சனி, 30 ஏப்ரல், 2011

புருலியாவில் ஆயுதம் வீசிய பயங்கர சதி அம்பலம் !


             1995ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் ஆகாய மார்க்கமாக குவியல் குவியலாக ஆயுதங்கள் வீசப்பட்டன. மறு நாள் காலை ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் செய்தியை யாரும் மறந்திருக்க முடியாது. அன்றைய தினமே நாடு முழுவதும் இடதுமுன்னணி அரசுக்கு எதிராக அவதூறுச்  செய்திகள் பரப்பப்பட்டன. பெருமளவு ஆயுதங்களை மர்மமான முறையில் இறக்குமதி செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் அந்த  ஆயுதங்களைப் பயன்படுத்தி  எதிர்க்கட்சியினரை கொன்று குவிக்க திட்டமிட்டு வருகிறார்கள் என்றெல்லாம்  பொய்ப்பிரச்சாரங்கள்  நாடு முழுவதும் பரப்பப்பட்டன.
          இந்த ஆயுதம் வீசிய சம்பவத்தில், புருலியா உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிய ஆனந்த மார்க்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. ஆனந்த மார்க்கிகள் அமைப்பிற்காக தீவிரவாத குழுவைச் சேர்ந்த கிம் டேவி என்ப வரும் பீட்டர் பிளீச் என்பவரும் இந்த காரியத்தை செய்தார்கள் என்பதும்  விசாரணையில் தெரிய வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் முதன்மை குற்றவாளிகளான மேற்கண்ட இருவரும் இந்தியாவிலிருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசே  ஏற்பாடு செய்தது என்பது தான் மிகப்பெரிய பயங்கரமானதும் வேட்கக்கேடாதுமாகும். 
             
இந்த சம்பவத்தின் பல்வேறு உண்மைகளை சமீபத்தில்  டைம்ஸ் நவ் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த  பேட்டியில் புருலியா ஆயுத வீச்சு சம்பவத்தின் முதன்மைக் குற்ற வாளியான நீல்கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவிட் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
           இந்த வழக்கில் தற்போது  தன்னை மீண்டும் 
இந்தியாவுக்கு கொண்டு வர அரசு முயற்சி செய்கிறது என்றும்,  அதே மேற்கு வங்கத்தில் மீண்டுமொரு  நாசகாரியம் செய்வதற்கு சிலர் தன்னை நாடுவதாகவும்  கிம் டேவி குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.

         
கிம் டேவி மேலும்  தனது பேட்டியில், புருலியாவில் ஆயுதம் வீசுவதன்   மூலம், இடதுமுன்னணி அரசு ரகசியமாக ஆயுதக்குவிப்பில் ஈடுபடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து , அதன்மூலம் இடது முன்னணி அரசைக் கவிழ்த்து  குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரலாம்  என்ற எண்ணத்துடன்,  ஆனந்த மார்க்கிகள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தன்னை கூலிக்கு அமர்த்தி இந்த நாசகர வேலையை செய்யத் தூண்டின  என்று கூறிஇருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். இது ஜனநாயத்தையே கேலிக்கூத்தாக மாற்றத்துணிந்த சம்பவமாகும்.
            புருலியாவில் ஆயுதம் வீசப்பட உள்ள நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறையின் தகவல் மூலம் இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும்,  அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் அப்போதைய மத்திய ஆட்சியிலிருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என்றும் போன்ற அடுக்கடுக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்களை  அவர் வெளியிட்டுள்ளார்.
         ஆப்பிரிக்கா, மத்திய அமெ ரிக்கா உள்பட பல்வேறு பகுதி களில் கடந்த 15 ஆண்டுகளாக இதுபோன்ற பல காரியங்களுக்கு பணியாற்றி இருப்பதாகவும், கத்தோலிக்க தேவாலயம், கிரீன் பீஸ் போன்ற அமைப்புகள், இந்தியாவில் ஆனந்த மார்க்கிகள் போன்ற அமைப்புகள் என உலகம் முழுவதும் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றி இருப்பதாகவும் கிம் டேவி கூறியுள்ளார்.
          மேற்குவங்கத்தில் தான் செய்த பணியின் நோக்கம், இடதுசாரி அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே கிம் டேவியின்  ஒப்புதல் வாக்குமூலமாகும்.

               இப்படியாக தான்  பல ஆண்டுகளாக இன்று வரை மேற்குவங்க இடது முன்னணி அரசை வீழ்த்தவேண்டுமேன்றே அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாத  மத்தியில் ஆண்ட  காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் பல்வேறு பயங்கரமான வழிகளில் முயற்சி செய்துகொண்டே வருகின்றன என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். 

புதன், 27 ஏப்ரல், 2011

காங்கிரஸ் கூட்டாளிகளின் தில்லுமுல்லு பொய் பிரச்சாரம்
















                   ஆறு கட்டமாக நடைபெறும் மேற்கு வங்கத் தேர்தலில் - வகை வகையான  ஊழல் புகார்கள், உயர்ந்துகொண்டே போகும்  விலைவாசி,  பெருகிவரும் வேலை இல்லா திண்டாட்டம்,  தீர்வுக் காணமுடியாமல்  திணறிக்கொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனை, வடமாநிலங்களில் பரவிகொண்டிருக்கும் மாவோயிஸ்ட் , நக்சலைட் போன்ற தீவிரவாத இயக்கங்கள்  இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகளோடு மத்தியில் ஆட்சிச்செய்யும் காங்கிரஸ் கூட்டாளிகள்  - மக்களை சந்திக்கக்கூட யோக்கியதை இல்லாத காங்கிரஸ் கூட்டாளிகள்   மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் பொய் மூட்டையாய் அவிழ்த்துவிட்டு அவதூறுப் பிரச்சாரங்களையே செய்து வருகிறார்கள். 
                மேற்குவங்கத்தில் கடந்த 34 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் மம்தா பானர்ஜி. 
                மம்தா பானர்ஜியின் அந்த பேச்சுக்கு பக்கமேளம் வாசிக்கிறாங்க சோனியா காந்தி. 
                ஏழை மக்களைப் பற்றி இடது முன்னணி அரசு  கவலைப்படுவதே இல்லை என்று முழங்குகிறார் அமுல் பேபி ராகுல் காந்தி. 
                மத்திய அரசில் உள்ளவர்கள் ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும்  தெரியாது என்று எப்போதும் சொல்லிக்கொண்டு திரியும்  பிரதமர் மன்மோகன் சிங் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. மேற்குவங்க இடது முன்னணி ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தொழில் துறை மேம்பாடு அடையவில்லை என்று முழங்கி இருக்கிறார். சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய - மிகமிக மோசமான ஊழல்கள் நிறைந்த ஆட்சிக்கு தலைமைதாங்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மேற்குவங்கத்தைப்பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று அவரது நிழலே அவரைப்பார்த்து கேள்வி கேட்கும்.
                 இன்னொரு அதி மேதாவி ப. சிதம்பரம்.... நாட்டிலேயே மிகவும் மோசமாக ஆட்சி செய்யும் மாநிலமாக மேற்குவங்கம் திகழ்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கியிருக்கிறார். அது மட்டுமல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 24 பேர் தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டதாக பொய்யான அவதூறுத் தகவலை ப.சிதம்பரம்  மக்களை திசைத்திருப்பும் வகையில் உளறியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. 
                 இப்படியாக பல தில்லுமுல்லுப் பேச்சுக்களின் மூலம் மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசின் மீது களங்கம் கற்பித்து  அரசை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாமென்று மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் வகையறாக்களும் கனவு காண்கிறார்கள்.
                "மேற்குவங்கம் பெரும் அரசியல் போராட்டக்களத்தில் உள்ளது. மாநிலம் முன்னோக்கிப் போகவேண்டுமா அல்லது பின்னோக்கிப் போகவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம் இது.
                  இடது முன்னணி மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதே எனது விருப்பம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கமொன்றை மட்டுமே கொண்டுள்ள கட்சிகளை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
                 தீவிரமான அரசியலில் இருந்து விலகிய போதும் கம்யூனிசம் மீதான நம்பிக்கையை நான் இழக்கவில்லை. கம்யூனிசத்திற்கு மாற்றாக வேறு ஒன்றுமில்லை." 
               இது  முன்னாள் மக்களவைத் தலைவர் தோழர். சோம்நாத் சாட்டர்ஜி  இடது முன்னணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரக் களத்தில்  முழங்கும் முழக்கமாகும். காங்கிரஸ் கூட்டாளிகளின் தில்லுமுல்லு பொய் பிரச்சாரங்களுக்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்து பேசியிருக்கிறார்.

குற்றவாளிக்கூண்டில் புதுச்சேரி துணைநிலை ஆளுனர் !














ஆளுநர் பதவி - ஓர் அறிமுகம் :

பொதுவாக நாட்டிலுள்ள படித்தவர்கள், பண்பாளர்கள், உயர்பதவியிலிருந்து - பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள்  போன்றவர்களுக்கு மரியாதை நிமித்தமாக கொடுக்கப்படுவதற்கும்...
அதே சமயத்தில் மத்திய அரசின் சார்பில்  மாநில அரசுகளை கண்காணிக்கும்  கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்காகவும் இந்த மாநில  ஆளுனர் பொறுப்பு என்பது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.  அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதவிஎன்பதால்  அதற்குரிய மரியாதையை நாம் அளிக்கவேண்டியிருக்கிறது.  மற்றபடி ஆளுனர் பதவி என்பது ஆட்டுக்கு வேண்டாத தாடியை போன்றது தான்.
                  அனால் காங்கிரஸ்காரன் சட்டத்தை தனக்கு சாதகமாக குறுக்குவழியில் பயன்படுத்துவதில் கெட்டிக்காரன். இந்த கவர்னர் பதவியை ரெண்டு விஷயங்களுக்கு பயன்படுத்திக்கொண்டான். ஒன்று - முக்கியமாக தனக்கு வேண்டாத அரசுகளை - எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் அரசுகளை கண்காணிப்பதற்கும் மிரட்டுவதற்கும் இந்த கவர்னர் பதவியை இன்று வரை பயன்படுத்திவருகிறது காங்கிரஸ் கட்சி. இன்னொன்று - காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து வயதான பின் தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் மூத்த கட்சித்தலைவர்களுக்கு, கட்சியிலேயே இருந்துகொண்டு கோஷ்டிபூசல் செய்துகொண்டிருக்கும் தறுதலைகளுக்கு  இந்த கவர்னர் பதவியை கொடுத்து வாயில் பூட்டுப்போட்டு விடுவார்கள்... இப்படித்தான் இந்த பதவியினை காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலும் - இடையில் வந்த பாரதீய ஜனதா கட்சியும் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.  
                அப்படி வந்தவர்தான் இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங். 

யார் இந்த இக்பால் சிங் ?
                இவர் ஆரம்ப காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். அதில் அகில இந்திய பொறுப்பும் வகித்திருக்கிறார். பிறகு அவரது வளர்ச்சி என்பது காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலாளர்களில்  ஒருவராக உயர்த்தி இருக்கிறது. 1992 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினர்களாக பணிபுரிந்திருக்கிறார். அப்போது தான் - பல நிதி மோசடிகளை செய்து, பல கோடி அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு செய்து, ஆயுத கடத்தல் - போதை பொருள் கடத்தல்- கொலை - கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களை செய்து சம்பாதித்த   பல கோடி கறுப்புப் பணங்களை வெளிநாட்டு வங்கியில் பதுக்கிவைத்து இன்று மாட்டிக்கொண்டு டெல்லி திஹார் சிறையிலிருக்கும் சமூக விரோதி ஹசன் அலி கான் - உடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஹசன் அலி கான் தான் முறைகேடாக சேர்த்த பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போடுவதற்கு - வெளிநாடு சென்றுவர பாஸ்போர்ட் பெறுவதற்கு 
இந்த குட்டி கவர்னர் இக்பால் சிங் 1997-ஆம் ஆண்டு  பெரிதும் உதவி செய்திருக்கிறார். அதற்கு கைமாறாக பல கோடிகள் கைமாறியிருக்கின்றன என்று சொல்லப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் வகையாக சிக்கி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகின்றன. அதனால் தான்  இன்று மத்திய  அமலாக்கப் பிரிவின் விசாரணையில் இக்பால் சிங்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இது வரை மூன்று முறை விசாரணை நடந்திருக்கிறது. ஆனால்  புதுச்சேரியின்  தற்காலிக முதலமைச்சர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, தலைமைச்செயலாளர்,  ஐ ஜி. போன்ற பரிசுத்தவான்கள் எல்லாம் இக்பால் சிங்  ஒரு "திருவாளர் .பரிசுத்தம்" என்றும் அவர் பதவி விலகத்தேவை இல்லை என்றும் இவர்களாகவே  தீர்ப்பு சொல்கிறார்கள் என்பது தான் புதுவைக்கு வந்த வெட்க கேடு.
                  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிக்கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் மாநில துணைநிலை ஆளுநர் தானாக பதவி விலகவேண்டும் அல்லது இந்திய குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று போராடிவருகிறார்கள். ஏப்ரல் 27 அன்று ஒரு நாள் கடையடைப்புக்கும் அறைகூவல் விடுத்து ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
அதே சமயத்தில் மாநில காங்கிரஸ் அரசும் காவல் துறையும் இந்த அறப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு புதுவையில் 144-தடை உத்தரவு போட்டிருக்கிறது என்பதும் வெட்க கேடானது.

புதுவையில் செய்த முறைகேடுகள்..
               இக்பால் சிங் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும், முறைகேடுகள் 
செய்வதுமே அவருடைய முக்கியப் பணியாக இருந்து வந்திருக்கிறது. 
              (1)   கவர்னராக பதவி ஏற்க  வரும் போதே பஞ்சாப்பிலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளரான அவரது நண்பரையும் அழைத்துவந்து புதுவையில் ஐ ஏ எஸ் பதவிக்கு இணையான பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்.  
              (2)   பஞ்சாப்பில் இவரது நண்பர் நடத்திக்கொண்டிருக்கும் பஞ்சாப் மொழி தொலைக்காட்சி சேனல் புதுவையில் கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக புதுவை கேபிள் மூலம்  ஒளிபரப்பப்படுகிறது.
              (3)   இவரது இரண்டு மகன்களை பங்குதாரர்களாக கொண்ட சவுத் எஜுகேஷனல் டிரஸ்ட் என்ற பெயரில் காரைக்காலில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க ஏற்பாடுகள் செய்தார். அதற்கு வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் அரசு காரைக்காலில் இடம் அளித்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சியான தகவல். 
                      அதுமட்டுமல்லாமல் மருத்துவக்கல்லுரி அமைப்பதற்கான தடையில்லா சான்றிதழையும் முதலமைச்சருக்கோ அமைச்சரவைக்கோ தெரியாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய பயங்கரம். அப்படி முறைகேடாக சான்றிதழ் பெற்றதில் தவறில்லை என்று முதலமைச்சர் வைத்திலிங்கமும் மற்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவும் கந்தசாமியும் சொல்வது என்பது வேடிக்கையானது. 
                       பார்வதி ஷா என்ற பெண் கவர்னர் மாளிகைக்குப் பக்கத்திலேயே இருக்கும் வீட்டிலேயே  பல ஆண்டுகளுக்கு முன்  அவரது கணவரின் தம்பியால் கொலைசெய்யப்பட்டு, பின் சமீபத்தில் அந்தக் கொலையாளியும் புதுவை சிறையிலேயே கொலைசெய்யப்பட்டான். எனவே பல ஆண்டுகளாக பூட்டியே இருந்த அந்த வீட்டை திறந்து அந்த மருத்துவக் கல்லூரிக்கான அலுவலகத்தை நடத்தியது என்பதும் மற்றுமொரு மிகப்பெரிய பயங்கரம்.
                       இப்படியாக இக்பால் சிங் பல்வேறு வகையான முறைகேடுகளை செய்ததும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதும் வெட்டவெளிச்சமாக தெரிந்தும், மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் வைத்திலிங்கமோ இக்பால் சிங்கை எதிர்த்து போராடும் எதிர்கட்சிகள் மீது சீறிப் பாய்கிறார். 
                      அதுமட்டுமல்ல.. இவ்வளவு நடந்தும்  சீக்கியர்கள் 100-150-க்குள் மட்டுமே வாழும் புதுவையில் சீக்கியக்கோயிலான குருத்வாராவை கட்டுவதற்கு முதலமைச்சர் வைத்திலிங்கம் அரசு நிலத்தை ஒதுக்கி இருப்பது என்பது யாரை ஏமாற்றுவதற்கு என்று  தெரியவில்லை.
                                                                     

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வாசிப்பை நேசிப்போம் - ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்



இன்றைக்கு நம் நாட்டில் மக்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் வாசிப்பு பழக்கமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை, கணினி போன்ற அறிவியல் வளர்ச்சி, தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு  இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான காரணங்களாக அறியப்படுகின்றன. நாமெல்லாருமே பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா போவதற்கு நிறைய செலவுகள் செய்கிறோம். திரைப்படங்கள் பார்ப்பதற்கு நிறைய செலவுகள் செய்கிறோம். பண்டிகைகள் திருவிழாக்கள் என நிறைய செலவுகள் செய்கிறோம். உணவுசாலைக்கு சென்று நாவிற்கு சுவையான உணவுகளை சாப்பிடுவதற்கு நிறைய செலவு செய்கிறோம். ஆனால் பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்குவதற்கு தயங்குகிறோம். அதற்காக மேலே சொன்னவைகளெல்லாம் தவறான செயல்பாடுகள் என்று சொல்லவில்லை. குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான உறவை வளர்ப்பதற்கு, குழந்தைகள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிப்பதற்கு, எந்திரமயமான வாழ்க்கைக்கு நடுவே ஒரு மாறுதலுக்கு அந்தமாதிரியான செயல்பாடுகள் அவசியம் தேவை தான். அதேபோல் புத்தகம் வாங்குவதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நாம் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகள் மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்க  வேண்டும். நல்ல புத்தகங்கள் தான் மிக சிறந்த நண்பர்களாக இருக்கமுடியும். 
               இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்றைக்கும் அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வளர்க்கிறார்கள். அதனால் தான் இங்கிலாந்து அயர்லாந்து நாடுகளில் மட்டும் பல ஆண்டுகளாய் ஆண்டுதோறும் மார்ச் 5 அன்று உலக புத்தக நாள் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் குழந்தைகளுக்கு நிறைய புத்தகங்களை பரிசாக அளிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பொதுவாகவே அவர்கள் மற்றவர்களுக்கு பரிசளிப்பதேன்றால் புத்தகங்களை மட்டுமே வழங்குவார்கள். இந்த இரு நாடுகளை தொடர்ந்து தான் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம் ஏப்ரல் 23 ஐ உலக புத்தக தினமாக அறிவித்தது. இன்றைக்கு நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இந்த புத்தக தினம் கொண்டாடபடுகிறது.
நாமும் இத்தினத்தில் நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி நம் வீட்டு குழந்தைகளுக்கு பரிசாக அளிப்பதன் மூலம் சிறந்த முறையில் கொண்டாடுவோம். புத்தகங்களை மறந்த - வாசிப்பை மறந்த சமூகம் அழிந்து போகுமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே நம் சமூகத்தை சிறந்த முறையில் பாதுகாக்க நம் வருங்கால தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்ட வாசிப்பை நேசிப்போம்.. # வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் உருவாக்கி வளர்ப்போம். # கண்டிப்பாக வீட்டுக்குகொரு நூலகம் அமைப்போம். # புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்குவதை வழக்கமாக கொள்வோம்.# புத்தகங்களை எடைக்கு போட்டு காசாக்காமல் பொக்கிஷமாய் பாதுகாப்போம்.
நல்ல புத்தகங்களுக்கு பாரதி புத்தகாலயம் வெளியிடும் புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை.

புதன், 20 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரேவும் மன்மோகன் சிங்கும்..

                                                                                           courtesy: The Hindu            

                 அன்னா ஹசாரே இன்னும்  ஒரு அவதார புருஷராக - உத்தமராக தான் மக்களுக்கு காட்சியளிக்கிறார்.  இருந்தாலும் நமக்கு அவரைப்பற்றி மட்டுமல்லாமல் அவருக்கு வளைந்து போகும் பிரதமர் மன்மோகன் சிங் பற்றியும் சந்தேகங்கள் எழுகின்றன. 
             
                (1) மெகா ஊழலான 2-G ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிப்பதற்கு பாராளுமன்றக்கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் மற்ற எதிர் கட்சிகளும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்று-நான்கு மாதங்களாக போராடிய போதும் கூட்டுக்குழுவை அமைக்க ஒத்துக்கொள்ளாத பிரதமர்....
பாராளுமன்ற இரு அவைகளும் செயல்படாமல் ஸ்தம்பித்தப் போதும் கூட 
ஒத்துகொள்ளாமல் நெருக்கடியின் காரணமாக நான்கு மாதங்கள் கழித்து ஒத்துக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கி நான்கே நாட்களில் லோக்பால் மசோதாவிற்கான குழுவை நியமிக்க ஒப்புக்கொண்டது எப்படி.? என்பதில் தான் நமது சந்தேகம்.

             (2) இதற்கு முன் வாஜ்பாய் தலைமையிலான பா ஜ க - திமுக கூட்டணியாட்சியில் ராணுவவீரர்கள் அணிவதற்கு காலணி ( ஷூ ) வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றது...... அதேபோல் அதே ஆட்சியில் கார்கில் போரில் உயிரிழந்த படைவீரர்களுக்கு சவப்பெட்டி வெளிநாட்டிலிருந்து வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்..... அதே ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த திருவாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் நெருங்கிய கூட்டாளி ஜெயா ஜெட்லி அம்மையார் பாதுகாப்புத்துறைக்கு ஆயுதம் வாங்குவதற்காக கட்டுக்கட்டாக பணம் பெற்ற ஆயுதபேர ஊழல்....
இப்படியாக தேசத்தின் பாதுக்காப்பை கவனிக்க வேண்டிய பாதுகாப்புத்துறையிலேயே பா ஜ க - திமுக கூட்டணி ஆட்சியில் பலவேறு ஊழல்கள் நடந்தன. 
                ஆனால் முன்னாள் இராணுவவீரரான அன்னா ஹசாரே அப்போது எங்கே போனார் ? என்ன செய்துகொண்டிருந்தார் ? ஏன் இந்த ஊழலை ஒழிக்கும் அவதாரத்தை அப்போதே எடுக்கவில்லை ? இப்போது மட்டும் ஏன் இந்த அவதாரம் ? அதற்கு என்ன கட்டாயம் ? இது யாருடைய வற்புறுத்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் ? இவைகள் தான் நமக்கு புரியாத புதிர்களாக இருக்கின்றன.
                  அன்னா ஹசாரே பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை "தீராதபக்கங்கள் " என்ற வலைப்பதிவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
  --------------------------------------------------------------------------------------------------------   

அன்னா ஹசாரேவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரா?




எனது முந்தையப் பதிவுக்கு, ஹரிஹரன் என்னும் நண்பர் கடைசியாக வெளியிட்ட பின்னூட்டம் இது:

Anna Hazare has been indicted as man involved in corruption by the Justice P.B.Sawant commission of inquiry constituted way back in 2003. The report was submitted in 2005 (Not now!). The pages indicting Hazare is compiled and published in the web site

http://groups.google.com/group/alt.politics/browse_thread/thread/c3c79ff02635f005

The full report of the Commission of Inquiry by Justice P.B.Sawant is available in the site

http://www.scribd.com/doc/32699610/Report-of-JUSTICE-P-B-SAWANT-COMMISSION-OF-INQUIRY
 
but this is a paid site.
இது எவ்வளவு தூரம் உண்மை என இன்னும் முழுமையாய்த் தெரியவில்லை. ஆராயப்பட வேண்டியதும், தெளிவுற வேண்டியதும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

நன்றி: தீராதபக்கங்கள்

திங்கள், 11 ஏப்ரல், 2011

ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தவர்..

           இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான தேர்தல் நேரம். அரசியல் கட்சிகளெல்லாம் கூட்டணி.. கட்சி வேட்பாளர்கள் போன்ற அறிவிப்பில் மும்முரமாக இருந்த நேரம்.. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் - மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் ஒவ்வொரு தேர்தலிலும் காத்துக்கிடந்து ஏமாந்து போகும் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் மேற்குவங்கம் - கேரளா ஆகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான  இடதுசாரி முன்னணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏதாவது தில்லுமுல்லுகள் செய்து வெற்றிபெற முடியுமா  என்ற முனைப்புடன் தான் இந்த இரு மாநிலங்களிலும் களமிறங்கத் திட்டமிட்டது.  ஆனால்  மக்கள் வழக்கம் போல்  இடதுசாரிகள் பக்கமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் எரிச்சலடையத் தொடங்கின. 
               இன்னொரு பக்கம்  கடந்த ஓராண்டு காலமாக  இரண்டாம் ஐக்கிய முற்போக்கு முன்னணி  அரசின்  ஊழல் விவகாரங்கள் அடுக்கடுக்காக
 விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன. அதுவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மெகா ஊழல்களாகவே அத்தனையும் இருந்தன. பல லட்சம் கோடிகளை சுருட்டுகிற வேலைகளை ஆட்சிலிருந்த அமைச்சர்களும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களும் செய்தார்கள். இந்திய மக்கள் திகைத்துப்போனார்கள். இப்படிப்பட்ட மெகா ஊழலை கண்டித்தும் ஊழல் குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் போராட்டங்கள் நடத்தினர். ஆனால் ஊழலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்களைப்போல் மக்களை ஏமாற்றித்திரியும் பாரதீய ஜனதா கட்சியும் இந்த பிரச்சனையை தனது அரசியல் இலாபத்திற்காக கையிலெடுத்துக் கொண்டது.   இந்த விஷயத்தில் இடதுசாரிகள் பக்கம் மக்களின் பார்வை திரும்பிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியாளர்களும் ஊடகங்களும் இடதுசாரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பா ஜ க -
வுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதை நாடே அறியும்.
                    மற்றொருப்பக்கம் பாராளுமன்றத்திலும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திலும் ஊழலைப்பற்றி கேள்விகேட்டால் எனக்கு எதுவும் தெரியாது என்கிற பிரதமரின் தொடர்ச்சியான பதில்கள். இவற்றையெல்லாம் மக்கள் உற்று நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக புதிதாக ஓட்டுப்போடும் இளையத்தலைமுறையினரின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சியும் ஆட்சியாளர்களும் இழக்க ஆரம்பித்தனர். 
( அதனால் தான் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ராகுல் காந்தியை முன்னிறுத்தினார்கள் என்பது அவர்களின் சோகக்கதை )
                 அதுமட்டுமல்லாது இந்திய மக்களின் குறிப்பாக இளையத்தலை- முறையினரின்  பார்வை என்பது - ஊழலுக்கெதிராக போராட்டங்கள் நடத்தும்.. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில்  இன்றுவரை பல ஆண்டுகளாய் ஊழல் குற்றச்சாட்டுகளே சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி நடத்தும்  இடதுசாரிகள்  பக்கம்  பார்வை திரும்ப  ஆரம்பித்தது. 
              ஊழல் குற்றங்களில் ஈடுபடும் ஆட்சியாளர்களை விசாரித்து தண்டனை வழங்க லோக்  பால் என்கிற மக்கள் மன்றத்தை அமைக்க வகைசெய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தான் அது. ஒரு நல்ல காரணத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் இது. பாராட்டவேண்டியது தான். பெருகிவரும் ஊழலுக்காக சாகும் வரை ஒரு தாத்தா உண்ணாவிரதம் இருப்பதை பார்த்த மக்களை  குறிப்பாக இளைஞர் -
களை சுலபமாக ஈர்க்க ஆரம்பித்தது. அன்ன ஹசாரேவை கமல்ஹாசன் நடித்த இந்தியன் தாத்தாவாகவே பார்கிறார்கள்.  இதே லோக் பால் மசோதாவிற்காக பல ஆண்டுகளாக முதலாவது - இரண்டாவது மன் மோகன் சிங் ஆட்சியிலும் இதற்கு முன்னாலிருந்த வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.   
               உண்ணாவிரதத்தின் பலனாக லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருக்கிறார். அந்த நபர்களை பார்க்கும் போது எங்கே ஊழல் ஒழியப் போகிறது என்ற சந்தேகம் தான் நமக்கு வருகிறது. மத்திய அமைச்சர்களாக இருக்கக்கூடிய  திருவாளர்கள்  வீரப்ப மொய்லி , பிரணாப் முக்கர்ஜி , ப.சிதம்பரம், கபில் சிபல் போன்றவர்களை உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு எங்கே ஊழலை ஒழிக்கப்போகிறார்கள். இது திருடர்கள் கையிலேயே சாவியை கொடுக்கும் கதை ஆகிவிடும். 
           இன்னும்  எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..