ஞாயிறு, 28 ஜூன், 2015

நடிகர் சிவகுமார் அவர்களே...! சிந்தித்து முடிவெடுங்கள்...!


             மூத்த திரைப்படநடிகர் திரு.சிவகுமார் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அந்த முகநூலினால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கோபத்துடனும்,  வேதனையுடனும் குறிப்பீட்டு    ''இத்துடன் எனது முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்'' என்று  பதிவிட்டுவிட்டு முகநூலை விட்டே வெளியேறிவிட்டார். அவர் சொல்வது போல் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கும் இது போன்ற தளங்களில் இடையூறுகளும், சங்கடங்களும் ஏற்படுவது சகஜம் தான். 
       இதுவரையில் மக்கள் ''ஒரே பக்க ஊடகங்களை'' தான் பார்த்திருக்கிறார்கள். சினிமாவாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சிப் பெட்டியாக இருந்தாலும் சரி, செய்தித்தாள் மற்றும் இதழ்களாக இருந்தாலும் சரி... அனைத்தும் ஒரே பக்க ஊடகங்களே. இவைகளை தான் இதுவரையில் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இத்தனை ஊடகங்களும் என்ன சொல்கிறதோ அதை அப்படியே மக்களால் பெற்றுக்கொள்ளத்தான் முடியும். அவர்களால் தங்களின் விருப்பு வெறுப்புகளை அவைகளிடம் திரும்ப செலுத்தமுடியாது. இதுவரையில் எதிர்பக்கத்திலிருந்து வந்த தகவல்களை பெற்றுக்கொள்பவர்களாக மட்டுமே இருந்தவர்களுக்கு, பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகள் எதிர்வினையும் செயலாற்றக்கூடிய இரு பக்க ஊடகங்களாக இருக்கின்றன.  பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அவைகள் தருகின்ற தகவல்களை வெறும் பெற்றுக்கொள்பவர்களாக மட்டும் இல்லாமல், தருகின்ற தகவல்களுக்கு சுதந்திரமாக எதிர்வினை செய்யக்கூடிய ஒரு ''சுதந்திர தளமாக'' அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். 
              அந்த சுதந்திரத்தின் எல்லை மீறும் போது திரு.சிவகுமார் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. இந்த தளங்களில் உலாவரும் அனைவருமே நல்லவர்கள் தான். அவர்களின் குணாம்சம் தான் மாறுபடும். அடுத்தவர்களை சீண்டிப்பார்த்து சந்தொஷப்படுபவர்களும் அந்த கூட்டத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் ஒதுங்கிச் சென்றுவிட வேண்டியது தான். நாம் செல்லும் பாதையில் ''அசிங்கம்'' இருந்தால் தாண்டிச் செல்வது இல்லையா அல்லது ஒதுங்கிச் செல்வது இல்லையா...? அதேப் போல் தான் இந்த பேஸ்புக் தளங்களிலும் நடந்துகொள்ளவேண்டும். தொடர்ந்து தொல்லைக்கொடுப்பவர்களாக இருந்தால் அவர்களின் பேஸ்புக் கணக்கை ப்ளாக் செய்யும் வசதியும், உரிமையும்  உங்களிடம் இருக்கிறதே. அதை பயன்படுத்தலாமே...!
            திரு.சிவகுமார் அவர்கள் வெறும் திரைப்பட நடிகர் மட்டுமல்ல. ஒரு தலைசிறந்த ஓவியர். ஒரு தேர்ந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர்... இப்படியாக எல்லாம் கலந்த மதிப்புமிக்க கலைஞர்.  மற்ற எந்த நடிகர்களிடமும் பார்க்கமுடியாத சிறந்த மனிதர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் ஒரு மனிதநேயம் உள்ள பண்பாளர். வசதியற்ற மாணவ - மாணவியர்களுக்கு அவர்கள் படிப்பதற்கு நிதியுதவி செய்யும் மாண்பு கொண்டவர். இப்படிப்பட்டவரின் அனுபவங்களும், தகவல்களும் வளரும் கலைஞர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதற்காகவாவது அவர் முகநூலில் மீண்டும் பதிவிடவேண்டும்.  அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் அனுபவப்பாடங்கள் அடுத்தவர்களுக்கு கிடைக்காமல் உங்களோடே அழிந்து போகும். அப்படியாக வீண்போக நீங்கள் அனுமதிப்பீர்களா...? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். பின் முடிவெடுங்கள். 
                எனவே  திரு.சிவகுமார் அவர்களே...! உங்களின் இந்த முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் முகநூல் பக்கத்திற்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். 

எதற்கும் கூச்சப்படாத நரேந்திரமோடி...!

                பங்காரு இலட்சுமணனின் ஆயுதபேர ஊழல், இராணுவவீரர்களுக்கான சவப்பெட்டி  ஊழல், ராணுவவீரர்களுக்கு வாங்கிய ஷூவில் ஊழல், இராணுவ பீரங்கி  ஊழல், எடியூரப்பா - ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல் - இப்படியாக வகைவகையான ஊழல்களை  அடையாளமாக கொண்ட பெருமைமிகு கட்சியான பாரதீய ஜனதாக்கட்சி, கடந்த  காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செய்த ஊழல்களை ஒழித்துக்கட்டிவிட்டு, ஊழலற்ற ஆட்சியை தருவோமென்று, ஊழல் என்றால் என்னவென்று தெரியாதவர்களை போல் நாடகமாடி ஓட்டுக்களை வாங்கி மோடி தலைமையில்  ஆட்சிக்கு வந்தவர்கள்.  கடந்த மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவையொட்டி, இவர்கள் வாய் கிழியப் போட்ட கோஷமே, 
''கடந்த ஓராண்டில் ஊழல் இல்லாத ஆட்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்'' என்பது தான். ஓராண்டு சாதனை விளம்பரங்களும் இப்படித்தான் வெளியிடப்பட்டன. 
                ஆனால் அந்த கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்தபின்பு தான் இவர்கள் சாயம்  வெளுக்க ஆரம்பித்திருக்கிறது. புற்றீசல் போல் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது. 
        (1) பல்வேறு மோசடி வழக்கில் தேடப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக வாழும்  ''உலகமகா திருடன்'' லலித் மோடியுடன் இந்திய வெளியுறவு  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,  அவரது கணவர் மற்றும் அவரது மகள் ஆகியோரின் நெருக்கமான தொடர்பு உள்ளது.  விசா கிடைக்காமல் இலண்டனில் இருக்கும் லலித் மோடிக்கு விசா கிடைக்க ''மனிதாபிமான'' அடிப்படையில் உதவிசெய்ய சுஷ்மா தனது அதிகாரத்தை தாவறான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்.  
              (2) சுஷ்மாவைப் போல் பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேக்கும், லலித் மோடிக்கும் உள்ள  நெருக்கமும் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.
                (3) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் போலி கல்வி சான்றிதழ் ஊழலும் காற்றில் பறந்துகொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யும் வேட்பாளர் மனுவில் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கல்வித்தகுதியை அளித்திருக்கிறார். கல்லூரியில்  படிக்காமலேயே ஒருமுறை பி.ஏ என்றும் இன்னொரு முறை பி.காம் என்றும் தவறான தகவல்களை அளித்துவிட்டு வகையாக மாட்டிக்கொண்டார். 
                 (4) மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட கடலை மிட்டாயை களவாடி தின்ற பாரதீய ஜனதாக்கட்சியை சேர்ந்த அம்மாநில குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ் முண்டே நடத்திய ''கடலை மிட்டாய் ஊழல்'' 
              இப்படியாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சியின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன. இவைகளைப் பார்த்து ஊழலுக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சியே வெளியே கூச்சலிடுகின்றன. இடதுசாரிக்கட்சிகள் இன்னொருபக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று பேச ஆரம்பித்த ''கடப்பாரை புகழ்'' அத்வானி  கூட, என் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது நான் எனது எம்.பி பதவியை இராஜனாமா செய்திருக்கிறேன். அதேப்போல் தற்போது  ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டவர்களும் இராஜனாமா செய்யவேண்டும் என்று தனது கட்சிக்காரர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார்.   ஆனால் பிரதமர் நரேந்திரமோடி மட்டும் எப்போதும் போல், எந்தவித கூச்சநாச்சமுமின்றி  வாய் திறக்காமலும், கண்டுகொள்ளாமலும்  இருக்கிறார். 
           வழக்கம் போல் மக்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

மதங்கள் இங்கே உடைக்கப்பட்டன...!


         அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூலம், முகமது ஷாநவாஸ் ஜாகீர் என்ற இஸ்லாமியர் குடும்பம் அயுஷ் மற்றும் பிரார்த்தனா என்ற பெற்றோர்களை இழந்த இந்து குடும்பத்தை இரட்டைக்குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுத்திருக்கிறார்கள். இதைவிட இந்த நாட்டில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. 
            2012 - ஆம் ஆண்டில் ஒரு வருட இடைவெளியில் விமான பைலட்டாக பணிபுரிந்த தந்தையையும், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த தாயையும் இழந்த அந்த குழந்தைகளை வளர்க்க அதே மதத்தை சேர்ந்த அவர்களின்  உறவினர்கள் யாரும்  மனமுவந்து  முன் வரவில்லை. அதுமட்டுமல்ல, அவர்கள்  அக்குழந்தைகளை இரக்கமின்றி உதாசினப்படுத்தியும், மரியாதையின்றியும் நடத்தியிருக்கிறார்கள். இங்கே மதம் எங்கே போனது....? அல்லது அந்த மதம் தான் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது...? ஆனால் அந்த ''இந்து'' குழந்தைகளை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஒரு ''இஸ்லாமிய'' குடும்பம் தத்தெடுத்திருப்பது என்பது ''மனிதம்'' - ''மானுடம்'' மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிருபித்து காட்டியிருக்கிறது. 
               பெற்றோர்களை இழந்து தவித்த இரண்டு குழந்தைகளை மதத்தை கடந்து தத்தெடுத்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முகமது ஷாநவாஸ் ஜாகீர் குடும்பத்தை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

வித்தைக்காட்டி வேடிக்கை காட்டும் நரேந்திரமோடி...!



            பிரதமர் நரேந்திரமோடி இன்று நாடு முழுதும் ''யோகா தினம்''  என்று சொல்லி யோகாசனத்திற்கு சம்பந்தமே இல்லாத - யோகாசனமே தெரியாத குழந்தைகளை எல்லாம்  வருத்தெடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல புதுடெல்லியில் இன்று காலை ''ராஜபாதை'' என்ற முக்கிய சாலையில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் நடுரோட்டில் வித்தை காட்டுவது போல் யோகாசனம் செய்து நாட்டு மக்களுக்கு வேடிக்கைக்காட்டினார். இதை நாடு முழுதும்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் செய்தார். ஒரு நாட்டின் பிரதமர் எந்த அளவிற்கு வேலையில்லாமல் இருக்கிறார் என்பதை வெளிநாட்டு மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பார்கள். அதுமட்டுமல்ல  அவர் வித்தைக்காட்டிய அதே நேரத்தில் விடுமுறை நாளான இன்று, நாடு முழுதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் பள்ளிக் குழந்தைகளை யோகாசனம் செய்யும்படி மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.
             பள்ளிக்குழந்தைகளுக்கு ஏன் யோகா தினம் என்ற பெயரில் யோகாசனம் திணிக்கப்படுகிறது....? காரணம் என்ன...? நரேந்திரமோடி - ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகளின் பல செயல் திட்டங்களில்  இதுவும் ஒன்று.

யோகாசனத்தில் அப்படி என்ன இருக்கிறது...? 

           இந்தியாவில் யோகாசனம் என்பது ஆரம்பத்தில் ஒரு உடற்பயிற்சி மட்டுமே. நம் உடலில் உள்ள தசைகளையும், எலும்புகளையும் நெகிழ்வு தன்மை வாய்ந்ததாக - வளைவு தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு இந்த உடற்பயிற்சி பயன்படுத்தப்பட்டது. சீனா, ஜப்பான்  மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பிரபலமாக செய்யப்படும் ''ஜிம்னாஸ்டிக்'' என்ற உடற்பயிற்சியினை போன்றது தான் யோகாசனமும் ஒரு உடற்பயிற்சியாகும். நம் நாட்டு மக்கள் அந்தக் காலத்திலிருந்தே  உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், உடல் திறனை காட்டவும் ஒரு சிலர் யோகாசனம் செய்தார்கள், ஒரு சிலர் எடை தூக்கி பழகினார்கள், ஒரு சிலர் சிலம்பம் கற்றார்கள், ஒரு சிலர் கபாடி போன்ற விளையாட்டுகளை விளையாடினார்கள், ஒரு சிலர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்தார்கள், ஒரு சிலர் நடனம் கற்றார்கள், ஒரு சிலர் மால்கம் - கூட்டமாக கம்பத்தில் வளைந்து உடற்பயிற்சி செய்து காட்டினார்கள்.  இவை அத்தனையுமே நம் நாட்டில் அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து தேர்ந்த விளையாட்டுகள். பின்பு அவைகள் ஒரு கலையாக மாறிப்போனது.
              இந்த சமயத்தில் தான் சுவாமி விவேகானந்தருக்கு பின்னாளில் வந்த இந்தியாவில் உருவான இந்துமத சாமியார்கள் மேலே சொன்ன விளையாட்டுக் கலைகளில் வித்தியாசமானதும், வேறு எந்த உபகரணங்களும்  தேவையில்லாததுமான  யோகாசனத்தை கைப்பற்றினார்கள். தங்களின் பிழைப்பிற்காகவும்,  ''சாமியார் தொழிலை'' பிரபலப்படுத்தவும் யோகா என்ற உடற்பயிற்சியை பயன்படுத்தினார்கள். வெறும் உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல் தியானம், சூரிய நமஸ்காரம், சமஸ்கிருதம் போன்ற மசாலாக்களை சேர்த்து இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாடினார்கள். இந்து மதத்தை பரப்பவும், ஆன்மிகம், பூஜை புனஸ்காரங்களை மக்களிடையே வளர்க்கவும் யோகாவை பயன்படுத்திக்கொண்டார்கள். இன்றைக்கு பல்வேறு நோய்களோடும், மன அமைதியில்லாமலும் அலைந்துகொண்டிருக்கும் மக்களை ஈர்ப்பதற்கு, யோகாசனம் செய்தால் அனைத்து நோய்களும் தீரும் என்றும், மனதில் அமைதி கிடைக்கும் என்ற வார்த்தை ஜாலங்களின் மூலம் மக்களை வரவழைத்து இந்துத்துவ கொள்கைகளை திணிக்கிறார்கள். இந்த யோகாவின் மூலம் சம்ஸ்கிருத மந்திரங்கள், தேவையில்லாத பூஜை - வழிபாட்டு முறைகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை வெகு சுலபமாக இவர்களை நாடி வரும் மக்களின் புத்தியில் ஏற்றிவிடுகிறார்கள்.
             இப்படிப்பட்ட யோகாசனத்தை தான் இந்த அறியா சனங்களின் மத்தியில் இந்த நாட்டின் பிரதமர் வித்தைக்காட்டி வேடிக்கை காட்டியிருக்கிறார். பிரதமர் மோடி அவர்களே, யோகாசனம் செய்தால் நோய் தீரும் என்கிறீர்களே... 98கோடி மக்களை பற்றியிருக்கும் கொடிய நோயான  பசி தீருமா...? அமைதி கிடைக்கும் என்கிறீர்களே... படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமா...? யோகாசனத்தால் இதெல்லாம் சாத்தியமென்றால் சொல்லுங்கள் நாங்களும் உங்களோடு சேர்ந்து யோகா செய்கிறோம். நாட்டில் பசியும், பட்டினிச்சாவும், வேலையின்மையும் பெருகிவிட்டாதால் தான், இது மாதிரியான ''வித்தைகளை'' காட்டி திசைத்திருப்புகிறீர்கள் என்பதையும், இதன் மூலம் ''வேறு எதையோ'' சாதிக்க நினைக்கிறீர்கள் என்பதையும் இந்த நாட்டு  மக்கள் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.
            இன்னுமொன்று மோடிஜி இன்று யோகா தினம் என்று சொல்லி நடுரோட்டில் வித்தைக்காட்டியது போல், வேறொரு நாளை ''காமசூத்திரா தினம்'' என்று அறிவித்து நடுரோட்டில் ''வித்தை'' காட்டிவிடாதீர்கள். சொல்லமுடியாது செய்தாலும் செய்வீர்கள். காமத்திலும் மதத்தை கலந்தவர்கள் தானே நீங்கள். கோயில் கோபுரங்களும், சிற்பங்களும் அதைத்தானே சொல்கின்றன.

வெள்ளி, 19 ஜூன், 2015

எல்.ஐ.சியை காப்பாற்ற முகவர்களை காப்பாற்றுங்கள்...!


                 இன்றைக்கு நாட்டில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக எல்லா வகையான தொழிலாளர்களும் குடும்பம் நடத்த முடியாமல் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அனைத்து வகையான மக்களும் வரவு எட்டணா... செலவு பத்தணா... என்ற கடுமையான சூழ்நிலையில் தான் தங்கள் குடும்பத்தை தினமும் ஓட்டுகிறார்கள் என்பதை நாம் நேரடியாக பார்க்கிறோம். வாழ்க்கை நடத்துவதற்கே தடுமாறி  சிக்கித் தவிக்கும் இந்த வகையான தொழிலாளர்களில் எல்.ஐ.சி முகவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.  
              நான் பணிபுரியும் எல்.ஐ.சி - யில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் அலுவலக நேரத்தில் என் கண் எதிரே பார்க்கும் தொழிலாளர்கள் எல்.ஐ.சி முகவர்கள் தான். மேலாளர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்கள் போன்ற அலுவலகத்திற்குள்ளேயே வேலைபார்ப்பவர்களும், முகவர்கள் என்ற பெயரில் வெயில் - மழை என்று பாராமல் அலுவலகத்துக்கு வெளியில் களத்தில் வேலைபார்ப்பவர்களும் இணைந்த ''இன்சூரன்ஸ் தொழிற்சாலை'' தான் எல்.ஐ.சி ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனம். இன்சூரன்ஸ் துறை தனியார்மயத்திற்கு பின்னும், இன்றைக்கு ஆலமரமாய் விரிந்து பரந்து உயர்ந்து வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முகவர்களின் எல்லையில்லா உழைப்பும் காரணம் யாராலும் மறுக்கமுடியாது. நேற்றைக்கு கூட எல்.ஐ.சி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தில் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் எல் ஐ சி-யின் வளர்ச்சியை பற்றி சொல்லும் போது, அந்த ஆண்டில் மட்டும் எல்.ஐ.சி சேர்த்த உபரித்தொகை என்பது 10.33 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று பெருமையுடனும், பெருமிதத்துடனும் சொல்லியிருக்கிறது. ஆனால் முகவர்களோ இவ்வளவு வளர்ச்சியும் தங்களால் தான் நிகழ்ந்தது என்ற உண்மையை கூட அறியாதவர்கள். யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பது போல் தான், முகவர்களது நிலையும் பரிதாபகரமானது.
      எல்.ஐ.சி-யில் மொத்தம் 14 இலட்சம் முகவர்கள் பணியாற்றுகிறார்கள். எல்.ஐ.சியின் வளர்ச்சியில் இவர்கள் உழைப்பு மிக மிக அதிகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் இன்றைக்கு இவர்களில்  90 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாழ்க்கையில் வளர்ச்சி என்பதே இல்லாத நிலையே உள்ளது. இவர்கள் தினமும் உழைக்கின்ற  நேரம் என்பது அதிகம். அனால் இவர்களுக்கு வருகின்ற வருமானம் என்பது மிக மிக சொற்பமே. இவர்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களும் பல வாய்ப்பாளர்களை பார்க்க தவறுவதில்லை. வீடு வீடாக, கடை கடையாக, அலுவலகம் அலுவலகமாக, தெருத்தெருவாக அலைந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் இன்சூரன்ஸ் வணிகம் மந்தமாக இருக்கிறது என்பது தான் உண்மை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
          1) இன்சூரன்ஸ் தனியார் மயத்திற்கு பின் - 2000 ஆண்டுக்கு பின் எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள்.  இன்னும் பல கம்பெனிகள் உள்ளே நுழைவதற்கு தயாராக இருக்கின்றன.
        2) நாட்டில் நிலவும் பணவீக்கம் - மக்களிடம் பணம் இல்லை - மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது என்பதும் மிக முக்கிய காரணம். அதனால் புதிதாக காப்பீடு செய்வதற்கு மறுப்பது மட்டுமல்ல, ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பாலிசிக்கு தொடர்ந்து கட்டவேண்டிய பிரிமியத்தை கட்டுவதற்கும் தயங்குகிறார்கள்.  
         3) உலகிலேயே வேறு எங்குமில்லாத - கடந்த 55 ஆண்டுகளாக மக்களிடம் பிரசித்திபெற்ற 50க்கும் மேற்பட்ட அற்புதமான திட்டங்களை திரும்பப்பெற்று, தனியாரை வாழவைக்கும் முட்டாள்தனமான செயல்.(இது யாருடைய வில்லங்கமோ...?)
      4) திரும்பப்பெறப்பட்ட அத்தனை திட்டங்களுக்கும் இணையான திட்டங்கள் இன்றில்லாதது மட்டுமல்ல, பத்துக்கும் குறைவான திட்டங்களே எல்.ஐ.சியின் கைவசம் உள்ளது என்பது மிகப்பெரிய குறை. 
       5) புதிதாக அறிமுகம் செய்த திட்டங்களும் மக்களை கவருவது போலில்லை என்பது மட்டுமல்ல, பிரிமிய தொகையும் முன்பை விட அதிகம். இதில் சேவை வரி வேறு கூடுதலாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் பாலிசிதாரர்கள் கட்டவேண்டிய தொகை என்பது முன்பை விட அதிகம். தொகையை கேட்டவுடன் பாலிசி எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் ஓடிப்போய்விடுகிறார்கள்.     
             இவைகளெல்லாமே தனியார் கம்பெனிகளை ஊக்குவிக்க எல்.ஐ.சிக்கு எதிராக மத்திய அரசு செய்த வில்லத்தனமான செயல் என்பதை மக்களும் முகவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். மேலே சொல்லப்பட்டவைகள் தான் முகவர்களின் புதுவணிகம் பாதிக்கப்பட்டதற்கும், தொடர் வருமானம் பாதிக்கப்பட்டதற்குமான காரணங்கள். புதிதாகவும் மக்கள் காப்பீடு செய்வதுமில்லை, ஏற்கனவே வைத்திருக்கும் பாலிசிகளுக்கும் பிரியத்தொகையும் கட்டுவதில்லை. அதனால் முகவர்களின் வருமானம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது என்பதை நான் நேரிடையாக பார்கிறேன். அதனால் பல முகவர்கள் மனநிலையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். 
        பல முகவர்கள் ஏமாற்றத்தின் காரணமாக இந்த முகவர் தொழிலையே விட்டுவிட்டு வேறு தொழிலை பார்க்க சென்றுவிட்டார்கள். சில பேர் இந்த தொழிலை விட்டு செல்ல மனசில்லாமல், இதையும் செய்கிறார்கள். கூடுதலாக வேறு தொழிலையும் செய்கிறார்கள். பல எல்.ஐ.சி முகவர்கள் ஓட்டல்களிலும், மளிகைக்கடைகளிலும் வேலை செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுகிறார்கள். இரவு நேர செக்யூரிட்டியாகவும் கூட வேலை செய்கிறார்கள் என்பது கொடுமையான உண்மை.  
         இப்படியாக மத்திய அரசின் தேச விரோத கொள்கைகளின் காரணமாக எல்.ஐ.சி தன்னுடைய முகவர்களை இழந்து, புது வணிகம் பெறுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. எல்.ஐ.சியின் வளர்ச்சிக்கு காரணமாய் இருக்கும் முகவர்களை பாதுகாப்பது என்பது எல்.ஐ.சியின் தலையாய கடமை. முகவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும்  உறுதி செய்வதன் மூலம் தான் முகவர்களை எல்.ஐ.சியால் தக்கவைக்க முடியும். முகவர்களை காப்பாற்றுவதன் மூலம் தான் எல்.ஐ.சி-யை காப்பாற்று முடியும் என்பதை உணர்ந்து செயலபடவேண்டும்.

அத்வானியின் எச்சரிக்கை விளையாட்டல்ல...!


               மீண்டும் நாட்டில் அவசரநிலை வரலாம் என்று பத்திரிக்கை ஒன்றின் நேர்காணலில் பிரதமர் கனவில் இருந்தவரும், பாரதீய ஜனதாக்கட்சியின் மூத்தத்தலைவர்களில் ஒருவருமான எல்.கே.அத்வானி கூறியிருப்பது என்பது இந்த தேசத்து ஜனநாயகத்திற்கு எதிராக அடிக்கப்பட்ட ''அபாய மணி'' என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் இந்திராகாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையால் பாதிக்கப்பட்டு பத்தொன்பது மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அத்வானி, இப்போது மீண்டும் அதே அவசரநிலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருப்பது என்பது விளையாட்டல்ல. அதை ஒரு அபாய அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
               நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை பெற்று, எதிர்கட்சிகள் எண்ணிக்கையில் நலியுற்று இருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்.-இன்  செயல் திட்டங்களை நிறைவேற்ற மோடி தன்னுடைய ராட்சச பலத்தை பயன்படுத்துவார் என்று மோடி பிரதமர் பதவி ஏற்ற பிறகு இடதுசாரிக்கட்சிகளால் சொல்லப்பட்டு வந்தது உண்மையாகி வருகிறது என்றே தோன்றுகிறது.
               அத்வானி பாரதீய ஜனதாக்கட்சிக்குள்ளேயே புறக்கணிக்கப்படுவதால் விரக்தியில் இப்படியெல்லாம் பேசுகிறார் என்றெல்லாம் அக்கட்சியினரால் சொல்லப்பட்டாலும், அவர் விளையாட்டாய் சொன்னதல்ல... அவர் கூற்றில் பொருள் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். பிரதமர் மோடியின் செயல் திட்டங்கள் அனைத்தும், அத்வானி சொன்னது போல அவசரநிலையை - சர்வாதிகாரத்தை நோக்கியே செல்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. 

செவ்வாய், 16 ஜூன், 2015

மோடி கவலைப்படும் அந்த ஏழைகள் யார்...?


                முன்பெல்லாம் சமையல் எரிவாயு சிலிண்டரை தொலைபேசி அல்லது செல்லிடபேசி மூலம் பதிவு செய்தால், எரிவாயுக்கான மானியத்தை பெறுவதற்கு உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள் என்று ஒரு வேண்டுகோள் அறிவிப்பை  கேட்டப்  பின்பு தான் பதிவு செய்யமுடியும். அப்படியாக ஆதார் எண்ணை அளித்தும் மக்களுக்கு மானியம் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. அதற்குள் இப்போது செல்லிடபேசியில் எரிவாயுவை பதிவு செய்யும் போது  வேறொரு அறிவிப்புவருகிறது. ''உங்களுடைய எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகளின் வீட்டில் அடுப்பெரிய செய்யுங்கள்'' என்ற அறிவிப்பு எல்லோருக்கும் வந்தவண்ணம் இருக்கிறது. ரேடியோவிலும் இதுபோன்ற அறிவிப்பு விளம்பரமாக வருகிறது. பெட்ரோல் பங்க்குக்கு சென்றால் அங்கேயும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். இவைகள் எல்லாமே  மோடி தலைமையிலான மத்திய அரசு செய்யும் விளம்பரங்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
           மக்களுக்கு நியாயமாக கொடுக்கவேண்டிய இப்படிப்பட்ட மானியங்களை எல்லாம் பிடுங்கி எந்த ''ஏழைகளுக்கு'' கொடுக்கப் போகிறார்கள்.  உண்மையிலேயே நரேந்திர மோடிக்கு ஏழைகள் மீது அக்கறையிருந்தால், கிராமப்புற 100 நாள் வெலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியை குறைக்காமல்  அதிக  நிதிகளை ஒதுக்கி அவர் சொல்லும் அந்த ஏழை மக்களுக்கு நல்ல வருமானத்தை உண்டாக்கியிருக்கலாமே...?
           ரேஷன் கடைகளில் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை குறைந்த விலைக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்திருக்கலாமே...? 
         கல்வி ஏழைகளுக்கும் எட்டும் வகையில் கல்விக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் அளவை குறைக்காமல் அதிகமான அளவில் நிதி ஒதுக்கியிருக்கலாமே...?
         அதுமட்டுமல்ல.... சுகாதாரம், மருத்துவம், பெண்கள், குழந்தைகள், ஊட்டச்சத்து, சத்துணவு போன்றவற்றிற்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த நிதிகளையும் மேலும் குறைக்காமல் முன்பைவிட அதிகமாக ஒதுக்கியிருக்கலாமே...? 
         ஏழை மக்களின் மீது அக்கறையுடன் பேசுகிற பிரதமர் மோடி மேற்கண்டவற்றை எல்லாம்  செய்துவிட்டு, ஏழை மக்களுக்கு இன்னும் செய்யத் துடிக்கிறேன் அதற்கு இன்னும் நிதித் தேவைப்படுகிறது என்று வேண்டுகோள் விடுத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல், மேலே சொன்ன அத்துணை திட்டங்களும் ஏழைகளுக்கு கிடைக்கா வண்ணம் நிதிகளை வெட்டிவிட்டு, அவர்களின் மீது மேலும் மேலும்  வரிச் சுமையை ஏற்றிவிட்டு, இப்போது என்னவோ பொதுமக்களிடம் ''உங்கள் எரிவாயுவிற்கான மானியத்தை விட்டுக்கொடுங்கள்.... ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவி செய்யுங்கள்'' என்றெல்லாம் சொல்லி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். இந்த மானியத்தை இவராக வெட்டினால் மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என்பதால், நீங்களாகவே விட்டுக்கொடுங்கள் என்று கெஞ்சுகிறார். இவருடைய கெஞ்சலுக்கு மக்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால், ஒரு கட்டத்தில் மோடியே சாதாரண மக்களுக்கான மானியத்தை வெட்டி எரிந்துவிடுவார் யாரும் மறந்துவிடக்கூடாது. 
          எதற்காக இவ்வளவு கெஞ்சலும், கொஞ்சலும்...? எந்த ஏழைகளுக்காக இவ்வளவு முயற்சி செய்கிறார். மேலே சொன்ன திட்டங்களுக்கான நிதிகளை குறைத்ததென்பதும், சாதாரண மக்கள் மீது அதிகமான வரிச்சுமைகளை ஏற்றிவிட்டதென்பதும், இது போன்ற மானியங்களை வெட்டுவதென்பதும்  மோடியின் முதுகில் சவாரி செய்யும் ''ஏழைகளுக்காகத்'' தான். அந்த ஏழைகள் வேறு யாரும் அல்ல... அம்பானி சகோதர்களும், அதானியும், பிர்லாவும், டாட்டாவும், மல்லையாவும் உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். மோடி இன்னும் என்னவெல்லாம் இந்த ''ஏழைகளுக்கு'' செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.