வியாழன், 29 அக்டோபர், 2015

மதவெறி அணுகுண்டைப் போல் ஆபத்தானது ~ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்


              நாட்டின் நிலைமை கண்டு  இந்திய விஞ்ஞானிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மிகுந்த கவலையுடனும், கண்டிப்புடனும் நமது குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். பாரதீய ஜனதாக்கட்சி மோடியின் தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து,  முடநம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும், முற்போக்கு எழுத்தாளர்களும், இஸ்லாமிய மக்களும், தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்-இன் வழிகாட்டுதலின்படி  மதத்தின் பேராலும், மாட்டிறைச்சியின் பேராலும்   தாக்கப்படுவதும்,  கொல்லப்படுவதும் நாளுக்கு நாள்  அதிகரித்தவண்ணம் இருக்கிறது. மதவெறி என்பது தலை விரித்தாடுகிறது.
             இதையெல்லாம் கண்டிக்கவேண்டிய அல்லது தடுத்து நிறுத்தவேண்டிய ஆட்சியாளர்களும் வெறுமனே வேடிக்கைப்பார்த்த வண்ணம் ஆட்சிக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அப்பாவி மக்களும் எழுத்தாளர்களும் மிரட்டப்படுவதையும், தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் கண்டித்து வழக்கம்போல் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள்  போராட்டங்களையும் இயக்கங்களையும் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் நடத்திக்கொண்டிருக்கின்றன.
            ஆனால் நமக்கு ஏன் வம்பு என்று எப்போதும் ஒதுங்கியே இருப்போரும் இம்முறை ஆட்சியாளர்களின் பாதகச்செயல்களை கண்டு பயங்கொள்ளாது மோதி மிதித்துவிட துணிந்து வெளியே வந்தது என்பது நாமெல்லாம் வரவேற்கவேண்டிய ஒன்று. 
            ஒரு பக்கம் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாகத்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் மத்திய  தங்களுக்கு  வழங்கிய விருதினை ஒவ்வொருவராக திருப்பி அளித்து வருகிறார்கள். 
                இன்னொரு பக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து, மதவெறியால் நடக்கும் சம்பவங்களை  கண்டித்தும், தங்கள் கவலையை  வெளிப்படுத்தியும் குடியரசுத்தலைவருக்கு மனு ஒன்றை  அளித்திருக்கிறார்கள். 
           இந்திய நாட்டில் மதவெறி கூட்டத்தினரால்  அப்பாவி மக்களும், முற்போக்காளர்களும் கொல்லப்படுவது என்பது கண்டிக்கத்தக்கது. மதவெறி என்பது அணுகுண்டைப் போல் ஆபத்தானது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும். உண்பதும், உடுத்துவதும், சிந்திப்பதும், நேசிப்பதும் ஒவ்வொருவரின் உரிமையோடு சம்பந்தப்பட்டது. மதத்தின் பேரால் இவைகளின் மீதான தலையீடு என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. என்றெல்லாம் அந்த மனுவில் குறிப்பிட்டு அளித்திருக்கிறார்கள். 
              வளர்ந்து வரும் மதவெறிக் கூட்டத்திற்கெதிராக விஞ்ஞானிகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் இணைந்திருப்பது இன்றைய உடனடித் தேவையானது. வரவேற்கத்தக்கது.             

நேபாள நாட்டு மக்களை வாழ்த்திப் பாராட்டுவோம்....!


             நேற்றைய தினம்  ஜனநாயக மதசார்பற்ற நேபாள நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக CPN(ML) ~ நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும் பெண்ணியவாதியுமான  தோழர் விந்தியதேவி பண்டாரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முதலில் புதிய ஜனாதிபதி தோழர்.விந்தியதேவி அவர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். 
              நாட்டின் உயரிய பதவிக்கு ஒரு பெண்மணியை தேர்ந்தெடுத்ததன் மூலம் தெற்காசிய நாடுகளிலேயே இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வரிசையில் ஐந்தாவதாக நேபாளமும் இணைந்துள்ளது. பெண்மையை உயர்த்திய நேபாள மக்களை நெஞ்சார பாராட்டுவோம். 
              அதுமட்டுமல்ல நேபாள நாடு பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னும் தன்னை ஒரு ''மதசார்பற்ற'' நாடாக முடிசூட்டிக்கொண்ட பின், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்   இந்த  மாத தொடக்கத்தில் தான் தங்கள்  நாட்டின் புதிய பிரதமராக CPN(ML) ~ நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த  தோழர்.கே.பி.சர்மா ஒளி அவர்களை தேர்ந்தெடுத்தார்கள். அதேப்போல் நேற்று  நடந்த புதிய ஜனாதிபதிக்கான தேர்தலிலும், அதேக்கட்சியை சேர்ந்த இன்னொருவரை தங்கள் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தங்கள் நாட்டுக்கான - மக்களுக்கான புதிய சிந்தனையோடு புதிய பாதையில் பயணிக்கும் நேபாள நாட்டு மக்கள்  உலகத்திற்கே வழிகாட்டுகிறார்கள். அதற்காக நேபாள நாட்டு மக்களை நெஞ்சார வாழ்த்துவோம்... பாராட்டுவோம்...! 
             ஆனால் இனிமேல் தான் நேபாள நாட்டு அரசும், மக்களும் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும்.  ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், மதவெறி பிற்போக்குவாதிகளும் இனி அந்நாட்டை நிம்மதியாக விடமாட்டார்கள். இடது வழியே சரியான வழி என்று பயணிக்கும் நேபாள நாட்டு இடதுசாரி அரசைப் பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அவர்கள், அரசை  எப்படியாவது கவிழ்த்துவிடவும், மக்களிடம் அரசின் மீது   கெட்டப்பெயரை உருவாக்கவும், மக்களிடையே  கலகங்களை செய்து நாட்டினுள் அமைதியின்மையை உருவாக்கவும் இனிமேல் தான் சூழ்ச்சிகள் செய்வார்கள்.
         இமயத்தின் உச்சியிலிருந்து   செங்கொடியை  மேலும் மேலும் உயர்த்திக் காட்டிய நேபாள மக்களுக்கு துணை நிற்போம்...!

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஓடோடிச்சென்று ஆறுதல் சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


                   இந்திய தலைநகரிலிருந்து முப்பதே கிலோமீட்டர் தொலைவிலுள்ள 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஃபரிதாபாத்தில் ஜிதேந்திரகுமார் மற்றும் அவரது மனைவி ரேகா ஆகிய தலித் குடும்பத்தினரின் வீட்டை உயர்சாதியை சேர்ந்தவர்கள் சென்ற வாரம் மிருகத்தனமாக இரக்கமின்றி  தீயிட்டுக் கொளுத்தினர். வீடு கொழுந்துவிட்டு எரிந்ததில் உள்ளே இருந்த அந்த தம்பதியனரின் மூன்று வயது மற்றும் பதினொன்றே மாதங்கள் ஆன  இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். அந்த குழந்தைகளோடு வீட்டிலிருந்த அந்த தம்பதியினர் இருவரும் பலத்த தீக்காயத்துடன் உயிர் தப்பினர். 
        தலைநகருக்கு அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பற்றிய செய்தி நாடு முழுதும் காட்டுத்தீயாக பரவியது. இந்த கோரச்சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே   தோழர். பிருந்தா காரத் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர்  சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரையில், பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ, ஹரியானா முதலமைச்சரோ, அவரது அமைச்சர்களோ அல்லது வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களோ அல்லது குழுக்களோ பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்கவுமில்லை அல்லது ஆறுதல் கூறவுமில்லை என்பது தான் உண்மை.  

வெள்ளி, 23 அக்டோபர், 2015

செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத மத்திய அமைச்சர்....!



                   ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மூன்று வயது மற்றும் பதினொன்றே மாதங்களான இரு தலித் குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சாதியைப் பற்றியோ அல்லது தீண்டாமையை பற்றியோ அறியாத பருவத்தில்  ''சாதிய தீ''  அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றதை பார்த்த இந்த தேசமே கொதித்துப் போயிருக்கிறது.  மனிதநேயமிக்கவர்கள்
துடித்து போயிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். பிருந்தா காரத் செய்தியறிந்து பதறியடித்துக்கொண்டு சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கே சென்று பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
        பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டிலுள்ள மூலைமுடுக்குகளிலெல்லாம் தலித் மக்களுக்கெதிராக அடுக்கடுக்கான தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருப்பதை பார்த்து நாடே கொதிப்படைந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ''தெருவில் போகிற நாய்களை சிலர் கல்லால் அடித்தால் அதற்கு அரசாங்கம்  பொறுப்பாகுமா...?'' என்று  மத்திய அமைச்சர்  வி.கே.சிங் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் திருவாய் மலர்ந்திருக்கிறார்.  யாரை திருப்திப்படுத்த இப்படிப் பேசியிருக்கிறார்....? பிரதமரையா...? அல்லது ஆர்.எஸ்.எஸ் சியா...? இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது...? இந்த சிந்தனை எப்படி வந்தது...? என்பது தான் நமது கேள்வி.
          இதே போல் தடித்த வார்த்தைகளை ஏற்கனவே நரேந்திரமோடி திருவாய் மலர்ந்திருக்கிறார் என்பதை நாம் மறந்திருக்கமுடியாது.  2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு இறந்த சம்பவத்தை பற்றி நரேந்திரமோடி குறிப்பிடும்போது, ''காரில் அடிப்பட்டு சாகும் நாயை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனம் இருந்தது'' என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சமின்றி துணிச்சலாக தன் மனநிலையை வெளிப்படுத்தினார். அதே துணிச்சல்... அதே சிந்தனை... இன்று இந்த தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிற்கும் வந்திருக்கிறது என்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. 
       இவர்கள் செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பது தான் உண்மை...! 

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மதவெறியர்களுக்கு எதிராக திரண்ட உலக எழுத்தாளர்கள்...!



                இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய மக்களின் அரசியல், கல்வி, உணவு, வழிபாடு, உடை, கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய அத்தனையும் இன்றைக்கு  பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கின்றன.  அவைகள் அத்துனையும் மக்களின் பழக்கவழக்கம், பொருளாதாரம், சிந்தனை, மரபு, குடும்பம், வளர்ப்பு போன்ற இவைகள் அத்தனையையும் உள்ளடக்கியன. அதுமட்டுமல்ல அவைகள் அத்தனையும் தங்களின் அடிப்படை உரிமைகள் என்பதை  முதலில் இந்திய மக்கள் உணரவேண்டும். இவைகளைத்தான் கடந்த அறுபத்தெட்டு ஆண்டுகளாக போராடி பாதுகாத்து போற்றிவருகிறோம். 
            இவைகளையெல்லாம் உணராத மக்களுக்கு தங்களது எழுத்துகள் மூலம் எடுத்துரைத்து அவர்கள் மூலையில் மாற்று சிந்தனையை விதைக்கும் அபாரமான பணிகளில்,  பல மாநிலங்களிலும் உள்ள  நம் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்கள் பலர் அவரவர் தாய் மொழிகளில் பல ஆண்டுகளாக  ஈடுபட்டு வருகிறார்கள்.   அவர்களது  கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, மரபு ஆகிய அனைத்தும்  உள்ளிட்ட முற்போக்கு சிந்தனைகளுடன் கூடிய அரிய எழுத்துப்பணிகளுக்காக மத்திய - மாநில அரசுகளின் விருதுகளையும், பெருமைகளையும், சிறப்புகளையும்  பெற்று  மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
              ஆனால் 2014ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து,  பாஜகவின் தலைமை  பீடமான ஆர்.எஸ்.எஸ் மதம் பிடித்து   சர்வாதிகாரத்துடன்  தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு, உடை, உணவு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்து மக்கள் சார்ந்த உரிமைகளிலும் ஆர்.எஸ்.எஸ்-இன் தலையீடு என்பது எல்லை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது.
#    இதை சாப்பிடக்கூடாது.... இதைத்தான் சாப்பிடவேண்டும்....
#    இதை செய்யக்கூடாது.... இதைத்தான் செய்யவேண்டும்.... இப்படித்தான்      
      செய்யவேண்டும்....
#    இந்த ஆடையை உடுத்தக்கூடாது.... இதைத்தான் உடுத்தவேண்டும்....
#    இந்த மாதிரியான திரைப்படத்தில் நடிக்கக்கூடாது....
#    அறிவியல் சார்ந்த முற்போக்கு கருத்துக்களை வெளியிடக்கூடாது....
#    மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது....
#    இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இந்தியாவில் இரு....
      இஸ்லாமியர்கள் என்றால் பாகிஸ்தானுக்கு ஓடு....

          ''இது கூடாது'' என்று சொன்னதை மீறி யார் செய்தாலும்,  சங் பரிவார் என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பை சேர்ந்தவர்கள் சத்தம் போடாமல் அவர்களை தீர்த்துக்கட்டும் ''தேச நலப்பணிகளில்'' ஈடுபடுவார்கள். கடந்த ஓராண்டு காலமாக இது போன்ற ''உயிர் பலி பட்டியல்'' என்பது நீண்டுகொண்டே போகிறது. இதுபோன்ற  மனித உரிமைகளுக்கெதிரான பிரச்சினைகளையோ அல்லது கொலைகளையோ இந்த நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திரமோடியோ அல்லது உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ராஜ்நாத் சிங்கோ கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கின்றார்கள் என்பது தான் இந்த நாட்டின் சாபக்கேடு.
             இப்படியாக கடந்த ஓராண்டுகளில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி போன்றோர்கள் மதவெறிக் கூட்டத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் இந்த மூவரையும் கொலை செய்த கயவர்களை காவல்துறை இன்றுவரை கைது செய்யவில்லை என்பது தான். ஆனால் நாட்டில் எங்கோ மூன்று மூலைகளில் நடைபெற்ற இந்த உயிர்பலிகளை கண்டித்தும், இதுவரையில் கொலையாளிகளை கைது செய்யாததை கண்டித்தும் நாடு முழுதும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும், ஜனநாயக அமைப்புகளும் கண்டனக்குரல் எழுப்பி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து நாடு முழுதும் பல்வேறு மூலைகளில் இருக்கும் மத்திய அரசின் சாகத்ய அகாடமி விருதுகளை பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசிடமே திருப்பித்தந்து வருகிறார்கள்.
           மேலும் அண்மையில் கனடாவில் PEN International என்ற உலக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை கொண்ட அமைப்பின் 81வது மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இந்தியாவில் எழுத்துரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும், இந்த உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், மூன்று பெரும் எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கல்புர்க்கி ஆகியோர் மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை கொலை செய்த கொலையாளிகளை இதுவரையில் கைது செய்யாததை கண்டித்தும், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் போன்ற படைப்பாளிகளின் உயிர்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் மீது காரித்துப்பினர்.
               அதுமட்டுமல்ல, நீதிக்காக போராடும் இந்திய எழுத்தாளர்கள் பக்கம் தாங்கள் இருப்பதாகவும், அவர்களின் போராட்டத்திற்கு எண்களின் ஆதரவுக்கரங்களை நீட்டுகிறோம் என்றும் மாநாட்டிலேயே பிரகடனப்படுத்தியது என்பது மத்திய அரசின் முகத்தில் கரியை பூசியது போல் ஆனது.  உலக எழுத்தாளர்கள் இந்திய எழுத்தாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது என்பது இந்திய எழுத்தாளர்களின் போராட்டங்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துவிட்டது. எழுத்தாளர்களின் போராட்டங்களை பொதுமக்களாகிய நாமும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிராமல், போராடும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பக்கம் நிற்போம். 

திங்கள், 19 அக்டோபர், 2015

கூத்தாடிகள் ரெண்டுபட்டால் தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டம்...!


              ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்ன்னு சொல்லுவாங்க. ஆனால் அந்த கூத்தாடிகளே ரெண்டுபட்டால் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு தான் ரொம்ப கொண்டாட்டம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பொறுப்பாளர்கள் தேர்தல் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ''திகில்'' நிறைந்த காட்சிகளாக இருந்தது. திரைப்படத்துறையில் கோடிகோடியாய் வருமானம் ஈட்டும் தமிழக திரைப்படக் கலைஞர்கள் கடந்த பொறுப்பாளர்கள் மீது  அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக ஆரம்பத்திலிருந்தே இரண்டு அணியாய் உடைந்து தேர்தலில் ஜனநாயகப்பூர்வமான போட்டியை உருவாக்கியது. ஆனால் அது இரு அணிகளுமே தங்களுக்கிடையே இருந்த சொந்த விருப்பு வெறுப்புகளை கிளறிவிடப்விட்டு, ஆட்பலம், பணபலம், அதிகாரபலம் போன்றவைகள் மூலம்  சாதி, இன உணர்வுகளையும் தூண்டிவிடப்பட்டு தேர்தல் என்பதை ஒரு குழாயடி சண்டையாக மாற்றிவிட்டனர். 
              என்றைக்கு நடிகர் சங்கத்தேர்தல் குழாயடி சண்டையாக மாறியதோ, அன்றையிலிருந்து தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு கொண்டாட்டமாய் போய்விட்டது. அதன் உச்சக்கட்டமாய் தேர்தல் நாளான நேற்று ஊடகங்களெல்லாம் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள  சென்னையிலிருந்த அத்துனை  தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தேர்தல் நடந்த இடத்திற்கே படைகளுடன் கூடிவிட்டனர். நேரடி ஒளிபரப்பு, சுடச்சுட செய்தி என்று விலைவாசி உயர்வால் சோர்ந்துபோன தமிழக மக்களை நேற்று நள்ளிரவு வரை உற்சாகமூட்டினர். 
           ஒருவழியாக தேர்தல் முடிந்து நேற்றிரவு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல் ஐவர் அணி வெற்றி. பாண்டவர் அணி என்று சொல்லப்பட்டவர்களில் நாசர் தலைவராகவும், விஷால் பொதுச்செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நடந்த தேர்தலில் பெரும்பாலானோர் நம்பிக்கையை பெற்று வெற்றிப்பெற்ற  அனைவரையும் நெஞ்சார வாழ்த்துகிறோம். 
            புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கவனத்திற்கு : - 
        (1) நடிகர் சங்கம் எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ மீண்டும் அதை நோக்கி சங்கத்தை அழைத்துச் செல்லவேண்டும். 
              (2) கட்டப்பஞ்சாயத்துக்கு இடம்கொடுக்காமலும், ஆளுங்கட்சிக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ ஜால்ரா அடிக்காமலும் நடுநிலைமையுடன் சங்கம் நடைபெறவேண்டும். 
            (3) புதிதாக பதவியேற்கும் முதலமைச்சரை ''உற்சாகமூட்டுவதற்கு'' செய்யப்படும்  அநாவசிய ஆடம்பரச்செலவுகளை தவிர்க்கவேண்டும். 
                     (4) மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ திரைப்படக்கலைஞர்கள் மிரட்டப்படும் போதோ அல்லது தாக்கப்படும் போதோ வாய் மூடி வேடிக்கைப் பார்த்திராமலும்   தயங்காமலும்  கண்டிக்கவேண்டும். 
   (5) பொருளாதாரத்தில் நலிவடைந்த வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் திரைப்படக்கலைஞர்கள்  மற்றும் நாடகக்கலைஞர்களை பாதுகாக்கும் முயற்சிகளில்  இறங்கவேண்டும். 
             இவைகள் தான் புதிய பொறுப்பாளர்களிடம் இருந்து அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுவன. அவைகளை நிறைவேற்ற புதிய பொறுப்பாளர்கள் முயற்சி செய்யவேண்டும். 

செவ்வாய், 13 அக்டோபர், 2015

இமயத்தில் உயர்ந்த செங்கொடி...!


             கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் நேபாளத்தில் 200 ஆண்டு கால மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி மதசார்பற்ற - ஜனநாயக நாடாக உருமாற கடந்த ஏழு ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இந்து மதவாத பிற்போக்கு சக்திகளின் திட்டமிட்ட சதிகளை முறியடித்து  நேபாளம் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியன்று ஒரு வழியாய் நிம்மதி பெருமூச்சி விட ஆரம்பித்திருக்கிறது. ஏழு ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் புதிய அரசியலமைப்பு சட்டம் பிரசவமானது. புதிய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாதென்றும், பழைய மன்னராட்சி முறையே தேவை என்றும், நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்றும் நேபாளத்திலும், இந்தியாவிலும் இருக்கக்கூடிய மாற்றத்தை விரும்பாத இந்து மதவாத பிற்போக்குவாதிகள் கைகோர்த்து, புதிய சட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்க முட்டுக்கட்டை போட்டனர். ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாள மாவோயிஸ்ட் கட்சி, நேபாள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மாற்றத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பிய அரசியல் கட்சிகள்  இறுதிவரையில் முழுமூச்சாக நின்று தங்களது நாட்டிற்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அந்த அரசியல் கட்சிகளையும், அக்கட்சிகளை சேர்ந்தவர்களையும், அவர்களோடு ஆதரவாக நின்ற அந்நாட்டு மக்களையும் நெஞ்சார பாராட்டவேண்டும்.  
           அதுமட்டுமல்ல, நேபாளம் ஒரு ''இந்து நாடாக'' அறிவிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு முன்னோட்டமாய் அமையும் என்று எதிர்ப்பார்த்த இந்திய இந்துத்துவா மதவெறிசக்திகளுக்கு நேபாளத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் என்பது ஒரு ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து தினந்தோறும் நேபாளத்திற்கு அனுப்பப்படும் உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல் - டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களின்  போக்குவரத்து திடீரென்று இந்துத்துவவாதிகளால் தடை செய்யப்பட்டது. இதை புரிந்துகொண்ட நேபாள அரசு, இந்தியாவிலிருந்து வரும் அத்தியாவசிய பொருட்கள் நேபாளத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்தினால், அந்த பொருட்களை சீன நாட்டிலிருந்து வரவழைப்போம் என்று  அறிவித்தவுடன் இந்துத்துவவாதிகளின்  அந்த தடைகள் அவசர அவசரமாக விலக்கிக்கொள்ளப்பட்டன.         
      நேபாள பாராளுமன்றம்   ஒருமனதாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த  அரசியலமைப்பு சட்டத்தின்படி,   முறைப்படி  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி CPN(UML) - நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்.கே.பி.சர்மா ஒளி அவர்கள்   இருமுனை போட்டியில் நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொய்ராலாவை தோற்கடித்து மதசார்பற்ற ஜனநாயக நேபாள நாட்டின் முதலாவது பிரதமராக தேர்ந்தெடுத்தது என்பது இந்தியா, நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள  மதவாத பிற்போக்கு சக்திகளுக்கு அதிர்ச்சியையும்,  ஏமாற்றத்தையும்  அளித்துள்ளது.  
        அதேசமயத்தில், இமயமலையின் உச்சியில் செங்கொடி உயர்ந்து 
நிற்பதைப் பார்க்கும் போது, உலகெங்கும் மாற்றத்தை விரும்பும் 
அனைவருக்கும் பெருமையையும்,
 மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் மற்ற நாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தோழர்களுக்கு நம்பிக்கைத் துளிர்கிறது. மாற்றத்தை ஏற்படுத்திய நேபாள நாட்டு மக்களுக்கு தோழர்.சர்மா ஒளி தலைமையிலான புதிய அரசு ஏற்றத்தை தரும் என்ற நம்பிக்கையும் துளிர்விடுகிறது.

சனி, 10 அக்டோபர், 2015

மோடி அவர்களே... போதும் உங்கள் வெற்று கோஷம்...!


டி.எம்.கிருஷ்ணா,        
கர்நாடக இசைப் பாடகர், எழுத்தாளர்          

மதிப்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே,

        பிஹார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நீங்கள் பேசியதைக் கேட்டேன். உங்கள் பேச்சு நான் இக்கடிதத்தை எழுதுவதை கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்! ஆனால், மாறாக அந்தப் பேச்சு இக்கடிதத்தை நான் உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் என்ற உறுதியை என்னுள் மேலும் வலுப்படுத்தியது.
         கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நாம் ஒரு காட்சியை கண்டு வருகிறோம். அக்காட்சியை 'மனித சோகத்தின் மானபங்கம்' என்றே வர்ணிக்க முடியும். குற்றத்தை செய்தவர்கள் காவி, பச்சை இல்லை.. வேறு ஏதோ நிறம் சார்ந்த அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்த களங்கமும் இல்லை. தனி மனிதர்களாக, கட்சித் தொண்டர்களாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களாக, எதிர்கட்சியினராக அனைவரும் இணைந்து இரக்கம், பச்சாதாபம் போன்ற உணர்வுகளின் ஆன்மாவை சிதைத்துவிட்டனர். இருந்தாலும், இவை, முற்றிலும் புதிதான நிகழ்வு அல்ல. நாம் யார் என்பதை உணர்த்தும் மற்றுமொரு அடையாளம். அவ்வளவே.
        பிரதமர் அவர்களே! உங்கள் மீது நான் உரிய மரியாதை கொண்டுள்ளேன். இவ்விவகாரத்தில் உங்கள் மவுனம் மட்டுமே என்னை வியப்படையச் செய்யவில்லை. எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களைப் போன்றோரிடம் இப்பிரச்சினையில் மவுனம் கலைக்குமாறு கேட்டதாலேயே நாங்கள் கிண்டல் செய்யப்பட்ட விதமும், சிறுமைபடுத்தப்பட்ட விதமும்தான் என்னை பன்மடங்கு வியப்படையச் செய்துள்ளது.
        ஒரு மிகப் பெரிய துயர சம்பவத்தில் மக்கள் பிரதிநிதிகள் மவுனம் கலைக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கை ஏதோ அரசியல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டது அல்ல. சாமானிய மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை. அது அவ்வளவு பெரிய நியாயமற்ற கோரிக்கையா என்ன? எங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லையா? சமூக-கலாச்சார ரீதியாக மிக முக்கியமான பிரச்சினையை உங்களிடம் நேரடியாக எடுத்துரைத்து விளக்க முயற்சித்ததால் எங்களை குற்றவாளிகளாக பார்ப்பது நியாயமா?
     இத்தகைய சூழலில், உங்களுக்கு நான் தேர்தலில் வாக்கு அளிக்காமல் இருக்க அனைத்து உரிமையும் எனக்கு இருக்கிறது என நான் நினைக்கிறேன். அதேவேளையில், ஒரு பிரதமராக நீங்கள் என் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
     இன்றளவில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சர்ச்சை என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?- அது வேறு எதுவுமில்லை 'இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையின் எதிர்காலம் என்னவாகும்' என்பதே அது. 'அனைவரும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம்' என்பதே உங்கள் நிலைப்பாடு என நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இதை ஒரு தாரக மந்திரம் போல நீங்களும், உங்களைச் சேர்ந்தவர்களும் பலமுறை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், பிரதமர் அவர்களே தாரக மந்திரத்தை சொற்பிரயோகம் செய்தால் மட்டும்போதாது.
       உங்களிடம் நேரடியாக, தெளிவுபட கேட்பதற்கு எங்களிடம் பல கேள்விகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக நிறைய துக்க சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பின்னணியிலேயே நாங்கள் இந்தக் கேள்வியை கேட்கிறோம். நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று கூறப்பட்டாலும், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொலைகளுக்கும், முகமது இக்லாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை எங்களால் உணர முடியாமல் இல்லை. இந்நிலையில், இவ்விவகாரத்தில் உங்கள் நேரடியான பதில் வெளிவர வேண்டும். நேற்று நீங்கள் பேசியதில் ஒரு தெளிவற்ற நிலை நிலவியதால் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். எனவே, உங்களது உண்மையான தலையீடு தேவை. இது வெற்றுரைகளுக்கான நேரமல்ல. இது உங்களிடமிருந்து கடும் கண்டனம் வர வேண்டிய தருணம். உங்களது கண்டனம் எந்தவகையில் இருக்க வேண்டும் என்றால், அதை கேட்கும் பொதுமக்களுக்கு இனி இந்திய தேசத்தில் யாரும் அவரது நம்பிக்கைக்காக, அவரது பார்வைகளுக்காக, அவரது உணவு பழக்கவழக்கங்களுக்காக கொல்லப்படமாட்டார்கள் என்ற தீர்க்கமான நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும்.
       பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி தடையும், அதை அரசியல் கட்சியினர் பகுப்பாய்வு என்ற பெயரில் துஷ்பிரயேகம் செய்ததுமே தாத்ரியில் நடந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறினால் அதில் என்ன தவறு? சிலர் சிந்திக்காமல் செய்யும் காரியங்களுக்கு நாங்கள் அதீத விலை கொடுக்க வேண்டியிருக்க்கிறது. இது இன்னமும் தொடரலாம். ஆனால், இவை எதுவுமே உங்களை கோபப்படுத்தவில்லை, உங்களை சலனமடையச் செய்யவில்லை என்பதே இந்த விவகாரத்தில் உங்கள் அணுகுமுறை மீதான மிகப் பொருத்தமான பார்வையாக இருக்கும்.
       இத்தகைய சூழலில், இந்து அடிப்படைவாத சக்திகள் சில 'இந்துக்களே தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்' என்ற வாதத்தை முன்வைப்பது சலிப்படையச் செய்கிறது. கடும் கண்டனத்துக்குள்ளாக வேண்டிய ஒரு சம்பவம், இனிமேல் நடைபெறவிடாமல் தடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம்தான் தாத்ரியில் நடைபெற்றுள்ளது என்பதே நிதர்சனம். ஆனால், அதை எங்கேயாவது எப்போதாவது எதேச்சையாக நடைபெற்ற சம்பவம் போல் சித்தரிக்கும் முயற்சி நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டும் அல்லாமல், ஊடகங்களே தாத்ரி சம்பவத்தை மிகைப்படுத்திவிட்டன என்ற விமர்சனம் வெறுக்கத்தக்கது.
இன்று, உள்நாட்டிலும் சரி உலக அரங்கிலும் சரி உங்கள் மீதான பார்வை, "நீங்கள் ஓர் அமெரிக்க அதிபர் பாணி இந்தியப் பிரதமர்" என்பது மாதிரியாக இருக்கிறது. நீங்கள் அமெரிக்க அதிபரின் பாணியில் நடந்து கொள்கிறீர்கள் என்பது உண்மையானால் அவரைப்போலவே, இன, மொழி, மத பேதங்களால் நடைபெறும் வன்முறைகளுக்கு அது எங்கு, யாரை குறிவைத்து நடைபெற்றிருக்கிறது என்ற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் அவர் எப்படி உடனடியாக அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறாரோ அதேபோல் நீங்களும் செயல்பட வேண்டும் அல்லவா? அமெரிக்க குடிமக்கள் அனைவருமே அந்நாட்டு அதிபரின் கருத்துகளை ஆதரிப்பர் எனக் கூற முடியாது, ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்வர். ஆனால், உங்களிடம் இருந்து பொத்தாம்பொதுவான பேச்சு மட்டுமே வருகிறது.
       குடியரசுத் தலைவர் நம் நாட்டின் அடையாளம். அவரது வார்த்தைகள் நம்மை வழிநடத்திச் செல்கின்றன. ஆனால், உண்மையில் தேசத்தை செலுத்துவது நீங்களே. எனவே தேசத்தில் நிகழும் எல்லா வினைகளுக்கு, எதிர்வினைகளுக்கும், நல்லிணக்கத்துக்கும், மேம்பாட்டுக்கும், வலிமைக்கும் நீங்களே காரணமாக இருக்க முடியும்.
      முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நீங்கள் எதையெல்லாம் தீமை என பார்த்தீர்களோ அதை எல்லாம் அழித்தொழிப்பதே உங்கள் ஆட்சியின் கடமையாக இருக்கும் என்றீர்கள். அது உண்மையென்றால், குழப்பவாதிகள் தெளிவாகப் பேசுங்கள். அவர்களிடம் கோரிக்கைகளை வையுங்கள், இல்லையேல் அவர்களை கட்டுப்படுத்தவாவது செய்யுங்கள். ஆனால், தயவுசெய்து வாக்குவங்கியை வைத்து விளையாடாதீர்கள். நீங்கள் அத்தகைய அரசியல் விளையாட்டை விளையாடுவதாகவே தெரிகிறது.
      அதுமட்டுமல்ல பிரதமர் அவர்களே, முந்தைய பிரதமரைப் போல் நீங்கள் மவுன பார்வையாளர் அல்ல. நீங்கள் பேசவும், பேச்சு மூலம் வசீகரிக்கவும் விரும்புகிறீர்கள். லால் கிலா, மேடிசன் சதுக்கம், துபாய், சிலிகான் வேலி, கூகுள், ஃபேஸ்புக் தலைமையகம் என நீங்கள் பல இடங்களிலும் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். உங்கள் தாய் சந்தித்த துன்பங்களை பகிர்ந்துகொண்டு நீங்கள் கலங்கியதை பார்த்திருக்கிறோம்.
       வார்த்தைகள், வலுவானது முதல் உருக்கமானதுவரை மிக எளிதாக உங்கள் வசப்படுகின்றன. எனவே, மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரு மனிதருக்காக குரல் கொடுங்கள் என உங்களிடம் இருந்து ஒரு சில வார்த்தைகளை பெற நாங்கள் ஏன் கோஷமிட வேண்டியிருக்கிறது?
       ஒரு துக்க சம்பவம் நடந்த பிறகும்கூட உங்கள் ஆட்சியின் மூத்த அமைச்சர்களும், சில முக்கிய பிரமுகர்களும் மனிதநேயமற்ற வார்த்தைகளை சர்வ சாதாரணமாக கூறிவருகின்றனர். தாத்ரி சோக சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்காக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் நீங்கள் பேசிவிட்டதாக அவரே கூறுகிறார். ஆனால், மோடி அவர்களே, இது உங்கள் இருவர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நீங்கள் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதற்கு. இது இந்தியர்கள் அனைவர் சார்ந்த விஷயம். எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரடியாக கண்டிக்க வேண்டும்.
      எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விமர்சிக்கும்போது நீங்கள் அஞ்சானாக இருக்கிறீர்கள். அதே அஞ்சாமையையும், அது போன்ற வார்த்தை ஜாலத்தையும் உங்கள் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களை கண்டிக்க நீங்கள் ஏன் பயன்படுத்துவதில்லை?
         ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து மக்களை அந்நியப்படுத்திவருகின்றன. இந்நிலையில், பிரதமராகவும், பாஜக-வை இயக்கும் மாபெரும் சக்தியாகவும் இருக்கும் மோடி அவர்களே, இந்துத்துவா அமைப்புகளுக்கும், கட்சிக்கும் நீங்களே பொறுப்பு. அதற்குமட்டுமல்ல சங்பரிவார்கள் அமைப்புகள் தூண்டிவிடும் சில அநாகரிக நிகழ்வுகளுக்கும்தான்.
   நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பதில் எப்போதுமே பகிரங்கமாக பெருமைப்பட்டுள்ளீர்கள். சங்பரிவார் அக்குடும்பத்தின் ஓர் அங்கம். எனவே, சங்கத்தை எப்போது கொண்டாடவேண்டும்; அதிலிருந்து எப்போது விலகி நிற்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் எடுக்க முடியாது. இரண்டுவிதமான நிலைப்பாடுகளுக்கு இங்கு இடமில்லை.
         உங்கள் கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள், "எதைப்பற்றி பகிரங்கமாக பேச வேண்டும். அதை எங்கு பேச வேண்டும் என்ற முடிவு முற்றிலும் உங்களுடையது" என்று. அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதேவேளையில் மக்களின் மகிழ்ச்சிக்கு உலைவைக்கும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து பேசுவது அவசியம் என உங்களுக்கு தோன்றவில்லை என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கூட கடவுளிடம் நீதி கேட்டு முறையிடும் சூழல் உருவாகும்.
         ஏனெனில், இது மதுச்சார்பின்மை பற்றிய விவகாரம் அல்ல, இது மனிதம் சார்ந்த விவகாரம். உண்மையான, உணர்வுப்பூர்வமான விவகாரம்.
         நீங்கள் சமூகவலைதளங்களை கையாள்வதில் தேர்ந்தவர். அதை மார்க் ஸக்கர்பக்கரிடம் பகட்டாக காட்டியிருக்கிறீர்கள். எனவே, நடைபெற்ற பல்வேறு சோக சம்பவங்கள் தொடர்பாக சைபர் உலகில் பதிவான கருத்துகளை நிச்சயமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைக் கண்ட பிறகுகூட அவற்றிற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றவில்லையா?
        இறுதியாக ஒரு கேள்வி. "இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள விரும்புகிறார்களா? அல்ல... இருவரும் இணைந்து வறுமைக்கு எதிராக சண்டையிட விரும்புகிறார்கள் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்" என்று நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். இது என்னை பொருத்தவரை உங்களிடம் இருந்து வந்த மற்றுமொரு வெற்று கோஷம்.
        ஏனெனில், வறுமை என்பது மதம், இனம் ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாத அளவுக்கு பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு பிரச்சினை. எனவே, இந்த சவால்களை நாம் பெருத்த நேர்மையோடும், மிகுந்த துணிவோடும் அணுகாவிட்டால், வறுமை மட்டுமல்ல நமது தேக்கநிலையும் என்றைக்குமே குணமாகப்போவதில்லை.

தமிழில்: பாரதி ஆனந்த்
நன்றி : தி இந்து (தமிழ்)

மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் - தமிழகத்தின் இருள் நீக்கும் வெளிச்சம்...!


 புதிய முயற்சி மட்டுமல்ல... புதிய அத்தியாயம்                                

         தமிழக மக்களின் நலன்களை காப்பதற்கான போராட்டப் பாசறையாக மக்கள் கூட்டியக்கம் ஜூலை 27ம் தேதிஉருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு, அதிகரித்து வரும் மதவெறி, தமிழகத்தில் நடந்து வரும் சாதி ஆணவக் கொலைகள், தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் நயவஞ்சகம், உலக மயம் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என இந்த இயக்கம் சூல் கொண்ட போதே சூளுரை மேற்கொண்டது.தேர்தல் நேரத்தில் தொகுதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் உருவாக்கப்படும் தமிழக அரசியல் கலாச்சார சூழலில்,போராட்டக் களத்திலேயே கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தஅமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நல இயக்கங்களை நடத்திவருகிறது.தமிழகத்தில் இடையறாது நடந்து வரும் மணல், கிரானைட், தாதுமணல் கொள்ளையை தடுக்க வேண்டும்; மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம், சாதி, மதவெறி எதிர்ப்பு, தமிழக உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து ஆக. 13ம் தேதி ஐந்து மண்டலங்களில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், செப்.2ம் தேதி அகில இந்திய அளவில் தொழிலாளி வர்க்கம் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டம், இதன் தொடர்ச்சியாக காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க முயலும் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் அக்.5ஆம் தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

 குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றி ஆலோசனை                      

          திருவாரூரில் அக்டோபர் 5 அன்று மக்கள் நலக்கூட்டியக்கத்தின் தலைவர்கள் கூடி, இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரிக்க குழு ஒன்றை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.இந்த இயக்கத்தின் தலைவர்கள் வரும் அக். 23ஆம் தேதி சென்னையில் கூடி தமிழக சட்டமன்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும், குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் விவாதிக்க உள்ளனர். குறைந்தபட்ச செயல்திட்டத்தை நவம்பர் 2 ஆம் தேதி சென்னையில் வெளியிடுவது என்றும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு தரப்பில் இருந்து வரும்அவதூறுகள், அலறல்கள், அங்கலாய்ப்புகளிலிருந்தே இந்தக் கூட்டியக்கம் தமிழக அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இன்றைக்கு தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக, ஆண்ட கட்சியான திமுக ஆகிய இரண்டுமே பொறுப்பாகும். ஊழல், லஞ்சம், இயற்கை வளக் கொள்ளை, அனைத்திலும் கமிஷன் மயம் ஆகிய அனைத்து சீர்கேடுகளையும் உருவாக்கியதில், வளர்த்ததில் இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு. பகுத்தறிவுப் பாரம்பரியம் மிக்க தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதும், சாதிய அணி திரட்டல் நடப்பதும் , தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்வதற்கும் இரு கட்சிகளின் அணுகுமுறைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடமுடியாது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், இப்போது ஆளும்பாஜக ஆகிய கட்சிகள் பின்பற்றிய அதே தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையைத்தான் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பின்பற்றுகின்றன. மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் இரண்டு கட்சிகளும் உறுதியாக இல்லை.

 காலத்தின் தேவை; களத்தின் விளைச்சல்            

          அதிமுக, திமுக ஆகிய இரண்டுக்கும் மாற்றாக ஒரு புதிய மாற்று தேவையாகிறது. அந்த அடிப்படையில்தான் காலத்தின் தேவையாக, களத்தின் விளைச்சலாக, போராட்ட வானத்தில் உதயமான புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் நலக் கூட்டியக்கம் உருவெடுத்துள்ளது. தேர்தல் அவசரத்தில், அப்போதைய தேவைக்காக மட்டும் அமைக்கப்படும் அணி அல்ல இது. மக்கள் நலனைப் பாதுகாப்பதற்காக திட்டவட்டமான திட்டத்தின் அடிப்படையில் உருவெடுக்கும் அணிவகுப்பு இது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்க உள்ள குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது தமிழக அரசியலில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி என்பது மட்டுமல்ல; எழுச்சிமிகு வரலாற்றுக்கான புதிய அத்தியாயமும் ஆகும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலவும் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் என்பது   காங்கிரஸ், பாஜக அல்லாத; அதிமுக, திமுக இல்லாத புதிய அணி தேவை என்பதை தமிழக  மக்கள்  உணர்ந்திருக்கிறார்கள்,