசவுடமை செய்யப்பட்டது. வங்கித்துறை அவரது அம்மாவால் தேசவுடைமை செய்யப்பட்டது போன்றவைகள் தான் அதற்கு  காரணமாக சொல்லப்பட்டது. இதுவும் அமெரிக்காவிற்கு ராஜீவ் காந்தியின் மீது எரிச்சலை ஊட்டியது.
              அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை என்றால், அமெரிக்கக் கட்டளைக்கு பணிந்து நடக்கவில்லை என்றால் அவர்களை தீர்த்துக்கட்டும் வேலையில் தான் அமெரிக்கா ஈடுபடும் என்பது தான் கடந்த கால வரலாறு. 
           விடுதலைப்புலிகளை பயன்படுத்தி ராவீவை கொன்றது போல், தாலிபான்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் இடதுசாரி அதிபர்  டாக்டர். முகமது நஜிபுல்லாவை கொன்றதும்,
                கடலுக்கடியிலும், பூமிக்கடியிலும், ஆகாயத்திலும் அணுகுண்டு சோதனைகளை இனி அமெரிக்கா நடத்தக்கூடாதென்று, அதன் ஜனாதிபதி ஜான் கென்னடி தடை செய்த போது, அவரை ஒரு தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி தன் சொந்த ஜனாதிபதியையே சுட்டுக் கொன்றதும், 
             தனக்கு அடங்கி நடக்காத இராக் நாட்டின் அதிபர் சதாம் ஹுசைனை தூக்கிலிட்டுக்  கொன்றதும், 
             மாற்றத்தை விரும்பி போராடிய லிபிய மக்களின் எழுச்சியை தனக்கு சாதகமாக மாற்றுவதற்கும், மக்கள் விரும்பிய மாற்றம் திசைத்திருப்புவதற்கும் அந்த நாட்டின் அதிபர் கடாபியை சித்திரவதை செய்து கொன்றதும், 
                இஸ்ரேலுடனான தனது உறவை பலப்படுத்திக்கொள்ள,     மறைந்த பாலஸ்தீனத்தலைவர் யாசர் அராபத்தை கொள்வதற்கு பல முறை முயற்சி செய்ததும்,
            தனக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் கியூபா நாட்டின் புரட்சித்தலைவர் பிடல் காஸ்ட்ரோவை இதுவரை 600 - க்கும் மேற்பட்ட தடவைகள் கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்ததும்,
             இரத்தவெறி பிடித்த அமெரிக்கா தான் என்பதை யாராலும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. இது தான் அமெரிக்காவின் இயற்கையான குணம். இது தான் அமெரிக்காவின் 500 ஆண்டுகால இரத்தக்கறை படிந்த வரலாறாகும். மேலே சொன்ன அத்தனை சம்பவங்களும், உலக நாடுகளுக்கெல்லாம் பாதுகாவலனாக விளங்கிய - உலக அமைதிக்கு வழிகாட்டியாக விளங்கிய சோவியத் யூனியன் உடைந்து போன பின் நடந்த சம்பவங்களாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சோவியத் இல்லாததன் பலனை இன்று உலகம் அனுபவிக்கிறது.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்துகிறது அமெரிக்கா...!

                   அமெரிக்கா எப்போதுமே ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து சீரழிக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், அந்த போருக்கான நியாயத்தை உலக மக்கள் நம்பும்படியான வேலைகளில் இறங்கிவிடும். அதை பரப்புவதற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் துணையாக நிற்கும். 
          இப்படியாகத் தான், உலக அளவில் தீவிரவாதத்தை பரப்பும் பின்லேடனை பிடிக்கப்போகிறேன் என்கிற காரணத்தைக் காட்டித்தான் ஆப்கானிஸ்தான் உள்ளே நுழைந்து அமெரிக்கா அந்த நாட்டையே நாசப்படுத்தியது. 
              அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பு நாடகத்தை நடத்தி, அதை காரணம் காட்டி அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கும் இராக் நாட்டில் ஆயுதங்களை தேடப்போகிறேன் என்று சொல்லி அந்த நாட்டினுள் நுழைந்து இராக் நாட்டையே சின்னபின்னாமாய் சீரழித்து, அந்த நாட்டு மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாய் மாறிவிட்டது. 
                  அடுத்து  ''அமெரிக்காவின் சீரழிப்பு பட்டியலில்'' உள்ள நாடுகளில், இப்போது அமெரிக்காவின் கழுகு பார்வை ஈரான் மீது பட்டிருக்கிறது. ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தான் நேற்று புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் எரிப்பும், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
                    இப்படித்தான் நேற்று, திங்களன்று மாலை நடந்த இச்சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசுகளாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
                 தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
               இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
                  இது குறித்த விசாரணை தொடங்கவே இல்லை. விசாரணை முடிந்த  பிறகே இது தாக்குதலா, தற்செயல் விபத்தா என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, இதற்காகவே காத்திருந்தது போலவே, “இது ஈரானின் சதி; உலகம் முழுவதும் ஈரான் இதுபோன்ற பெரும் பயங்கரவாதச் செயல்களை ஏற்றுமதி செய்துகொண்டி ருக்கிறது” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிக்கை வெளியிட்டார். அது எப்படி...?
               இப்படித்தான், அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தகர்ப்பில் கூட,அந்த தகர்ப்பை பார்த்து அதிர்ந்து போன காவல் துறை அது பற்றிய விசாரணையை ஆரம்பிக்கவே இல்லை. ஆனால், அந்த அதகர்ப்பு நடக்கும் போதே அதற்காகவே காத்திருந்தாற்போல் அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இது தீவிரவாதிகளின் செயல் - இது பின்லேடனின் செயல் சென்று பத்திரிக்கையாளர்களிடம் பேசியது இப்போது இந்த சம்பவத்தைப் பார்க்கும் போது வருகிறது.
               இதிலிருந்தே விஷயத்தைப் பளிச்சென்று புரிந்துகொள்ளலாம்.
           பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தீவிரமடைய, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் கைக்கூலியான இஸ்ரேலையும் போர் வெறி உச்சத்திற்கு ஏறி ஆட்டிக்கொண்டிருக்கிறது. இஸ்ரேலை ஏவி, ஈரானைத் தாக்கி, ஒரு பெரும் போரை நடத்தி, தத்தளிக்கும் முதலாளித் துவத்தை போரால் தக்கவைத்துக்கொள்ள எத்தனிக்கிறது ஒபாமா நிர்வாகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
               ஈரான் மீதான போருக்கு உலகோரின் மன நிலையைத் தயார்ப்படுத்தும் பணியை தான் இன்று  ஊடகங்கள் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு கைக்கொடுக்கின்றன.  

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

கொள்ளைக்கூட்டத்தின் கைகளில் இந்த நாடு சிக்கியுள்ளது....!

   பொழுதெல்லாம் எங்கள் செல்வம் 
   கொள்ளைகொண்டு போகவோ...
   நாங்கள் சாகவோ..!         
               இந்தியாவை  சேர்ந்த பெரும் முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், ஆளும் அரசியல்வாதிகள், உயர்பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் என ஆளும் வர்க்கத்தினர் வெளிநாடுகளில் உள்ள  வங்கிகளில் குவித்து வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் ரூ.25 இலட்சம் கோடி என்ற அதிர்ச்சிகரமான செய்தியினை மத்திய புலனாய்வுக் கழகம் - சி.பி.ஐ -யின் இயக்குனர் ஏ. பி. சிங் வெளியிட்டுவுள்ளார். 
                இந்திய உழைப்பாளி மக்கள் வியர்வை சிந்தி செலுத்தும் வரிப் பணத்திலிருந்தும், இந்திய நாட்டின் செல்வாதாரங்களிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட இந்த பெரும் தொகை என்பது சர்வதேச அளவில் வரி ஏய்ப்பு செய்கிற அதிகாரமிக்க தனி நபர்களுக்கும், பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கும் ஒரு சொர்க்கபுரிகளாக காட்சியளிக்கும் மொரீஷியஸ், ஸ்விட்சர்லாந்து, லீச்சென்ஸ்டெய்ன், பிரிட்டிஷ் விரிட்ஜின் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் தான் இந்தியாவில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்ட பணங்கள் எல்லாம் குவித்து வைக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். 
                ஆட்சியாளர்கள் வெகு நாட்களாக வெளியிட தயங்கிய இந்தத் தகவல்களை இவர் வெளியிட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமானது.  சி.பி.ஐ  இயக்குனர் ஏ. பி. சிங் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்ட தொகையை 25 இலட்சம் கோடி என்று குறைவாக சொல்லியிருப்பதாகவும், உண்மையில் அந்த கருப்பு பணத்தின் மதிப்பு என்பது ரூ.70  இலட்சம் கோடியை தாண்டும் என்றும் இந்திய பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அவ்வளவு  பணத்தையும்  கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கும் அந்த ''புண்ணியவான்களின்'' பெயர்களையும் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

இப்படியே திமுக-வும் அதிமுக-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தால்... மின்சாரம் இல்லாமல் தமிழகம் இருண்டு போகும்...!

                 “ஏடெடுத்தேன் கவிதைஒன்றுவரைய...” என்று துவங்கும் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. கவிதையின் பாடுபொருளாக எதை எடுப்பது என்று மலைப்பதாக எழுதியிருப்பார். ஆனால் தலையங்கம் எழுத என்னப் பொருளை எடுத்துக் கொள்வது என்று அன் றாடம் விவாதிக்கும் போதெல்லாம் தமிழகத்தை இருள்மயமாக்கியிருக்கிற மின்வெட்டு என்னை எழுது என்று எப்போதும் முன்நிற்கிறது.
              கடந்த திமுக ஆட்சியிலேயே மின்வெட்டின் திருவிளையாடல் துவங்கிவிட்டது. மின்வெட்டை சரிசெய்ய எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்காத திமுக, தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்து மீண்டும்  ஆட்சிக்கு வந்தால், ''போதும் போதும்'' என்று கதறும் அளவுக்கு மின்சாரம் அள்ளித் தருவதாக அள்ளிவிட்டது.
               மறுபுறத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது தேர்தல் பிரச்சாரத்தில், தனது தலைமையில் அதிமுக  ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று முழங்கினார்.
                  ஆனால், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்போது என்ன லட்சணம். மின்வெட்டு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 8 மணிநேரத்தை தொட்டுள்ளது. மின்வெட்டின் கோர விளைவுகள் ஒருபுறம் என்றால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன? என்பதை கூட விளக்க மறுக்கும் மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமும், அகம்பாவமும் சகிக்கக்கூடியதாக இல்லை.    இந்த லட்சணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநிலம் முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்கும் அலங்கோலமும் நடந்துவருகிறது.
             மின்வெட்டை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக அரசு இந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிவிட முயல்கிறது.
               சட்டமன்றத்தில் கைநீட்டி பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, உடனடியாக தீர்ப்பு எழுதப்பட்டு 10 நாள் சஸ்பெண்ட் செய் யப்பட்டார்.
                   மின்வெட்டினால் பாசன வசதியை இழந்த விவசாயிகளும், தொழிலை இழந்த தொழிலதிபர்களும், வேலையிழந்த தொழிலாளர்களும், தறி இயக்கம் இழந்த நெசவாளர்களும், வெப்பத்தில் புழுங்கித் தவிக்கும் பொதுமக்களும், கொசுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளும், மூச்சுத் திணறும் முதியோர்களும் யார் மீது உரிமைமீறல் கொண்டுவருவது என்று தெரியவில்லை.
               ஆனால் பெட்டிக்கடையில் இருக்கும் ஜெராக்ஸ் முதல் துவங்கி, மிகப்பெரும் ஆலைகளின் எந்திரங்கள் வரை மின்சாரம் இன்றி இங்கு எதுவும் இயங்காது என்பது கண்முன்னால் தெரிகிற நிதர்சனம். கண்கட்டும் மின்வெட்டால் தமிழகத்தில் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது.
           உடனடியாக மின்சாரம் தரும் மந்திரக்கோல் எதுவும் அரசிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மின்வெட்டை தவிர்க்க அரசு செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் என்ன? நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன? என வாக்களித்த மக்களுக்கு விளக்கவேண்டியது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசின் கடமையாகும் என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா உணரவேண்டும்.

பாகிஸ்தான் நம் சகோதர நாடு - அங்கு ஜனநாயகம் வீழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்...!

               பாகிஸ்தானில் பல சமயங்களில் ஜனநாயகம் பலமிழந்து ராணுவத்தின் கை ஓங்கிவிடும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை வீழ்த்திவிட்டு ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். வழக்கம் போல் குழம்பியக்குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்கா தன் மூக்கை நுழைக்கும். கடந்த இது பாகிஸ்தானில் ஒரு வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வுகளை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. நம் நாட்டில் சிறுவயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மனங்களில், பாகிஸ்தான் ஒரு எதிரி நாடு என்று சொல்லப்பட்டு வளர்க்கப்படுவதால், பாகிஸ்தான் என்பது நம் சகோதர நாடு என்ற எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றுவதில்லை. அதுமட்டுமல்ல,   நம் அண்டை நாட்டில் ஒரு  பிரச்சனை என்றால் அது நம்மையும் பாதிக்கும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் எந்தவித பதற்றமும் இல்லாமல் நம் மக்களும் நடந்துகொள்வார்கள் என்பது தான் உண்மை. 
             இப்போது அப்படியான பிரச்சனை பாகிஸ்தானில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிரதமருக்கு எதிராக  ராணுவமும், சுப்ரீம் கோர்ட்டும் ஒரு அணியாகவும், பிரதமரும் , ஜனாதிபதியும்  வேறொரு அணியாகவும் செயல்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு தான் மக்களால் தேர்ந்தெடுக்குப்பட்ட ஜனநாயக அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதனால் இராணுவ புரட்சி ஏற்படுமோ என்கிற அச்சம் கூட இருந்தது.  அடுத்து இப்போது உச்ச்நீதிமன்றத்தொடு மோதல் ஏற்பட்டிருக்கிறது.
.              இராணுவமும், உச்சநீதிமன்றமும்  அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் தாலிபான்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போர் செய்து கொண்டிருப்பதால் ஆட்சியை பிடிக்கும் ஆசை ராணுவத்துக்கு இருக்காது என்ற கருத்தும் கூறப்படுகிறது.
                இதற்கிடையே உச்சநீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு எதிரான வேலைகளை  நேற்று எடுத்திருக்கிறது. கடந்த 1990 - ல் அப்போதைய பிரதமர் பெனாசீர் மற்றும் இவரது கணவர் சர்தாரி ( தற்போதைய அதிபர்  )  சில கம்பெனிகளிடம் 12 மில்லியன் டாலர் லஞ்சமாக பெற்று அதனை சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்திருந்தனர் என்பது குற்றச்சாட்டு எழுந்து,  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதி மன்றம்   உத்தரவிட்டிருந்தது. ஆனால்  பிரதமர்  கிலானியோ கடந்த காலங்களில் இது தொடர்பான விசாரணை நடத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அதில் நாட்டமும் கொள்ளவில்லை. 
அதிபர் சர்தாரி மீதான ஊழலை விசாரிக்க பிரதமர் எந்தவிதமான உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முயற்ச்சி செய்யாமல் காலம் தாழ்த்தியதை கண்டு உச்சநீதிமன்றம் பிரதமர் மீது கடும் கோபம் கொண்டது மட்டுமல்ல வெளிப்படியாகவே கண்டனமும் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் கிலானி 2 ஆண்டுகளாக வழக்கை துரிதப்படுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார் என்றும் இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்றும் பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று குற்றப்பத்திரிக்கையும் அவர் கையில் வழங்கப்பட்டிருக்கிறது. 
                   இதன் மூலம், பிரதமர் கிலானி தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அப்படி அவர் தண்டிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை வழங்க நேரிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.  இதனால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும் என்றும்,
அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியும் வகிக்க முடியாத நிலை வரும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 
         இருப்பினும், கிலானி தண்டிக்கப்பட்டாலும் அதிபருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது என்றும்  சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
              இதற்கிடையில், பிரதமர் கிலானி தண்டிக்கப்பட்டு, பதவி இழக்கும் சூழலில் அடுத்த பிரதமர் யார் என்கிற வாய்ப்பாளர்கள்  பட்டியலை மக்கள் தயாரித்து விட்டனர். 
          எது எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வுகளெல்லாம் பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகள்.  அதை அவர்கள் ஜனநாயக ரீதியாக தீர்த்துக்கொள்ளவேண்டும். எந்த நேரத்திலும் ஜனநாயகம் வீழாமல் ராணுவத்தின் கை ஓங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

சனி, 11 பிப்ரவரி, 2012

என்னை கவர்ந்த தொழிற்சங்கத்தலைவர் - தோழர் உ.ரா.வரதராஜன்


           ஆயிற்று! இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. WR என்று நாங்கள் அன்போடு அழைக்கும் தோழர்.உ.ரா.வ்ரதராஜன் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.   
         தோழர் WR அவர்கள் 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது நான் பள்ளி மாணவி. அப்பா நாளிதழில் வெளியான அவருடைய பெயரைப்பார்த்து விட்டு ‘இவர் என்னுடைய நண்பர்’ என்று கூறி அப்பா இளவட்டமாய்த் திரிந்த காலத்தில் WR கையெழுத்திட்டு அளித்த புத்தகம் ஒன்றையும் காண்பித்தார். தேர்தல் முடிவுகள் வந்தபின் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் WR. அப்போது கல்கியில் அவருடைய புகைப்படம் அட்டையில் வெளியாகி இருந்தது. அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். அதன்பின் சட்டமன்ற்த்தில் அவர் பேசியது குறித்தெல்லாம் நாளிதழ்களில் பார்க்கும்போது தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நண்பராக அப்பா இருந்தார். 
            WR ஒரு கம்யூனிஸ்ட், தொழிற்சங்கவாதி, மொழிவளம் உள்ளவர் என்பதைத் தவிர்த்து அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் இலக்கிய ஆர்வம் மிக்கவர். ‘அருவி’, 'ஆதவன்’ ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராய் இருந்து அப்போது எழுத வந்த இளைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். தேனருவி, மலர் வண்ணன், பூதலூர் முத்து என்று அப்பாவின் நண்பர்கள் பலருடன் எழுத்து மூலமே அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஒரத்தநாட்டில் மட்டும் 300 சந்தாக்களை அப்பாவும் அவருடைய நண்பர்களும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். ‘சர்வோதய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட WR கதர் ஆடையையே அணிந்து வந்தார். அவர் மாநிலம் முழுவதும் சென்று காந்தீயக் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தார். ம.பொ.சி.யின் இயக்கத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அவர் பி.காம்.பட்டதாரி. வேலை கிடைக்காமல் இருந்தார். சென்னையில் ரிசர்வ் வங்கியில் வேலை கிடைத்தது. அதன்பின் தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொழிற்சங்கத் தொடர்புகள் அவருடைய கொள்கைகளையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றின. தொழிற்சங்கம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன்பின் அவருடைய பணிப்பளு அதிகமானதால் பழைய நண்பர்களுடன் ஓர் இடைவெளி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இப்போது மாதிரி கைபேசி, மின்னஞ்சல் எல்லாம் உண்டா என்ன? கடிதப் பரிமாற்றம் ஒரு கட்டத்தில் நின்றுபோக தொடர்பறுந்து போனது. இவையெல்லாம் அப்பா எனக்கு சொன்ன தகவல்கள்.      
          காலச்சுழற்சியில் WR டெல்லியிலிருந்து கட்சிப்பணி செய்துவிட்டு, மீண்டும் தமிழகம் வந்தார். அப்போது நான் கட்சியில் இருந்தேன். ’தீக்கதிர்’ நாளிதழின் அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவர் தீக்கதிரின் முதன்மை ஆசிரியர். மிகச் சாதாரணமாக ஒரு கட்சி உறுப்பினராக நான் அறிமுகம் ஆனேன் அவருக்கு. மிகுந்த தோழமையுடன் பேசுவார். அவர் டெல்லியில் இருந்த காலத்தில் தீக்கதிருக்கு முதன்முதலாக ஓர் இணையதளத்தை உருவாக்கினேன். ஒருநாள் தோழர் ஒருவர் அவரிடம் இந்தத் தகவலைச் சொல்ல ‘‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’’ என்று வருத்தப்பட்டாலும், வருத்தத்தைவிட அதில் மகிழ்ச்சி அதிகம் இருந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசியவிதத்தில் ஒருவித கூடுதல் உரிமையும் அன்பும் வெளிப்பட்டன. நான் எப்போதாவது எழுதுவதை வாசித்து வந்தார் என்பது அவ்வபோது அவருடைய பேச்சில் வெளிப்படும். அதன்பின் ஒரு நாள் ‘காவியனின் மகள் நான்’ என்றேன். அவர் பார்த்த பார்வையை இன்றைக்கும் மறக்க் முடியாது. நாற்காலியில் அமர்ந்திருந்தவர் துள்ளி எழுந்து வந்து என் கரஙகளைப் பற்றிகொண்டார். ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்றார் இப்போதும். தன் நண்பரின் மகள் என்கிற பாசம் அவர் ஸ்பரிசத்தில் தெரிந்தது. அதன்பின் அவர் என்னிடம் பேசிய விதத்தில் தந்தைமையை உணர்ந்தேன்.
                அப்பா தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றார், WR முதன்மை ஆசியராய் இருக்கும் அதே தீக்கதிர் நாளிதழுக்கு, நாகப்பட்டினம் நிருபராய் ஆனார். பழைய காலம் போலவே இப்போதும் WR ஆசிரியர். அப்பா அதில் எழுதுபவர். அவர்கள் நிறைய கூட்டங்களில் சந்தித்துக்கொண்டார்கள். அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் என்னையும், என்னைப் பார்க்கும்போதெல்லாம அப்பவையும் அன்போடு விசாரிப்பார். ஒரு கட்டத்தில் வேலைப்பளுவால் நான் ‘தீக்கதிர்-வண்ணக்கதிர்’ பகுதிக்கு எதுவும் எழுதாமல் இருந்தபோது அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘உன் பங்களிப்பு எதையும் நான் கொஞ்ச நாட்களாக வண்ணக்கதிரில் பார்க்கவில்லை. ஏன் எழுதுவதில்லை?’ என்று உரிமையோடு கேட்டு எழுதச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பேஸ்புக்கில் எனக்கு நண்பரானார்.                           
                எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். நான் ‘செங்கடல்’ படப்பிடிப்புக்காக ரயிலில் ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது வந்தது அந்த அழைப்பு. ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார். நாடி நரம்பெல்லாம் அதிர்ந்து ரயிலை விட வேகமாக தடதடத்தன. பேச்சு வரவில்லை. என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. ‘நிச்சய்ம்..இந்தச் செய்தி பொய்யாக இருக்கவேண்டும்’ என்கிற பதைபதைப்போடு கைபேசியில் இரவு முழுக்க ஒவ்வொருவராக அழைத்து அவர் குறித்து விசாரித்தபோது, யாருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வாரமாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியவில்லை. பேசிய நண்பர்கள் எல்லோரும் நான் சொல்வது தவறான தகவலாக இருக்கக்கூடும் என்றார்கள். அவர் அப்படி தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல என்றார்கள். நானும் அப்படியே நம்பினேன். மறுநாள் ராமேஸ்வரம் சென்றவுடன் நக்கீரன் வாங்கிப்பார்த்தேன்...அந்தக் கடிதம்...அந்த வரிகள்..மனம் கலங்கிப்போனது. எங்கிருந்தாவது திடீரென வந்து ‘இதோ! நான் இருக்கிறேன்’ என்று சொல்ல மாட்டாரா என்று மனம் ஏங்கத் தொடங்கியது. அதன்பின் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரியும். 
                      அவருடைய உடல் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வந்தடைந்தபோது, கண்ணீரோடு அவரின் இறுதி நிகழ்வுகளை கேமிராவில் சேமித்தேன். ஊர்வலம் கிளம்பி, மின்மயானத்தை அடைந்து அவருடைய உடலை மின்சாரத்திற்குத் தின்னக் கொடுத்து அவர் புகையாய் மாறி புகைபோக்கியின் வழியாக மேலே காற்றோடு கலந்தது வரை ஒவ்வொரு கணத்தையும் படம்பிடித்தேன். வீட்டுக்கு வந்து கணினியில் இணைத்து அந்தப்படஙக்ளைப் பார்க்க முயன்றபோது முதல் இரண்டு படங்களுக்கு மேல் பார்க்க முடியாதபடி என்னை ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. கண்களை இருட்டிக்கொண்டு மயக்கம் வருவது போன்றிருந்தது. அதன்பின் பலமுறை அந்தப் படஙக்ளைப் பார்க்க நான் முயன்றபோது இதே போன்றதொரு உணர்வு மேலோங்கி இன்று வரை பார்க்கப்படாத படங்களாகவே அவை இருக்கின்றன. ஒருவேளை அழகும், கம்பீரமும் நிறைந்த தோழர் WR-ன் உருவத்தை அப்படி சிதைந்து, அடையாளம் தெரியாமல் கருத்துப் போய் இருப்பதை பார்க்க முடியவில்லையோ என்னால் என்று தோன்றுகிறது. ஆனால் உடலை அருகில் இருந்து பார்த்த எனக்கு படங்களைப் பார்க்க வலுவில்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை.                                         இன்றுவரை ஜீரணிக்க முடியாத மரணமாக அவருடைய மரணம் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல. ஒரு துயரை இன்னொரு துயர் வந்து மறக்கச் செய்யும். அப்படித்தான் இவருடைய மரணம் வந்து, என்னால் மறக்க முடியாமல் அனுபவித்து வந்த ஒரு துயரைக் கடக்க வைத்தது. இவருடைய மரணத்தோடு ஒப்பிடுகையில் எவ்வித துயரமும் தூசியாய்த் தெரிந்தது எனக்கு. கனத்த மனத்துடன் இருந்த எங்கள் தோழர் WR-ன் உடலைச் சுமந்து மிதந்த போரூர் ஏரியை கடக்கும்போதெல்லாம் இன்றைக்கும் கண்ணீர் விடுவது வாடிக்கையாகி விட்டது. அவருடைய பேஸ்புக் பக்கத்துக்கு தினமும் சென்று பார்ப்பேன். அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செய்திகளும் அலைக்கழித்தன. கொஞ்ச நாள் கழித்து அவருடைய பாஸ்வோர்ட் தெரிந்த யாரோ அவருடைய கணக்கை டீ-ஆக்டிவேட் செய்தனர். அன்றைக்குத் தான் அந்தப் பக்கத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். திடீரென்று ஒரு நாள் முன்னால் வந்து ’நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என்று அவர் சொல்ல ‘இதை ஏன் என்னிடம் முன்னமே தெரியப்படுத்தவில்லை?’ என்று அவர் பாணியில் நான் கேட்கவேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது. ஆசைப்படுவதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?
நன்றி : கவின் மலர் 

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பள்ளிக்கூடங்கள் சிறைக்கூடங்கள் அல்ல - மாணவர்கள் மீது மென்மையான அணுகுமுறை தேவை...!

                  இன்றைக்கு கல்வி வியாபாரமயமானதிலிருந்து போட்டிக் காரணமாக பள்ளிக்குழந்தைகளை மார்க் வாங்கும் மெஷின்களாக தான் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாறியிருக்கிறார்கள். Pre -KG., LKG - இல் தொடங்கி பத்தாம் வகுப்பு - பிளஸ் டூ வரையில் குழந்தைகள் படும் பாடு இருக்கிறதே...? அதிலும்   குழந்தைகள் பத்தாம் வகுப்பை நெருங்குகிறார்கள் என்றால்  அவர்கள் பாடு ''அய்யோ பாவம்'' தான். 
                  இன்றைக்கு தனியார் பள்ளிகளின் வேலை என்ன...?  அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் வேலை என்ன...? பாடப்புத்தகங்கள் எல்லாம் திராவகமாக மாற்றப்பட்டு குழந்தையின் வாயைத் திறந்து ஊற்றிவிடுகிறார்கள். பின் அந்தக் குழந்தை உள்ளே ஊற்றப்பட்ட அந்த திராவகத்தை அப்படியே எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பரீட்சைப் பேப்பரில் கக்கி வாந்தி எடுக்கவேண்டும். இது தான் இன்றைய கல்வி முறை...! மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறை...! இதைத் தான் இன்றைக்கு இருக்கின்ற தனியார் பள்ளிகளெல்லாம் கூசாமல் செய்து வருகின்றன.
                   மனப்பாடம் செய்து ஒப்பித்தல் என்பதோ... எழுதுவது என்பதோ... குழந்தைகளின் திறமையையோ.... அறிவையோ... பொறுத்ததல்ல...! அவர்களின் முன்னோர்களைப் பொறுத்தது என்பதை முதலில் பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணரவேண்டும்.
நம்மைச் சுற்றி வாழ்பவர்களில் சற்று உற்று நோக்கினால் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். மனப்பாடம் செய்து மந்திரங்களை சொல்லும் பிராமணர் மற்றும் குருக்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் எப்படி நிறைய மதிப்பெண்கள் வாங்க முடிகிறது. காலம் காலமாக - வழிவழியாக  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல வரிகளைக் கொண்ட மந்திரங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் தொழில் செய்பவர்கள் என்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் பாடங்களை மிக சுலபமாக - முறையாக மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதுவதும் சிறப்பாக செய்து  அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள்.
                 இதே  போன்று பாடங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக  ஒப்பித்தல் வேண்டும் என்பதையும், முழுமையாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதையும் எல்லா மாணவர்களிடமும் எதிர்ப்பார்க்க முடியாது. அப்படி எதிர்ப்பார்க்கவும் கூடாது. அது ஒவ்வொரு குழந்தைகளின் முன்னோர்களைப் பொறுத்தது. அவர்களின் வேலைத் தன்மையைப் பொறுத்தது.  
               எனவே பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் உளவியல் ரீதியாக மாணவர்களை மென்மையாக அணுகவேண்டும். பிள்ளைகள் அதிகமான மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக  கண்டித்தலும் தண்டித்தலுமான முரட்டுத்தனமான அணுகுமுறை என்பது எப்போதும் பயன் தராது. மாறாக அது ஆசிரியர்களுக்கு எதிராக - பெற்றோர்களுக்கு எதிராகத் தான் திரும்பும் என்பதை அனைவரும் உணரவேண்டும். அதுமட்டுமல்ல, பிள்ளைகள் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் தங்களின் எதிரியாக பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.    பள்ளிக்கூடங்கள் என்பது தண்டனை வழங்கும் சிறைக்கூடங்கள் அல்ல என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றைக்கு நிலவும் இந்த நிலை மாறவேண்டும்.

புதன், 8 பிப்ரவரி, 2012

பொறுக்கிகளையும் புறம்போக்குகளையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான்...!

           பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில  சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த  மொபைல்போனில் ஆபாச படத்தைப்  பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில்   அவர் அருகில் அமர்ந்திருந்த  ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும். 
                மக்களைப்பற்றிய சிந்தனை இல்லாதவர்களை - ஒழுக்கக்கேடானவர்களை - ஒழுன்கீனமானவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படி தான் நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல் - தண்டிக்காமல்  தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால், சட்டசபையிலேயே காபரே நடனம் கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம், சட்டசபையிலிருந்து மட்டுமல்ல  அரசியலை விட்டே மக்கள் தூக்கி எறியவேண்டும். இவர்கள் சமூகத்தில் விஷப்பாம்புகள். 

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

விண்வெளி அலைக்கற்றை ஊழல் - இந்த ஊழல் புகாரிலும் பிரதமர் சிக்கவில்லை...பலே...!


பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்... 
             மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மற்றுமொரு மெகா ஊழல் பற்றி ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இது பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 
                       இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் - இஸ்ரோ - வின்  வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், விண்வெளித்துறை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியாவுடன் சாதாரண தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளை விட மிகவும் சக்திவாய்ந்த விண்வெளி அலைக்கற்றைகளை பகிர்ந்துகொள்வது தொடர்பான இந்த பேரத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை விட மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா 70 மெகா ஹெட்ஸ் சக்தி கொண்ட உயர்தரம் வாய்ந்த தொலைத்தொடர்பு அலைக் கற்றைகளை பயன்படுத்தும் உரிமங்களை பெற்றது என்றும், இதற்காகவே இரண்டு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன  என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ.2லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த  ஒப்பந்தம் கையெழுத்தான கால கட்டத்தில் இஸ்ரோ தலைவராக பணியாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு தரப்பில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தான் செய்திகள் ஒருதலைப்பட்சமாகவே வருகின்றன. இந்த ஊழலில் இந்த குறிப்பிட்ட விஞ்ஞானிகள் மட்டுமா சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பது தான் மக்களின் கேள்வியாக இருக்கிறது.
            ஏனென்றால், விண்வெளித்துறை பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கும் துறையாகும். அவரது நேரடிப் பார்வையின் கீழ் இயங்கக்கூடிய இந்தத் துறையில் நடந்த ஊழலில் யார் யாருக்கு பங்கு உள்ளது என்பது குறித்து முழு உண்மைகள் இன்னமும் வெளிவரவில்லை என்பது தான் உண்மை.  இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன், இந்த ஊழலுக்கு மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகள் மட்டுமே   காரணம் என்ற அடிப்படையில் இந்த வழக்கை முன்வைக்கிறார். ஆனால் தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தக் குற்றச்சாட்டில் தன்னை சிக்க வைத்திருப்பதாக மாதவன் நாயர் மறுக்கிறார். விஞ்ஞானிகள் வட்டாரத்தைத் தாண்டி, இந்த ஊழலில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் - இடைத்தரகர்கள் என பலதரப்பினருக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே இந்த ஊழல் விவகாரத்திலும் அப்போதே பிரத மர் அலுவலகம் ஏன் தலையிடாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என பல தரப்பிலும் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் அலுவலகத்தின்கீழ் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிற விண்வெளித்துறையில் நடந்துள்ள இந்த ஊழலுக்கு, 4 விஞ்ஞானிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு ''முக்கியப்புள்ளிகளை''  தப்பிக்க  வைக்க  முயற்சி நடக்கிறதா என்ற சந்தேகமும் விஞ்ஞானிகள் வட்டாரத்திலும், பொது மக்கள் மத்தியிலும் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது நியாயமானதே..
              இந்த விவகாரத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையை மட் டுமே வைத்துக்கொண்டு மூத்த விஞ்ஞானிகள் குற்றவாளிகள் என முடிவுக்கு வர முடியாது. விண்வெளி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் முழு உண்மையையும் வெளிக்கொண்டுவர சுயேட்சையான மற்றும் பாரபட்ச மற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பது தான் பொது மக்கள் மற்றும்  நடுநிலையாளர்களின்  எதிர்ப்பார்ப்புகளாகும்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மத்திய அரசு அனுமதிக்கும் ஐ. பி. எல். கிரிக்கெட் சூதாட்டம் - பணக்காரர்கள் சூதாடினால் குற்றமில்லையோ...?

               ''இந்தியன் பிரிமியர் லீக்'' என்று சொல்லக்கூடிய இந்திய கிரிக்கெட் சூதாட்ட வேலைகள் கோலாகலமாக தொடங்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளான 2 ஜி - ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல் போன்ற மெகா ஊழல்களுக்கு முன்னோடியாக  நாட்டையே உலுக்கிய அன்றைய மத்திய அமைச்சர் சசி தரூர் சம்மந்தப்பட்ட ''ஐபிஎல்'' கிரிக்கெட் ஊழல் விவகாரம்  இன்னும் உரிய தீர்வு காணப்படாமல் கிடப்பில் போடப்பட்ட  நிலையில், 5வது ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டு வீரர்களை ஏலம் விட்டு விலைக்கு வாங்கும் இழிவான வியாபாரத்தில் மீண்டும் பெரும் பணக்காரர்கள் இறங்கியுள்ளனர் வெட்கக்கேடானது.  
                     கிரிக்கெட் என்ற  விளையாட்டின் பெயரால் நடைபெறும் இந்த வியாபாரச் சூதாட்டத்தில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா ரூ.10 கோடி அளவிற்கு விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.  பெங்களூரில் நடைபெற்றுவரும் இந்த ஏலத்தில் ஜடேஜா உட்பட 144 கிரிக்கெட் வீரர்களின் திறமைகள்  பேரம் பேசப்பட்டு விற்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த கிரிக்கெட் சூதாட்டத்தை எப்படி மத்திய அரசு அனுமதி அளிக்கிறது என்று தெரியவில்லை. கடந்த முறை ஏலம் போன தமிழ்நாட்டைச் சார்ந்த வி.வி.எஸ். லஷ்மணனை தற்போது யாரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லையாம் கவலையோடு சொல்கிறார்கள். 
            இது கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமல்ல கிரிக்கெட் விபச்சாரம். கிரிக்கெட் வீரர்களின் திறமைகள் மங்கிப்போய் விட்டால் ''விலைபோக'' மாட்டார்கள். லாட்டரிச்சீட்டு, சீட்டாட்டம், கோழிச்சண்டை, விபச்சாரம் போன்ற சமூகக் குற்றங்களை செய்பவர்களை சட்டம் தண்டிக்கிறதே. ''ஐ. பி. எல்'' போட்டி மட்டும் ஒரு சூதாட்டம் இல்லையா...? பணக்காரர்கள் ஆடும் இந்த கிரிக்கெட் சூதட்டத்திற்குப் பின்னால் மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் இருப்பது என்பது நியாயம் தானா...?  சென்ற ''ஐபிஎல்'' கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஊழல்களுக்கு தீர்வுக்காணப்படாமல் - சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கபடாமல் இன்றைக்கு மீண்டும் இந்த போட்டியை அனுமதிப்பது என்பது அரசின் தருதலைதனத்தை தான்  காட்டுகிறது.

சனி, 4 பிப்ரவரி, 2012

சிதம்பரம் ரொம்ப நல்லவராம் - சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது தீர்ப்பு மட்டும் எப்படி இருக்கும்...?

                      இன்று தலைநகர் புதுடெல்லி ஒரே பரபரப்பாய் இருந்தது. ' 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை பாட்டியாலா  சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தள்ளுபடி செய்தது தான் அந்த பரபரப்புக்கு காரணம். 
              '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜராகி சாட்சியம் அளிக்கும் போது, தன் கோரிக்கைக்கு ஆதாரமாக பல முக்கிய ஆவணங்களையும் சி. பி. ஐ.,  நீதிபதி ஷைனி முன் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக நிச்சயம் தீர்ப்பு வரும் என்று நாடே எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தது. 
              நாடே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த இந்த வழக்கில், நீதிபதி ஓ.பி.சைனி, இன்று மதியம் இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் போது, சிதம்பரம் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று அறிவித்தது என்பது நாம் எதிர்ப்பார்த்த  ஒன்று தான். சி. பி. ஐ. சிதம்பரம் கையில் இருக்கும் போது,  தீர்ப்பு மட்டும் எப்படி அவருக்கு எதிராக இருக்கும்...? என்றாலும் இது சிதம்பரத்திற்கு ஒரு தற்காலிக சந்தோசம் தான். ஏனென்றால் தில்லி உயர்நீதிமன்றம் செல்கிறார் சுப்பிரமணிய சாமி.