ஞாயிறு, 15 மே, 2016

தமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....!


             கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு வழிகளில் தமிழக மக்களை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும் இன்று மீண்டும் தலைகுனிய வைத்திருப்பது வெட்கக்கேடானது. 
                   கடுமையான பணப்பட்டுவாடா எதிரொலியாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும்  தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது வெட்கக்கேடானது. தேர்தல் விதிமுறைப்படி  இதுவரை வேட்பாளர் இறந்துவிட்டால் அல்லது கலவரங்கள் நடைபெற்றால் தான் தேர்தலை ஒத்திவைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். 
             அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவைச்  சேர்ந்த  முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும்  திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இந்த இரு பணமுதலைகள் இந்த தொகுதியில் தேர்தல் ஆணையமே திணறிப்போயிருக்கிறது. இவர்கள் செய்த பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தாலேயே  கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் போனதால் தான் இந்த நடவடிக்கையாம். கடவுளிடம் தான் அரவக்குறிச்சி தொகுதியை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு தேர்தல் ஆணையம் நொந்துப்போயிருக்கிறது. 
          கடுமையான பணப்பட்டுவாடா காரணமாகவும்,  இந்த தொகுதியில் தான் திமுக-அதிமுகவிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த பணம் அதிக அளவு கைப்பற்றப்பட்டதன் காரணமாகவும் தேர்தலை ஒத்திவைக்கும் முடிவுக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டிருக்கிறது. அநேகமாக இதுபோன்ற தேர்தல் ஒத்திவைப்பு என்பது தேர்தல் வரலாற்றிலேயே இது தான் முதல்முறையாக இருக்கும். தமிழகம் தான் முன்மாதிரியாக இருக்கும் என்பது வெட்ககேடானது. 
            தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை ஒரு வாரத்திற்கு  முன்னதாகவே எடுத்திருந்தால், மற்ற தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறைக்கப்பட்டிருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு தேர்தல் பிரச்சாரம் முடியும் வரை காத்திருந்தது புதிராக இருக்கிறது. 
             இனிமேலாவது தங்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி ஆட்சிக்கு வரத்துடிக்கும் திமுக-அதிமுக ஆட்சிகளை தூக்கியெறிய தமிழக மக்கள் தயங்கக்கூடாது. உலகத்தின் பார்வைக்கு தங்களை பிச்சைக்காரர்களாக படம் பிடித்துக்காட்டிய திமுக-அதிமுக கட்சிகளை தமிழக மக்கள் துரத்தியடிக்கவேண்டும். இப்போதாவது தமிழக மக்கள் திமுக அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள...? 

வெள்ளி, 13 மே, 2016

இலாசுப்பேட்டை வாக்காளர்களை ஈர்க்கும் சி.பி.எம் வேட்பாளர்...!


கல்லூரியில் மாணவர்... போராட்டக்களத்தில் ஆசிரியர்...

கட்டுரையாளர் : புதுவை ராம்ஜி 


          மாணவர்களுக்கு எதற்காக அரசியல் என்று அவர்களை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்கிற பல அரசியல் கட்சிகளுக்கு மாறாக, புதிய சிந்தனைகள் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் அரசியலுக்கு அவசியம் வரவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியில் முதன்முறையாக இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த ஒருவரை லாசுப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 
         அவர் அ. ஆனந்த், வயது 26, புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருப்பவர். தமிழ்நாடு - புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே இவர்தான் இளம் வேட்பாளர். இவர் சமூக அக்கறையுள்ள மாணவப் போராளி. லாசுப்பேட்டையிலுள்ள நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே மாணவர்களுக்குரிய இலவச பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகங்களுக்காகப் போராடி அவற்றைப் பெற்றுத் தந்தது இவரது முதல் போராட்டம். சமூக அக்கறையே இல்லாமல் சுற்றித்திரிபவர்களாக சித்தரிக்கப்படும் இன்றைய இளைஞர்களிடையே, பகலில் கல்விக்கான நேரம் போக மற்ற நேரங்களில் இயக்கப்பணிகள், போராட்டங்கள் என்று தன்னை ஒரு சமூக சிந்தனையாளனாக செதுக்கிக்கொண்டவர். இரவிலும் பொறுப்புள்ள மகனாக தன் தந்தையாரின் பெட்டிக்கடையில் அவருக்கு உதவியாக இருப்பவர். இப்படிப் பல வகைகளில் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாய்த் திகழ்பவர். எளிய குடும்பத்தை சேர்ந்தவர். வாடகை வீட்டில்தான் குடியிருப்பு. அப்பா நடத்தும் பெட்டிக்கடையே பிரதான வருவாய். 
         தன்னொத்த சக மாணவர்களுக்காகக் களமிறங்கி, கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்தவும், கல்வி நிறுவனங்களின் குளறுபடிகளுக்கு முடிவு கட்டவும், கல்விக் கட்டண உயர்வைத் தடுக்கவும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை நிறுத்தவும், மாணவர்களுக்கு அரசு கொடுக்க மறந்த லேப்டாப்களை வழங்கச் செய்யவும் என எத்தனையோ போராட்டங்களை மாணவர் சங்கத்தின் சார்பில் நடத்திப் பங்கேற்றிருப்பவர், மக்களைத் தாக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி, தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு அரசு ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ராகிங், பாலியல் சீண்டலுக்கு எதிராக என இன்னும் எத்தனையோ போராட்டப் பங்களிப்புகள். இவரது தலைமையிலான போராட்டத்தின் விளைவாக, கடந்த தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருந்த லேப்டாப்களை முதலமைச்சர் ரங்கசாமி மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
           நீதிக்காக நடத்திய பல்வேறு போராட்டங்களுக்காக அரசு அளித்த பரிசாக இவர் மீது பல வழக்குகள். சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் பெரும்புள்ளிகளையும் காவல்துறையைச் சேர்ந்தவர்களையும் கைது செய்யக்கோரி போராட்டங்களை நடத்தியதால் அரசு ஆனந்த் மீது வழக்கு போட்டிருக்கிறது. அரசு பாலியல் குற்றம்புரிந்த காவல்துறையை சேர்ந்தவர்களை மட்டும் ஒப்புக்காக கைது செய்து வெளியே விட்டுவிட்டது. ஆனால் முக்கிய குற்றவாளிகளான அந்த 'பெரும்புள்ளிகள்' மட்டும் இன்றளவும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போதைய தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள் என்பது கூடுதல் செய்தி!                    ஆனந்த் வாக்காளர்களை சந்திக்கும் விதமே அலாதியானது. தொகுதி முழுதும் பெரும்பாலும் பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இருக்கும் வீடென்பதால் வாக்காளர்களை அணுகுவதில் சிரமமில்லாமல் உணர்கிறார். பார்க்கும் பெரியவர்கள் அனைவரையும் 'தாத்தா, பாட்டி, ஆன்ட்டி, அங்க்கிள்' என எப்போதும் போல் இயல்பாக அழைத்து வாக்குகளை கேட்கிறார். அவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளையாய் வரவேற்று உள்ளே அழைத்துப் பேசுகிறார்கள்.
        ஒரு மாணவர் அரசியலில் ஈடுபட முடியுமா... அதுவும் தேர்தலில் நிற்கமுடியுமா... மாணவர்களுக்கு வாய்ப்புத் தரும் அரசியல் கட்சியும் இருக்கிறதா... இது சாத்தியம் தானா... என்றெல்லாம் பெரியவர்களும், மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தை பார்த்து அதிசயித்துப் போகிறார்கள். தினந்தோறும் காலையும் மாலையும் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பல்கலைக்கழக - கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் ஆனந்தோடு கூட்டமாக வருகிறார்கள். இது போட்டி வேட்பாளர்களுக்கு பயத்தை கிளப்பியுள்ளது. தற்போது அவர்களும் மாணவர்களை 'சம்பளத்திற்கு' அமர்த்தி தங்களோடு அழைத்துவரும் அளவிற்கு நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது! 
       ஆனந்தின் பிரச்சாரத்தில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்த ஆர்.ஜெயராமன் மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் களத்தில் இறங்கி ஆனந்திற்காக பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதுதான்.

தேர்ந்தெடுக்கப்பட்டால்....


          ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெற்றுத்தரப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் நடக்கும் கட்டணக் கொள்ளையை தடுத்திட கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்படும். ''புதுச்சேரி மக்களின் கனவான மாநில பல்கலைக்கழகம் துவங்கவும், தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரவும், அரசுத்துறைகளில் சட்டவிரோத பணி நியமனத்தை தடுத்து, வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யவும், லாசுப்பேட்டை அரசு மருத்துவமனை 24 மணிநேரம் செயல்படும் மருத்துவமனையாக மாற்றவும், வீடில்லாத மக்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கவும், சட்டமன்றத்தில் போராடுவேன்,'' என்று உண்மை உணர்வோடு உறுதியளிக்கிறார். ஒரு மக்கள் ஊழியனாய் மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்றும் தன் தொகுதி மக்களுக்கு வாக்குறுதியாக அளித்திருக்கிறார். 
           ஒரு மாணவரால் சட்டமன்ற உறுப்பினராய் செயல்பட முடியுமா என்று கேட்பவர்களுக்கு, 'முடியும் என்பதே மூலதனம்... முடியாது என்பது மூடத்தனம்... இது தான் என் கட்சி எனக்குக் கற்றுத்தந்த பாடம்...' என்று சொல்லிக்கொண்டே பிரச்சாரத்தில் வலம் வருகிறார் ஆனந்த்.

நன்றி : தீக்கதிர் / 13/05/2016

வியாழன், 28 ஏப்ரல், 2016

மக்கள் நலக்கூட்டணி அரசால் மட்டுமே முடியும்...!


மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில்           
80 பக்கங்கள் கொண்டுள்ளது.         

அதன் முக்கிய அம்சங்கள்:       

* ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டணி அரசு அமைக்கப்படும்.
* அதிமுக ~ திமுக உண்மையான மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை தேமுதிக - மநகூ- தமாகா ஆட்சி வழங்கும்.
* விவசாய கடன்கள் உடனே ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் திட்டம் உருவாக்கப்படும்.
* வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
* அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
* லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும்.
* உலக வர்த்தக ஒப்பந்தம், உள்நாட்டுத் தொழில்களை நாசப்படுத்துகிறது. மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் நலக் கூட்டணி எதிர்க்கும்.
* தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டத் திருத்தம்.
* உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை கட்டாயமாக்கப்படும்.
* கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.
* சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கபட்டுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும்.
* பட்டியலினத்தோர் துணைத்திட்ட நிதியில், சிறப்பு கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
* மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.
* கல்லூரி, வேலை வாய்ப்பில் 25 மரம் நட்டு பராமரிப்பவர்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படும்.
* 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் இலவசம்.
* காவேரி டெல்ட்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
* தமிழ் ஆய்வுக்க உலக நாட்டு பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துவோம்.
* வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் அமைக்கப்படும்.
* பொதுக் கணக்குக் குழு அமைத்து அரசு திட்டங்களை மக்கள் கண்காணிக்க ஏற்பாடு.
* மக்கள் பிரச்சனைகளை துணிவோடு வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு அங்கீகாரம்.
* முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும். சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
* மக்களை நாடி அரசு என்ற வகையில், அரசு நிர்வாகத்தில் மாற்றம்.
* அரசு விழாக்கள், கட்சி சார்பற்ற விழாக்களாக நடக்க விதி வகுப்போம்.
* நெறிமுறைக் குழு அமைத்து, பல்துறை அறிஞர்கள் கண்கானிப்புடன் கூடிய கூட்டணி அரசு அமைப்போம்.
* உண்மையான மக்கள் நல அரசை ஏற்படுத்துவோம், கார்ப்பரேட் சேவகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
* சிறு தொழில் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படும்.
* மாணவர்களின் கடன் தள்ளுபடி.
* பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.
* மாணவர்களுக்கான தனி பேருந்துகள்.
* இலவசமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கப்படும்.
* மீனவர் நலன் பாதுகாக்கப்படும்.
* வணிகர்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி எளிமையான முறையில் உரிமம் வழங்கப்படும்.
* இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்.
* மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்
* சில்லறை வணிகர் நலன் காக்கப்படும்.
* மதம் மாறிய இஸ்லாமியரை பிற்படுத்த பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கப்படும்.
* மகளிர் சுய உதவி கடனை அரசே செலுத்தும்.
* திருநங்கைகளுக்கு தனி வாரியம், பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள்
* அனைத்து அலுவலகங்களிலும் அம்பேத்கர் படம்
* ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல சிகிச்சை
* மின்னணு கழிவுகள் மேலாண்மை
* படித்த இளைஞர்களுக்கு டேட்டா பேஸ்.
* மரம் நடுதல் பேரியக்கம்.
* ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற்றம்.
* குளிர்பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சுதல் தடுக்கப்படும்.
* சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு
* மாவட்டம் தோறும் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகள்
* கல்விக்கடன்கள் உதவித்தொகைகளை அரசே செலுத்தும்
* தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டப்படும்.
* ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நல் உறவு பராமரிக்கப்படும்.
* மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டுப் பத்திரம்.
* பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
* பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ, வட்டியில்லா கடனில் வாகன வசதி.
* இரு மாதங்களுக்கு ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பு.
* சட்டமன்ற நடவடிக்கைகள் இணையத்தில் பதியப்படும்.
* அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடுகள் இன்றி வழிபடும் உரிமை நிலை நாட்டப்படும்.
* பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படும்.
* மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் அவலம் ஒழிக்கப்படும்.
* மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டங்கள்
* அனைத்துப் பழங்குடியினருக்கும் சாதிச் சான்றிதழ்
* ஊராட்சி அலுவலர் முதல் தலைமைச் செயலகம் வரை அரசின் ஒப்பந்தப்பணிகளை கண்காணிக்க பொதுக்கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். இதில் பொதுமக்கள் அங்கம் வகிப்பார்கள்.
* பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் ஊழல்களை ஒழிப்பதற்காக, வருவாய்த்துறையில் நவீன மின்னணு தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்படும். சேவை பெறும் உரிமைச் சட்டம், தகவல் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரிக்க நிபுணர் குழு, உழலை ஒழிக்க ‘புகார் விசாரணை ஆணையம்’ அமைக்கப்படும்.
* கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.
* சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும், அவர்களுக்கென்று தனி காவல் பிரிவும் உருவாக்கப்படும்.
* தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்படும்.
* காவலர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்யப்படும்.
* பெண் காவலர்கள் பகல் நேரம் மட்டும் பணி செய்தால் போதும்.
* கரும்பு டன் ஒன்றின் விலை ரூ.4 ஆயிரம், நெல் ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 என விலை நிர்ணயிக்கப்படும். மாநில விவசாயிகள் ஆணையம் அமைக்கப்படும்.
* மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் நிறுத்தப்படும்.
* நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
* முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி 150 நாட்களுக்கு ரூ.250 சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விவசாய வேலைகளும் அதில் அடக்கமாகும்.
* மழை, வெயில் வெள்ளம் போன்றவற்றிலிருந்து சென்னையை பாதுகாப்போம்.
* ஐடி ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை உறுதி செய்யப்படும். முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் இருக்காது.
* மின் துறை ஊழல் ஒழிக்கப்படும். மாதா மாதம் மின் கட்டணம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்.
* தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளை ஒழிக்கப்படும்.
* சென்னை, கோவை, தஞ்சை, விழுப்புரம் என 12 இடங்களில் உயர் கல்வி நிலையங்கள் உருவாக்கப்படும்.
* இலவச சிகிச்சை வழங்கவும், உயர் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவோம்.
* தொழில்முறை கல்வி கற்றோர் நேர்காணலுக்கு செல்லும் போது அவர்கள் குடும்பத்தினர் நடுகின்ற மரக்கன்றுகளுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
* பேருந்து கட்டணம் குறைக்கப்படும், சுங்கவரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை.
* கிராமங்களில் நடமாடும் மருத்துவ சேவை, மினரல் குடிநீர் வழங்கப்படும்.
* நெசவாளர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிலமற்ற ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு தலா இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவது என்பதில் தனித்து வாழும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
* மதவெறியை தடுத்து, சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். சாதி மறுப்புக் காதலர்கள், தம்பதியினரைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கென தனி காவல் பிரிவு உருவாக்கப்படும்.

அமெரிக்காவின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார் நரேந்திரமோடி...!


    வருகிற ஜூன் மாதம் 7 - 8 தேதிகளில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு போறாராமா...!  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை  சந்திக்கப் போறாராமா...! அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில பேசப்போறாராமா...! அதுல என்னான்னா...? நரேந்திரமோடி பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்துல பேசப்போற ஆறாவது இந்திய பிரதமர்ன்னு புல்லரிச்சிப்போறாங்க பாஜககாரங்க...! 
          பிரதமர்னா அண்டை நாட்டுக்கு போனா என்ன தப்புன்னு கேட்கலாம்... ஒரு அண்டை நாட்டுக்கு ஒரு தடவை போனா தப்பில்லை... மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு வெளிநாட்டிலேயே தான் இருப்பாரு... அப்பப்ப இந்தியாவிற்கு வந்துட்டு ஏதாவது ஒரு நாட்டுக்கு பறந்திடுவாரு.... இப்படியா அவரு மட்டும் வெளிநாட்டு பயணச்செலவே பல கோடிகளை முழுங்கியிருக்காரு...  
           இவரு பயணம் செஞ்ச  நாடுகளிலேயே அதிகமா பயணம் செஞ்ச  நாடு என்னன்னு கேட்டா... ஜி.கே படிக்கும் குழந்தைங்கக்கூட சொல்லுவாங்க... அமெரிக்கான்னு... ஆமாங்க ஆச்சரியமா இருக்கா... கடந்த ரெண்டு ஆண்டுகள்ல மோடியின் வருகிற அமெரிக்கப்பயணம் என்பது ஐந்தாவது முறை... ஏறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்காவிற்கு போயிட்டு வாறாரு... ஒபாமாவும் மோடியும் இணைபிரியாத நண்பர்களா ஆயிட்டாங்கலாமா... ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருக்க முடியலயாமா...!

வியாழன், 17 மார்ச், 2016

உதாரணமாய் வாழும் எங்கள் தோழர் சங்கரய்யா...!


              மேடவாக்கம் காயிதமில்லத் கல்லூரி சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான "பொதுவாழ்வில் தூய்மையாளர்" விருது விடுதலைப்போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத்தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. விழாக்குழுவினர் விருதுடன் ரூ.2.50 இலட்சம் ரொக்கமும் சேர்த்து அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். 
          விருதினை பெற்றுக்கொண்டு வழக்கமான சிம்மக்குரலில் பேசிய தோழர் சங்கரய்யா, ''நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியன். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசின் பென்ஷன் மற்றும் சலுகைகளை நான் பெறுவதில்லை. எனவே நீங்கள் கொடுத்த ரூ.2.50 இலட்சம் பணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பணத்தை காயிதேமில்லத் கல்லூரியில் படிக்கும் தலித் மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று விழாக்குழுவினர் மனம் நோகாதவண்ணம் எடுத்துரைத்து கொடுத்தப் பணத்தை திருப்பி அளித்தார். 
        ஆட்சியிலிருக்கும் போது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கூச்சப்படாமலும், தைரியமாகவும் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் திமுக மற்றும் அதிமுக  கட்சித்தலைவர்கள் வாழும் இந்த மண்ணில் தான், விருதாக கொடுத்தப் பணத்தின் மீது ஆசைகொள்ளாமல், நல்ல காரியத்திற்காக திருப்பிக்கொடுத்த தன்னலமற்ற கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும் வாழ்கிறார் என்பதும், அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும்போது  பெருமையாய் இருக்கிறது. 

      தோழர் சங்கரய்யா அவர்கள் சுதந்திரப்போராட்டக் காலத்தில் எட்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும், 3-1/2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர். மூன்று  முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். 

உதாரணமாய் வாழும் உயர்ந்த உள்ளத்தை உவப்புடன் வணங்குவோம்...!

வியாழன், 25 பிப்ரவரி, 2016

மக்களை மறக்கடிக்கும் வேலையில் திமுகவும் அதிமுகவும்....!


      கடந்த இரண்டு நாட்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைத்தளங்களிளும்  திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ''முதலமைச்சரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - ன்னு திமுகவும், பதிலுக்கு ''திமுக தலைவரை அங்க பார்த்திருப்பீங்க... இங்க பார்த்திருப்பீங்க...'' - அதிமுகவும் லாவணி பண்ணிக்கொண்டு திரிவதைப் பார்த்திருப்பீர்கள். 
         இதில என்ன விசேஷம் என்றால்.... இவிங்க ரெண்டு பேருமே ரொம்ப சர்வ ஜாக்கிரதையா அவரவர்கள்  செய்த ஊழல்களை மட்டும் சொல்லி லாவணி பண்ணவில்லை. அதில இரண்டு  பேருமே திரை மறைவில் ஒற்றுமையை கடைபிடித்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஊழல் பேர்வழிகள் என்று உலகத்திற்கே நன்றாக தெரியும். பிறந்த குழந்தையை கேட்டால் கூட சரியா சொல்லும். அப்படிப்பட்ட உண்மையை சொல்லி இருவருமே குற்றம் சாட்டிக்கொள்ளவில்லை என்பது திரைமறைவு உண்மை. 
           நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் - கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என்பதும், இரகசிய கூட்டணி இருக்கிறது என்பதும் உண்மை. 
         ஊழலை ஒழிப்போம்... நல்லாட்சித் தருவோம்... என்ற முழக்கமிட்டு உதயமான மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறிச் சென்றுக்கொண்டிருக்கிற சூழ்நிலையில், வழக்கம் போல் தாங்கள் இருவர் மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற கருத்தாக்கத்தை மக்களின் புத்தியில் திணிப்பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மறந்துவிடுவதற்காகவும் திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டு யோக்கியர்களைப் போன்று இதுபோன்ற விளம்பரங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வெளியிடுகின்றன என்பது தான் உண்மை. 
         மக்கள் தான் புரிந்துகொண்ட இவர்களை விரட்டியடிக்கவேண்டும். 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தியாகத்தின் மீது கல்லெறிகிறது துரோகம்...!


           ''அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்''                    





கட்டுரையாளர் ​: 

தோழர்.க.கனகராஜ்        
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி        



துரோகமே வாழ்க்கையாக...         

               அவர்கள் தங்களை தேச பக்தர்கள் என்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பாக சுதந்திரம் பெற்ற காலத்தையும் சேர்த்து ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இரண்டு பேர் தலைவர்களாக இருந்தார்கள். ஒருவர் ஹெட்கேவர். அவர் நிறுவனத் தலைவர். அதற்கு முன்பு காங்கிரசிலிருந்தார். காங்கிரசிலிருந்த போது, ஆர்எஸ்எஸ்-சை ஆரம்பிக்கும் முன் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பித்த பிறகு ஒருமுறை ஜெயிலுக்கு போனார். இந்த சிறைவாசத்திற்கான நோக்கத்தை அவரது சுயசரிதையை எழுதியவரிடம் “சிறைக்குப் போனால் உள்ளேயிருக்கும் காங்கிரஸ்காரர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக மாற்ற முடியும்” என்பதற்காகவே போனதாகச் சொல்லியிருக்கிறார். இதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த ஒரு ஈ, காக்கையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதே கிடையாது. மாறாக, சுதந்திரப் போராட்டத்தின் நெடுகிலும் தேச பக்தர்களை, தியாகிகளை அவமானப்படுத்துவதும், அவதூறு செய்வதும், ஆங்கிலேயர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதுமாகவே அவர்களின் காலம் கழிந்திருக்கிறது.
        சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர் (குருஜிதான்) ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு நிமிடம் கூட தப்பித் தவறிக் கூட கனவிலும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது; ஈடுபட்டவர்களை வாழ்த்திப் பேசியதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனால் ஒரு பேச்சுக்காகக் கூட ஆங்கிலேயர்களை விமர்சித்ததும் கூட கிடையாது. தங்களில் யாராவது ஒருவரை சுதந்திரப் போராட்ட வீரராகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாஜ்பாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, அதை பத்திரிகைகள் விசாரிக்கும்போது அது உண்மையல்ல, மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சொல்லிவிட்டு அவர் வெளியே வந்துவிட்டார் என்கிற விஷயம் வெளியே வந்து, அவர்கள் அவமானப்பட்டு நின்றார்கள். சாவர்க்கர் பெரிய சாகசம் செய்து விட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் ‘வீர’ சாவர்க்கர் என்றழைக்கப்பட்டதாகவும் அவ்வப்போது அவர்கள் சொல்வதுண்டு. அவர் இங்கிலாந்தில் இருக்கும்போது ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக பேசினார், எழுதினார் என்பதெல்லாம் உண்மை. ஆனால் அவர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மன்னிப்புக் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், கருணை மனு எப்படியெல்லாம் எழுத முடியும் என்பதற்கு இன்றுவரையிலும் ‘சிறந்த உதாரணமாய்’ திகழ்வது ‘வீர’சாவர்க்கர் ஆங்கில அரசாங்கத்திற்கு எழுதிய கடிதங்கள்தான்.
         அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்களுடைய ஆவணங்களில் அவர்கள் சுதந்திரப் போராட்டம் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம், வரிக்கு வரி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். இதோ அந்த விபரங்கள்:அவர்களது ஆவணங்களில் உள்ளபடி அவர்களின் எழுத்துக்களில்....

1. ஆங்கிலேயர்களை விமர்சித்து எழுதியது - ஜீரோ
2. ஆங்கிலேய ஆட்சியாளர்களைப் போற்றிப் புகழ்ந்து எழுதியது - 16 முறை
3. ஆங்கிலேய எதிர்ப்புச் சின்னமான வந்தே மாதரம் பாடியது - ஜீரோ
4. விடுதலைப் போராட்டத்தை அவதூறு செய்து எழுதியது - 16 முறை5. விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
6. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டுமென எழுதியது - ஜீரோ
7. ஜாலியன் வாலாபாக், ககோரி குண்டு வழக்கு, கதார் இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு - ஜீரோ
8. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தங்களின் உயிரை அர்ப்பணித்தவர்களைப் பாராட்டி எழுதியது - ஜீரோ
9. தியாகிகளின் தியாகத்தை கேவலப்படுத்தி எழுதியது - 10 முறை
10. சுதேசியைப் பாராட்டிய குறிப்புகள் - ஜீரோ - இப்படி அடுக்கிக் கொண்டே போக முடியும்.

         அவர்கள் விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்தவர்கள் கிடையாது. அதைச் சிறுமைப்படுத்தியவர்கள். அதைச் சீர்குலைக்க முனைந்தவர்கள். இப்போது அதிகார பீடம் அவர்களுக்கு வாய்த்திருப்பதால் தேச பக்தி பற்றிப் பேசுகிறார்கள். தேச விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களை அப்போது அவமானப்படுத்தினார்கள்.  இப்போது தேச விரோதிகள் என்கிறார்கள்.

தேசப் பிரிவினையும் சங்பரிவாரமும்            


                     இந்தியா இரு நாடுகளாக பிரிக்கப்பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், 1942ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் இவர்களின் தேசபக்த முகமூடி மட்டுமல்ல, இவர்களது உண்மையான முகமே கூட அறுந்து தொங்கும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாதது மட்டுமன்றி, 1942 இல் பல மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஆங்கிலேய கவர்னர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, இந்து மகா சபா அந்த அரசாங்கங்களில் பங்கெடுத்துக் கொண்டது.
          அவர்கள் எந்த முஸ்லிம் லீக்கை இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்றார்களோ, அந்த முஸ்லிம் லீக்கோடு இணைந்து சிந்து, வங்காளம், வடமேற்கு மாநிலம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். இதுகுறித்து கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபையின் 24 ஆவது கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய வீர சாவர்க்கர் பின்வருமாறு பேசினார். “நடைமுறை அரசியலில் நாம் முன்னேற வேண்டும். அதற்காக இந்து மகா சபா நியாயமான சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டும். சமீபத்தில் சிந்து மாகாணத்தில் அந்த மாகாண இந்து மகாசபா, முஸ்லிம் லீக் அழைப்பின் பேரில் அவர்களோடு கைகோர்த்து கூட்டணி அரசை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. வங்காளத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். முஸ்லிம் லீக்கின் முரட்டுத்தனமான நபர்களோடு காங்கிரஸால் கூட எவ்வளவு பணிந்து போன பிறகும் ஒத்துப்போக முடியவில்லை. தற்போது இந்து மகா சபாவோடு தொடர்பு கொண்டு கூட்டணி அரசை அமைத்திருக்கிறார்கள். அதன் பிரதமராக பஸ்லூல் ஹக் விளங்குகிறார். அந்த அரசாங்கம் இந்து மகா சபையின் தலைவரான டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் வழிகாட்டுதலோடு ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கிறது. இதனால் இரண்டு சமூகங்களுமே பலன் பெற்றிருக்கிறார்கள்.” எந்த தேசப் பிரிவினையைச் சொல்லி, அதற்குக் காரணமான முஸ்லிம் லீக்கைச் சொல்லி இன்றைக்கும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களோடு கைகோர்த்துக் கொண்டவர்கள்தான் இவர்கள்.
            இதில் வேடிக்கை என்னவென்றால், வங்காள மாகாண சட்டமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சியாமா பிரசாத் முகர்ஜி அந்த அரசாங்கத்தில் நிதியமைச்சர். அதன் பிறகும் அந்தப் பொறுப்பில் ஒட்டிக் கொண்டிருந்தார். அவருக்குத் தான் சமீபத்தில் தபால் தலை வெளியிட்டு அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அவரின் வாரிசுகள் தான், கடந்த ஜனவரி 30-ந் தேதியன்று காந்தியைக் கொன்ற கோட்சேயை, கோட்சேவின் பிறந்த நாளில் கூட அல்ல, காந்தி கொல்லப்பட்ட நாளன்று அவரை நினைவு கூர்ந்து இனிப்பு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள். தேசப் பிதாவின் கொலையைக் கொண்டாடும் வக்கிரப்புத்திக்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் சுதந்திரப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தேச விரோதிகள் என்றும் சொல்லுகிற தைரியம் இவர்களுக்கு வந்திருக்கிறது.
           தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அவர்கள் தாக்கிவிட்டு பெயர்ப் பலகையின் மீது ‘பாகிஸ்தான் ஏஜெண்டுகள் அலுவலகம்‘ என்று எழுதிவைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இந்த வக்கிரப்புத்திக்காரர்களுக்கு தேச பக்தியும் தெரியாது, தேச பக்தர்களை மதிக்கவும் தெரியாது. எந்த ஹபீஸ் சையதின் டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து வந்தாகச் சொல்லி பாஜக எம்.பி.யான சாக்ஷி மகராஜ் அந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் ‘தேச விரோதிகளை’ எல்லாம் தூக்கில் போட சாட்சி வேண்டுமென்கிறாரோ, அந்த ஹபீஸ் சையத்தோடு வைதீக் என்கிற ஒரு நபர் ரகசியமாக இந்தியாவிலிருந்து பயணம் செய்து பாகிஸ்தான் போய் சந்தித்து விட்டு வந்தார். அவர் யார் என்ற கேள்வி எழும்.
           அவரும் இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜீத் தோவலும் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் நிருபேந்திர மிஸ்ராவும், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருக்கும் பி.கே. மிஸ்ராவும் ஒரு டிரஸ்ட்டின் உறுப்பினர்களாக இருந்தார்கள். மூலம் எதுவென்பது தெரிந்திருக்கும். இவர்கள் தான் போலி டுவிட்டர் பக்கத்தில் தாங்களே உருவாக்கிய செய்திகளை வைத்துக் கொண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்கிறார்கள். அது தவறு என்று சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது கல்லெறிகிறார்கள்.
          1340 வருடங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அதன் துவக்கம் முதல் இறுதி வரை துரோகமிழைத்து மட்டுமே வந்த ஒரு கூட்டம், மார்க்சிஸ்ட் கட்சியை தேச விரோதிகள் என்றும், பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்றும் கூவித் திரிகிறது.
        அவர்கள் கல்லெறிந்த அந்த அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள், நடமாடியவர்கள் பெருமை இவர்களுக்குத் தெரியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 422 பேர். இவர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் இருந்த காலம் 1340 வருடங்கள் 2 மாதங்கள் 20 நாட்கள். நாட்டு விடுதலையின் போது 20 வயதிற்கும் குறைந்தவர்களை விட்டு விட்டால் ஒவ்வொருவரும் சராசரியாக சிறையில் இருந்த காலம் 5 ஆண்டுகள். ஆங்கில ஆட்சியிலும், அதற்குப் பின்னர் காங்கிரசின் அடக்குமுறை காலத்திலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலம் 348 வருடங்கள், 10 மாதங்கள், 15 நாட்கள். இத்தகைய மகத்தான தலைவர்களின் இயக்க அலுவலகத்தின் மீதுதான் அவர்கள் கல்லெறிந்திருக்கிறார்கள். சுதந்திரம், தேசபக்தி, போராட்டம், தியாகம் என்கிற கற்பூர வாசனைக்கும் தங்களுக்கும் காததூரம் என்பதை மீண்டும் ஒருமுறை மதவெறி சங் பரிவாரம் நிரூபித்திருக்கிறது.

நன்றி : தீக்கதிர் 

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

நாட்டிற்கே வழிகாட்டுகிறது திரிபுரா மாநில அரசு...!


ஒரு அரசாங்கம் எப்படிச் செயல்பட வேண்டும் 
என்று நாட்டிற்கே முன்னுதாரணமாக வழிகாட்டுகிறது 
தோழர். மாணிக் சர்க்கார்  தலைமையிலான் திரிபுரா மாநில அரசு...!

          அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாட்டில் (பிளீனத்தில்) திரிபுரா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :
           இடது முன்னணி அரசாங்கத்தின் கீழ், வடகிழக்கில் உள்ள ஒரு சிறிய மாநிலமான திரிபுரா, பல்வேறு முனைகளிலும் சக்திவாய்ந்த முறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மக்கள் ஆதரவு கொள்கைகள் மூலமாக, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருப்பது மட்டுமல்லாமல், மிகவும் குறைவான வள ஆதாரங்களே இருந்தபோதிலும் அதில்கூட மக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான மாற்றுக் கொள்கைகளைப் பின்பற்ற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது. திரிபுரா மாநிலம் 1978இலிருந்து இடது முன்னணி அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இடது முன்னணி அரசாங்கத்தின் முதல் இரு ஆட்சிக்காலத்தில், மாபெரும் இரு சாதனைகளை அது நடத்தி இருக்கிறது. நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்தியதும், அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆறாவது அட்டவணையின்கீழ் திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் சுயாட்சி மாவட்டக் கவுன்சில் அமைத்ததுமே மேற்படி இரு பெரும் சாதனைகளாகும்.
              1988-93 ஆண்டு காலத்தில் தேர்தலில் மோசடி நடத்தி, ஓர் அரைப்பாசிச பயங்கர ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) நடத்தப்பட்ட காலத்திற்குப்பின், நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் இடது முன்னணி மீது மக்கள் அளவிடற்கரிய நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்கள். கடந்த 22 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சியில் அபரிமிதமான முன்னேற்றத்தை இடதுமுன்னணி அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முன்மாதிரி மாநிலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று முறியடித்து முன்னேறிய முன்மாதிரியான மாநிலமாக திரிபுரா மாறி இருக்கிறது. ஒருகாலத்தில் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளால் நிதிஉதவி மற்றும் ஆதரவுடன் தீவிரவாதிகளின் வன்முறைச் சம்பவங்கள் மாநிலத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கி இருந்தது.
         அவற்றையெல்லாம் மக்களின் ஒற்றுமையுடன் உறுதியுடன் எதிர்த்து நின்று அமைதியை நிலைநிறுத்திய ஒரு முன்மாதிரியான மாநிலமாக உருவாகியிருக்கிறது. இத்தகைய அமைதி நிலைமையை நிர்வாக உறுதியால் மட்டும் எய்தியதாகக் கொள்ள முடியாது. மாறாக, மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டியிருப்பதும் குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகளை அமல்படுத்தி இருப்பதுமே காரணங்களாகும். சுயாட்சி மாவட்டக் கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சிகள், பஞ்சாயத்துகள், கிராமக் குழுக்களிடையே அதிகாரங்களைப் பரவலாக்கியதன் மூலம் அரசியல் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி இருப்பதும், வளர்ச்சி நடவடிக்கைகளில் மக்கள்ஆர்வத்துடன் பங்களிப்பினைச் செய்வதற்கு வழிவகுத்தது.

எழுத்தறிவில் சாதனை                  

         இடதுமுன்னணி அரசாங்கம் பல்வேறு முனைகளிலும் மகத்தான சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, மனிதவள வளர்ச்சியில் அது மிகவும் உன்னதமான முறையில் அமைந்திருக்கிறது. நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 97 சதவீதத்தை எட்டி, நாட்டில் உயர்ந்த அளவிற்கு கல்வியறிவு பெற்றோர் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் 95.71 சதவீதமாகும். இலவச பாடப் புத்தகங்களுடன் பள்ளிக் கல்வியை கல்லூரி வரைக்கும் இலவசமாக்கி இருப்பதன் மூலம் திரிபுரா அனைவருக்கும் இடைநிலைக் கல்விவரை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது. 

மனிதவள வளர்ச்சி                   

         மனிதவள வளர்ச்சி குறித்த இதர அட்டவணைகளும் மக்களின் தரமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐகேயவே ஆடிசவயடவைல) அகில இந்திய அளவில் 40 ஆக இருக்கும் அதே சமயத்தில், திரிபுராவில் அது 26 மட்டும்தான். பிறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 21.4 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 13.7 சதவீதம் மட்டுமேயாகும். அதேபோன்று இறப்பு விகிதம் அகில இந்திய அளவில் 7 சதவீதமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் திரிபுராவில் அது 4.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும் மாநிலத்தின் பூகோள அமைப்பு மிகவும் சிக்கலானதாக அமைந்துள்ள போதிலும், திரிபுரா இத்தகு சாதனைகளை எய்தி இருக்கிறது.

அனைவருக்கும் பொது விநியோகம்                 

          திரிபுரா, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்பங்களையும் கொண்டுவந்து உணவுப் பாதுகாப்பை எய்தி இருக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு கிலோ ஒன்றிற்கு 2 ரூபாய் விலையில் அரிசி வழங்கப்படும் அதே சமயத்தில், இதரர்களுக்கும் அரிசி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான விலைவிகிதத்தில் அளிக்கப்படுகிறது.கிராமப்புற வேலைத்திட்டத்தில் சாதனை திரிபுரா அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் மூலம் வேளாண்மை, காடு வளர்ப்பு, மீன்வளம், தோட்டக்கலை மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி முதலானவை அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இத்துடன் திரிபுரா, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டிலேயே உயர்ந்தநிலையில் இருப்பதை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 2013-14ஆம் ஆண்டில், கிராமப்புற மக்களுக்கு வேலை அளித்த நாட்கள் அகில இந்திய அளவில் சராசரி 38 நாட்கள் மட்டுமே என்று இருக்கக்கூடிய அதே சமயத்தில், திரிபுராவில் அது 88 நாட்களாகும். நகர்ப்புற வேலைத்திட்டம் அறிமுகம் நாட்டிலேயே முதன்முதலாக நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் 75 நாட்களுக்கு ஊதியத்துடன் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது.
    வன உரிமைகள் சட்டத்தின்கீழ் மக்களுக்கு நில உரிமை அளிக்கப்பட்டிருப்பதிலும் திரிபுரா உயர்ந்த இடத்தில் இருக்கிறது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 541 நபர்களுக்கு நிலப் பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் 99 சதவீதத்தினர் பழங்குடியினர். உள் கட்டமைப்பு விரிவாக்கம் கடும் சிரமங்கள் இருந்தபோதிலும், இடது முன்னணி அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கி இருக்கின்றது.
           மொத்தம் 8,313 மக்கள் வாழும் பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மின்சாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பாசனத்திற்குரிய நிலங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமான அளவு பாசனவசதிகளைப் பெற்றிருக்கின்றன. முன்னெப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சாலைப்போக்குவரத்து வசதிகள் உள்கிராமங்கள் வரை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
               ஏழைகளின் அரசு மக்களின் வாழ்வாதாரங்களின் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில், இடது முன்னணி அரசாங்கம் அணிதிரட்டப்படாத ஏழைத் தொழிலாளர்கள் பக்கம் நின்று அவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவாக்கி இருக்கிறது. 27 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் திரிபுராவில் வீட்டுவேலைகள் செய்யும் பெண் தொழிலாளர்கள், ஊனமுற்றோர், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நலம் பயக்கும் விதத்தில் 27 விதமான ஓய்வூதியத்திட்டங்கள் மாநில அரசால் அமல்படுத்தப் பட்டு வருகின்றன.
           அதுமட்டுமல்ல, திருநங்கையர் மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ஓய்வூதியத் திட்டங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகள், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

உள்ளாட்சிகளில் சரிபாதி பெண்கள்                 

          உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. பொது வாழ்வின் அனைத்து முனைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதையே இது பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வாய்ப்புகளை அளித்திட இடது முன்னணி அரசாங்கம் திட்டமிட்டமுறையில் விடாது முயற்சிகளை மேற்கொண்டு வருவது அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் நலனுக்கான மாற்றுக்கொள்கைகள்                 

       அகில இந்திய அளவில் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டும், ஏற்றத்தாழ்வான கூட்டாட்சி அமைப்பிலும் மற்றும் நிதி நிலைமை மிகவும் சுருங்கியநிலையில் இருந்தபோதிலும்கூட, இடது முன்னணி அரசாங்கம் தன்னுடைய மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் இவற்றை அளித்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய விதத்தில் முன்வைத்துள்ள மக்கள் நலன் காக்கும் மாற்றுக்கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றிட திரிபுரா மாநில இடதுமுன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உத்வேகம் அளிக்கக்கூடியவைகளாக அமைந்துள்ளன. சதி செய்யும் பிற்போக்கு சக்திகள்இருப்பினும் சுயதிருப்தி மனப்பான்மைக்கு இடம் அளித்திடவில்லை. திரிபுரா மாநிலத்தில் இத்தகைய அளப்பரிய முன்னேற்றத்திற்கு அடிப்படைக்காரணமாக விளங்கும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாதவர் இடையே நிகழும் ஒற்றுமையைக் குலைத்திட திரிபுராவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கும் பிற்போக்கு சக்திகள் சமயம் பார்த்துக்கொண்டிருக்கின்றன. 
             எனவே, இத்தகைய சதிவேலைகள் எதுவரினும் அதனை உடனடியாகத் தடுத்துநிறுத்தக்கூடிய விதத்தில் மக்களை அணி திரட்டுவதில் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழும் திரிபுரா மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், இடது முன்னணி மீதும் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் உட்பட தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அளவிடற்கரிய நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பிரதிபலித்துள்ளனர்.
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன சிறப்பு மாநாடு (பிளீனம்) திரிபுரா மக்கள் மற்றும் இடதுமுன்னணி அரசாங்கத்திற்குத் தன் மனமார்ந்த ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் இந்த சாதனைகளை கொண்டுசெல்லுமாறு நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிக் கிளைகளையும் கேட்டுக்கொள்கிறது. 
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நன்றி :
தீக்கதிர் 

வெள்ளி, 1 ஜனவரி, 2016

2016 ~ சோசலிச பொன்னுலம் செய்வோம்...!


          இல்லாதார் எல்லோருக்கும் வலியோரின் சுரண்டலினால் ஏற்பட்ட இல்லாமையை போக்கி, நாட்டின் வளங்களை கபளீகரம் செய்யும் தனியுடைமையை ஒழித்து, உலகின் அனைத்து  ஜெனங்களுக்கும் பொதுவுடைமை மலர்வதற்கு உளமாற உறுதியேற்போம். 
மக்கள் அனைவரும் எல்லாம் பெற்ற, வேற்றுமையில்லா   சமத்துவ சோசலிச பொன்னுலகிற்கான  பாதை வகுப்போம். 

சோசலிசமே நம் எதிர்காலம்...! 
சோசலிச பொன்னுலம் செய்வோம்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...! 

2016 ஆம் ஆண்டை இனிதாய் வரவேற்போம்...!