சனி, 28 பிப்ரவரி, 2015

மக்களை நசுக்கி பெருமுதலாளிகளை வளர்க்கும் மத்திய பட்ஜெட்...!



எழுதுகிறேன்....

சிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்குவதா...? - சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,

                      நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் தோழர்.சீத்தாராம் யெச்சூரி,எம்.பி., பேசியது வருமாறு :-                                    

               நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வடிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆழமாகப் பரிசீலித்து எண்ணற்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் தலைவராக இருந்தவர் தான் இப்போது மக்களவைத் தலைவராக இருக்கிறார். நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வடிவில் ''உள் கட்டமைப்பு திட்டங்கள்'' என்பதன்கீழ் எவையெல்லாம் வருகின்றன. மின்சார உற்பத்தி நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தண்ணீர் விநியோகம் மற்றும் இதர திட்டங்கள் என்று அரசாங்கம் அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு எதை வேண்டுமானாலும் அரசாங்கம் ''உள் கட்டமைப்பு திட்டத்தின்'' கீழ் வகைப்படுத்தி அதற்காக நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என்கிற விதத்தில் இது அரசாங்கத்திற்கு வழிவகை செய்து தருகிறது. எனவே இந்தப் பிரிவை நீக்கிட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. இப்போது ஆட்சியிலிருப்பவர்களின் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக்குழு தான் அறிவித்தது. அப்போது அவ்வாறு செய்தவர்கள் இப்போது அதே சட்ட முன்வடிவை தாக்கல் செய்திருக்கிறார்கள். இச்சட்டமுன்வடிவின் மீது நாங்கள் சில திருத்தங்களை முன்மொழிந்தோம். நாங்கள் கொண்டுவந்த திருத்தங்களை அப்போது அவர்களும் (பாஜக) ஆதரித்தார்கள். இதுவே நாங்கள் இந்த அரசின்மீது வைக்கும் குற்றச்சாட்டாகும். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது நாங்கள் சொல்லும் திருத்தங்களையெல்லாம் ஆதரித்தீர்கள்.
             ஆனால் இப்போது ஆளும்கட்சி வரிசைக்கு சென்றபின் எதிர்க்கிறீர்கள். இந்தச் சட்டமுன்வடிவானது மக்கள் விரோத, பொருளாதார விரோத, நாட்டிற்கு எதிரான ஒன்று.. எனவே இதனைத் தொடர்ந்து நாங்கள் எதிர்ப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய சட்டங்கள் எதற்கும் விதிவிலக்கு அளிக்கக்கூடாது என்று பரிந்துரைத்திருந்தது. இப்போது 13 சட்டங்களுக்கு விதிவிலக்கு கொடுத்து பட்டியலிட்டிருக்கிறது. இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கும் அம்சங்களில் தனியார் கல்விநிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
             அடுத்து, கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் ஊழல்கள் எதுவும் இல்லை என்று அவைத் தலைவர் கூறியிருக்கிறார். ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின் போது கூட ஊழல்கள் எதுவும் இல்லை. பியூஸ் கோயல், மின்சாரத்துறை இணை அமைச்சர் : எப்போதும் ஊழல்கள் இருந்து வந்திருக்கின்றன. ஐமுகூ-2 காலத்தில் அவை வெளியே வந்தன. சீத்தாராம் யெச்சூரி: மாண்புமிகு அமைச்சரின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
            ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தில் இந்த ஊழல்கள் அனைத்தும் உருவாயின. ஆனால் அவை ஐமுகூ-2 ஆட்சிக்காலத்தின்போது வெளிச்சத்திற்கு வந்தன. இப்போது, இவர்களின் ஒன்பது மாத கால ஆட்சியில் உருவாகும் ஊழல்கள், பின்னர் தெரிய வரும். ஒவ்வோராண்டும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாம் உரையாற்றுகிறோம். பொதுவாக குடியரசுத் தலைவர் உரையில் அரசாங்கம் சென்ற ஆண்டு என்ன செய்தது என்பதும், அடுத்த ஆண்டு என்ன செய்ய இருக்கிறது என்பதும் இருக்கும். இப்போது ஒரு விநோதமான சூழ்நிலையைப் பெற்றிருக்கிறோம். சென்ற ஆண்டு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, இப்போது ஆற்றிய உரையில் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். பல திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
             நேரு - காந்தி குடும்பத்தின் பெயரில் முன்பிருந்தன. இப்போது அவற்றை ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கள், தீன் தயாள் உபாத்யாய்கள் என்று மாற்றி இருக்கிறீர்கள். இத்திட்டங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு கிடைத்திருப்பது என்ன? அவைத்தலைவர் ஒரு தடவை மார்கரெட் தாச்சர் கூறியதை மேற்கோள் காட்டினார். அவர் மேற்கோள்மட்டும் காட்டவில்லை, உண்மையில் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்.
           “அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது இல்லை’’ என்று மார்கரெட் தாச்சர் கூறினார். ஆனால், நீங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு எல்லாம் விதிவிலக்கு கொடுத்திருக்கிறீர்களே, ஏன்?  “அரசாங்கத்தின் வேலை வர்த்தகம் செய்வது கிடையாது.’’ வர்த்தகம் மேற்கொள்வதை வர்த்தகர்கள் பார்த்துக்கொள்ளட்டும். நீங்கள் அதனைச் செய்ய வேண்டாம். அவர்களுக்காக நீங்கள் ஏன் இவ்வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உண்மையில் அவர்களின் (கார்ப்பரேட்டுகளின்) நலன்களை நீங்கள் மேம்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளித்திருக்கிறீர்கள். இது நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்கப்போவதில்லை. அடுத்து, குடியரசுத் தலைவர் உரையின் முதல் 25 பத்திகள், இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றி பேசுகிறது. நீங்கள் குறிப்பிடும் மக்கள் யார்?
            ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள்உபாத்யாயா ஆகியோர் குறித்துக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நாம் பெற்ற வளம் நிறைந்த வரலாற்றுப் பாரம்பரியம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. நம் நாட்டில் கவுதம புத்தர், மகாவீர் ஜெயின் ஆகியோரிடமிருந்து நாம் பெற்ற வளமான வரலாற்றுப் பாரம்பர்யம் குறித்தோ, உபநிஷத்துகள் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் புண்ணியத் தலங்கள் குறித்தோ எதுவும் இல்லை. இந்த அரசு மக்களுக்குச் சொல்லும் நிகழ்ச்சி நிரல் ஒன்று.
                ஆனால், அது பின்பற்றும் உண்மையான நிகழ்ச்சி நிரல் வேறு. இந்த அரசு பின்பற்றும் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன? ஜிகாத் காதல், வீட்டுக்குத் திரும்புவோம்  மற்றும் அது தொடர்பான அறிக்கைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தொடர்ந்து வெளியிடப்பட்டும் வருகின்றன. இந்து நாகரிகத்தைப் புகழ வேண்டும், இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள், அவர்கள் மட்டுமே இந்த நாட்டின் வாரிசுகள் என்ற விதத்தில் அந்தப் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன. உண்மைக்கும் இதற்கும் வெகுதூரமாகும். இது குறித்து இந்த அவையில் முன்பும் கூறியிருக்கிறேன். இவ்வாறான கிட்டப்பார்வையுடன் விஷயங்களை அணுகினோமானால், இப்போதுள்ள இந்தியா, தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. நாம் நம் பிரதமரிடம் சென்ற கூட்டத் தொடரின்போது என்ன கேட்டோம்? நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் குற்றப்பிரிவுகளை ஈர்க்கும் விதத்திலும் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். எந்த உறுதிமொழியும் அவரால் கொடுக்கப்படவில்லை. பிரதமர் ஒரு கிறித்துவக் குழுவினரின் விழா ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கே சகிப்புத்தன்மை குறித்து போதனைகள் செய்துள்ளார். நல்லது. ஆனால் நம் அரசமைப்புச்சட்டமானது மக்களுக்கு வாக்குறுதிகளை மட்டுமல்ல, சமத்துவத்தையும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்கள் நாட்டில் இந்துக்களுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுதான் அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரல். நிச்சயமாக இத்தகைய நிகழ்ச்சி நிரல் நாட்டின் எதிர்கால நலன்களுக்கோ, நம் புகழுக்கோ ஏற்றதல்ல.  இவ்வாறு நம் நாட்டில் பல்வேறு மதத்தினருக்கிடையேயும் இருந்துவந்த சமரசப் பண்பை மறுதலிக்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் மோசமான விஷயமாகும். 
              நோபல்பரிசு வாங்கிய அமர்த்தியாசென் மீது அவதூறை அள்ளி வீசியது போன்று, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா மீது அவதூறை அள்ளி வீசியிருப்பது போன்று மிகவும் மோசமான விஷயங்கள் நம் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய மோசமான கருத்துக்கள் நம் ஜனநாயகத்திற்கே குந்தகம் விளைவிக்கக் கூடியவைகளாகும். இந்த அரசு, நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் துரதிருஷ்டவச மான நிலையை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்துக்கள் மட்டுமே இந்த நாட்டின் முன்னோர்கள் என்று பேசுபவர்கள் இன்றைய தினம் நாடு முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கததின் தலைவர் அன்னை தெரசா குறித்து என்ன கூறியிருக்கிறார்? “அன்னை தெரசாவின் பணி உள்நோக்கம் கொண்டது. கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற வேண்டுமென்கிற ரகசிய நோக்கம் அதில் இருந்தது’’ என்கிறார். வேறொரு தருணத்தில் அவர் கூறுகிறார்: “இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்ட்ரம். இதுதான் உண்மை. இந்த சிந்தனையுடன் நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். இந்த தேசத்தை மாபெரும் தேசமாக மாற்றிட அனைத்து இந்துக்களும் அணிதிரள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். நீங்கள் விரும்பினால் அனைத்து இந்துக்களையும் அணிதிரட்டுங்கள். பிறப்பால் நானும் ஒரு இந்து தான். ஆனால் ஒரு நாத்திகனாக, ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறி இருக்கிறேன். உங்கள் சிந்தனையோட்டத்தின்படி “யார் இந்து?’’ துணைத் தலைவர் : இந்து மதத்தில் நாத்திகத்திற்கும் இடம் உண்டு. சீத்தாராம் யெச்சூரி : காலம் காலமாய் இவ்வாறு இருந்து வந்திருக்கிறது.
          ஆர்எஸ்எஸ் தலைவர் மேலும், “சங் பரிவாரத்திற்கு இது சாதகமான நேரம்’’ என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு இன்று நடைபெறுவது என்னவென்றால், மக்கள் மத்தியில் தெளிவாய்த் தெரியக்கூடிய விதத்தில் வெளியே கூறப்படாத நிகழ்ச்சிநிரல் ஒன்று இவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் குறிக்கோள் என்ன? முன்பே இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, “அரசாங்கம் 10 ஜன்பத்திலிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இன்றைய நிலைமை என்ன? பாஜகவின் முன்னாள் தலைவர், தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவர், என்ன சொல்கிறார். ரிமோட் கண்ட்ரோல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றுதான். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப் பண்புக்கான உச்சி மாநாட்டில் அவர் என்ன கூறினார்?
           “ஆர்எஸ்எஸ் வெளிசக்தி அல்ல. நாங்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்தான். நான் ஆர்எஸ்எஸ்-இலிருந்து வந்திருக்கிறேன். பிரதமரும் ஓர் ஆர்எஸ்எஸ் தொண்டர்தான். நாங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள் இறக்கும்வரை அதில் நீடிப்போம்.’’ இவ்வாறு, இது ஓர் ஆர்எஸ்எஸ் அரசாங்கம் என்பது தெள்ளத்தெளிவான ஒன்று. நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது என்ன? மிகவும் மட்டரகமான வாக்கு வங்கி அரசியல் நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்படி? சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதன்மூலம் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல, நம் நண்பர், பராக் ஒபாமாவும், இதுகுறித்துக் கூறியதைக் கேட்டோம். துணைத்தலைவர் : அவர் உங்கள் நண்பரா? சீத்தாராம் யெச்சூரி : இல்லை, அவர் நம் நண்பர், பிரதமரின் நண்பர். பராக் ஒபாமா இதுகுறித்து இரு தடவை குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சென்ற பின் வெள்ளை மாளிகையிலிருந்துகூட இது குறித்து அறிக்கை வெளியானது. எனவே, இதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். உலகம் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்தியமக்கள் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இன்றைய தினம் பின்பற்றிவரும் அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றிவருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பின்பற்றி வரும் நிகழ்ச்சிநிரல் நாட்டின் நலன்களுக்கு உதவாது. 
 
புதுடெல்லியிலிருந்து : தோழர். Sanmuga Veeramani

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து கிடக்கும் தமிழ்நாடு...!


 தமிழக மக்கள் பற்றிய உளவியல் ரீதியான ஆய்வு....!                           
              
             ''மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சுயமரியாதையும், பகுத்தறிவும் தந்தை பெரியாரால் கற்றுத்தரப்பட்டு திராவிட இயக்கம் வளர்ந்த தமிழ்நாடு இது. தமிழ் மொழி ஊக்குவிப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு என பல்வேறு நல்ல அம்சங்ககளை தமிழக மக்களுக்கு ஊட்டி இயக்கம் வளர்த்து, பின்னாளில் அண்ணாவால் திராவிட இயக்கம் அரசியல் கட்சியாய் மாறி மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் ஆதரவோடு தமிழ்நாட்டின் 1967-ஆம் ஆண்டில் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் அரியணையில் ஏறியது. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அப்போது பிடித்தது தமிழ்நாட்டிற்கு ''சனி'' - இன்று வரை விடவில்லை. இந்தியாவில் ஊழலை கண்டுபிடித்தவர்கள் காங்கிஸ் கட்சிக்காரன்கள் தான். ஆனால் மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானப்பூர்வமாக எப்படி ஊழல் செய்வது என்பதை கண்டுபிடித்தவர்கள் திமுகக்காரர்கள் தான். தமிழ் மொழி, தமிழக மக்கள் என்ற சிந்தனை மாறி, புதிய புதிய திட்டங்களை  அறிவிப்பதும்,  அதில் திட்டம் போட்டு தங்களுக்கான பங்குகளை கணக்குப்போட்டு கொள்ளையடிப்பதும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதுமாக திமுகவின் ஆட்சி என்பது திசைமாறியது.                  சுயமரியாதையும், பகுத்தறிவும் தங்களுக்குள் ஊறிப்போன அன்றைய தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பதையும், சொத்து சேர்ப்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த சமயத்தில் தான் சினிமாவில் நல்லவனாகவும், வாரிக்கொடுக்கும் வள்ளலாகவும், பெண்களின் பாதுகாவலனாகவும், தொழிலாளர்களின் தோழனாகவும் நடித்து, முற்போக்குப் பாடல்களுக்கு  வாயசைத்து தமிழ்நாட்டு மக்களை கவர்ந்த எம்.ஜி.ஆர் ஊழலையும், கொள்ளையையும் பிடிக்காத உத்தமராய் திமுகவை விட்டு வெளியேறினார். 1972-ஆம் ஆண்டில் அண்ணா திமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஏற்கனவே ஒரு நேர்மையான கதாநாயகனாக தமிழ்நாட்டின் மக்களின் மனதில் நிறைந்துவிட்ட எம்.ஜி.ஆரால்,   தான்  ஊழலில்லாத நல்லாட்சியை மக்களுக்கு தருவேன் என்று ஊர்  ஊராய் பிரச்சாரம் செய்து மிக சுலபமாக தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறமுடிந்தது. கருணாநிதி செய்த ஊழலால் வெறுத்துப்போன தமிழ்நாட்டு மக்கள் ஊழலை ஒழிக்கவந்த பரமாத்மாவாக பார்த்தார்கள். அதன் காரணமாக 1977-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் அண்ணா திமுகவை வெற்றிபெற செய்து எம்.ஜி.ஆரை முதலைமைச்சராக அரியணை ஏற்றுகிறார்கள். அனால் ஆட்சி மாறியதே ஒழிய, ஆட்சி முறையில் மாற்றமில்லை. எம்ஜிஆர் சொன்னது போல் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்ட ஊழல்களே அண்ணா திமுக ஆட்சிக்காலத்திலும் பின்தொடர்ந்தது. அதுமட்டுமல்ல, சினிமாவில் நடித்தது போல், ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆரால் நிஜத்தில் தான் ஒரு தொழிலாளர்களின் தோழனாக நடிக்கக்கூட முடியவில்லை. தங்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை, விவசாயிகளை, மீனவர்களை, தன் கையிலிருந்த காவல் துறையை கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். சர்வாதிகார முறையில் அடக்குமுறைகளை கையாண்டார்.
               இப்படியாக  ஊழல்களும் , தொழிலாளர் விரோத செயல்களும் மலிந்துவிட்டாலும்,  மக்களின் மனதில் வெறுப்பு ஏற்படுவதற்கு பதிலாக ''நல்லவன்'' என்ற  ''சினிமா எம்ஜிஆர் பிம்பம்''  தான் தமிழ்நாட்டு மக்களின் கண்ணுக்கு முன்னால் நின்றது. இந்த காலக்கட்டத்தில் தான் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பாதைகளிலிருந்து, தமிழ்நாட்டு மக்கள் திசை மாறினார்கள்.  அதன் காரணமாக தான் எம்ஜிஆர் மூன்று சட்டமன்றத்தேர்தல்களிலும்  வெற்றி பெற்று,  தான் சாகும் வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதலைமைச்சராகவே வாழ்ந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்கள் ஊழலையும் ஊழல்வாதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வரத்தொடங்கினார்கள்.
                எம்ஜிஆரின் மரணத்திற்கு பிறகு அண்ணா திமுக ''வாரிசுத் தகராறில்'' சிக்கி எம்ஜிஆரின் மனைவியான ஜானகியின் தலைமையில் ஓர் அணியாகவும், எம்ஜிஆரின் கதாநாயகிகளில் ஒருவரான ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் உடைந்து போக, பத்து ஆண்டு காலமாக மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாமல் பதவி சுகத்தை இழந்துவிட்ட திமுக மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது. 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதையிலிருந்து சறுக்க ஆரம்பித்தார்கள். யாரை ஊழல்வாதிகள் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு  தூக்கி எறிந்தார்களோ, அவர்கள் தூய்மையானவர்களாக கருதப்பட்டார்கள். அவர்களையே தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அரியணை ஏற்றினார்கள். பத்து ஆண்டு கால காத்திருப்புக்கு பின் மீண்டும் கருணாநிதியே முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சி 1991-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் இரண்டுபட்ட அண்ணா திமுக, எம் ஜி ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் தலைமையில் ஒன்றுபட்டு நின்றது. மக்களின் கவனம் எம்.ஜி.ஆரின் கதாநாயகி ஜெயலலிதாவின் மீது ஈர்த்தது. அதுவரையில் ஜெயலலிதாவை  கதாநாயகியாக பார்த்த தமிழ்நாட்டு மக்கள் , 1991-ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக - கட்சித்தலைவராக பார்க்கத் தொடங்கினார்கள்.
                கருணாநிதியின் குடும்ப அரசியலில் வெறுப்புற்ற தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரின் வாரிசான ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஜெயலலிதா முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். ஒரு பெண் மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். அதை வரவேற்கவேண்டும். ஒரு நடிகை நாடாள வந்தார். அதிலும் தப்பில்லை. வரவேற்கலாம். அனால் இவரது ஆட்சியிலோ  அலங்கோலங்களும், அவஸ்தைகளும், எங்கும் ஆர்ப்பரிப்பும், எதிலும் ஆடம்பரமும், தொழிலாளர் விரோதமும், ஒரு ரூபாய் சம்பளம் பெற்றதும், ஆனால் வியக்கத்தக்க ஆடம்பர வாழ்க்கையும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பும் தமிழ்நாட்டு மக்களை முகம் சுளிக்கவைத்தன. அதனால் 1991-ஆம் ஆண்டு ஊழல்வாதியாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதி, ஐந்து ஆண்டுகள் கழித்து,  தமிழ்நாட்டு மக்களின் கண்களுக்கு உத்தமராக தெரிந்தார். அதன் காரணமாக 1996-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் திமுகவையே வெற்றிபெற செய்தார்கள். கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆனார். இந்த தேர்தலில் இருந்து  தான் தமிழ்நாட்டு மக்கள் ஊழலை - இலஞ்சத்தை மனதார அங்கீகாரம் செய்ய தொடங்கினார்கள். யார் குறைந்த ஊழல் செய்தவர்கள் என்ற ''அளவுகோலை'' வைத்து ஓட்டுப்போட ஆரம்பித்தார்கள்.  கருணாநிதி தான்  முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் ''ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால் - அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்'' என்று எம்.ஜி.ஆர் பாணியில் முதல் வேலையாக சென்ற ஐந்தாண்டில் ஊழல் புரிந்து சொத்துகளை சேர்த்தார் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளி அமைச்சர்களையும் சிறைக்குள் தள்ளினார். அவர்கள் மீது ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகள் போட்டார். தன்னை ஊழல்களுக்கு அப்பாற்பட்ட யோக்கியனாக தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டிக்கொண்டார். நம்பவைத்தார்.
                ஆனால்  அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்களின் எண்ண அலைகளை - மனநிலையை புரிந்துகொண்ட கருணாநிதியும் அவரது கூட்டாளி அமைச்சர்களும் முன்பை விட ஊழலில் கைத்தேர்ந்தவர்கள்  ஆனார்கள். கட்சியிலும், ஆட்சியிலும் முற்றிலுமாக  குடும்ப அதிக்கம் - தலையீடு, அடுத்த பல தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்து குவிப்பு, அனைத்துத்துறைகளிலும் ஊழல் -  இலஞ்சம் - சிபாரிசு என  தமிழ்நாடு ஊழலில் புதிய பரிணாம வளர்ச்சியை காணத்தொடங்கியது. முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் முடிந்தவரை கொள்ளையடிப்பதும், சொத்து சேர்ப்பதும், இடையூறாக இருப்பவர்களை வெட்டிச்சாய்ப்பதுமாக அந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவித அச்சமில்லாமலும், கூச்சமில்லாமலும் செய்தார்கள். மாநிலத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடியது.                 இதன் காரணமாக 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சொந்த அறிவைப் பயன்படுத்தாமல், மீண்டும்  ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே பரவாயில்லை'' என்று அண்ணா திமுகவிற்கு வாக்களித்து ஜெயலலிதாவை மீண்டும்  ஆக்கினார்கள்.  ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன் உத்தமர் ஆகிவிட்டார். அதனால் சென்ற ஐந்து ஆண்டுகளில் ஊழல் புரிந்த கருணாநிதியின் மீது ஊழல் வழக்கு போட்டு, நடுராத்திரியில் கைது செய்து சிறைக்குள் தள்ளி ''பழிக்குப்பழி'' தீர்த்துக்கொண்டார். ஆனாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் ஊழல் குறைந்த பாடில்லை. ஊழல் என்பது புதிய புதிய வகைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தது. முதலமைச்சர் அதிகார திமிரில் தொழிலாளர்களுக்கு எதிரான - அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆனந்தம் அடைந்தார். பாதிப்படைந்த மக்கள் அவருக்கு எதிராக திரும்பினார்கள். அதனால் 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ''ஊழல் அளவுகோலை'' பயன்படுத்தி ''இவருக்கு அவரே மேல்'' என்று கூறி அண்ணா திமுகவை தோற்கடித்து திமுகவை தேர்ந்தெடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊழல் காரணமாக தூக்கியெறியப்பட்ட கருணாநிதியையே மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைத்து அழகு பார்த்தார்கள்.
               இந்த முறை ஜெயலலிதாவின் மீது ''பழிக்குப்பழி - பதில் கைது '' என்ற நடவடிக்கையெல்லாம் கிடையாது. காரணம் இருவரும் ''பழிக்குப்பழி'' நடவடிக்கைகளில் மாறி மாறி ஈடுபடுவதால், இந்த இருவரும் அல்லாமல் மூன்றாவதாக வேறு ஒருவரை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துவிடப் போகிறார்கள் என்ற பயம் கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவர் உள்ளத்திலும் எழுந்துவிட, இருவருமாக சேர்ந்து கையெழுத்திடப்படாத ''புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு'' வந்துவிட்டார்கள்.  இந்த ஐந்தாண்டுகளில் என்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவையும் சுருட்டி விடுகிறேன். அடுத்த பல தலைமுறைகளுக்கும் சொத்து சேர்த்துவிடுகிறேன். அடுத்த ஐந்தாண்டிற்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். மிச்சமுள்ளதை நீங்கள் சுருட்டிக்கொள்ளுங்கள். சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள். வேறு யாரையும் அனுமதிக்காமல் இப்படியே ஐந்தாண்டிற்கு ஒரு முறை நாம் இருவரும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டையே கொள்ளையடித்து சூறையாடிவிடலாம் என்று வெளியில் ''எலியும் பூனையுமாக'' இருந்துகொண்டு  அவர்களுக்குள்ளாகவே ''புரிந்துணர்வு ஒப்பந்தம்'' போட்டுகொண்டு ஒற்றுமையுடன்  ஏமாற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
                  தமிழ்நாட்டு மக்களும் ஊழலோடு  சமரசம் செய்துகொண்டார்கள். ஊழல் செய்வது தவறில்லை என்கிற அளவிற்கு சமரசம் செய்துகொண்டுவிட்டார்கள். ஊழல் செய்யுங்கள் - சொத்து சேர்த்துக்கொள்ளுங்கள் - எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்கிற வகையில் ஊழலுக்கு  அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்  தரும் வகைவகையான இலவசங்களுக்கும், ஓட்டுக்கு தரும் 1000-2000-த்துக்கும் மயங்கி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்து கையேந்தி நிற்கிறார்கள். தமிழ்நாடு என்ற குழந்தையை ஐந்தாண்டுகளுக்கு அய்யாவிடமும், பிறகு ஐந்தாண்டுகளுக்கு அம்மாவிடமும் கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்கிறார்கள். தந்தை பெரியார் தந்துவிட்டுப் போன தன்மானமும், சுயமரியாதையும், பகுத்தறிவும் எங்கே போனது. தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு வெட்கமில்லாமலும், கூச்சமில்லாமலும், சுயநினைவே இல்லாமலும்   இவர்கள் இருவருக்கும் பின்னால் நிற்கிறார்கள் என்பது தான் வேட்கக்கேடாய் இருக்கிறது.
               தமிழ்நாட்டு மக்கள் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரை இப்படித்தான் நடந்துகொண்டு வருகிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக கூர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும். 

குழந்தைகளை வைத்து கொள்ளையடிக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள்...!


                        நம் நாட்டில் வறுமையின் காரணமாக குழந்தைகளை வைத்து வித்தைக்காட்டி பிழைக்கும் கூட்டமும், பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோயில்கள், கடற்கரை போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கூட்டமும்  காலம் காலமாக நாம் பார்க்கின்ற காட்சி தான். குழந்தை உரிமைகளை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூகமும், அரசாங்கமும் இந்தவிதமான குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை கண்டுகொள்வதே இல்லை. 

மோடி அரசின் முதலாவது ஊழல் - அசத்தலான ஆரம்பம்....!


என் வாழ்வில் மறக்க முடியாத நாள்...! - பிரதாப் போத்தன்


             பிரதாப் போத்தன் - திரைப்பட இயக்குனர் - நடிகர் - தன்னுடைய முகநூலில் இட்ட பதிவு...!                                   

            பிரபல தமிழ், மலையாள திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் ஆலப்புழையில் வெள்ளியன்று (பிப்ரவரி-20) நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுத் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அந்தப் பங்கேற்பின் உணர்வுகளை அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
              என்னைப்பொறுத்தவரை இன்று “ அதிசய உலகில் ஆலிஸ்” இருந்தது போன்ற தினமாகும். வாழ் நாளில் ஒருபோதும் மறக்க முடியாத நாளாகும். இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் ஆலப்புழையில் நடைபெறக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்குமாறு எனக்கு அழைப்பு வந்திருந்தது. இரண்டு மணி நேரம் காரில் ஆலப்புழைக்குப் பயணிக்கையில் மனசுக்குள் ஏராளமான நினைவுகள் அலைமோதின. கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் அப்பாவுக்கிருந்த நெருக்கமான உறவு குறித்து அம்மாவும் சகோதரியும் சொல்லக் கேட்டதுண்டு. திருவாங்கூர் திவானாக சி.பி.ராமசாமி இருந்த போது கம்யூனிஸ்டுகளைக் கண்டவுடன் சுட்டுக்கொல்லச் சொன்ன காலமது. புன்னப்புரா-வயலார் எழுச்சிப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட காலமது. 
          எங்கள் வீட்டில்தான் தோழர் கிருஷ்ணப்பிள்ளை தலைமறைவாகத் தங்கியிருந்தார். அவரால் ஈர்க்கப்பட்டு என் அப்பாவும் கம்யூனிஸ்ட் ஆனார்...! என் அப்பாவும் தேடப்பட்டோர் பட்டியலில் இருந்ததால் அவரும் அநேகமாக தலைமறைவாகவே இருந்தார். எங்கள் வீட்டில் உணவருந்தாத கம்யூனிஸ்ட் தலைவர்களே கிடையாது என்று அம்மா கூறுவார்.
           ஒருவித அடக்கத்தோடும் பெருமிதத்தோடும் மாநாட்டில் பங்கேற்கச் சென்றேன். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மாநாடு நடைபெறும் மைதானம் செங்கடல் போன்று காட்சியளித்தது பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பினராயி விஜயன், பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி, சீத்தாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்திக்க முடிந்தது, மேலும், எனது திரையுலக நண்பர்களான முகேஷ், இன்னோசென்ட் எம்.பி., ஆசிக் அபு ஆகியோரையும் இன்னும் சிலரையும் சந்தித்தேன்.
            மறக்க முடியாத நாள்...! எனக்குத் தகுதியிருப்பதாக எண்ணி மாநாட்டில் பங்கேற்க மகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்னை அழைத்த நாள்...!                          
எல்லாவற்றிற்கும் மேலாக, நான் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்ததாகவே  இன்று உணர்கிறேன்... சகாக்களே... முன்னேறுவோம்...!                      
நன்றி : தீக்கதிர்  

சனி, 21 பிப்ரவரி, 2015

மோடியின் அழுக்குக் கோட்டு ஏலவிற்பனை சட்டவிரோதமானது...!


                      சென்ற மாதம் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியா வந்தபோது, ஒரு நீண்டகால பால்யநண்பன் தன்னை பார்க்க வருவது போல நரேந்திரமோடி  புது சொக்காவெல்லாம் போட்டுக்கொண்டு தீபாவளியே கொண்டாடினார். நிமிட்டுக்கு நிமிட்டு புது சொக்காதான் சும்மா சோக்கா போட்டிருந்தார். அதில் இந்திய மக்களே இதுவரையில் பார்த்திராத வகையில் விலையுயர்ந்த கொட்டு அணிந்து நூற்றுக்கணக்கான கேமராவுக்கு முன்னாடி ஒபாமாவோடு தோட்டத்தில்  வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒன்று - 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல அவர் அணிந்திருந்த புதிய கோட்டில் ''நரேந்திர தாமோதர்தாஸ் மோடி... நரேந்திர தாமோதர்தாஸ் மோடி....'' என்று நேர்கோட்டில் எழுதப்பட்டு டிசைன் செய்யப்பட்டிருந்தது. அப்படி எழுதலன்னா ஒபாமாவிற்கு இவரை அடையாள தெரியாதாமா....! மற்றொன்று - அந்த கோட்டு என்பது இங்கிலாந்து நாட்டில் தைக்கப்பட்டு மோடிக்கு அனுப்பப்பட்ட ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள கொட்டு என்பது தான் இந்திய மக்களை ''ஆ...வென்று'' வாயை திறக்கவைத்தது. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிற கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் விலையுயர்ந்த ஆடை அணிவதை பார்த்து ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் மோடிக்கெதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனையடுத்து, அந்த கோட்டு மோடியே காசுகொடுத்து தைக்கவில்லை என்றும்,   மோடிக்கு பரிசு பொருளாக வந்த கோட்டு என்றும் மோடி தரப்பிலிருந்து மாற்றி சொல்லப்பட்டது.
                அதன் பிறகு ''தர்மப்பிரபுவான'' மோடி தான் அணிந்து ஒபாமாவோடு வலம் வந்த அந்த அழுக்குக் கோட்டை பொதுமக்கள் மத்தியில் ஏலம் விட்டு வரும் தொகையை பொதுக்காரியத்திற்கு பயன்படுத்தப் போவதாக கொஞ்சமும் கூசாமல் அறிவித்தார். பல்வேறு சட்டச்சிக்கல்களால் சேர்த்து தைக்கப்பட்ட அந்த கோட்டு என்பது  பிரதமர் என்ற வகையில் மோடியே  தன்னுடைய பதவிக்கு தானே வைத்துக்கொண்ட வேட்டு என்பது தான் உண்மை. குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்ற உயர் பதவிகள் வகிப்போர் தங்களது பதவிக்காலத்தில் தங்களுக்கு வழங்கப்படுகிற ''விலைவுயர்ந்த'' பொருட்களை தங்களது சொந்தப்பொருட்களாக மூட்டைக்கட்டி வைத்துக்கொள்ளாமல், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று அலுவலக  விதிமுறையும் இந்திய சட்டமும் சொல்கின்றன. அதையெல்லாம் மோடி காற்றில் பறக்கவிட்டிருக்கிறார் என்பதையும் இந்த நாடு உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
                         அதுமட்டுமல்ல, ஏலம் நடைபெற்ற கடந்த மூன்று நாட்களாக மோடியின் அழுக்குக்கோட்டின் விலை உயர்ந்துகொண்டே போனது. இறுதியாக நேற்று 4.31கோடி அளவிற்கு விலைபோனது. இங்கும் மோடிக்கு எதிராக சட்டச்சிக்கல் இருக்கிறது. இப்படியாக ஏலம்விட்டு வரும் தொகையை பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி, பிரதமர் மோடி   மக்கள் மத்தியில் தன்னை ஒரு வள்ளலாக காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் என்பதும் உண்மை. சட்டப்படியும் விதிமுறைப்படியும் ஏலத்தில் கிடைக்கும் தொகையையும் அரசு கருவூலத்தில் தான் சேர்க்கவேண்டும்.
                 மேற்சொன்ன மோடியின் இரண்டு வகையான விதிமீறல்களையும், சட்டமீறல்களையும் சி.பி.ஐ விசாரணை செய்யவேண்டும். ஏற்கனவே பரிசுப்பொருட்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏலம் சம்பந்தமாக ஜெயலலிதா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மீதான விசாரணை முன்னுதாரணமாக இருக்கின்றன.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இப்படியும் ஒரு மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது பாருங்கள்....!


 
                         தமிழகம் மற்றும் புதுச்சேரி அடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு நேற்று 16-ஆம் தேதி தொடங்கி, வரும் 19-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில் மற்ற கட்சிகளின் மாநாட்டினைப் போலல்லாமல் முழுக்க முழுக்க பல்வேறு வகையான மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனைகளையும், மாநில மற்றும் தேசப் பிரச்சனைகளையும் அலசி விவாதிப்பார்கள். மத்திய - மாநில தலைவர்கள் முதல் மாவட்டத்தின் கடைசி ஊழியர் வரை கருத்துகளையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும், விவாதங்களையும், தீர்வுகளையும் மாநாட்டின் முன் வைப்பார்கள்.
                தனி மனித துதிப்பாடல்கள் இருக்காது. தலைவர்களுக்கு ஆளுயர மாலையோ, பட்டமளிப்போ, வாழ்த்து கோஷங்களோ பார்க்கமுடியாது. விமர்சனங்களும்,  சுயவிமர்சனங்களும் உன்னிப்பாக கவனிக்கப்படும். பின் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்படும். விமர்சனம் செய்பவரை அரங்கத்திலிருந்து வெளியே தூக்கிப்போடுவதும், வேட்டியை உருவி, சட்டையை கிழித்து ரத்தம் வழிய சண்டையிடுவதும், மைக்கை பிடுங்கி அடிப்பதும் போன்ற மற்ற கட்சிகளில் சிறப்பாய் காணப்படும்  கலாச்சார சீர்கேடுகளையும், ஒழுக்கக்கேடுகளையும் இங்கே நிச்சயமாக காணமுடியாது.
               மாநாட்டில் கலந்துகொள்ளும்  பெண் தோழர்களுக்குரிய மரியாதையும், சம வாய்ப்பும்  கொடுக்கும் பாங்கை வேறு எங்கும் காணமுடியாது. மாநாட்டின் தலைமைக்குழுவில் பெண் தோழர் ஒருவரும் இடம்பெற்று மாநாட்டினை வழிநடத்துவார். பெண்களின் தலைமைப்பன்பையும், ஆளுமைக்குணத்தையும் மதித்து வளர்க்கும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சியாகத்தான் இருக்கமுடியும். அதேப்போல் சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் தலித் தோழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு உயர்த்தப்படுவார்கள். 
               கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வந்திருக்கும் தோழர்களும், படிக்காதவர்கள் முதல் மெத்த படித்த தோழர்களும், தொழிலாளர்கள் முதல் மத்தியதர ஊழியர்கள் வரையிலான தோழர்களும் பாகுபாடில்லாமல் - வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியாக மதிக்கப்படுவார்கள். உணவு பரிமாறும் இடங்களில்  கூட கட்சித் தலைவர்கள்  சாதாரண ஊழியர்களோடு  சேர்ந்து வரிசையில் நின்று உணவை பெறும் காட்சிகளை வேறு எந்த கட்சிகளிலும் காணமுடியாது. செவிக்கும் வயிற்றுக்கும் மட்டுமல்ல இவர்கள் நடத்தும் இந்த மாநாடு. அறிவை விரிவாக்கும், நல்ல சிந்தனையை தூண்டும், விழிப்புணர்வை வளர்க்கும் எண்ணற்றப் புத்தகங்களின் விற்பனைக்கூடம் மாநாட்டின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும். 
                   மாநாட்டு வேலைகள் அனைத்தும் - விளம்பரம் எழுதவதும், போஸ்டர் ஓட்டுவதும், தெருவெங்கும் தோரணங்கள் கட்டுவதும், மேடைகள் அமைப்பதும், ஒலி - ஒளி அமைப்பதும், உணவு சமைத்தலும், தோழர்கள் தங்குமிடத்தில் உதவிசெய்வதும் ஆகிய அனைத்து விதமான மாநாட்டு வேலைகளையும் மற்ற கட்சிகளைப்போல் அந்தந்த ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்துவிட்டு அழுக்குப்படியாத வெள்ளாடைகள் அணிந்து சொகுசாக மாநாட்டை நடத்தாமல், அனைத்து தலைவர்களும், ஊழியர்களுமாய் பொது மக்களிடம் நிதி திரட்டி, அவர்களே மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துகொண்டு மாநாடு முடியும் வரை ஓய்வில்லாமல் தலை மேல் சுமந்து உழைப்பதையும் கூட வேறெங்கும் காணமுடியாது. 
              இப்படியாக மக்கள் சிந்தனையும், சமூக அக்கறையும், மாநில - தேச நலன்களையும் மட்டுமே மேலோங்கி காணப்படும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு என்பது, வெற்று பேச்சு பேசி, தலைவர்கள் புகழ் பாடி, தங்களைத் தாங்களே தலைவராய் அறிவித்துக்கொண்டு கூடிப்பிரியும் வெட்டிக்கூட்டமல்ல இது. ஜனநாயக முறைப்படி, தேர்தல் முறைப்படி தான்  செயலாளர் தேர்வும், மாநில மற்றும் செயற்குழுகள்  தேர்வும் நடைபெறுகிறது. மாநாட்டுப் பிரதிநிதிகளில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது மாதிரியான உட்கட்சி ஜனநாயகத்தை இந்தியாவில் வேறு எந்த கட்சிகளிலும் காணமுடியாது.
              பொதுவாகவே தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி மாநாடு நடத்தினாலும், மாநாட்டில் கலந்துகொள்ளும் அந்தக்கட்சி உறுப்பினர்கள் மாநில அரசுக்கு அபரிதமான வருமானத்தை உண்டுபண்ணும் ''உன்னத வேலையை'' செய்வது தான் வழக்கம். அதாவது மாநாடு நடக்கும் பகுதியில் உள்ள ''டாஸ்மாக்'' கடைகளில் அந்த கட்சித்தொண்டர்களின் தாராளமான விற்பனையையும், ஏராளமான தொண்டர்கள் போதையில் மயங்கிக் கிடப்பதையும் கண்கொள்ளாக் காட்சிகளாக நம்மால் காணமுடியும். அந்த அளவிற்கு டாஸ்மாக்கில் இலட்சக்கணக்கில் வியாபாரம் நடக்கும். ஆனால் மார்சிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அது போன்ற காட்சிகளை காண்பதரிது. அந்த அளவிற்கு மார்க்சிஸ்ட்டுகள் தனிமனித ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள் என்பது கட்சியின் தனிச்சிறப்பாகும்.

இடதுசாரிகளே நம்பகமான மாற்று...!

     
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் ஆற்றிய உரை :-                            
       
              உலக அளவில் 6 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எத்தகைய உத்திகளைக் கையாண்டன என்பதைப் பார்த்தோம்.

இடதுசாரிகளே நம்பகமான மாற்று!                             

           ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டில் இடதுசாரி சக்திகள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கடியின் மையமாகவே இருந்த அந்த நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், இடதுசாரிகள்தான் நம்பகமான மாற்று என்ற செய்தியை உலகத்திற்குச் சொல்கிறது.

          லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சவால்களைச் சந்தித்து இடதுசாரிகள் முன்னேறுகிறார்கள். இவ்வாறு நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம் இரண்டு தளங்களிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது. ஆசியாவில் தனது முனைப்பைக் காட்டுகிற அமெரிக்கா, அதற்குத் தடையாக இருப்பது சீனா தான் என்று நினைக்கிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

             ஒபாமா-மோடி உடன்பாடுகளில் முக்கியமான ஒன்று, ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முயற்சிகளில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்கும் என்பது.

மோடி அரசின் குணாம்சம்                    

               காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு விடுவதற்கான அவசரச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைப்பதற்கான அவசரச் சட்டம் ஆகிய மூன்று அவசரச்சட்டங்கள் உள்பட கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டூழியம் செய்வதே தன் கடமையாக, மோடி அரசு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து இதுவரையில் 9 அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து அவசரச் சட்டம் கொண்டுவருவது மோடி அரசின் சர்வாதிகார குணாம்சத்தைக் காட்டுகிறது.

               கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வெட்டு, சுகாதாரம் உள்ளிட்ட சமூகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெட்டப்படுகிறது. விவசாயிகளைக் கைவிடும் வகையில் இந்திய உணவுக் கழகத்தை மூடுவதற்கான திட்டம், மக்களைக் கைவிடுகிற வகையில் பொதுவிநியோக முறை ஒழிப்பு ஆகிய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. எளியோரைக் கைவிட்டு நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அள்ளித் தருகின்றன. அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்களை நினைத்தால் வேலைக்குச் சேர்க்கலாம், நினைத்தால் வெளியேற்றலாம் என்று தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்து முதலாளிகளுக்கு சேவை செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் நாட்டாமை                        

             மோடி அரசு, ஆர்எஸ்எஸ் தலைமை இரண்டுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பில் ஆர்எஸ்எஸ் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

            தாய் மதம் திரும்புதல், பசுவதை தடைச் சட்டம், சமஸ்கிருதப் பாடம் உள்ளிட்ட இந்துத்துவ சித்தாந்தத் திணிப்பு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் என்று சங் பரிவார கூட்டத்தின் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

               ஆகவே, கார்ப்பரேட் சுரண்டல் சக்திகள், சங் பரிவார இந்து மதவெறி கோட்பாடு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் உழைக்கும் வர்க்கத்தின் முன்னால் உள்ளது.

                நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்றுபட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தை நடத்துகிறார்கள். மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு அமைப்புகளுடன் தொழிலாளர்களும் களம் இறங்கியுள்ளனர். கார்ப்பரேட் ஆதிக்கம், மதவெறி அரசியல் இரண்டிற்கும் எதிராக ஒரு விரிவான ஒற்றுமை நாட்டில் கட்டப்பட்டாக வேண்டும்.

தமிழகத்தில் ஒரு மாற்று                       

             திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று கூறும் அஇஅதிமுக, திமுக இரண்டுமே தமிழக மக்களைக் கைவிட்டுவிட்டன. இரண்டுமே பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியில் காங்கிரஸ், பாஜக என யார் வந்தாலும் அவர்களுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை இவ்விரு கட்சிகளும் ஆதரித்து வந்துள்ளன.

              தங்களுடைய சுயநலனுக்காக காங்கிரஸ், பாஜக இரண்டோடும் கூட்டுச் சேரவும் இவ்விரு கட்சிகளும் தயங்கியதில்லை.

                 ஆகவே ஒரு புதிய மாற்று தேவைப்படுகிறது. தமிழக மக்கள் முன் அரசியல் மாற்றை முன்வைக்கிற கடமையை நிறைவேற்றுவோம். மாநாடு இது குறித்து விவாதிக்கும்.

                  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் போராட்டங்களுக்கும் துணை நிற்போம். தீண்டாமை எதிர்ப்பு, சாதியப்பாகுபாடுகள் எதிர்ப்பு ஆகியவற்றை இரண்டு திராவிடக் கட்சிகளும் கைவிட்டு விட்டாலும் நாம் உறுதியாக நின்று போராடுவோம்.

                அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டுகிற கடமை நம்முன் உள்ளது. வலுவான இடதுசாரி இயக்கத்தையும், இடதுசாரி-ஜனநாயக மாற்றையும் வலுவாக முன்வைப்பதன் மூலமே தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
 
ஆங்கில உரையின் தமிழாக்கம் :             
தோழர் உ.வாசுகி           
மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)      
           
நன்றி : தீக்கதிர்                

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடுக - சி.பி.ஐ(எம்) மாநாடு கோரிக்கை...!

               
         சென்னை காமராஜ் அரங்கத்தில் நேற்று தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் - 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மக்கள் நலன் சார்ந்த - தொழிலாளர்கள் நலன் சார்ந்த - மாநிலம் சார்ந்த - தேசம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் மாநாட்டிலேயே அதற்கான தீர்மானங்களும் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. 
              அப்படி ஒரு தீர்மானமாக புதுச்சேரி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கையான ''மாநில அந்தஸ்தின்'' இன்றைய தேவையையும் அவசரத்தையும் வலியுறுத்தி, மத்திய அரசு உடனடியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிட கோரி இன்று இரண்டாம் நாள் மாநாட்டில் ஆறாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

             ''பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி 1954ல் விடுதலைப் பெற்றது. இந்திய ஒன்றியத்துடன் இணைந்தபோது புதுச்சேரி மத்திய அரசின் நேரடிப்பார்வையில் நிர்வகிக்கப்படும் என்றும், தேவையான நிதியும், அதிகாரமும் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்தது. இந்திய பிரதமராக அப்போது இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் புதுச்சேரி பிரஞ்சு இந்திய கலாச்சாரத்தின் சன்னல் என்று வர்ணித்ததோடு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்தப் பின்னணியில் புதுச்சேரியில் 1963 முதல் தனிச்சட்டப்பேரவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.
           புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில திட்ட ஒதுக்கீட்டில் 70 சதவிகிதம் மானியம் மற்றும் கொடையாக வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில் 2007ல் திரு..ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கியது. இதனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கிவந்த 70 சதவிகித மானியத்தை 30 சதவிகிதமாக குறைத்தது. 2007-2008 நிதியாண்டில் 23.82 சதவிகிதமாக மானியம் வழங்கியது. தொடர்ந்து 30 சதவிகிதத்திற்கும் குறைவான மானியமே வழங்கப்பட்டுவருகிறது.
         மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கிய நிலையிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நிதிக்கமிஷனின் மாநிலப் பட்டியலிலும் இல்லை. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதனால் புதுச்சேரி 2007 தொடங்கி நடப்பாண்டு வரையில் ரூ.6200 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் சமூகப் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
            மாநில அரசுக்கு வழங்குகிற திட்ட செலவில் 30 சதவிகிதம் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. மேலும் மத்திய வரிவருவாயில் பங்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய சிறப்பு நிதி வழங்குவதில்லை. வெளிக்கடன் பெறுவதற்கும் உரிமையில்லை.
         புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருந்தபோதிலும் மத்திய அரசின் அனுமதிப்பெற்றே மாநில பட்ஜெட் போடவேண்டியுள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம், கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம், நிதி நிர்வாகத்தில் அதிகாரமற்ற அரசாகவே உள்ளது.
            புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென 1987 முதல் 2012 வரையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான அதிகாரம் குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 2006ல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. சட்டப்பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் துரித வளர்ச்சிக்கு சட்டம், நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான அரசு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற கூற்று ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று என்று சர்க்காரியா கமிஷன் ஏற்கெனவே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் மாறியுள்ள நிலைமையிலும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் இருப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது.
           இந்திய விடுதலைக்குப் பிறகு சிக்கிம், அருணாசலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா, கோவா ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மத்திய கடன் தொகையை ரத்து செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது தமிழ் மாநில மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது

முன்மொழிந்தவர் : தோழர். வி. பெருமாள், புதுச்சேரி
வழிமொழிந்தவர் : தோழர். சிவக்குமார் , திருவண்ணாமலை

எங்கே போனது மோடி அலை...?


 ''பீப்பிள்ஸ் டெமாக்ரசி'' தலையங்கம் (பிப்ரவரி 15, 2015)                         

         ‘மோடி அலை’ என்ற பிரச்சாரத்தை தில்லி வாக்காளர்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள். அவர்கள் அதை மிகவும் மகத்தானமுறையில் செய்திருக்கிறார்கள்.
           மக்களவைத் தேர்தலின்போது காங்கிரசுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதி, இப்போது பாஜகவிற்கு ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் வெறும் மூன்று இடங்கள்தான் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. உண்மையிலேயே மிகவும் மோசமான ஒன்றுதான்.
           பாஜக, தில்லி சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கேட்கக்கூடிய தகுதியைக்கூட இழந்து நிற்கிறது.
மோடி ஓ மோடி
                          ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் தில்லியில் விளம்பரங்களுக்கு மட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரம்மேற்கொண்டது. அந்த விளம்பரங்கள் எல்லாம் தில்லி மக்கள் `மோடி அரசாங்கம்’ மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என்கிற ரீதியில் அமைந்திருந்தன. மோடி, பிரதமராக இருக்கக்கூடிய அதே சமயத்தில் தில்லி மாநில முதல்வராகவும் இருப்பார் என்று தில்லி மக்களால் கூறப்படுவதாக அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் செய்திகளைக் கொட்டிக் கொண்டிருந்தன.
                பிரதமர் மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ‘நாடு என்ன உணர்கிறதோ அதனை தில்லி மக்கள் எதிரொலிப்பார்கள்’ என்று கூறினார். ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, தற்போது பாஜக தலைவர்கள் தில்லி தேர்தல்முடிவு மத்தியில் உள்ள மோடி அரசாங்கத்தின் மீதான கருத்துக்கணிப்பு அல்ல என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

ஆம் ஆத்மி கட்சி சாதிக்குமா...?                   

           இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்து இருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மீது மிகப்பெரும் அளவில் பொறுப்பு ஏற்றப்பட்டிருக்கிறது. தில்லி சட்டமன்றத்திற்கு வரையறுக்கப்பட்ட அளவில்தான் அதிகாரங்கள் உண்டு. எனவே,ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள உறுதிமொழிகள் பலவற்றை நிறைவேற்றுவதில் அதிக அளவில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
                    தற்போதுள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, நிலங்களைப் பயன்படுத்துதல், மின் விநியோகம் போன்று பல அம்சங்களில், தில்லி சட்டப் பேரவைக்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே அதிகாரங்கள் உண்டு. இந்நிலைமையை மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் எந்தஅளவிற்கு உதவிடும் என்று சொல்வதற்கில்லை. இந்த அம்சங்களில் மத்திய அரசின்ஒத்துழைப்பை ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் எப்படிப் பெறப்போகிறது என்பதை வரவிருக்கும் காலம்தான் கூறும்.
                      இருப்பினும், தில்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சி உதாசீனம் செய்ய முடியாத ஒரு விஷயத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிடில் அது அதிருப்தியை அதிகரித்திடவும், மயக்கத்தைப் போக்கிடவுமே இட்டுச்செல்லும். இதனை பாஜகவும் பிரதமர் மோடியும் ஏற்கனவே மிகவும் கசப்பான முறையில் கண்டுவிட்டார்கள்.
`ஓவர் டைம்’ வேலை பார்த்த மோடி
               ஆர்எஸ்எஸ்-பாஜக இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட கங்கணம் கட்டிக்கொண்டிருந்தன. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் அதிகநேரம் வேலை செய்தார்கள். தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளைச் சரிசெய்திட கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். இது, ஆரம்பத்தில் மிகவும் நல்ல விஷயமாகவே அவர்களுக்குத் தோன்றியது.
          ஆயினும், தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவை பீதி கவ்விப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய 120 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 20க்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்களையும் பிரதமரையும் களத்தில் இறக்கியது. கடைசி நான்கு நாட்களில் மூன்று பேரணி-பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

கருப்புப் பணம் எங்கே...?                  

          ஆனால் அவரது உரையை மக்கள் நம்பவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் `கருப்புப் பணம்’ முழுவதும் உடனடியாகத் திரும்பவும் நம் நாட்டிற்கே கொண்டுவரப்படும் என்றும், நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் ரூபாய் வீதம் அவை பிரித்துக் கொடுக்கப்படும் என்றும் ஒன்பது மாதம் முன்பு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவும் நகரவில்லை.
கருப்புப் பணத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் மறந்துவிட்டதுமட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள பணம் எவ்வளவு என்கிற ஒரு நியாயமான மதிப்பீட்டைக்கூட மோடி நிர்வாகத்தால் செய்ய முடியவில்லை. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து கொண்டிருப்பது, தினசரி வாழ்க்கையில் இடைவிடாமல் எதிரொலிக்கிறது.
             பிரதமரால் மிகவும் தம்பட்டம் அடித்துத் துவங்கப்பட்ட `ஜன்தன் யோஜனா திட்டம்‘ போன்ற திட்டங்களால் நாட்டு மக்கள் பலருக்கும் புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, உண்மைதான். ஆனால், அதற்குமேல் எவருக்காவது எந்தவிதமான உருப்படியான பிரயோசனமும் இருந்ததா? பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை,
                 மன்மோகன் சிங் அரசாங்கம் கடைப்பிடித்த நாசகரச் செயல்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவிற்கு காங்கிரசைவிட வேகமாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகள் கொள்ளைலாபம் ஈட்டக்கூடிய அளவிற்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்துவிட்டிருக்கிறார்கள். நாட்டுமக்களின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திட வெறித்தனமானமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேகமாய் மறையும் மாயவித்தை                     

       `மோடியின் மாயவித்தைகள்’ எல்லாம்மிகவும் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டை வளமாக்குவோம் என்று அவர்கள் கூறிய கோஷங்களும், அதே சமயத்தில் மக்கள் மத்தியில் பின்பற்றிய மதவெறி வன்முறைகளும் என இரண்டும் சேர்ந்து அவர்களுக்கு தேர்தல் வெற்றிகளை ஈட்டித்தந்தன.
           ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர், அவர்கள் கூறிய வளர்ச்சி என்பது வெறும் மாயை என்பதும் மக்களுக்குப்புரியத் தொடங்கி விட்டது. இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுதல், புராணங்களை வரலாறாக பாவித்தல், காதலுக்கு எதிரான வெறித் தாக்குதல்கள், மறு மதமாற்ற நிகழ்வுகள் போன்றவை அவர்களின் உண்மையான நிகழ்ச்சிநிரலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன.
              தில்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு பாஜக எம்பி, மதவெறித் தீயைவிசிறிவிடுவதில் பேர்போனவர், மகாத்மா காந்தியை தேசத்தின் தந்தை என்று கூறுவதுதவறு என்று பிரகடனம் செய்தார். காந்தியைப்படுகொலை செய்த, நாதுராம் கோட்சேயை, தேசத்தின் ஹீரோவாக சித்தரித்து சிலை வைக்க வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சிதான் இது.
              இதனைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் தலைவர், இந்தியா எப்போதும் ‘இந்து ராஷ்ட்ரமாகவே’ இருந்து வந்திருக்கிறது என்றும், நாட்டின் தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு அரசமைப்புச் சட்டத்தை மறுதலித்து, இந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் மீண்டும் கூறினார்.பாஜகவின் பிரச்சாரத்தில் சமீபத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதிகாரப்பூர்வ அரசாங்க விளம்பரம்ஒன்றை வெளியிட்டது தொடர்பானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டதை, மதவெறியர்களின் ஓர் இழிவான நடவடிக்கையாகவே மக்கள் பார்க்கிறார்கள். மக்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் பாஜகவினரும் “மதச்சார் பின்மை’’ குறித்து ஒரு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், ஏனெனில் இந்த வார்த்தை 1975-77இல் அவசரநிலைக் காலத்தின்போது இந்திரா காந்தியால் அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் என்றும் கூறி, எனவேதான் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்கிறோம் என்றும் பூசி மெழுக முயற்சித்தனர். இவற்றையெல்லாம் கவனித்த தில்லி மக்கள், தங்களது கோபக்கனலை வெளிப் படுத்தியிருக்கின்றனர்.
தமிழில் : ச.வீரமணி                        
நன்றி : தீக்கதிர்                  

வியாழன், 12 பிப்ரவரி, 2015

HEARTFELT SOLIDARITY TO TEESTA SETALVAD...!


   The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement today :-                        

           The Polit Bureau of the CPI(M) condemns the Gujarat Police move to arrest Teesta Setalvad and her husband, Javed Anand in Mumbai. The arrest of Teesta Setalvad has been stayed for 24 hours at the intervention of the Supreme Court.
            The Gujarat Police have targeted Teesta Setalvad because of her relentless championing of the rights of the victims of the Gujarat pogroms of 2002. While the Gujarat government is pursuing the harassment of Teesta Setalvad, it has been reinstating police officials who are facing serious criminal charges.
        The CPI(M) demands that the Gujarat government withdraw the concocted case against Teesta Setalvad and stop harassing her.


           இந்தியாவின் பிரபல மனித உரிமை போராளியும், பத்திரிக்கையாளருமான தீஸ்தா சல்வாத் மற்றும் இவரது கணவர் ஜாவட் ஆனந்து இருவரும் இணைந்து ''Communalism Combat'' என்ற பத்திரிகையை தொடங்கி நடத்திவந்தனர். மதவெறி எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆதரவு கருத்துக்களையே அதில் பிரதானமாக எழுதி வருகின்றனர். 2002 குஜராத் கலவர காலங்களில்  இவர்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக  உறங்கிக்கொண்டிருந்த இந்திய  மனசாட்சியை அந்த கலவரத்திற்கு எதிராக தட்டி எழுப்பியவர்களில் அந்த இருவரும் முக்கியமானவர்கள். நெடுங்காலமாகவே இவர்களை பழிவாங்க காத்திருந்த  பாரதீய ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் வந்தவுடன் நிதி முறைகேடு வழக்கு ஒன்றை தொடுத்து இருவரையும் கைது செய்ய முயற்சி செய்கிறது. தற்போது உச்சநீதிமன்றம் இவர்களது கைதுக்கு தற்காலிக தடை விதித்திருக்கிறது. மத்தியில் மதவெறிக்கூட்டத்தின் ஆட்சி வந்து விட்டதால், அவர்களது  பழைய கணக்கை தீர்க்க முயற்சி செய்து பார்க்கின்றார்கள்.

புதன், 11 பிப்ரவரி, 2015

டெல்லி மக்களை நெஞ்சார பாராட்டவேண்டும்...!

                   
             ''மோடி அலை'' என்ற மாயையை மோதி உடைத்த ''மக்கள் அலையை'' பாராட்டியே ஆகவேண்டும். ஆம்... அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும், பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரேயடியாய் தூக்கியெறிந்த டெல்லி மக்களை நன்றியுடன் வாயார - நெஞ்சார வாழ்த்துகிறேன்... பாராட்டுகிறேன். பொய்களை அள்ளித்தெளித்து - பெருமுதலாளிகளின் கோடிகளை அள்ளிக்கொடுத்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, பின்னாளில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல்களிலும் வெற்றிபெற்று திமிரோடும், ஆணவத்தோடும் மதவெறியை உயர்த்திப்பிடித்து நாட்டில் உலா வந்த பாரதீய ஜனதாக்கட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வும், பாராளுமன்றத்தில் இராட்சச பலத்தை வைத்துக்கொண்டு, அமெரிக்காவிற்கு ஆதரவாக - தேசத்திற்கு எதிராக - மக்களுக்கு எதிராக தான்தொன்றித்தன்மாக - அடாவடித்தனமாக - தருதலைத்தனமாக மத்திய மோடி ஆட்சியின் மீது டெல்லி மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமும் இந்த சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலித்திருப்பது தெளிவாகத்தெரிகிறது.
               உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் இந்த தலைநகர் தேர்தலில் தான் எப்படியாவது வெற்றிபெற்று உலகத்திற்கு காட்டவேண்டும் என்று துடிதுடித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அதற்காக பத்திரிக்கைகளுக்கு பல கோடிகளை  செலவு செய்திருக்கிறார். ஆனால் அவை எதையும் டெல்லி மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதும், மோடியின் பொய்யான வார்த்தை ஜாலங்களுக்கு மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் நாசகரக்கொள்கைகளையும், மெகா ஊழல்களையும் நேரில் தங்கள் அருகிலேயே பார்த்து நொந்து போன டெல்லி மக்கள், காங்கிரஸ் கட்சியை தங்கள் தலையை சுற்றி தூக்கிஏறிந்தார்கள். 
                அதை கிழிப்பேன்... இதை கிழிப்பேன் என்று வார்த்தை ஜாலங்களை அள்ளித்தெளித்து, கோடிகளை அள்ளிக்கொடுத்து ஆட்சியிலமர்ந்த பாரதீய ஜனதாக்கட்சியோ கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் போலவே கொஞ்சமும் வித்தியாசமில்லாமல், அதேப்பாதையில் அவர்களை விட வேகமாக - தாறுமாறாக பயணம் செய்ததை பார்த்து வெறுத்துப் போன டெல்லி மக்கள் - மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைத்து, இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினருக்கெதிரான மதவெறி சம்பவங்களை பார்த்து வெகுண்டு போன டெல்லி மக்கள் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் ஆளுங்கட்சியாக அமரவைத்த பாரதீய ஜனதக்கட்சியை, நடந்துமுடிந்த சட்டமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகக்கூட அமரமுடியாமல் துடைப்பத்தால் அள்ளி குப்பைத்தொட்டியில் வீசி எறிந்துவிட்டார்கள்.
                  இதற்காக மீண்டும் மீண்டும் டெல்லி மக்களை வாயார பாராட்டலாம். நெஞ்சார வாழ்த்தலாம். இந்திய மக்களிடையே மாற்று சிந்தனையை விதைத்திருக்கிறார்கள். மீண்டுமொரு முறை வாழ்த்துகள்.....! 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

மோடியின் முகத்திரையை கிழித்த டெல்லி மக்கள்...!


           தொடப்பக்கட்டையை வைத்துக்கொண்டு ''தூய்மை இந்தியா'' திட்டத்திற்கு  போஸ் கொடுத்து ''விளம்பர அரசியல் விரும்பியான'' பிரதமர் நரேந்திரமோடியின் முகத்திரையை டெல்லி மக்கள் ''கிழிகிழியென்று'' கிழித்திருக்கிறார்கள். டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று மிகப்பெரிய சாதனைப் படைத்திருக்கிறது. பாரதீய ஜனதாக்கட்சியோ வெறும் மூன்றே இடங்களில் தான் ''முக்கி முக்கி'' வெற்றிபெறமுடிந்தது. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை இழந்திருக்கின்றது. இந்த தேர்தல் முடிவு என்பது ஆம் ஆத்மி கட்சியின் மீது டெல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் காட்டவில்லை. மகா ஊழல் சக்தியான காங்கிரஸ் கட்சியின் மீதும், மதவாத சக்தியான பாரதீய ஜனதாக்கட்சியின் மீதும் அவர்களுக்கு இருக்கும் வெறுப்பையும், கோபத்தையும் தான் காட்டுகிறது.
                   ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் மெகா ஊழல் ஆட்சியும், கடந்த ஏழு மாதகால பாரதீய ஜனதாக்கட்சியின் மதசார்பின்மைக்கு எதிரான தான்தொன்றித்தன்மான ஆட்சியும் டெல்லி மக்களிடம் ஏற்படுத்திய  ஒரே மாதிரியான எண்ண அலைகள் சுனாமி  பேரலையாக உருமாறி அந்த இரண்டு கட்சிகளையும் விழுங்கிவிட்டன. கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பின் நடைபெற்ற சில மாநில சட்டமன்றத்தேர்தல்களில்,  ''மோடி அலை'' என்ற பெயரில் மோடி-அமித்ஷா கூட்டாளிகளின் வார்த்தை ஜாலங்களினாலும், கவர்ச்சியான விளம்பரங்களினாலும் வெற்றிபெற்று சட்டமன்றங்களை கைப்பற்றியது போல் டெல்லி சட்டமன்றத்தேர்தலிலும் மோடி-அமித்ஷா கூட்டாளிகள் கிரேன் பேடியையும் சேர்த்துக்கொண்டு வலம் வந்தார்கள். வழக்கம் போல் மோடி அலையை காட்டி வெற்றிபெற்றுவிடலாம் என்று கனவுகண்டார்கள். ஆனால் டெல்லி மக்கள் மோடி அலையை ஊதித் தள்ளிவிட்டார்கள். மோடி வித்தை டெல்லி மக்களிடம் பலிக்கவில்லை. மோடியின் ''அகாஜுகா'' ஆர்ப்பரிப்புகளையும், ஆரவாரங்களையும் நேரில் பார்ப்பவர்களாயிற்றே. நேரம் பார்த்து பாரதீய ஜனதாக்கட்சிக்கு வெச்சாங்க ஆப்பு.
                சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் ஆட்சிசெய்யும் மோடி-அமித்ஷா கூட்டாளிகளுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாக இருக்கட்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி செய்தால், மக்கள் அவர்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்பதை இனியாவது மோடியும், அவரது கட்சியும் புரிந்துகொள்ளவேண்டும்.