சனி, 31 மே, 2014

என்றும் என் நினைவில் வாழும் தோழர்.ஆர்.உமாநாத்...!

                      அண்மைக்காலமாக உலகில் குறிப்பாக இந்தியாவில் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவர்களின் மறைவது என்பது மனதை வாட்டுகிற இழப்பாக இருக்கிறது. இல்லாமை இல்லாத உலகத்தை உருவாக்க - சமத்துவ சமூக மாற்றத்தை உருவாக்க பல்வேறு போராட்டங்களையும், தியாகங்களையும் செய்து விட்டு அந்த மாற்றங்களை பார்க்காமலேயே வயதின் காரணமாகவும், நோயின் காரணமாகவும் மறைந்து போவதைப் பார்க்கும் போது  உண்மையிலேயே நமது நெஞ்சம் விசும்பி அழுகிறது. எந்தவிதமான சமரசமும் இல்லாமல் - எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் மக்களுக்காக எத்தனைப் போராட்டங்கள், எத்தனை இழப்புகள், எத்தனை தியாகங்கள் - இதையெல்லாம் நம்மால் மறக்கமுடியுமா...?
         அப்படி மறக்கமுடியாத ஒரு உன்னதத் தலைவரின் மரணம் என் மனதை வாட்டியது. என் நெஞ்சம் அமைதியாய் அழுதது.
          சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர்.ஆர்.உமாநாத் அவர்களின் மறைவு என்னை பெரிதும் வாட்டியது. குடும்பத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட வடஇந்திய சுற்றுப்பயணத்தை என்னால்  ரத்து செய்யமுடியாமல் அவர் இறந்த செய்தியை கேட்டுவிட்டு மவுனமாய் அன்று புறப்பட்டு சென்றுவிட்டேன். என் சகத் தோழர்களெல்லாம் மறைந்த தோழருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு திருச்சி நோக்கிப் புறப்பட்டுவிட்டார்கள். என் மனம் மட்டும் தோழரின் முகத்தைக்கூடப் பார்க்கமுடியாமல் தவித்து இரயிலில் பயணமானது. .
       தோழர்.ஆர்.உமாநாத் அவர்களை தொழிலாளர்களின் தலைவராய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராய் அவர் இயங்கி வந்ததை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எங்கள் எல்.ஐ.சி தென்மண்டல ஊழியர் சம்மேளனத்தின் துணைத்தலைவராக இருந்து நாங்கள் நடத்திய போராட்டங்களுக்கு வழி காட்டியவர். அன்றைய காலக்கட்டத்தில் - சுயநலமான தலைவர்களை மட்டுமே நம் கவனத்தில் பட்ட காலத்தில் , எல்.ஐ.சி-க்குள் புதிதாய் நுழைந்த போது  அவரை ஒரு அரிதான தலைவராக - அற்புதமான மனிதராக பார்த்து பிரம்மித்துப் போயிருக்கிறேன். இவரோடு அருகிலிருந்து பேச முடியுமா...? இவரது பக்கத்தில் உட்காரமுடியுமா...? அல்லது நிற்க முடியுமா....? என்றெல்லாம் ஏங்கியிருக்கிறேன். அதற்கு எனக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது.
          1998 - 2003 ஆண்டுகளில் நான் திண்டிவனம் எல்.ஐ.சி கிளை அலுவலக்கத்தில் பணியாற்றிய போது, நான் தான் எங்கள் ஊழியர் சங்கத்தின் கிளைத்தலைவர்.  அப்போது  2000-ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு நிதியளிப்புக் கூட்டத்தை திண்டிவனத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்கு அப்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பணியாற்றிய தோழர்.ஆர்.உமாநாத் அவர்களை அழைத்திருந்தார்கள். இதை அறிந்த நாங்கள் கட்சியின் அன்றைய விழுப்புரம் மாவட்டச்  செயலாளர் தோழர்.ஜி.ஆனந்தன் அவர்களையும், மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.ஆர்.ராமமூர்த்தி அவர்களை அணுகி கட்சியின் கூட்டத்திற்கு திண்டிவனம் வருகைதரும் தோழரை எங்கள் ஊழியர் சங்கத்திலும் முன்னாள் பொறுப்பாளர் என்ற முறையில் சிறிது நேரம் எங்கள் தோழர்களின் மத்தியில் உரையாற்றுவதற்கு தோழர் உமாநாத் அவர்களிடம் அனுமதிபெற்றுத் தரவேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டோம். அதேப்போல் அனுமதியும் பெற்றுக்கொடுக்க மகிழ்ந்து போனோம்... நெகிழ்ந்து போனோம்.
             எங்கள் அலுவலகத்தின் இரண்டாவது மாடியை நூறு பேர் உட்காரு அளவிற்கு ஒரு அரங்காக மாற்றினோம். மாலை 5 மணிக்கு கூட்டம். 4.30 மணிக்கு எங்கள் கிளை மேலாளர் என்னை அழைக்கிறார். அவர் அரசியல் பற்றி துளியும் அறியாதவர். அதனால் அவரிடம் அலுவலகத்தில் கூட்டம் நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டபோது தோழர்.உமாநாத் அவர்கள் எங்கள் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர். அந்த அடிப்படையில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டபோது அனுமதி கொடுத்த எங்கள் கிளை மேலாளர், கிளையில் வேலை செய்த யாரோ சில விஷமிகள் அவரிடம் சொல்லிவிட்டு சென்றதை கேட்டுவிட்டு எங்களை அழைத்து ''வருகிற தோழர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராமே. இப்போது இவரை அனுமதித்தால் நாளை மற்றவர்கள் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை அலுவலகத்திற்குள் அழைத்து வருவார்கள். அதனால் இந்தக் கூட்டத்தை இங்கே அலுவலகத்தில் நடத்தக்கூடாது. எதிரே இருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்துங்கள்'' என்று எங்களை  அவசரப்படுத்தினார். இருப்பதோ இன்னும் அரை மணிநேரம் தான். அதனால் இடத்தை மாற்ற முடியாது. நீங்க என்னவேண்டுமானாலும் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லி வந்துவிட்டோம்.
           ஆனாலும் இந்த விஷயம் வெளியே தெரியாமல் தோழரின் கூட்டத்தை இனிதாக நடத்தி முடித்தோம். தோழர்.உமாநாத் அவர்கள் 5 மணி கூட்டத்திற்கு சரியாக 5 மணிக்கே வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். கூட்டமோ இரண்டாவது மாடி. அவருக்கு வயதோ 78 இருக்கும். அதனால் அவருக்கு களைப்பு தெரியாமல் இருக்க அவரை சூழ்ந்துகொண்டு கூட்டமாக வாழ்த்து கோஷங்கள் முழங்க அவரை மாடிக்கு நடத்தியே அழைத்துவந்தோம். கூட்டத்தின் தலைமை நான் தான். அவரின் பக்கத்தில் நான். அது கனவா...? இல்லை நிஜமா...? மனதிற்குள் எதோ ஒரு உணர்வு... பிரம்மிப்பு...கூட்டம் முடிந்தவுடன் பி.எஸ்.என்.எல் தோழர்கள் அவரை நேரில் சந்தித்தார்கள். அவர்களிடம் எல்.ஐ.சி தோழர்களிடம் போராடக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் போராட்டம் தான் எல்.ஐ.சி-யை இந்த அளவிற்கு காப்பாற்றியது என்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தந்தை எங்கள்  முதுகை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தியது போல் உணர்ந்தேன்.
          மீண்டும் அவரை சென்னையில் நடைபெற்ற எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்ட போது மாநாட்டை வாழ்த்திப் பேசுவதற்காக வருகை புரிந்த போது, அவரை சந்தித்து நலம் விசாரித்த போது  திண்டிவனத்தோழர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று திருப்பிக்கேட்டபோது ஒரு தாயின் அன்பை உணர்ந்தேன். அன்று அவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்றும் எனது பொக்கிஷங்களுடன் பொக்கிஷமாய்....!
         இன்று தோழர்.ஆர்.உமாநாத் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றும் மறையாது.
என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருப்பார். 

செவ்வாய், 20 மே, 2014

நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல்...!


அன்பார்ந்த நாளைய பிரதமர் அவர்களே,
                இதயப்பூர்வமான வாழ்த்துக்களோடு இதை எழுதுகிறேன். முழு நேர்மையோடு இதை நான் சொல்கிறேன். இதை தைரியமாகச் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால், இந்த உயர்ந்த பொறுப்பை நீங்கள் அடைவதை பார்க்க விரும்பாதவர்களில் நானும் ஒருவன். நீங்கள் பிரதமராவதைப் பார்த்து லட்சக்கணக்கான மக்கள் பரவச நிலையில் இருக்கும் அதேவேளையில், மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் கலவர மனநிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது மற்றவர்களைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             நீங்கள் இந்த இடத்திற்கு வரப்போகிறீர்கள் என்று சொன்னவர்களை சில நாட்களுக்கு முன்புவரை நான் நம்பவில்லை. ஆனால், ஜவஹர்லால் நேரு உட்கார்ந்த, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தியின் அவசர நிலையை எதிர்த்த போராட்டத்திற்குப் பிறகு மற்றொரு குஜராத்தியான மொரார்ஜி தேசாய், பின்னர் உங்கள் அரசியல் குருவான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோர் அமர்ந்த நாற்காலியில் நீங்களும் அமர்கிறீர்கள்.
            அதில் நீங்கள் அமர்ந்துவிடக்கூடாது என்று விரும்பியவர்கள், நீங்கள் அந்த இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இத்தகைய அபூர்வமான சிறப்பிடம் உங்களுக்குக் கிடைப்பது பற்றி எனக்குள்ள பெரிய சந்தேகங்களைத் தாண்டி, உங்களது நலிவடைந்த சமூகம் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உங்களைப் போன்ற ஒருவர் இந்தியப் பிரதமராக வருவதை நான் மதிக்கிறேன். எல்லோரும் சமம் என்ற நமது அரசியல் சட்டத்தின் பிரதானமான நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.

தேசம் பற்றிய மறுபார்வை            

          நீங்கள் “தேநீர் விற்றவர்” என்று கண்மூடித்தனமாகவும், ஏளனமாகவும் சிலர் பேசியபோது, எனக்கு வயிற்றைப் பிரட்டியது. தனது வாழ்வாதாரத்திற்காக தேநீர் செய்து அதை விற்றவர் இந்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கப் போகிறார் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் இதையெல்லாம் சொன்னபிறகும், திரு. மோடி அவர்களே, நீங்கள் இந்த உயர் பொறுப்பில் அமரப் போவது லட்சக் கணக்கானவர்களிடம் கலவர மனநிலையை ஏன் ஏற்படுத்தியுள்ளது என்பதற்குள் நான் செல்ல வேண்டும். 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவா அல்லது எதிராகவா என்றுதான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது மற்ற எவரையும் விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
             இந்தியாவின் சிறந்த பாதுகாவலர் மோடியா..? அவர்தானா, இல்லையா..? என்பதுதான் மையப்பொருளாக இருந்தது. இந்தியாவின் சிறந்த பாதுகாவலர், சொல்லப்போனால் ரட்சகர் என்ற அளவிற்கு, 31 சதவிகித மக்களின் (உங்கள் வாக்கு சதவிகிதம்) மனங்களை நீங்கள் கவர்ந்ததால் பாஜகவுக்கு இடங்கள் கிடைத்துள்ளன. 69 சதவிகித மக்கள் உங்கள் பாதுகாவலராகப் பார்க்கவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். நமது தேசம் என்பதன் உள்ளடக்கத்தோடும் அவர்கள் வேறுபடுகிறார்கள். திரு. மோடி அவர்களே, தேசம் என்ற இந்தக் கருத்துதான், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் பிரதமராகப் போகும் உங்களுக்கு, இங்கு முக்கியமானதாக இருக்கப் போகிறது. தேசம் என்ற உங்கள் எண்ணத்தை மறுபார்வை செய்ய வேண்டும் என்று உங்களை நான் வலியுறுத்துகிறேன்.

சிறுபான்மையோருக்கு உறுதியளித்தல்           

          ஒற்றுமை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை முன்வைக்கும்போது, சர்தார்வல்லபாய் படேலின் பெயர் மற்றும் அவரது அந்தஸ்தை மீண்டும், மீண்டும் உங்கள் பேச்சில் கொண்டு வருகிறீர்கள். சிறுபான்மையினருக்கான அரசியல்சட்ட அவைக்குழுவின் தலைவராக சர்தார் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தியாவின் சிறுபான்மையினருக்கு கல்வி, கலாச்சார மற்றும் மத ரீதியான உறுதி மொழிகளை அரசியல் சட்டம் அளிக்கிறது என்றால், அதற்கு சர்தார் படேல் மற்றும் அந்தக்குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக சீக்கிய கபூர்தலாவின் கிறித்தவ மகளான ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். சிறுபான்மையினர் பற்றிய அரசியல் சட்டத்தின் பார்வையை மாற்றுவதோ அல்லது திருத்துவதோ கூடாது, அதை நீர்த்துப் போகச் செய்வது அல்லது பூசிமெழுகுவது ஆகிய வேலைகளையும் நீங்கள் செய்யக்கூடாது.
            அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் திரு.மோடி அவர்களே. அந்தக்குழுவில் வெற்றி வீரரான சர்தார் என்ன சொன்னார் என்பதை நீங்கள் படிக்க வேண்டும்.பலரும் ஏன் இந்த அளவுக்கு அச்சப்படுகிறார்கள்... அந்த அச்சத்தை வெளிப் படுத்தக்கூட ஏன் அச்சப்படுகிறார்கள்..?நீங்கள் ஊர்வலங்களில் பேசுகையில், ஆணை பிறப்பிக்கும் ஒரு பேரரசரைப் போலல்லாமல் இந்திய மக்கள் என்ற எண்ணத்தோடு இருக்கும் ஒரு ஜனநாயகவாதியைக் கேட்க விரும்புகிறார்கள். சிறுபான்மையினரை ரட்சிக்க வேண்டாம் திரு.மோடி அவர்களே, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள். “வளர்ச்சி” என்பது பாதுகாப்புக்கு ஈடாகாது. “குர் ஆன் ஒரு கையில், மறுகையில் லேப்டாப்” என்ற வார்த்தைகளிலோ அல்லதுஅந்த அர்த்தத்திலோ நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அந்தக்காட்சி அவர்களுக்கு நம்பிக்கையூட்டவில்லை. ஏனெனில் அவர்களை அச்சுறுத்தும் வகையில் மற்றொரு காட்சி ஓடுகிறது. கொலைகாரன் ஒருவனின் ஒரு கையில் இந்து வீரகாவியம் அடங்கிய டிவிடியும், மறுகையில் அச்சுறுத்தும் திரிசூலமும் அந்தக் காட்சியில் உள்ளது. முன்பெல்லாம், வகுப்பறையின் மூலையில் உப்பு தடவப்பட்ட தடியை தலைமையாசிரியர்கள் வைத்திருப்பார்கள்.
               அதைப் பார்த்தவுடன், நம்மைத் தோலுரித்து விடுவார் என்று நினைவுக்கு வரும். இங்கு, உப்பு தடவப்பட்ட தடியாக நமக்கு நினைவுக்கு வரும் சம்பவங்களில் ஒன்று என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாக முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் 42 இஸ்லாமியர்கள் மற்றும் 20 இந்துக்கள் கொல்லப்பட்டதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டதும்தான். “ஜாக்கிரதை, இந்தக் கதிதான் உனக்கு நேரும்“ என்பது ஜனநாயகத்தில் அச்சப்பட வைக்கும் மிரட்டல் வார்த்தைகள் அல்ல. ஆனால், பகல் நேர அச்சமும், இரவு நேர பயங்கரமும்தான் லட்சக்கணக்கான மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டுள்ள செய்தியாகும். இதைப் போக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது,
          திரு.மோடி அவர்களே. இதற்குரிய அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அது மட்டுமல்ல, அதற்கான உரிமையும், செய்ய வேண்டிய அவசியமும் கூட இருக்கிறது. சிறுபுத்தியுள்ள ஆலோசனைகளைப் புறக்கணிப்பதன் மூலம் இந்த அச்சத்தை உங்களால் போக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மத சிறுபான்மையினரும், வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மேற்கு பஞ்சாபிலிருந்து வெளி யேற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரி பண்டிதர்கள் ஆகியோரும் தங்கள் மனங்களில் வடுக்களைச் சுமக் கிறார்கள். உண்மையான அல்லது பொய்யான தூண்டுதல் காரணமாக திடீரென்று கலவரம் ஏற்படும் என்றும், அதனால் பலமடங்கு பிரதிபலன் கிடைக்கும் என்கிற அச்சமும் உள்ளது. இந்தக் கலவரத்தில் குறிப்பாக பெண்கள் தாக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அவமானத்தையும், சுரண்டலையும் தாங்கிக் கொண்டு தலித்துகள் மற்றும் பழங்குடியினர், அதிலும் குறிப்பாக பெண்கள், இருக்கிறார்கள். சிறுமைப்படுத்துதல், பாரபட்சம் மற்றும் தாக்குதல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து அமைதியின்மையை நோக்கி இழுக்கப்பட்டு, குடிமகன், மனிதன் ஆகிய தகுதிகளையே இல்லாமல் போகச் செய்கிறது.
           அவ்வாறு இழுக்கப்படுவதை உரக்கவும், வெளிப்படையாகவும் கவனியுங்கள், திரு. மோடி அவர்களே. இதன்மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெறுங்கள். அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் முதல் குரல் உங்களுடையதுதான் என்ற நம்பிக்கையை உங்களால் அளிக்க முடியும்.பன்மைத்துவம் கொண்ட குடியரசிடம் ஒற்றைத்தன்மை என்கிற மன்னரின் வார்த்தைகளைக் கொட்டும் அதிகப் பிரசங்கித்தனம் யாருக்கும் இருக்கக்கூடாது. இந்தியா என்பது பலவகைப்பட்ட வளங்களைக் கொண்ட வனமாகும். பலவகைகளைக் கொண்ட மண்ணை வளர்த்தெடுக்கவே அது விரும்புகிறது. அதன் முன்னால், ஒரே இனம், ஒரே கலாச் சாரம் மற்றும் ஒரே கடவுள் என்பதை முன்னிறுத்தக் கூடாது. அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு, பொது சிவில் சட்டம் என்கிற பழைய மற்றும் சம்பிரதாயமான கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோவில் ஆகியவை பற்றி உங்களது நிலைப்பாடு மற்றும் வடக்கு, வட மேற்கில் உள்ள “இந்து அகதிகள்” மற்றும் கிழக்கு, வடகிழக்கில் உள்ள “இஸ்லாமிய அகதிகள்” என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள உங்கள் அறிக்கைகள், நம்பிக்கையை ஏற்படுத்தாமல் அச்சத்தையே உண்டாக்கியுள்ளன.
                 அச்சத்தின் பிடியில் மக்கள் என்பது இந்தியக் குடியரசின் பண்பாக இருக்க முடியாது. மேலும், இந்தியப் பிரதமர் என்ற முறையில். நீங்கள்தான் இந்தக் குடியரசுக்கு பொறுப்பானவராக இருக்கிறீர்கள்.இந்தியாவின் சிறுபான்மையினர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பவர்கள். கயிற்றை யார் வேண்டுமானாலும் எரித்துக் கரியாக்கலாம். ஆனால், அதன் பிணைப்பை அறுத்துவிட முடியாது. பாரத மாதா வாழ்க என்ற முழக்கம், நிச்சயமாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் கட்டாயத் தேவையான ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை மிஞ்சிவிட முடியாது. இது உங்களுக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றி, திரு.மோடி அவர்களே. மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு வெற்றிகரமான காலகட்டம் இதைத் தொடரட்டும். இந்த உலகை ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தேறட்டும். உங்கள் ஆதரவாளர்கள் அதை எதிர்பார்க்காமல் இருக்கலாம். ஆனால், ஏராளமானோர் நீங்கள் அதை நடத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
               நீங்கள் பெரும் புத்திசாலி என்பதோடு, முந்தைய தலைமுறையின் தேவையற்ற மற்றும் விருப்பமற்ற ஆலோசனையை கண்டுகொள்ளமாட்டீர்கள். உங்கள் ஆதரவுத்தளத்தில் கைதட்டலுக்கு கைம்மாறு செய்யுங்கள். ஆனால், அதற்கு இணையாக, உங்களை ஆதரிக்காதவர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் செயல்படுங்கள். சிறுபான்மையினர் ஆணையத்தை மீண்டும் அமைக்கும்போது, அதில் இடம் பெறவேண்டியவர்களின் பெயர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்தும் கேட்டு வாங்கி, அதில் மாற்றம் செய்யாமல் அவர்களையும் இணையுங்கள்.
              இதே முறையை எஸ்.சி/எஸ்.டி ஆணையம், மொழிரீதியான சிறுபான்மையினர் ஆணையம் போன்றவற்றை அமைக்கும் போதும் கடைப்பிடியுங்கள். அடுத்த தலைமை தகவல் ஆணையர், தலைமைத் தணிக்கை அதிகாரி, மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் ஆகியோரைத் தேர்வு செய்யும்போதும், தேர்வுக்குழுவில் உள்ள அரசு சாரா உறுப்பினர்களின் பரிந்துரைகளை, அவை பாரபட்சமாக இல்லாத பட்சத்தில், ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் பலசாலி. இத்தகைய நடவடிக்கைகளை தைரியமாக எடுக்கலாம்.

தெற்கில் விழும் பள்ளத்தை கவனியுங்கள்            

              திரு. மோடி அவர்களே, உங்கள் கணக்கில் தெற்கில் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்தி பேசும் மாநிலம் சார்ந்த வெற்றி என்கிற பிம்பம், வடக்கு-தெற்கு என்ற பிளவை ஏற்படுத்திவிடக்கூடாது. தெற்கிலிருந்து ஒருவரை துணைப்பிரதமராக நியமியுங்கள். அவர் நிச்சயமாக அரசியல்வாதியாக இல்லாமல், சமூக அறிவியல் வல்லுநர், சுற்றுச்சூழல் நிபுணர், பொருளாதார அறிஞர் அல்லது புள்ளியியல் ஆய்வாளர் ஆகிய துறைகளில் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தனது அமைச்சரவையில் சண்முகம் செட்டியார், ஜான் மத்தாய், சி.டி.தேஷ்முக் மற்றும் கே.எல்.ராவ் ஆகியோரை நேரு வைத்திருந்தார். அவர்கள் எல்லாம்  காங்கிரஸ்காரர்கள் அல்ல. ஏன். அரசியல்வாதிகள்கூட கிடையாது.
             எஸ்.சந்திரசேகர் மற்றும் வி.கே.ஆர்.வி. ராவ் ஆகியோரை இந்திரா காந்தி அமைச்சர்களாக ஆக்கினார். மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கப்பட்ட பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய இருவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அமைச்சர்களாக ஏன் ஆக்கப்படவில்லை என்பதை, எனக்குள்ள அனுபவத்தில், என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மரபு உள்ளது. அதை ஆரோக்கியமானது என்று கூட ஒருவர் சொல்லலாம். நியமன உறுப்பினர்களை அமைச்சர்களாக ஆக்குவதில்லை என்பதுதான் அது. ஆனால், அவசரத் தேவைகள் என்பது அவசரத் தேவைகள்தான். நமக்கு இதுவரை இருந்த மிகச்சிறந்த கல்வி அமைச்சர்களில் நியமன உறுப்பினராக இருந்து அமைச்சரான நூருல் ஹசனும் ஒருவராவார்.
                ஏகாதிபத்திய மற்றும் கொள்கை ரீதியான தலைவர்களை உங்களுக்குப் பிடிக்கிறது. உங்களது போராட்டத்தில் நீங்கள் கருதுவது போலவே, மகா ராணா பிரதாப் சிங்காகவே இருங்கள். ஆனால் ஆற்றுப்படுத்துதலில் அக்பராக இருங்கள். இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்கள் இதயத்தில் சாவர்க்கராக இருங்கள். ஆனால், மனதால் அம்பேத்கராக இருங்கள். தேவை என்றால், மரபணுவில் ஆர்.எஸ்.எஸ்.சால் பயிற்றுவிக்கப்பட்ட இந்துத்துவாவை நம்புபவராக இருங்கள். ஆனால் இந்துஸ்தானத்தின் வாசிர்-இ-ஆசமாக(உருது மொழியில் பிரதமர்) இருங்கள். உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவிகிதத்தினர், நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
         நமது தேசத்தின் உயர் பொறுப்பில் நீங்கள் அமர்கையில் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாழ்த்துக்களோடும்,

                                                                                                        உங்கள் சக குடிமகன்
                                                                                                    கோபாலகிருஷ்ண காந்தி
---------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - தி இந்து(மே 19, 2014) 
தமிழில் - கணேஷ்
(கோபாலகிருஷ்ண காந்தி - காந்திஜியின் பேரன், மேற்குவங்கஆளுநராக பணியாற்றியவர்)
நன்றி : 



ஞாயிறு, 18 மே, 2014

காந்தியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள்...!

       
                                                                                                                                                           
           ''இந்திய தேசிய காங்கிரஸ்'' - இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது தேச விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்களையும், சிறை தண்டனைகளையும், தியாகங்களையும் செய்து இந்திய விடுதலைக்கு பங்காற்றிய தேசபக்த இயக்கங்களில் ஒன்று. ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும், ''தேசத்தந்தை'' என்று காங்கிரஸ் கட்சியினரால் மதிக்கப்பட்டவருமான மகாத்மா காந்தி, ''இந்திய தேசிய காங்கிரஸ் என்ற இயக்கம் நாட்டின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் விடுதலையும் கிடைத்தாகிவிட்டது. இனி இந்த இயக்கம் தேவையில்லை. காங்கிரஸ் இயக்கத்தை கலைத்துவிடுங்கள்'' என்று ஆணை இட்டார். ஆனால் அன்றைய காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர்.
           சுதந்திர இந்திய வரலாறும், காங்கிரஸ் கட்சி வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது. இந்தியா விடுதலை அடைந்து இதுவரை 67 ஆகின்றன. இந்த 67 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மட்டுமே சுமார் 55 ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்டிருக்கும். இவர்கள் மட்டுமே இந்த தேசத்தை ஆளப்பிறந்தவர்கள் போலவும், இவர்களால மட்டுமே நாட்டில் நிலையான, சிறந்த, நேர்மையான ஆட்சியைக் கொடுக்கமுடியும் என்பது போன்ற எண்ணங்களை மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டனர் என்பது தான் அதற்கு காரணமாகும். காங்கிரஸ் கட்சி மட்டுமே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்ததால்,   முதல் பிரதமர் நேரு மற்றும் அவரது குடும்பத்தின் வாரிசுகளின் கட்டுப்பாட்டில் ''இந்திய தேசிய காங்கிரஸ்'' சிக்கிக்கொண்டது. நேருவிற்கு பின் பரம்பரைப் பரம்பரையாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என இவர்கள் கைக்குள் கட்சியும் நாடும் போனது. இடையில்  நரசிம்மராவ் மட்டும் நேரு பரம்பரை அல்லாதவர். வாரிசு அரசியலும், நேரு வாரிசுகளின் போக்கும் கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்காமல் போக,  கட்சி அவ்வப்போது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், காங்கிரஸ்(ஐ), காங்கிரஸ்(எஸ்), மாநிலத்திற்கு ஒரு காங்கிரஸ் என பல்வேறு துண்டுகளாக உடைந்து, பின் பதவி, ஆட்சி, அதிகாரம் என்ற காலத்தின் கட்டாயத்தால் ஒன்றிணைந்து மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது.  
                 ஆனால் ராஜீவ் காந்தி மறைவிற்கு பிறகு கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்த காங்கிரஸ் கட்சியானது தாராள மய - தனியார் மய - உலக மய சுழலில் சிக்கி கரைந்து போனது. தேசம், தேசபக்தி, மக்கள் நலன் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டது. கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் பிரதமர்களாக இருந்த நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் மட்டுமல்லாது, இவர்களுடன் இவர்களின் மந்திரிகளும் அவர்களை போலவே தேசபக்தி இல்லாதவர்களாகவும், தேசத்தின் மீது அக்கறை இல்லாதவர்களாகவும் தான் இருந்தார்கள்.  நேருவின் காலத்தில் ''பொதுத்துறை நிறுவனங்களே இந்த நாட்டின் கோயில்கள்'' என்று மத்திய அரசால் தொடங்கப்பட்ட  பொதுத்துறைகளை  தனியார்க்கு தாரைவார்ப்பதும், பொதுத்துறையின்  பங்குகளை  விற்பனை செய்வதுமான அழிவு வேலைகளை எந்தவித பயமும் கூச்சமும் இல்லாமல் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் செய்து வந்தனர். இடையில் ஒரு ஆறு ஆண்டுகால பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் கூட இதே அழிவுக்கொள்கைகளுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு ஆதரவளித்தனர். 
                 இந்திய - அந்நிய பெருமுதலாளிகளுக்கு தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்க அனுமதித்தது, அவர்களுக்கு வரிச் சலுகை மற்றும் மானியம் போன்றவற்றை தாராளமாக அளித்தது, அதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை இழக்கச் செய்தது, ஆனால் அதே சமயத்தில் அரசின் வருமானத்திற்காக சாதாரண - எளிய மக்கள் மீது பல்வேறு வரிகளை விதித்தது, எல்லா துறைகளிலும் கொள்ளை மற்றும் ஊழல்களை கண்டுகொள்ளாமல் இருந்தது, ஊழல் செய்தவர்களை தண்டனைகளிலிருந்து காப்பாற்றியது போன்ற தேச விரோதச் செயல்களையும், மக்கள் விரோதச்செயல்களையும் மட்டுமே இந்த கால் நூற்றாண்டு கால காங்கிரஸ் கட்சி செய்து வந்தது என்றால் அதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த 16வது மக்களவைத் தேர்தல் முடிவே அதற்கு சாட்சி சொல்கிறது. தேர்தல் தோல்வி பயத்தில் பலத் தலைவர்கள் தேர்தலில் நிற்க பயந்து ஓடி ஒளிந்தார்கள என்றால்,  தேர்தல் முடிவிலும் முன்னேபோதும் இல்லாத அளவிற்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது என்றால் இந்திய மக்களின் கோபம் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்பதை  நம்மால் உணரமுடிகிறது. அந்த அளவிற்கு நாட்டு  மக்கள் வதைப்பட்டிருக்கிறார்கள்.
             அதனால் தான் நமக்கு அன்றே காந்தி சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றது. தேசபக்தி இல்லாத, தேசத்தையே அன்னியர்க்கு விலைபேசி விற்ற, நாட்டையே கொள்ளையடிப்பதற்கு - சுரண்டுவதற்கு அனுமதியளித்த, ஊழல்களை கண்டுகொள்ளாமல் ஊக்குவித்த காங்கிரஸ் கட்சி - இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இனியும் இருந்து பயனென்ன...? இல்லாமல் போகட்டோமே. காந்தியின் ஆணைப்படி காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். அது தான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது.

வாசிப்பை நேசிப்போம் - கம்பன் கனவுக்கும் கம்யூனிசமே மார்க்கம்!


 புதிய புத்தக விமர்சனம் : அ. குமரேசன்                
           மார்க்சிய ஒளியால் கண்கூசிப்போகிறவர்கள் அதை இருட்டடிப்பதாக நினைத்துக் கொண்டு, “அது ஒரு அந்நியத் தத்துவம்” என்ற ஒரு பலகையைத் தொங்கவிடுவதுண்டு. பாரம்பரியம், பண்பாட்டுத் தனித்துவம் என்ற பெயர்களில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வுகளை, பிறப்பால் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற சமூகப் பாகுபாடுகளை, அடங்கியிருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்ற ஆணாதிக்கக் கட்டளைகளை அப்படியப்படியே பராமரிக்க விரும்புகிறவர்கள், அவற்றில் கீறலை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகளையெல்லாம் இப்படி “அந்நியம்” என்று முத்திரையைக் குத்துவதன் மூலமாகத்தான் மழுங்கடிக்க முயல்கிறார்கள். மார்க்சியமோ இந்த ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் ஆதிக்கங்களையும் அடியோடு பெயர்த்து உடைக்கக்கூடியது.
           கீறல்களையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பெரும் உடைப்பை ஏற்றுக்கொள்வார்களா என்ன...? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று இங்கிருந்தே முழக்கங்கள் எழுந்த வரலாறு உண்டு. உலகம் முழுவதும் சமத்துவத்திற்காக எழுகிற இத்தகைய முழக்கங்களை உள்வாங்கிய அரசியல், சமுதாய இயக்க அறிவியலே மார்க்சியம். அதே வேளையில் அது அப்படியப்படியே படியெ டுத்து எல்லா இடங்களிலும் ஒட்டவைக்கப்படுகிற மேற்கோள்களின் தொகுப்பல்ல. அந்தந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ற முறையில் பொருத்தப்பட வேண்டிய, பொருந்தக்கூடிய, கோட்பாடும் செயல்பாடும் இணைந்த இயங்குவிசையே மார்க்சியம். தமிழ்மண் உள்ளிட்ட இந்தியப் பரப்பில் அது எப்படி பொருந்தி இயங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் நூல்தான் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்.’         
              இங்கே மார்க்சிய இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், மார்க்சியவாதிகள் நடத்திய போராட்டங்களையும் கால வரிசைப்படி அடுக்கிக்கொண்டிராமல், எப்படி இந்த மண்ணுக்கேற்றதாக உலக உழைப்பாளி வர்க்கத் தத்துவம் தழைத்திருக்கிறது என்பதை தர்க்கப்பூர்வ ஆய்வாக முன் வைக்கிறார் நூலாசிரியர் அருணன். “இதை இரண்டுவிதமாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக்கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால் அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பது...” என்று அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அருணன். கம்யூனிஸ்ட்டுகள் நவம்பர் புரட்சி தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிலர், அந்தப் புரட்சியால் உருவான சோவியத் யூனியனே தகர்ந்துவிட்ட நிலையில் இங்கே ஏன் இன்னும் அதைக் கொண்டாடு கிறார்கள் என்று கேட்பதுண்டு. புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘கம்யூனிஸ்டு அறிக்கையும் நவம்பர் புரட்சியும்’ அவர்களுக்கு பதிலளிக்கிறது. “மார்க்சிய சிந்தனையின் தோற்றத்தைக் ‘கம்யூ னிஸ்டு அறிக்கை’ குறித்தது என்றால், அது இந்த அளவுக்கு உலகளாவிய சித்தாந்தமாய் - செயல் பாடாய் பரவியதற்கு நவம்பர் புரட்சியே முதல் காரணமாகும்.
               அறிக்கை கொள்கைப் பிரகடனம் என்றால், ''புரட்சி அதன் செயல்பாட்டு வடிவம். இரண்டும் தத்துவம் மற்றும் அரசியல் ஞானிகளின் ஆய்வுப் பொருளாய் இன்னும் வெகு காலத்திற்கு இருக்கும்,” என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார். அறிக்கையின் கூறுகளையும், புரட்சியின் விளைச்சல்களையும் விரிவாக விளக்குகிற அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில், “ஆனால் ஒரு விஷயம். நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் இந்த வேளையில், கம்யூனிஸ்டுகளாகிய நாம் வரலாற்றிலிருந்து உரிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த கம்யூனிஸ்டு அறிக்கையின் சாரத்தை நடை முறைப்படுத்துவதில் சோவியத் அமைப்பு பெற்ற வெற்றி தோல்விகளை கவனமாக ஆராய வேண்டும்...” என்கிறார். ஒரு மார்க்சிய மனம் இப்படித்தான் சரிநிலையில் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்க்கும்.மனித சமுதாயம் உறைந்துகிடக்கவில்லை, இயங்கிக்கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறவர்களே கூட, அதுவெல்லாம் கடவுள் செயல் என்றோ, சில மாமனிதர்களின் வரலாறு என்றோதான் சொல்கிறார்கள். இப்படி வரலாற்றைக் கடவுள் வழிபாட்டுடன் அல்லது தனிமனித வழிபாட்டுடன் கட்டியிழுக்க முயல்கிறவர்களிடம், அந்த அவதார நாயகர்கள் ஏன் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தோன்றினார்கள் என்பதற்கு பதில் இருப்பதில்லை. இத்தகைய கேள்விகளைக் கேட்டு 19ம் நூற்றாண்டில் எழுந்த மார்க்சியம் உலக சமூக இயக்கம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை, ஒரு முழுமையான தத்துவத்தைத் தந்தது. மனித குலம் தன்னைத்தானே கண்டு கொண்டது... என்று தனக்கே உரிய எளிமையும், இனிமையும் கலந்த சொல்லாடல்களில் விவரித்துச் சொல்கிறார் நூலாசிரியர்.
              ''மார்க்சியம்'' எனும் மங்கா ஒளிவிளக்கின்  ஒளியால் கண்கூசிப்போகிறவர்கள் அதை இருட்டடிப்பதாக நினைத்துக் கொண்டு, “அது ஒரு அந்நியத் தத்துவம்” என்ற ஒரு பலகையைத் தொங்கவிடுவதுண்டு. பாரம்பரியம், பண்பாட்டுத் தனித்துவம் என்ற பெயர்களில் ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வுகளை, பிறப்பால் உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற சமூகப் பாகுபாடுகளை, அடங்கியிருப்பதே பெண்ணுக்குப் பெருமை என்ற ஆணாதிக்கக் கட்டளைகளை அப்படியப்படியே பராமரிக்க விரும்புகிறவர்கள், அவற்றில் கீறலை ஏற்படுத்தக்கூடிய சிந்தனை களையெல்லாம் இப்படி “அந்நியம்” என்று முத்திரையைக் குத்துவதன் மூலமாகத்தான் மழுங்கடிக்க முயல்கிறார்கள். மார்க்சியமோ இந்த ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் ஆதிக்கங்களையும் அடியோடு பெயர்த்து உடைக்கக்கூடியது. கீறல்களையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பெரும் உடைப்பை ஏற்றுக்கொள்வார்களா என்ன...? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று இங்கிருந்தே முழக்கங்கள் எழுந்த வரலாறு உண்டு.
            உலகம் முழுவதும் சமத்துவத்திற்காக எழுகிற இத்தகைய முழக்கங்களை உள்வாங்கிய அரசியல், சமுதாய இயக்க அறிவியலே மார்க்சியம். அதே வேளையில் அது அப்படியப்படியே படியெ டுத்து எல்லா இடங்களிலும் ஒட்டவைக்கப்படுகிற மேற்கோள்களின் தொகுப்பல்ல. அந்தந்த நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்ற முறையில் பொருத்தப்பட வேண்டிய, பொருந்தக்கூடிய, கோட்பாடும் செயல்பாடும் இணைந்த இயங்குவிசையே மார்க்சியம். தமிழ்மண் உள்ளிட்ட இந்தியப் பரப்பில் அது எப்படி பொருந்தி இயங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் நூல்தான் ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்.’ இங்கே மார்க்சிய இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், மார்க்சியவாதிகள் நடத்திய போராட்டங்களையும் கால வரிசைப்படி அடுக்கிக்கொண்டிராமல், எப்படி இந்த மண்ணுக்கேற்றதாக உலக உழைப்பாளி வர்க்கத் தத்துவம் தழைத்திருக்கிறது என்பதை தர்க்கப்பூர்வ ஆய்வாக முன் வைக்கிறார் நூலாசிரியர் அருணன். “இதை இரண்டுவிதமாக உணர்ந்துகொள்ள வேண்டும்.
           ஒன்று, மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் உள்ளிட்ட இந்திய மண்ணுக்கும் பொருந்தக்கூடியதே. இரண்டு, இந்த மண்ணுக்கென்று சில தனித்துவமான தன்மைகள் இருப்பதால் அவற்றுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பது...” என்று அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அருணன். கம்யூனிஸ்ட்டுகள் நவம்பர் புரட்சி தினத்தைக் கொண்டாடுவது பற்றி சிலர், அந்தப் புரட்சியால் உருவான சோவியத் யூனியனே தகர்ந்துவிட்ட நிலையில் இங்கே ஏன் இன்னும் அதைக் கொண்டாடு கிறார்கள் என்று கேட்பதுண்டு. புத்தகத்தின் முதல் கட்டுரையான ‘கம்யூனிஸ்டு அறிக்கையும் நவம்பர் புரட்சியும்’ அவர்களுக்கு பதிலளிக்கிறது. “மார்க்சிய சிந்தனையின் தோற்றத்தைக் ‘கம்யூ னிஸ்டு அறிக்கை’ குறித்தது என்றால், அது இந்த அளவுக்கு உலகளாவிய சித்தாந்தமாய் - செயல் பாடாய் பரவியதற்கு நவம்பர் புரட்சியே முதல் காரணமாகும். அறிக்கை கொள்கைப் பிரகடனம் என்றால், புரட்சி அதன் செயல்பாட்டு வடிவம்.
              ''இரண்டும் தத்துவம் மற்றும் அரசியல் ஞானிகளின் ஆய்வுப் பொருளாய் இன்னும் வெகு காலத்திற்கு இருக்கும்,” என்று ஆணித்தரமாகப் பறை சாற்றுகிறார். அறிக்கையின் கூறுகளையும், புரட்சியின் விளைச்சல்களையும் விரிவாக விளக்குகிற அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில், “ஆனால் ஒரு விஷயம். நவம்பர் புரட்சியைக் கொண்டாடும் இந்த வேளையில், கம்யூனிஸ்டுகளாகிய நாம் வரலாற்றிலிருந்து உரிய படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்த கம்யூனிஸ்டு அறிக்கையின் சாரத்தை நடை முறைப்படுத்துவதில் சோவியத் அமைப்பு பெற்ற வெற்றி தோல்விகளை கவனமாக ஆராய வேண்டும்...” என்கிறார். ஒரு மார்க்சிய மனம் இப்படித்தான் சரிநிலையில் அனுபவங்களை சீர்தூக்கிப் பார்க்கும்.மனித சமுதாயம் உறைந்துகிடக்கவில்லை, இயங்கிக்கொண்டே இருக்கிறது, மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறவர்களே கூட, அதுவெல்லாம் கடவுள் செயல் என்றோ, சில மாமனிதர்களின் வரலாறு என்றோதான் சொல்கிறார்கள்.
          இப்படி வரலாற்றைக் கடவுள் வழிபாட்டுடன் அல்லது தனிமனித வழிபாட்டுடன் கட்டியிழுக்க முயல்கிறவர்களிடம், அந்த அவதார நாயகர்கள் ஏன் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் தோன்றினார்கள் என்பதற்கு பதில் இருப்பதில்லை. இத்தகைய கேள்வி களைக் கேட்டு 19ம் நூற்றாண்டில் எழுந்த மார்க்சியம் உலக சமூக இயக்கம் பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை, ஒரு முழுமையான தத்துவத்தைத் தந்தது. மனித குலம் தன்னைத்தானே கண்டு கொண்டது... என்று தனக்கே உரிய எளிமையும், இனிமையும் கலந்த சொல்லாடல்களில் விவரித்துச் சொல்கிறார் நூலாசிரியர்.
               ''மார்க்சியம் எனும் மங்கா ஒளிவிளக்கு'' என்ற கட்டுரையில், அந்த மார்க்சியம் என்றால் என்ன என்று விளக்குகிற இடம் முக்கியமானது.
            மார்க்சியம் ஒரு பொருளாதாரவாதம் என்று வெறும் காசுக்குடுவைக்குள் அடைக்க முயல்கிறவர்களை, “இறுதிக்காரணி” பற்றிய விளக்கம் அந்தக் குடுவையிலிருந்து மீட்கக் கூடியதாக இருக்கிறது.“மார்க்சியத்தின் விஞ்ஞானப்பூர்வ நாத்திகத்தைத் தவிர்த்துவிட்டு நீங்கள் தத்துவம் பேச முடியாது. வர்க்கப் போராட்டம் மற்றும் அரசு பற்றிய மார்க்சிய நோக்கைக் கழித்துவிட்டு நீங்கள் அரசியல் கோட்பாடுகளைப் பேச முடியாது. மொழி பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் பண்பாடு பற்றிப் பேச முடியாது. யதார்த்தவாதம் எனும் மார்க்சிய அழகியலைப் புறந்தள்ளிவிட்டு நீங்கள் கலை-இலக்கியம் பற்றிப் பேச முடியாது,” என்ற பத்தி, மார்க்சியத்தின் பேரண்டத்தன்மையை அழகாகப் புரியவைக்கிறது.கார்ப்பரேட் உலகிற்கேற்ற காவி அரசியலைப் புகட்டுகிற பொருளாதார வல்லுநர் எஸ். குருமூர்த்தி ‘மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதி மார்க்கெட்டில் விட்டுள்ளார்.
              இப்படிப்பட்டவர்கள் இப்போதும் மார்க்சை எண்ணி மிரள்வது பற்றிச் சொல்கிறது ‘எஸ். குருமூர்த்திக்கு பதில்’ என்ற மூன்று பாகங்களைக் கொண்ட நீண்ட கட்டுரை. மனதைத் திறந்து வைத்துக்கொண்டு விவாதிக்க முன்வருவோரால் அந்தக் கட்டுரை வரவேற்கப்படும்; அறிவுத்தளத்திலும் போராட்டக்களத்திலும் இயங்கிடும் தோழர்களுக்கு ஒரு கையேடாகவும் பயன்படும். குருமூர்த்திகள் துதிக்கிற இந்தியபாணி முதலாளித்துவமானது, மொத்தத்தில் சாதியமும் ஆணாதிக்கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித்துவமே என்று காட்டுகிற பகுதி, மதவாதம் தோய்ந்த சுரண்டல் கூட்டின் ஒப்பனைகளைக் கலைத்துப் போடுகிறது.
         அந்த வருணாசிரமத்தை அன்றைக்குத் தமிழக மண்ணில் வளர்த்ததே ராஜராஜ சோழனின் கைங்கரியம் என்பதன் மீது வெளிச்சம் பாய்ச்சுகிற மற்றொரு கட்டுரை, அந்த மன்னனைப் பற்றி கட்டப்பட்டுள்ள, சில பகுத்தறிவாளர்களாலும் நம்பப்படுகிற பொய்மைகளை அசைத்து அப்புறப்படுத்துகிறது. பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர் பிராமணியத்தை புதிய சூழல்களுக்கேற்ப நியாயப்படுத்தியவர்களே என்று தனது ‘காலந்தோறும் பிராமணியம்’ நூலில் எழுதியிருக்கிறார். அது பற்றிய ஒரு நேர் காணல் கேள்விக்கு இவர் அளித்துள்ள பதில், அந்த நூல் தொகுப்பை முழுமையாகப் படிக்கத் தூண்டுகிறது.
            அயோத்திதாசர், சிங்காரவேலர், அம்பேத்கர், பெரியார் என இந்திய - தமிழக சமுதாய வளர்ச்சியில் தலையாய பங்களித்தோர் பற்றிய கட்டுரைகளும் அவ்வாறு விரிவாகப் படித்தறியும் முனைப்பை ஏற்படுத்துகின்றன. “எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்துவதாலே இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை மாதோ”-என்ற கம்பன் கனவோடு இணைத்து இந்த வாதங்களை முன்வைத்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. ஆசிரியர் தான் கூறும் விளக்கங்களே இறுதியானவை என்று முடித்துக்கொள்ளவில்லை என்பது மற்றொரு சிறப்பு.  தனது பதில்கள் “சரியானவை தானா  என்று வாசகர்கள் யோசிக்கலாம். அந்த யோசனை மார்க்சியத்தை மேலும் கற்பது, தமிழக - இந்திய வரலாற்றை மேலும் வாசிப்பது, நடப்பு வாழ்வை மேலும் கூர்ந்து நோக்குவது என்பதற்கு இட்டுச் செல்லுமேயானால் அதுவே இந்த நூலின் வெற்றி என்பேன்,” என்கிறார். நூலைப் படிக்கிற ஒவ்வொருவரும் அந்த வெற்றிக்கு சாட்சியமாவார்கள்.

மண்ணுக்கேற்ற மார்க்சியம்
ஆசிரியர்: அருணன்
வெளியீடு :
வசந்தம் வெளியீட்டகம், 
69-24 ஏ, அனுமார் கோயில் படித்துறை, 
சிம்மக்கல், மதுரை - 625001. 
தொலைபேசி: 0452-2625555, 2641997
மின்னஞ்சல்: vasanthamtamil@yahoo.co.in
பக்கங்கள்: 752 விலை ரூ.400
நன்றி :      
       

காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பு : பாஜக அறுவடை

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,                             
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,                    
                                 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                          
              16வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இறுதியாகத் தேர்தல் ஆணையம் தன் அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் தங்கள் ஆய்வினையும் மதிப்பீடுகளையும் முடிவு செய்யும். தேர்தல் முடிவுகள் குறித்து பூர்வாங்கமான ஆய்வினை மேற்கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மே 18 அன்று கூடுகிறது. அதனைத் தொடர்ந்து மத்தியக்குழு ஜூன் 7, 8 தேதிகளில் கூடுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்களும் தங்கள் மாநிலம் குறித்த பூர்வாங்க ஆய்வுகளை அளித்திடும். 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனுதாப அலை வீசியதை அடுத்து அன்றைக்கு 542 மக்களவை இடங்களில் 405 இடங்களைப் பெற்று ராஜீவ் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. 
             அதன்பின்னர் முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் முதன்முறையாக பாஜக மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக முன்னேறியிருக்கிறது. பாஜக தன்னுடன் பயணம் செய்த தேஜ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளைத் தூக்கிஎறிந்துவிட்டு தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையினைப் பெற்றிருக் கிறது.தேர்தல் பிரச்சாரத்தின்போதே, நாளும் தங்கள் மீது ஏவப்படும் தாக்குதல் களிலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஓர் அரசாங்கம் முன்வராதா என்று மக்கள் ஏங்கத் துவங்கியிருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
               காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம், அதிலும் குறிப்பாக கடைசி ஈராண்டு காலத்தில், மக்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர் வாலும், பொருளாதார மந்தத்தாலும் அதனைத் தொடர்ந்து உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியது மட்டுமல்லாமல், நாட்டின் செல்வாதாரங் களையும் மிகப்பெரிய ஊழல்கள் மூலமாக கொள்ளையடித்தனர். இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தியை பாஜக தேர்தல் வெற்றிக்கு மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டது. இந்தப் பின்னணியில், பாஜக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பண பலத்துடனும், ஊடகங்களின் மூலமாகவும் தனக்குச் சாதகமாக மிகவும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மிகவும் வெற்றிகரமான முறையில் சித்தரித்ததுடன், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலையும் `வளர்ச்சி’ மற்றும் `நல்லதோர் அரசாங்கம்’ ஆகியவற்றிற்கான உறுதி மொழிகளையும் மிகவும் சாமர்த்தியமாக இணைத்து தேர்தல் பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டது.
            முதலாவதாக, 2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே, நரேந்திர மோடி, இந்துத்துவா மதவெறியை முன் னெடுத்துச் செல்வதற்கு, சரியானதொரு நபராக ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரத்தால் முன்னிறுத்தப்பட்டு வந்தார். எனவேதான், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரம் எதிர்காலத்தின் பிரதமராக அவரை முன்னிறுத்துவதே போதுமானது என்றும், வேறு எவ்விதமான பிரச்சாரமும் தேவையில்லை என்றும் கருதின. பாஜக பிரச்சாரத்தின் வலுவான அடிநாதமாக இது தொடர்ந்தது.இரண்டாவதாக, பெரும்பான்மை யைப் பெறுவதற்கு இந்துத்துவாவை முன்னிறுத்தினால் மட்டும் போதாது என்கிற கடந்த கால அனுபவம் அவர் களை எச்சரித்தது. எனவேதான் இம்முறை, நரேந்திர மோடி பிரதமரானால் மட்டுமே, இந்தியா முழுமையும் குஜராத் போல வளர்ச்சியடையும் என்று பாஜக சரடு விட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
குஜராத், பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாக சித்தரிக்கப்பட்டது. `வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர்ராம லக்ஷ்மி, “மோடி புராணத்தை உருவாக்குதல்’’ என்னும் தன்னுடைய செய்திக்கட்டுரையில் சுட்டிக்காட்டி யிருப்பதைப்போல, பாஜகவின் பிரச்சார மேலாளர்கள், அயோத்தியை யும், ராமரையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, மிகவும் புத்தி சாலித்தனத்துடன் குஜராத்தையும் அதன் தற்போதைய கடவுளான மோடியையும் சுற்றி இந்தி யர்களைத் திரட்டியிருக்கிறார்கள். நாட்டு மக்களின் மனதில் குஜராத், “பாலும் தேனும் ஆறாக ஓடும் மாநிலமாகவும், இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கமாகவும், அங்கே உள்ள அனைவரும் வேலை பார்ப்பது போலவும், அனைவருக்கும் எப்போதும் மின்சாரம் உண்டு என்பது போலவும், விவசாயிகள் பேரானந்தத்துடன் வாழ்வது போலவும், அங்கேயுள்ள நெடுஞ்சாலைகள் உலகிலேயே சிறந்தவை போலவும், ஊழல் நோய் அண்டாத மாநிலம் போலவும்’’ கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
          மறுபக்கத்தில், காங்கிரஸ் தரப்பில் நடைபெற்ற பிரச்சாரம் முற்றிலுமாக வலுவிழந்த நிலையில் அமைந்திருந்தது. இவ்வாறு மோடி குறித்து எழுப்பப்பட்ட அண்டப்புளுகுகளை, ஆகாசப் புளுகுகளை உடைத்தெறியக்கூடிய விதத்தில்வலுவான முறையில் அமையாதிருந்தது.  குஜராத் வளர்ச்சி மாடல் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அது அடுக்க முயன்ற போதிலும், காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைகளால் வெறுப் படைந்திருந்த மக்கள் அக்கட்சி கூறுவதை நம்பத் தயாராக இல்லை. ஐமுகூ அரசாங்கம் மக்கள் மீது வறுமையை யும் பொருளாதாரச் சுமைகளையும் திணிக்கும் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியபோதே, காங்கிரசின் தோல்வி தொடங்கிவிட்டது. மேலும், காங்கிரஸ் தலைமை, தன் ஆட்சிக்காலத்தில் தான் மக்களுக்கு அளித்த அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை - கல்விபெறும் உரிமை, தகவல் பெறும் உரிமை, பழங்குடியினருக்கு வன நிலங்கள் மற்றும் வன உற்பத்தியில் அளித்த உரிமை, கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமை, முதலானவற்றைக் கூட - (இவற்றில் எவ்வளவோ குறைபாடுகள் இருந்தபோதிலும்கூட) மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லவும், இவ்வாறு எடுத்துச் சொல்வதன் மூலம் தன் ஊழியர்களுக்கு உற்சாகமூட்டவும்கூடத் தவறிவிட்டது.
          மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுமே, இடதுசாரிகளின் செல்வாக்கின்கீழ் ஐமுகூ-1 அரசாங்கம் இருந்தபோது தொடங்கப்பட்டவைகளாகும். இவை ஐமுகூ-2 அரசாங்கத்தின் காலத்தில் அமல்படுத்தப்பட்டது. இவற்றைஅமல்படுத்தியதன் மூலம் இடதுசாரி களுக்கு ஒரு கவுரவத்தை கொடுக்க காங்கிரஸ் விரும்பாதிருந்த போதிலும், தனக்காகவாவது இவற்றை அக் கட்சி பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்.இவ்வாறு அக்கட்சி கூற முன்வராத திலிருந்தே இவற்றை அது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் மேற்கொண்டது என்பது மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந் நடவடிக்கைகளின் மீது அதற்கிருந்த நேர்மையின்மைதான் இதற்குக் காரணமாகும். இத்துடன் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அது பின்பற்றியதிலிருந்த வெறியுடன் மெகா ஊழல்களும் இணைந்ததும்தான் பாஜக பிரச்சாரத்தை எதிர்ப்பதற்குத் திராணியற்ற நிலைக்கு அதனைத் தள்ளிவிட்டது. ஆயினும், இத்தேர்தல்கள், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆழமான பரிசீலனை மேற்கொள்வதற்காக சில முக்கிய பிரச்சனைகளையும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளன.
          தேர்தலில் பண பலம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. பாஜக பிரச்சாரத்தில் பணம் ஆறாய் ஓட அனுமதிக்கப்பட்டது. மறுபக்கத்தில், இவ்வாறு பணம், வாக்காளர் களுக்குக் விலைக்கு வாங்கக்கூடிய விதத்தில் பல்வேறு இழிவழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணம் தரும் பழக்கத்தைப் பல கட்சிகளும் நடைமுறைப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பணத்தை பறிமுதல் செய்துள்ளது. பணம் மட்டுமல்ல, மது மற்றும் பல்வேறுவிதமான இலவசப் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளது.
             கூடுதலாக, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் உயிருடன் இருக்க முடியாது என்பது போன்ற பயங்கரவாத மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களும் நடைபெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து மிக விரிவான அளவில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்களித்தல் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டிருப்பதன் மூலம், இடது சாரிக் கட்சிகளின் மக்கள் செல்வாக்கை உண்மையாகப் பிரதிபலிக்க முடியாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
              தேர்தல் ஆணையத்திற்கு எண்ணற்ற முறையீடுகள் அளிக்கப்பட்டபோதிலும், இவற்றைச் சரிசெய்திட அதனால் முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமாகும். கடும் விலைவாசி உயர்வாலும், மெகா ஊழல்களாலும் மக்கள் மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளால் அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடிய வில்லை. இடதுசாரிகள் தங்கள் நிலையை திரிபுராவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன், நிலை நிறுத்திக்கொண்டுள்ள அதே சமயத்தில், கேரளாவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள அதே சமயத்தில், இத்தேர்தல் முடிவுகள் பலவீனங்களை அடையாளம் கண்டு, அவற்றை சரிப் படுத்துவதற்கான தேவையையும் உணர்ந்துள்ளன.முறையான தேர்தல் சீர்திருத்தங்கள் மூலமாக இத்தகு சிதைவுகளை ஆழமான முறையில் சரிசெய்ய வேண்டியது நாட்டின்முன் எழுந்துள்ள அவசர மற்றும் அவசியத் தேவையாகும்.
           எடுத்துக்காட்டாக, அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவி அளித்தல், அரசியல் கட்சிகள் செலவினங்களுக்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல் (தற்சமயம் வேட்பாளர்களுக்கு மட்டுமே அத்தகைய கட்டுப்பாடுகள் உள்ளன) போன்ற பிரச்சனைகள் ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாகும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று ஒளிவுமறைவின்றி அறிவித்திருக்கிற ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான்.
             மாறாக,கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறைக்கு நிதி அளித்திடலாம் என்றும், ஆயினும் அத்தகைய நிதிதேர்தல் ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் ஓர் அமைப்பிற்கோ அல்லது அரசால் அமைக்கப்படும் ஒரு நிறுவனத்துக்கோ தான் செல்ல வேண்டும் என்றும், அந்த அமைப்பு தேர்தலை நடத்திட செலவு செய்திட வேண்டும் என்றும் கூறுகிறோம். மேற்கத்திய நாடுகள் பலவற்றின் நடைமுறை இதுதான். முக்கியமாக, நம்முடைய தேர்தல் நடைமுறையில் ஒரு பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே வாதிட்டுக் கொண்டிருக்கிறது.தற்சமயம் பாஜக பெற்றிருக்கும் மிகப் பெரிய வெற்றிக்குப்பின்பும் கூட, அது பெற்றுள்ள வாக்கு சதவீதம் என்பது 50 சதவீதத்திற்கும் மிகவும் குறைவுதான். இதன் பொருள், நாட்டு மக்களில் பாஜக விற்கு எதிராக வாக்களித்தவர்கள் அதிகம்என்பதேயாகும். போட்டியிடும் வேட் பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற் றவர் வென்றவராகக் கருதப்படுவார் என்கிற தற்போது நம்முடைய தேர்தல் நடை முறையில் உள்ள முரண்பாடு அல்லது குறைபாடு இது.
       பக்குவப்பட்ட பல ஜனநாயக நாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். ஒருபகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு முறை கொண்டுவரப்பட்டால் தற்போது மிகவும் பூதாகரமான முறையில் அதிகரித்து, மக்களின் ஜனநாயகக் கருத்தை சிதைக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பணபலம் மற்றும் புஜபலத்தின் செல்வாக்கைக் குறைத்திட கணிசமான அளவிற்கு உதவிடும். இரு மக்களவைத் தொகுதிகளை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்குகள் கொடுத்து, ஒரு வாக்கை குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை அதன் கொள்கை மற்றும் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் கட்சிக்கும் அளித்திடலாம். அதேபோன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு முன்னுரிமைப் பட்டியலை முன்னதாகவே அளித்திடும்.
           தேசிய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் சதவீதத்தின் அடிப்படையில், ஒவ்வொரு கட்சிக்கும் அது முன்னதாகவே அளித்துள்ள முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் இடங்களை நிரப்பிடும். இத்தகைய பரிந்துரைகளையும், சீர்திருத்தங்களையும் ஆழமாகப் பரிசீலனை செய்வதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. மேலும், இப்போது நடைபெற்ற தேர்தல்கள் தற்போதுள்ள சட்டங்களில் உள்ள பல ஓட்டைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, பல தொகுதிகளில் தேர்தல் வேலைகள் தொடங்கிய பின்னர் நரேந்திர மோடி தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததை நாடு பார்த்தது.
           பல தொகுதிகளில் தேர்தலின் முதல் கட்டம் நடைபெறத் துவங்கிய பின்னே, பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வாரணாசியில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், நரேந்திர மோடி குஜராத்திலிருந்து வீடியோ பேச்சு ஒன்றை வெளியிடுகிறார். அது தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாறு இப்போதுள்ள சட்டங்களில் ஏராளமான ஓட்டைகள் காணப்படுகின்றன. பாஜக வெற்றி தொடர்பாக அக்கட்சி யால் அவிழ்த்து விடப்பட்ட சரடுகள் அனைத்தும் விரைவில் மாயைதான்என்பது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகிவிடும். எதிர்காலத்தில் ஏராள மான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜக விற்கு இத்தேர்தல் பிரச்சாரத்திற்காக நிதி உதவி செய்தவர்கள் அவ்வாறு செலவு செய்ததை எவ்வளவு விரைவாகத் திரும்ப எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாகத் திரும்ப எடுப்பதில் மிகவும் குறியாக இருப்பார்கள்.
          இதன் பொருள் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படும் என்பதாகும். மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். பாஜகவின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்துத்துவா பிரச்சாரம் நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களுக்கே வேட்டு வைக்கக்கூடியவைகளாகும். இவை இரண்டையும் எப்படி வலுவாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலம் அமையவிருக்கிறது.
         ஒரு பக்கத்தில், சமூக நல்லிணக்கம், நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகஅடித்தளங்களை பாதுகாக்கக்கூடிய விதத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிடவும், மறுபக்கத்தில் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதுடன் நம் நாட்டிற்குத் தேவையான மாற்று மக்கள் ஆதரவு கொள்கைதிசைவழிக்கான போராட்டத்தை நடத்திடவும் இவ்வாறு இவ்விரண்டு திசைகளி லும் வெகுஜன போராட்டங்களை வலுப் படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டிருக்கிறது.இத்தேர்தல்களுக்குப்பின்னர், இடது சாரிகள் வலுவாகவுள்ள இடங்களில் நம்மீது ஏவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தாக்குதல்களை உறுதியுடன் எதிர்த்து முறியடித்திடும் அதேசமயத்தில், இவ்விரு திசைவழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும். உறுதி மேற்கொள்வோம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி-தமிழில் : ச.வீரமணி         

சனி, 17 மே, 2014

மோடியின் வெற்றி - நாட்டைப் பிடித்த கேடுகாலம்

         ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டு கால காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  மக்களுக்கெதிரான தவறான ஆட்சி நடத்தியதால் மக்களின் வெறுப்புக்கும், அதீத கோபத்திற்கும் உள்ளானதால், மக்களின்  வெறுப்பு அலை - எதிர்ப்பு அலை பாரதீய ஜனதாக் கட்சிக்கு சாதகமாக அடித்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், காங்கிரஸ் கட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு அலை இடதுசாரிகளின் பக்கம்  திரும்பிவிடாமல் இருக்க, தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே   இந்திய பெருமுதலாளிகள் அந்த எதிர்ப்பு அலைக்கு ''மோடி அலை'' என்ற பெயரைச் சூட்டி காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாரதீய ஜனதாக் கட்சியை நோக்கி திருப்பிவிட்டனர். அதற்காக மோடி என்ற பந்தயக் குதிரையின் மீது 50,000 கோடி ரூபாயை கட்டினர். மோடி வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தால் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கலாம் என்ற எதிர்ப்புடன்,  இந்திய பெருமுதலாளிகள் மோடி மற்றும் பாஜக வெற்றிபெறுவதற்கு பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்கும், ஓட்டுக்கும் என 50,000 கோடிகளை கொட்டி செலவு செய்திருக்கிறார்கள் என்பதும், அதற்கு ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் உண்மை. 
           ஆனால் தேர்தல் முடிவு என்பது தேர்தலுக்கு முந்தைய-பிந்தைய கருத்துக்கணிப்பையே உடைத்தெறிந்து யாரும் எதிர்பாராத வகையிலும், ஆச்சரியப்படும்வகையிலும் முன்னெப்போது இல்லாத அளவிற்கு பாரதீய ஜனதாக் கட்சி எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கத்தேவையான பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்திருப்பது என்பது நாட்டிற்கும் மக்களுக்கும் ஆபத்தானது என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அதீத வெற்றி என்பது பாரதீய ஜனதாக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய பெருமுதலாளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பது இந்திய பங்குச் சந்தையின் ஏற்றத்தைப் பார்க்கும் போதே தெரிந்துகொள்ளலாம். போட்டக் காசை பல மடங்கு திருப்பி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெருமுதலாளிகள் மத்தியில் வந்துவிட்டது. அவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறார்கள்.
 
அப்படி என்ன தான் அவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்...?             

               # கடந்த ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கனிம வளங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் போன்றவற்றில் பல இலட்சம் கோடி ரூபாய்களை சுருட்டியது போல்,  மிச்ச-மீதி எஞ்சியிருக்கக்கூடிய கனிம வளங்களை தங்குதடையின்றி மேலும்   கொள்ளையடிக்க மோடியால் அனுமதி வழங்கப்படும்.
                #  ஏற்கனவே வாஜ்பாயி ஆட்சியின் போது தொழிலாளர்களுக்கு சாதகமான அல்லது பாதுகாப்பான முக்கிய ஷரத்துக்கள் பிடுங்கப்பட்டு காயடிக்கப்பட்ட ''தொழிலாளர் நலச் சட்டங்கள்'' முதலாளிகளுக்கு சாதகமாக முற்றிலுமாக நீக்கப்படும். இனி இந்தியாவில் எங்கும் எதிலும் ''நிரந்தர வேலை''  என்பது இருக்காது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். வேலை பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதியம், அதிகபட்ச வேலை நேரம்,  மகளீர் ஊழியர்கள் பாதுகாப்பு, தொழிற்சங்கம்  அமைத்தல் போன்றவை ஏற்கனவே காற்றில் பறந்துவிட்ட நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்கள் முற்றிலும் நீக்கப்பட்டால், நிரந்தர வேலை உரிமை ஒழித்துக்கட்டப்படும். அதன் மூலம் மருத்துவ உதவி, பி.எப்., கிராஜுயுட்டி, போனஸ், ஓய்வூதியம் போன்றவைகளும் ஒழித்துக்கட்டப்படும். 
          #  இன்சூரன்ஸ், வங்கி, பாதுகாப்பு,  தொலைத்தொடர்பு, விமானம், இரயில்வே, சுரங்கம், சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், சுகாதாரம் அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடு என்பது 100% - ஐ நோக்கி பாயும்.
            # எல்.ஐ.சி., வங்கி போன்ற பணம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும், ''நவரத்தினா'' என்று அழைக்கப்படும் வளம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களும் அம்பானி சகோதரர்கள், அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகளிடம் கைமாறும்.
           மொத்தத்தில் முகேஷ் அம்பானி, அனில்  அம்பானி, அதானி, டாடா போன்ற பெருமுதலாளிகள் மோடியால் சந்தொஷப்படுத்தப்படுவார்கள். மோடியை பின்னாலிலிருந்து இயக்கப்போகிறவர்கள் இவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.
          இதையெல்லாம் நாம் கோபப்படாமல் வேடிக்கைப்பார்க்கத்தானே போகிறோம். போகப் போக தெரியும்... இந்த பாம்பின் வேஷம் புரியும்...!

வியாழன், 15 மே, 2014

எங்கள் தந்தையாரின் 80-வது பிறந்தநாள் விழா...!

         
 
 
 



 


 


           சென்ற மே 8-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று எங்கள் அன்புக்குரிய தந்தையார் திருமிகு.ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்களின் 80-வது பிறந்தநாளை எங்கள் பெற்றோர்கள் மகிழும்படியாகவும், அனைவரின் நினைவில் நிற்கும் படியாகவும் மிகவும் சிறப்பான விழாவாக குடும்ப உறவுகளோடும், நண்பர்களோடும், தோழர்களோடும் கொண்டாடினோம்.
            எங்கள் தந்தையாரின் பிறந்தநாளை இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று ஓராண்டிற்கு முன்னரே நான் என் மனதில் முடிவு செய்து வைத்திருந்தேன். அதை அப்படியே சிறப்பாக நடைமுறைப்படுத்தினேன். எங்கள் பெற்றோர்கள் மீதான எங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இதை விட ஒரு பெரிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்களை கருவாக்கி, உருவாக்கி, ஆளாக்கி, சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக நடமாடச் செய்த எங்கள் பெற்றோர்களுக்கு நாங்கள் காட்டும் நன்றி தான் இது. 
            அதுமட்டுமல்லாமல், இந்த அரிய பிறந்தநாள் விழாவை வெறும் விழாவாகக் கொண்டாடாமல், எதிர்காலத்தில் வசதியற்ற எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவம் ஆகிய உதவி செய்கின்ற அறக்கட்டளை ஒன்றை அப்பா - அம்மா பெயரில் ''மானுடம்'' - VASANTHA & RADHAKRISHNAN FOUNDATION -ஐ தொடங்கிவைத்தோம். தொடங்கியதும் முதல் மானுட சேவையாக புதுச்சேரி அரசால் நடத்தப்படும் ''ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினோம்.
                மாலையில் அப்பா-அம்மா இருவருக்கும் மாலைகளையும் பொன்னாடைகளையும் அணிவித்து, பூங்கொத்துகளையும் கொடுத்து மரியாதை செய்தோம். உறவுகளையும், நண்பர்களையும், தோழர்களையும் அழைத்திருந்தோம். அழைத்த அனைவரும் வந்திருந்தார்கள். சிறப்பு அழைப்பாளராக தீக்கதிர் - நாளிதழின்  பொறுப்பாசிரியர் தோழர்.அ.குமரேசன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் தோழர்.வி.பெருமாள், மூத்தத் தோழர் தா.முருகன் உட்பட கட்சித் தோழர்களும், தோழர்கள் இராச.செயராமன், எஸ்.ராம்கோபால், மற்றும் டி.ஆனந்த் உள்ளிட்ட தொழிற்சங்கத் தோழர்களும், அலுவலக நண்பர்களும், முகவத்  தோழர்களும் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது நெஞ்சிலிருந்து நீங்காத நிகழ்வுகளாகும்.
           நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்பயன்படுத்தக்கூடிய சக்கரநாற்காலி ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தோம். தீக்கதிர் நாளிதழுக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000/- ஐ தோழர்.அ.குமரேசன் அவர்களிடம் அளித்தோம். என்னுடைய ''முதல் ஆசிரியர்'' திருமிகு. வீ.மதுரகவி அவர்களையும் விழாவிற்கு அழைத்திருந்தேன். அவரும்  வந்திருந்து விழாவை சிறப்பித்தார். அவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தேன். வந்திருந்த அனைவருக்கும் அப்பா-அம்மா இருவருக்கும் பொன்னாடைகளை போர்த்தியும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் மரியாதை செலுத்தினார்கள்.
              விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் இரவு உணவு அளித்து, பாரதி புத்தகாலய பதிப்பான ''மே தின வரலாறு'' என்ற புத்தகத்தை பரிசாக அளித்தோம். எங்கள் பெற்றோர்களுக்கு மரியாதை செய்ய எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது எண்ணி எண்ணி  இப்போதும் மகிழ்ந்து போகிறேன்.

இந்திய ஊடகங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...!

                   அடடடா...  இந்திய ஊடகங்களை என்னவென்று பாராட்டுவது என்றே தெரியவில்லை. என்னா நேர்மை...! என்னா நியாயம்...! வாங்கின காசுக்கு கடைசி வரையில் ஊதுராங்கப்பா...! மோடியே நேர்ல வந்து வேணா... போதும்.... நிப்பாட்டுங்கன்னு சொன்னாக்கூட  நிப்பாட்டமாட்டாங்க போலிருக்கே...! நாடு முழுதும் தேர்தல் முடிந்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் போடுகிற கூப்பாடு இருக்கே... தாங்க முடியல... வெட்கமே இல்லாம  மோடிக்கு ஆதரவாக இவர்கள் போடுகிற கூச்சலும், கூப்பாடும் இருக்கே அடேங்கப்பா நம்மால தாங்க முடியலடா சாமி. 
              தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என மோடியிடம் காசை வாங்கிக்கொண்டு தேர்தல் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் மக்கள் மத்தியில் மோடி தான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை திணிக்க ஆரம்பித்துவிட்டன. என்ன ஒரு வெட்கக்கேடு என்றால், இன்னும் தேர்தல் முடிவே வரவில்லை. ஓட்டுகளையே நாளை தான் எண்ணப்போகிறார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பெட்டியை திறந்தால் தான் தெரியும். ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பை வைத்துக்கொண்டே நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்க தயாராகி விட்டார். பாரதீய ஜனதாக் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் கூடி ''மந்திராலோசனை'' செய்கிறார்கள். எப்போது பதவி ஏற்பது...? யார் யாரெல்லாம் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்பார்கள்...? அத்வானிக்கு மந்திரிசபையில் இடம் உண்டா இல்லையா...? நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் குஜராத் மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது...?  இப்படியெல்லாம் பாஜக தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடப்பதாக செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைக் குறியீடுகளை முன்பு இல்லாத அளவிற்கு உயர்த்தி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைவதற்கான தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் இந்திய பெருமுதலாளிகள் ''குறிப்பாக'' காட்டியிருக்கிறார்கள்.
                 இந்த ''கருத்துத்திணிப்பை'' பார்த்து தேர்தல் முடிவுகள்  வருவதற்கு முன்பே ''காங்கிரஸ் கூடாரம்'' காலியாகிக்கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் தனது அரசு வீட்டையும் பிரதமர் சீட்டையும் காலி செய்துவிட்டு  சென்றுவிட்டார். தனக்கு நெருக்கமான அண்டை நாடுகளின் தலைவர்களிடமும், தன்  அலுவலக ஊழியர்களிடமும் ''டாடா'' காண்பித்துவிட்டு பிரிய மனசில்லாமல் பிரியாவிடை பெற்று சென்று விட்டார். இப்படியெல்லாம் ''கருத்துத்திணிப்பு'' செய்கிற பாட்டை பாருங்கள். ஊடகங்கள்  ஒரு புறம் ஒருவரை நன்றாக சந்தோஷப்படுத்துவதும், மறுபுறம் வேறு ஒருவரை  துரத்தி அடிப்பதுமான வேலைகளைத் தான் செய்கின்றன. மக்கள் தான் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஏதோ.... இந்த பாராளுமன்றத்தேர்தலில் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் வாங்கின காசுக்கு இறுதிவரையில் ரொம்ப நல்லாத்தான் ஊதுகின்றன...!
             இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒரு நல்ல யோசனை.... இனிமேல் நாட்டுல பாராளுமன்றத் தேர்தலையே நடத்தவேண்டாம். காசுக்கு கூவுற ஊடகங்களிடம் ''கருத்துக்கணிப்பை'' வாங்கியே பிரதமர் மற்றும் மந்திரிகளையும், எம்.பி-க்களையும் தேர்ந்தெடுத்துக்கலாம். தேர்தல் ஆணையம் எதுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து தேர்தலை நடத்தி கஷ்டப்படனும். கருத்துக்கணிப்புத் தேர்தலே சுலபமானது. அதுமட்டுமல்ல,  பண பலம், பெருமுதலாளிகள் பலம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தான் செலவு. தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பைசா செலவும் இல்லை.  வேலையும் இல்லை. எல்லாவற்றையும் ஊடகங்களே பார்த்து புதிய ஆட்சியாளர்களை உட்கார வைத்துவிடுவார்கள். அப்புறம் தேர்தல் ஆணையம் என்று ஒன்று எதற்கு...? அதுவும் வேண்டாம். இதைஎல்லாம்  தேர்தல் ஆணையம் யோசித்துப்பார்க்கட்டும். ஜனநாயகமாவது... மக்களாவது... தேர்தலாவது....?           

ஞாயிறு, 11 மே, 2014

இடது திசை பயணம் ( LEFT HAND DRIVE )

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,           
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,             
                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                                                             
               ''இடது திசை பயணம்'' (லெஃப்ட் ஹேண்ட் டிரைவ்) என்ற தொடர் தலைப்பில் இந்த நாளேட்டில் நான் எழுதும் 200-வது கட்டுரை இது. 100 பௌர்ணமிகளும், 100 அமாவாசைகளும் வந்து போயிருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், எனது கட்டுரைகளைப் பிரசுரித்த `ஹிந்துஸ்தான் நாளேட்டின் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும் எனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். காரல் மார்க்சின் தீர்க்கதரிசனம்...! இந்த 200-வது கட்டுரை எழுதும் நேரத்தில் காரல் மார்க்சினுடைய 196-வது பிறந்த நாளில் இணைவது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ் வொற்றுமை. மனிதகுல நாகரீக வளர்ச்சியில் பங்களித்தவர்கள் அனைவரையும் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.
              நமது அறிவினையும், புரிதலையும் விரிவுபடுத்திய விஞ்ஞானிகள் பலரும் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். இருப்பினும், இத்தகைய பங்களிப்பாளர்களில் மார்க்ஸ் முதல் இடத்தினை வகிக்கிறார். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புரிதல் நிலையை உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் அவர் செலுத்தியிருக்கும் பன்முகப் பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறார் என்ற வகையிலும் அவர் நினைவு கூறப்படுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தை சூழ்ந்து நிற்கும் நெருக்கடியின் வேர்களை அறிந்து கொள்வதற்கும், பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், மனிதகுலத்தை தொடர்ந்து சித்ரவதை செய்துவரும் பல்வேறு சமூக முரண்பாடுகள் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும், தவிர்க்க இயலாதவாறு மார்க்சையே நாட வேண்டியுள்ளது.
                இன்றைக்கு நடைபெறும் தேர்தல்களில் பணபலம் ஒரு புறம் என்றால், ஒரே குடும்பத்தின் உடன்பிறப்புக்களை ஒருவருவருக்கு ஒருவர் மோதுவதற்கு நிர்ப்பந்திப்பது உட்பட, தேர்தல் வக்கிரம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதையெல்லாம் பார்க்கும் போது, சமகாலத்திற்கும் மார்க்ஸ் எப்படி பொருந்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் அவர் கூறுவதைப் பாருங்கள் : “மக்களால் மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு தொழிலின் மரியாதையினையும் பூர்ஷ்வாக்கள் அழித்து விட்டனர். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், மத குருமார்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் தங்களது கூலித் தொழிலாளிகளாக மாற்றிவிட்டனர். குடும்பங்களில் நிலவும் உறவுகள், உணர்வுகள் என்ற திரைச்சீலையினைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவினை வெறும் பண உறவாக மாற்றிவிட்டனர்.” இன்றைய நிலை குறித்து எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள் பாருங்கள்!

போலி அலை...!            

                மோடி அலை அடிக்கிறதென்றும், அது சுனாமியாக மாறி நாடு முழுவதையும் சுருட்டப் போகிறது என்றும் செய்யப்பட்ட ஊடகங்களின் பெருங்குரல் இப்போது சற்றுக் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், வருங்காலப் பிரதமர் என மோடியின் உருவம் வரையப்பட்ட விளம்பரங்களை கடந்த ஓராண்டாகப் பார்த்து வந்திருக்கிறோம். இதுவே மோடிக்கு எதிரான உணர்வுகளையும் உருவாக்கியிருக்கிறது. பிஜேபிக்கு தெளிவான வெற்றி என்று ஊடகங்கள் பலவும் கூறி வருகின்றன. ஆனால், களச் செய்திகளைத் தொகுத்து நிருபர்கள் தரும் அறிக்கைகள், ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புக்களிடம் இருந்து, கள எதார்த்தம் முற்றிலும் வேறுபட்டிருப்பதை உணர்த்துகின்றன.

பிஜேபியின் விரக்தி...!                  

             இந்தி பேசும் மாநிலங்களில், “என்னதான், மோடி என்று சொன்னாலும், ஸ்தல மட்ட நிலைமைகளே விஷயங்களைத் தீர்மானிக்கின்றன” என்ற செய்தி, ஆர்.எஸ்.எஸ்சுக்கும் பிஜேபிக்கும் கவலை அளிப்ப தாகும். பீகார் மாநிலத்தின் தேர்தல்களில், பிஜேபியின் ‘ரதத்தினை’ இப்போது மீண்டும் லாலு பிரசாத் தான் தடுத்து நிறுத்துகிறார் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்களை நித்தீஷ் குமார் அறுவடை செய்யவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்திலோ, முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதி என இருவரைச் சுற்றிய, சாதி ஆதரவு அணி சேர்க்கையாக, தேர்தல்கள் மாறி வருகின்றன என்பதும் செய்தி.இவ்வாறு அந்தந்த மாநிலங்களின் பிரச்சனைகளே மக்களின் வாழ்வில் பெருமளவில் செல்வாக்கு செலுத்தும் நிலையின் காரணமாக ஆர்எஸ்எஸ்சும், பிஜேபியும் விரக்தியடைந்திருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போல, மதவெறியினைத் தூண்டும் முயற்சியில் அவை இறங்கி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி தலைவரின் வலது கரம் எனக் கருதப்படும் ஒருவர் அதில் பெரும் பங்காற்றி வருகிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் போட்டியிடும் ஆசம்கார் தொகுதி “பயங்கரவாதிகளின் தளமாக” செயல்பட்டு வருகிறது என்றெல் லாம் மதவெறியினைத் தூண்டும் வகையில் அவர் பேசி வருகிறார்.

மோடியின் மதவெறிப் பேச்சு...!                

                இந்துக்களின் வாக்குக்களை மத ரீதியில் திரட்டும் மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியல் இப்போது அங்கே மேலோங்கி வருகிறது. மே மாதம் 4ம் தேதி மேற்குவங்கத்தில் அசன்சால் நகரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், தான் பிரதமராகிவிட்டால், பங்களாதேஷிகள் நாட்டை விட்டு வெளியேறும் வகையில், மூட்டை கட்டி தயாராக இருக்க வேண்டும் என்றார். பங்களாதேஷிகளில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை எனவும், பங்களாதேஷிகளில், இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்தி, மதவெறியின் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார். சட்டப்பூர்வமாக இந்தியாவில் வசிக்கும் வங்காளி முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறிப் பேச்சு இது. அண்மையில், அசாம் மாநிலத்தில் போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் 31 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலைகளுக்கு, மதவெறித் தூண்டுதல்களும் காரணம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. புனிதமாகக் கருதப்படும் மனித உரிமைகள் இன்று தேர்தல் லாபத்திற்காக, பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

பந்தய சூதாட்ட ஒப்பந்தம்...!               

             இதே போன்று, மேற்கு வங்கத்தில் பிஜேபிக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில் பந்தய சூதாட்ட ஒப்பந்தம் (மேட்ச் ஃபிக்சிங்) ஒன்று உருவாகியிருக்கிறது. மக்களின் மத ரீதியான இடைவெளிகளை விரிவுபடுத்திக் கொண்டு, தத்தம் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டும் ஏற்பாடே அது. தன் பின்னால் அணிதிரண்டிருக்கும் இந்துத்துவா தளத்தினை பிஜேபி இழந்து விடக்கூடாது, அதே வேளையில், திரிணாமுல் மீது நம்பிக்கை இழந்து வரும் மைனாரிட்டி மக்கள் திரிணாமுல் ஆதரவு நிலையிலிருந்து வெளியேறி, இடதுமுன்னணி பக்கம் போய்விடக் கூடாது. இந்த அடிப்படையில்தான் அந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், தேர்தல்களுக்குப் பின் னர் பெரும்பான்மை எண்ணிக்கை என வரும்போது, தனக்கு கூட்டாளிகள் தேவைப்படு வார்கள் என்ற எதிர்பார்ப்பில், பிஜேபி தலைவர் மேற்குவங்கத்திற்கான ஒரு சிறப்புத் திட்டம் (பெங்கால் பேக்கேஜ்) குறித்துப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் / பிஜேபி வழக்கம் போன்று இந்த இரட்டை நாக்குப் பேச்சுக் களில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் கேட்பது நிவாரணங்களே...!                    

          இந்த வகை ஏமாற்றுக்களின் பின்னணியில், மக்களுடைய மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சனைகள் மறக்கப்படுகின்றன. அவர்களுக்கு பல நிவாரணங்கள் தேவைப்படுகின்றன. கடுமையான பணவீக்கம், வேலையின்மை, அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு துன்ப துயரங்களிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுகிறது. அத்தகைய நிவாரணம் ஒரு மாற்றுக் கொள்கைகளின் மூலம் தான் கிடைக்க முடியும். அதாவது, இன்று காங்கிரசும் பிஜேபியும் முன் வைப்பதற்கு மாற்றான கொள்கைகளின் மூலம் மட்டுமே அது சாத்தியம். இந்தத் தேர்தல்களில் அலை என்று ஏதாவது ஒன்று இருக்குமானால், அது நிவாரணம் கோருகின்ற மக்களுடைய அலையே அது.

மக்களின் அலையே வெல்லும்...!                   

              வெளி நிர்ப்பந்தங்கள், வாக்குகளுக்காக லஞ்சம் போன்ற ஏதுமின்றி, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் தேர்தல்கள் நேர்மையாக நடந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏழாவது கட்ட வாக்குப் பதிவில், வன்முறை, அச்சுறுத்தல், தசை பலம், பண பலம் இவை அனைத்தும் தேர்தல் களத்தில் – குறிப்பாக, மேற்கு வங்கத்தில் - விளையாடுவது குறித்து இன்று செய்திகள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சிக்கு எதிரான காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரின் குற்றச் சாட்டுக்களையும் தேர்தல் கமிஷன் பரி சீலித்து ஏற்பட்டிருக்கும் தவறுகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக, மீதியிருக்கும் இரண்டு கட்ட வாக்குப்பதிவில், ஜனநாயக நடைமுறைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் நாம் சந்திப்பதற்கு முன், மக்களின் அலை வென்றிருக்கும் என நாம் நம்பலாம்.

தமிழில் : தோழர்.இ.எம்.ஜோசப்
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ் 5.5.2014’

செவ்வாய், 6 மே, 2014

மார்க்ஸ் என்றும் தேவைப்படுகிறார்...!

கட்டுரையாளர் : - த. நீதிராஜன்                                                                    

              டார்வின் கருத்துகள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிபற்றி விவாதித்ததைப் போல மார்க்ஸியக் கருத்துகள் மனிதச் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு பற்றிய விதிகளை நம்மிடம் முன்மொழிந்துள்ளன. 

மார்க்ஸிய போதனை                      
 
              மார்க்ஸிய போதனை 49 தொகுதிகளாக விரிந்திருக்கிறது. (மூலதனம் நூலின் நான்காம் தொகுதியையும் சேர்த்தால் 50 தொகுதிகள்). கடிதங்கள் மட்டுமே 12 தொகுதிகள். அவற்றில் மூன்று தொகுதிகள் எங்கல்ஸ் மட்டுமே எழுதியவை; ஒன்பது தொகுதிகள் மார்க்ஸும், எங்கல்ஸும் சேர்ந்து எழுதிய கடிதங்கள். மார்க்ஸும் எங்கல்ஸும் இணைந்து எழுதிய நூல்களும் கட்டுரைகளும் கொண்ட தொகுதிகள் 21, அதில் மார்க்ஸ் மட்டுமே தனித்து எழுதிய நூல்களின் தொகுதிகள் 12. எங்கல்ஸ் மட்டுமே தனித்து எழுதிய தொகுதிகள் நான்கு.
           மார்க்ஸியத்தின் மிக முக்கியமான பகுதி ‘மூலதனம்'. அதன் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இதயத்தைக் கிழித்துள்ளன. மனித இனம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எது வேர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதுதான் மார்க்ஸிய போதனையின் பிரம்மாண்டம். 

தீர்க்கதரிசனம்                     
 
             இன்று பொருளாதார மந்தம் என்று நம்மால் அழைக்கப்படுவதை மார்க்ஸ் அன்று நெருக்கடி என்று அழைத்தார். சமீபத்தில் 2007-2008-ல் தொடங்கிய மந்தநிலையைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தீவிரத்தையும், அது நீடிக்கும் கால அளவையும், உலக அளவில் அது ஏற்படுத்திய பாதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் மந்தநிலை என்ற பெயரை விட மார்க்ஸ் அழைத்த நெருக்கடி என்ற பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் திரும்பத் திரும்ப நிகழ்வது பற்றி ‘மூலதனம்' புத்தகத்தில் மார்க்ஸ் நிறைய விளக்கங்களை அளிக்கிறார். அவர் ‘நியூயார்க் டிரிப்யூன்' பத்திரிகையின் பொருளாதாரச் செய்தியாளராக 1850-களில் இருந்தபோது தந்த விளக்கம் மிகவும் ஆச்சரியமானது.
         உலகின் முதல் பொருளாதார நெருக்கடியாகக் கருதப்படுகிற 1857- பொருளாதார நெருக்கடியைப் பற்றி அவர் விவாதிக்கிறார். ‘கிரெடிட் மொபைலைர்' என்ற வங்கிதான் உலகின் முதல் ‘முதலீட்டு வங்கி'. அந்த வங்கியை மையப்படுத்தியே மார்க்ஸ் விவாதிக்கிறார். அந்த வங்கி தனது முதலீட்டை விட 10 மடங்கு கடன்பெறுவதற்கு அந்த வங்கியின் சட்டதிட்டங்கள் அனுமதித்ததைக் கண்டு மார்க்ஸ் அதிர்ந்துபோகிறார். அந்த வங்கி தனது நிதியாதாரத்தையெல்லாம் பங்குகள் வாங்குவதற்கும் பிரான்சின் ரயில் பாதைத் திட்டங்கள், பெரும் தொழிற்சாலைகள் போன்ற பெரும் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தியது. கடைசியில் மிதமிஞ்சிய உற்பத்தி கிடைத்தது. ஆனால், அந்த உற்பத்தியைக் கொள்வாரில்லை. விளைவு அந்த வங்கியின் பங்குகள் அதலபாதாளத்துக்கு வீழ்ந்தன. கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு அந்த வங்கி ஆளானது. அந்த வங்கியை அப்படியே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலில் பலியான ‘லேமன் பிரதர்ஸ்’ உள்ளிட்ட வங்கிகளுடன் பொருத்திப் பாருங்கள். மார்க்ஸ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பது புரியும்.
 
மார்க்ஸியத்தின் தனித்தன்மை                     
 
            முதலாளித்துவ உற்பத்தி முறையை இயக்கும் விதிகளை இத்தகைய அசாதாரண ஆற்றலோடு மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். அதோடு மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கையும் தெளிவாக்கினார். மனிதச் சமூகம் எங்கிருந்து துவங்கி, எங்கே போய்க்கொண்டிருக்கிறது எனும் விவாதத்தை மார்க்ஸ் மனித இனத்தின் முன் வைத்தார். இதனால் மனிதச் சமூக வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் நிற்கிறோம் என்பதை அந்தந்த தேசங்களின் உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் பிறந்தன.
         முதலாளித்துவ உற்பத்தி முறை வளராத நாடுகளின் மக்களையும்கூட மார்க்ஸின் விஞ்ஞான சோஷலிஸம் மற்றும் அரசியல் பொருளாதாரக் கருத்துகள் கவர்ந்தன. மார்க்ஸியம் எனும் விமானம் கிடைத்த பிறகு, பிற தத்துவங்கள் எனும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்ய நிலபிரபுத்துவ சமூக மக்களும் மறுத்தனர். தனியொரு நாட்டில் சோஷலிஸப் புரட்சி வராது என்றும், முதலாளித்துவம் பழுத்துக் கனிந்த இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் சோஷலிஸம் ஏற்படும் என்றும் இருந்த தர்க்கரீதியான எதிர்பார்ப்புகளையெல்லாம் மக்கள் தகர்த்தெறிந்தனர். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்களாக ரஷ்ய மக்கள் மாறினார்கள். உலக சாதனை புரிந்த விளையாட்டு வீரன் தன் சாதனையைத் தானே முறியடித்துக்கொள்வதுபோல மார்க்ஸியம் தன்னைத் தானே முறியடித்துக்கொண்டு முன்னேறியது.
          மார்க்ஸியத்தைக் கைக்கொண்டு வேகமாக முன்னேறுவதற்கான மக்களின் முன்முயற்சிகளும், அவற்றைத் தடுப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புகளுமாக உலகம் மார்க்ஸுக்குப் பிறகு பரபரப்பாக மாறியது. மனித இனத்தைப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும்படி உந்தித்தள்ளியதுதான் மார்க்ஸியத்தின் மாபெரும் தனித்தன்மையாக இருக்கிறது.
            மூலதனம் தவிர்த்த மார்க்ஸியத்தின் மற்ற படைப்புகள் பழங்காலத் தத்துவங்களை விமர்சிக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தின் உழைக்கும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறையுடன் கூடிய ஆய்வுகள், கம்யூனிஸ விஞ்ஞானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள், மனிதத் துன்பங்களுக்கெல்லாம் நிரந்தரமான தீர்வை உருவாக்குவதற்கான கோட்பாடுகள், பெண்ணுரிமை கருத்துகள், இயற்கையின் இயங்கியல் தன்மையை நிலைநாட்டல், பல நாடுகளில் நடந்த மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு ஆகியவையும் உள்ளன.
             மார்க்ஸியத்தின் ஆற்றல் மிக்க தலையீடு மனித குலம் இனி செல்ல வேண்டிய திசையைத் தீர்மானித்துள்ளது. எங்கல்ஸ் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “மார்க்ஸ் பிறக்காவிட்டால்கூட மார்க்ஸ் வெளிப்படுத்திய கருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் நீண்ட காலம் ஆகியிருக்கும். கடின உழைப்பால் தனது கருத்தை முழுமைத் தன்மையோடு கட்டி எழுப்பும் தகுதி மார்க்ஸுக்குத்தான் இருந்தது.” 

மறுபிறவி முத்தம்                      
 
             மார்க்ஸ் தனது மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களில், ஜென்னியை முத்தமிடும்போது தான் மறுபடி மறுபடி பிறப்பெடுத்து பிராமணர்களின் மறுபிறவிக் கொள்கையை உணர்வதாகக் கூறுகிறார். இதைத் தவிர இந்தியச் சமூகத்தின் சாதியத் தனித்தன்மையைக் கூர்ந்து உற்றுநோக்கக் காலம் அவருக்கு உரிய நேரம் அளிக்கவில்லை. சாதியும் வர்க்கமும் இணைந்த இந்தியச் சமூக அமைப்பு பலவிதமான மார்க்ஸிய முன்முயற்சிகளுக்கான ஆய்வகமாக இருக்கிறது. சாதியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வர்க்க உணர்வுக்குள் வழுக்கிக்கொண்டு போய்விடலாம் என்ற முயற்சிகளுக்கு அது இடம்தர மறுக்கிறது. நிலபிரபுத்துவச் சமூகத்தை அழித்து அதன் சாம்பலில் முதலாளித்துவச் சமூகம் உருவாகும் என்ற பொதுவான மார்க்ஸிய தீர்க்கதரிசனத்தை இந்தியச் சமூகம் பொய்யாக்கியுள்ளது.
          ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகமான பழங்குடிகள் வாழும் இந்தியாவில், தலித் மக்களும் நாடோடி மக்களும் கோடிக் கணக்கில் வாழும் இந்தியாவில், அவர்களின் இதயங்களுக்கு உள்ளே இன்னமும் போதுமான அளவு மார்க்சியம் போகவில்லை என்பது இந்திய மக்களின் ஒட்டுமொத்த விடுதலையைத் தள்ளிப்போடுகிறது.
              மார்க்ஸியம் என்றால் மக்கள் மீதான நிபந்தனையற்ற நேசம். துன்பங்களிலிருந்து கடைசி மனிதனையும் விடுவிப்பதற்கான உயர்ந்தபட்ச வீரம். மக்களுக்காக அனைத்தையும் இழக்கும் தியாகம். இவை ஏற்கெனவே பெருமளவில் மார்க்ஸியத்தின் பெயரால் செய்யப் பட்டிருந்தாலும் மக்களின் தேவையோ எங்கோ இருக்கிறது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள், அடிமைத்தனம், பிற்போக்குத் தன்மைகள் போன்றவை இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். 
நன்றி :
Return to frontpage