வியாழன், 24 டிசம்பர், 2015

மக்கள் தான் நமது உயிர்...!







 தோழர். பிரகாஷ் காரத்                                          
 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்          
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                       

          
     
              கொல்கத்தாவில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கட்சி அமைப்பு குறித்த சிறப்பு மாநாட்டை (ஸ்தாபன பிளீனம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திட உள்ளது. தேசத்தில் நிகழ்ந்து வரும் வலதுசாரி சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சியை எவ்வாறு வலிமை மிக்க அமைப்பாக மாற்றுவது என்பது குறித்து விவாதிப்பது தான் இந்த சிறப்பு மாநாட்டின் நோக்கம். நவீன தாராளமயமாக்கல் மற்றும் வகுப்புவாதம், எதேச்சதிகாரம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலதுசாரி சக்திகளின் தாக்குதல்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல், நடைமுறை உத்தி அழைப்பு விடுத்தது. இத்தகைய சக்திகளை எதிர்த்து வலுவுடன் போராட கட்சி அமைப்பை வலிமை மிக்கதாக கட்டமைப்பது அவசியமாகும்.
              கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியானது, இடது மற்றும் ஜனநாயக முன்னணியை உருவாக்கும் கடமையை முன்னிறுத்தியது. கட்சியின் சுயேட்சையான வலிமையை பெருமளவில் அதிகப்படுத்துவது இதற்கு அவசியமாகிறது. கட்சி அமைப்பை ஆற்றல் மிக்கதாக உருவாக்கினால்தான் வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டத்தை முனைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பின்னடைவுகளை சந்தித்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அதன் வெகுஜன செல்வாக்கு குறைந்துள்ள நிலையில் கட்சியின் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுமக்கள் அடித்தளத்துடன் வலிமைமிக்கதாக கட்டமைப்பது எப்படி என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது. ‘மாஸ் லைன்‘ (வெகு மக்களுடன் நெருக்கமான தொடர்பு) என்பதை நிறைவேற்றுவதற்கு வெகு மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு மற்றும் வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை வளர்த்தெடுப்பது அவசியமான ஒன்றாகும்.

‘மாஸ்லைன்’                        

                 ‘மாஸ்லைன்’ என்ற கோட்பாட்டை நிறைவேற்ற கட்சியின் அடி முதல் நுனி வரை செயல்படும் விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. மக்களிடம் செல்வது, மக்களிடமிருந்து கற்றுத் தேர்வது, அந்த அனுபவ திரட்சியுடன் மீண்டும் மக்களிடம் செல்வது என்பதை போதனையாக கொண்டு பணியாற்றுகிற விதத்தில் பெருமளவு மாற்றம் தேவைப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் சலிப்பூட்டுகிற, மாற்றம் இல்லாத, ஒரே மாதிரியான வேலை முறை மற்றும் பழக்கமாக மாறிவிட்ட பணிமுறை என்பதை விட்டொழிப்பது என்பதாகும். நவீன தாராளமயமாக்கல் கொள்கை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் பல்வேறு வர்க்கப் பிரிவுகளின் சமூகப் பொருளாதார நிலையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப புதிய முழக்கங்களும் நடைமுறை உத்திகளும், அமைப்பின் போராட்ட வடிவங்களும் உருவாக்கப்பட்டு வர்க்க, வெகுஜன இயக்கங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கட்சியின் சிறப்பு மாநாடு இது குறித்து விவாதிக்கும்.

மிகப் பெரிய இடதுசாரிக் கட்சி                   

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியாகும். 10லட்சத்து 48 ஆயிரம் பேர் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். அடிப்படை அலகுகளாக 90 ஆயிரம் கிளைகள், 285 மாவட்டக் குழுக்கள், 23 மாநிலக் குழுக்கள் மற்றும் மூன்று மாநில அமைப்புக் குழுக்கள் என கட்சி விரிந்து பரந்து காலூன்றி உள்ளது. 10ஆயிரத்து 350 பேர் கட்சியின் முழுநேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இது கட்சியின் அமைப்பு ரீதியான சொத்தாகும். அமைப்பின் வலிமை மற்றும் பலவீனங்களை சிறப்பு மாநாடு ஆய்வு செய்து, கட்சி அமைப்பை மேலும் சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை தீர்மானிக்கும். குறிப்பாக, கட்சி உறுப்பினர்களின் தரம் மற்றும் அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் - தத்துவார்த்த நிலையை உயர்த்துவது மட்டுமின்றி, கட்சியின் புரட்சிகர குணத்தை நிலைநிறுத்தவும் வேண்டியுள்ளது. இதற்கு அடிப்படை வர்க்கங்களிலிருந்தும், பெண்கள் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்தும் ஊழியர்களை உருவாக்கி கட்சி அமைப்புகளுக்கு உயர்த்த வேண்டியுள்ளது. கட்சிக்குள் இளைஞர்களை ஈர்க்கும் பணிக்கு சிறப்பு மாநாடு தனித்த கவனம் செலுத்துவதோடு கட்சி உறுப்பினர்களில் இளைஞர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளது.

லெனினியக் கோட்பாடே வழிகாட்டி                   

        மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது லெனினிய கோட்பாட்டு அடிப்படையிலான ஸ்தாபன விதிகளின்படி செயல்படுவதாகும். அதாவது ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு மையமானதாக இருக்கும். ஜனநாயக மத்தியத்துவம் என்பது மத்தியத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கலவையாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படும். இப்போது உள்ள ஸ்தாபன முறையில் தேவைப்படுவது என்னவென்றால், உள்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயக மத்தியத்துவத்தை முறையாக செயல்பட வைப்பதாகும். ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்குள் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சிறப்பு மாநாடு விவாதித்து, திரிபுகளை சீர்செய்யவும் ஜனநாயக மத்தியத்துவம் மீறப்படுவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கும்.

தத்துவார்த்தப் போராட்டம்                    

        கட்சியின் ஸ்தாபனப் பணியில் தத்துவார்த்த போராட்டம் என்பது முக்கியமான பகுதியாகும். மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகளை அடிப்படையாக  கொண்ட கட்சி என்ற முறையில், நம்முடைய சமூகத்தில் நீடித்திருக்கும் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்திற்கு முந்தைய சித்தாந்தங்களின் தாக்கங்களை எதிர்த்து அயர்வற்ற போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மற்றும் நவீன தாராளமயமாக்கல் நம்முன் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. 1990களில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட பின்னணியில் இத்தகைய போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. நவீன தாராளமயமாக்கல் மதிப்பீடுகள் சமூகத்தில் மேலோங்கியுள்ள நிலையில், பெரும் கார்ப்பரேட் ஊடகங்கள் இதை மேலும் பரவலாக்குகின்றன. எனவே கட்சி தனது ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக மேலும் வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. கட்சிக்குள் தத்துவார்த்த ரீதியிலான பணிகளை மேற்கொள்ள கட்சிக் கல்விமுறையை மேம்படுத்தி புத்துயிரூட்ட வேண்டியுள்ளது. தத்துவார்த்த, சமூக கல்வி மற்றும் பண்பாட்டுத்தளத்தில் வகுப்புவாதத்தை எதிர்த்துப் போராட திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் சிறப்பு மாநாடு விவாதிக்க உள்ளது. வகுப்புவாத சித்தாந்தத்தை எதிர்த்து முறியடிக்கவும் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கவும் கட்சியும், தொழிற்சங்கங்களும், வெகுஜன அமைப்புகளும், சமூக மற்றும் பண்பாட்டு துறைசார் நடவடிக்கைகளை உருவாக்க வேண்டியுள்ளது.

நகர்ப்புற ஏழைகளை நோக்கி...                   

                சிறப்பு மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள மற்றொரு முக்கியமான பகுதி வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் சுயேட்சையாகவும், ஜனநாயக ரீதியிலும் இயங்குவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவது ஆகும். வெகுஜன அமைப்புகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் ரீதியிலான பணிகளை மேற்கொள்வது என்பது, அந்த அமைப்புகளுக்குள் அணிதிரளும் மக்களை அரசியல்படுத்துவது என்பதாகும். சமூகப் பிரச்சனைகளை கையில் எடுப்பதிலும் சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு எதிராக போராடுவதிலும் கட்சி முனைப்பாக பங்காற்ற வேண்டும். பழங்குடியின மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பணியாற்றத்தக்க வகையில் அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் குறிப்பாக, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் பணியாற்ற புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியதிலும், உழைக்கும் மக்களுக்கான அமைப்புகளை கட்டமைத்ததிலும் கம்யூனிஸ்டுகளுக்கு பெருமைமிகு பாரம்பரிய வரலாறு உண்டு. மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததற்காக பல்வேறு காலகட்டங்களில் கொடூரமான அடக்குமுறைகளை கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டுள்ளனர். ஆயினும், நவீன தாராளமயமாக்கலுக்கு எதிராகவும் வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டுவது என்பது தடைபடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கொண்ட மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டவாறு மக்களுடன் ஜீவிதமான தொடர்பை பேணிக்கொண்டு அவர்களுக்காக கட்சி போராடி வருகிறது. 
         ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் கொல்கத்தா சிறப்பு மாநாடு ஒரு மைல்கல்லாக திகழும். வலிமை மிகுந்த, நாடு தழுவிய வெகுஜன அடித்தளத்துடன் அகில இந்திய அளவில் ஆற்றல் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான தெளிவான திசை வழியை கொல்கத்தா சிறப்பு மாநாடு வகுத்துத்தரும்.

தமிழில்: மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி :
தீக்கதிர் 

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தமிழக மக்களின் கோபத்தை நீர்க்கச் செய்துவிடாதீர்கள்...!


           கடந்த ஐம்பது ஆண்டு காலமாக  திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்து தமிழ்நாட்டையே சீரழித்துவிட்டதை உணர்ந்துகொண்ட தமிழக மக்களின் கோபத்தை, தாங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த இரு கழகங்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்ட தமிழக மக்களின் அதிருப்தியை வழக்கம்போல் திசைத்திருப்பும் வேலைகளில் ஊடகக்காரர்களோடு சேர்ந்து ஒரு கூட்டம் இறங்கியுள்ளது.  தமிழகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று கடந்த சில தினங்களாக முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இன்று மதுரையில் அவரை முன்னிறுத்தி ஒரு பேரணிக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவிற்கு எதிராக திரும்பிவிட்ட ஆனந்தவிகடன் போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்குகின்றன. 
             ஆனால் எல்லாவற்றையும் இழந்து தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழகத்தை மறுமலர்ச்சி அடையச்செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில் இதுபோன்ற திசைத்திருப்பலும், குழப்பமும் தேவை தானா என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். 
          சகாயம் என்பவர் ஒரு நேர்மையான அரசு அதிகாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ''இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து'' என்ற முழக்கத்துடன், ஊழலாலும், இலஞ்சத்தாலும்  புரையோடிப்போன தமிழக அரசில் பணிபுரியும் ஓர் அரசு உயர்அதிகாரி என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. தமிழகத்தில் இலஞ்சமே இல்லாமல் அரசுப்பணியாற்றும் ஊழியரைப் பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அப்படி அதிசயக்கத்தக்கவராக திரு.சகாயம் தெரிவதில் ஆச்சரியமும் இல்லை. ஆனால்  அவரைப்போன்றே  நேர்மையாக பணிசெய்யும்  அரசு அதிகாரிகள்  தமிழகத்தில் நிறைய இருக்கிறார்கள். இதுபோன்று நேர்மையாக பணிசெய்யும் அரசு அதிகாரிகளை தொடர்ந்து  பணிசெய்ய அனுமதியுங்கள். 
                   நாட்டுக்கு நேர்மையான ஆட்சியாளர்கள் தேவை என்று நீங்கள் எப்படி கவலைப்படுகிறீர்களோ...அதேப்போல் அந்த ஆட்சியாளர்களை வழிநடத்த நேர்மையான அதிகாரிகளும் தேவை என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.  ஆட்சி என்பது இரட்டை மாட்டு வண்டி போலவாகும். வண்டி தடம் மாறாமல் நேர்வழியில் செல்லவேண்டுமென்றால் இரண்டு மாடுகளும் சரியாக செல்லவேண்டும். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அந்த இரண்டு மாடுகள் போன்றவர்கள். 
               தவிர தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அப்படியிருக்க நீங்கள் சொல்வது திரு.சகாயம் எதாவது  ஒரு தொகுதியில் மட்டும் தான் நிற்க முடியும்.  இவரோடு சேர்ந்து வெற்றிபெறும் மற்ற மந்திரிகளோ அல்லது எம்எல்ஏக்களோ இவரைப்போன்று நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியே.
         அதுமட்டுமல்லாது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக - அதிமுகவின் தனிமனித துதியால் தான் தமிழ்நாடு சீரழிந்து நாறிப்போனது. மீண்டும் கண்மூடித்தனமான அதே துதியை சகாயம் விஷயத்திலும் பாடாதீர்கள். 
            மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களைப் போல் கூட்டணி ஆட்சியால் தான் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கமுடியும். நேர்மையான, எளிமையான, மக்களுக்கான நிர்வாகத்தை அளிக்கமுடியும். அந்த மாநிலங்களை ஆட்சி செய்த இடதுசாரி கட்சிகள் மீது சொத்து குவிப்பு வழக்கோ, ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
           இப்படித்தான் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன்பு, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதீய ஜனதக்கட்சிகளுக்கு எதிராக மக்கள் திரும்பிய போது, ஊடகங்களும், கார்ப்போரேட் கம்பெனிகளும் அன்னா ஹசாரே என்ற ''யோக்கியவானை'' காட்டி மக்களை குழப்பி - திசைத்திருப்பி கடைசியில் ஊழல் மற்றும் மதவாதக் கட்சியான பிஜேபிக்கு வாக்களிக்கச்செய்தனர். அதே செயலைத்தான் இப்போதும் ஊடகங்களும், ஒரு சில என்.ஜி.ஓ-க்களும் சேர்ந்து தற்போது தெளிவான  சிந்தனையில் இருக்கக்கூடிய தமிழக மக்களை திரு.சகாயம் அவர்களைக் காட்டி குழப்புகிறார்கள். தெளிந்த குட்டையை குழப்பி மீன்பிடிக்கப் பார்க்கிறார்கள். 
        அவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம், திமுக., அதிமுக கட்சிகள் மீதான மக்களின் கோபத்தை - அதிருப்தியை தவறாக திசைத்திருப்பி நீர்க்கச்செய்துவிடாதீர்கள். அப்படி செய்தால் அந்த இரு கட்சிகளுக்கே மீண்டும் சாதகமாக முடிந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்பது தான்.  

வியாழன், 17 டிசம்பர், 2015

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூடநம்பிக்கையே...!


            ''இந்தியாவின் வளர்ச்சிக்கு தடை போடுவது மூடநம்பிக்கையே'' என்கிறார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

#
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன.

#
இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபடவேண்டும் அல்லது குறையப்பட வேண்டும்.

# இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும்  பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும்.

#
மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
#
ஆனால் இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப்போது, அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நல்ல நேரம் பார்த்து செவ்வாய்க்கிழமை அன்று ஏவினார்கள். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகளில் காணமுடியாதது.

#
மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தியாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்?

#
2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது.

#
ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக்கையும் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர்வினையால் தான் உண்மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் அவர்.

நன்றி : விடுதலை

புதன், 16 டிசம்பர், 2015

எழுதித் தீராத வாதை - தமிழகத்தின் அவலநிலை...!


 கட்டுரை ஆக்கம் : தோழர். த. ஜீவலட்சுமி                                                                  


                   வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கூரையற்ற வீட்டில் உடல் முழுவதும் கொப்புளங்களோடு அசைவற்றுக் கிடந்த இரண்டு மாதக் குழந்தையின்  முகம் மனதில் ஏற்படுத்தும் வாதை எழுதித் தீராது தான். தமிழக அரசின் அலட்சிய வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் இப்பேரழிவையும் அவலத்தையும் பார்த்தும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவிற்கும், ஒரு பாட்டில் தண்ணீருக்கும் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட சகமனிதர்களை, சிறுநீர் கழிக்க மறைவிடமின்றித் தவிக்கும் சகப்  பெண்களை சந்தித்தும் வருவதில் ஏற்பட்டிருக்கும் உள்ளக் குமுறலைக்   கொட்டித்தீர்க்க முடியாதது. பேரழிவைச் சந்தித்திருக்கும் சென்னை நகரின் நடுவே, கண்டுபிடிக்க இயலா நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நடுவே, மழை நின்று ஆறு நாட்களுக்குப்பின்னும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த குடிசைகள் நினைவில் ஆடுகின்றன. இப்பருவத்தின் முதல் மழையை எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாகத்தான் சென்னைவாசிகளும் வரவேற்றோம் என்றாலும் நவம்பர் முதல்வாரத்திலேயே இது வழக்கமாகப் பெய்யும் பருவமழையில்லையென உணர முடிந்தது.சென்னையிலும் கடலூரிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அம்மழை. அப்போதே அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும் .
              ஆனால் அரசின் செயல்பாடு மிகுந்த மெத்தனத்தோடு இருந்தது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய இரு நாட்கள் பெய்த மழை மனதில் ஏற்படுத்திய அச்சம் விவரிக்க இயலாதது. அம்மழையின் வேகமும் அடர்த்தியும் அழிவின் சமிக்ஞை போல் இருந்தது . அவ்வுணர்வு மழையால் விளைந்ததல்ல. கடந்த மழையில் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளம், உயிரிழப்பு, அதை அரசு எதிர்கொண்ட அலட்சியமான விதம் இவற்றால் விளைந்தது.வெள்ளம் பற்றி மக்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுக்காத நிலையில் ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியமே முழுமுதற் காரணம். மழை கண்டு மகிழ்ந்து மாமழை போற்றிய தமிழக மக்களை மழை கண்டு அச்சங்கொள்ளச் செய்தது தான் இத்தனை ஆண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி செய்த சாதனை. தூர்வாரப்படாத நீர்நிலைகள், மணற்கொள்ளை, நீர் மேலாண்மையில் நிர்வாகத் துறையின் பின்தங்கிய நிலை, முறையான திட்டமிடல் இன்றி விஸ்தரிக்கப்பட்ட நகரம் என வெள்ளத்திற்கான காரணங்கள் ஆயிரம் என்றாலும், எல்லாம் தம் ஆணைக்கிணங்க நடக்க வேண்டுமென்ற தமிழக முதல்வரின் ஆணவப்போக்கே இந்த அழிவிற்கு பிரதான காரணம். அதனால் தான் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை படிப்படியாக மழை குறைந்த நவம்பர் இரண்டாம் வாரத்தில் திறந்து விட பொதுப்பணித்துறை கொடுத்த ஆலோசனை கிடப்பில் கிடத்தப்பட்டு பேரழிவிற்கு இட்டுச்சென்றுள்ளது.
            மக்கள் அச்சங்கொண்டது போலவே நவம்பர் 30 ல் மழைபெய்த சில மணிநேரத்திலேயே வெள்ளமும் இருளும் நகரைச் சூழ்ந்தது . சில மணிநேரத்தில் வீட்டிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்த வெள்ளத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிதுடித்து இருளிலும் நீரிலும் இரண்டு நாட்கள் போராடி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் நின்றனர்.அசோக் நகர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வந்த உடலைத் தேடி உறவினர்கள் வரக்கூடும் என மரத்தில் கட்டி வைத்து விட்டு வந்ததாக ஒரு நண்பர் சொன்னார். சென்னை மேற்கு நமசிவாயபுரம் பகுதியில் வெள்ளம் அடித்துப் போன ஒருவரின் உடல் நாகப்பட்டினத்தில் கிடைத்ததாக நிவாரணப் பணியின் போது இறந்தவரின் உறவினர்கள் கூறினார்கள் . இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அரசு சொல்லும் உயிரிழப்பு எண்ணிக்கை முழுமையானதல்ல என்பதையும் உணர முடிகிறது.புகைப்படத்தோடு வீதியில் உறவினர்களைத் தேடி அலையும் மக்கள், பசியிலும் குளிரிலும் வாடிய குழந்தைகள், அடையாளம் காணப்படாமல் மருத்துவமனைகளில் கிடக்கும் பிணங்கள் என சென்னை கடந்த இரு வாரங்களாக துயரத்தின் உருவமாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே முகாம்கள், உணவுப் பொட்டலங்கள்.
         விரையும் வாகனங்கள், சூழும் மக்கள். இந்த சூழலில் பணியாற்றவும் மக்களின் தேவைகளை உணரவும் மக்களுக்கான தத்துவப் பின்னணி கொண்டவர்களாலேயே இயலும். ஆம், இங்கு கொடுப்பது பெருமைக்குரியதாகவோ பெற்றுக் கொள்வது மகிழ்ச்சிகரமானதாகவோ இருக்கவில்லை .மழையில் உயிரைப் பணயம் வைத்து பிறரைக் காப்பாற்றியவர்கள், இரவு பகலாக முகம் பாரா மனிதர்களுக்கு உணவு சமைத்தவர்கள், அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தவர்கள், பெரிய அளவில் இல்லையென்றாலும் பத்து பிஸ்கட் பாக்கெட்டுகளை வழியில் அமர்ந்து இருக்கும் மனிதர்களுக்கு கொடுத்துப் போனவர்கள் என சென்னை மக்கள் தாமே அரசாங்கமாக செயல்படத்தொடங்கினார்கள்.ஆளுங்கட்சி டிசம்பர் ஐந்து வரை நிவாரணக் களத்தில் இல்லை. ஆறாம் தேதி சாப்பாட்டுப் பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரணப் பணிகளைத் துவக்கினர்.திமுகவினரோ தாங்கள் குறி வைத்திருக்கிற, அரசியல் ரீதியாகப் பலனளிக்கும் என நம்பிக்கையுடைய மிகச் சில இடங்களிலேயே நிவாரணப் பணி செய்தனர்.
           இடதுசாரிக்கட்சிகளின் வெகுஜன அமைப்புகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பணிகளை இன்று வரை முனைப்போடு செய்து வருகின்றனர். முகாம்களில் இருந்து வீடு நோக்கிப் போகும் எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டாலும் கூரையில்லாத, சுவரில்லாத சேறும் சாக்கடையும் நிரம்பிய வீட்டைப் பகல் முழுவதும் சுத்தம் செய்ய முயன்று சோர்ந்து, இரவு முகாமுக்குத் திரும்பும் நிலை தான் நீடிக்கிறது. ‘சென்னை இயல்புக்கு திரும்பியது’ என்று கூறுவதெல்லாம், ‘வெள்ளத்தை’ ராட்சத மோட்டார் கொண்டு இறைத்து வேலையாட்களை அமர்த்தி வீட்டை சரி செய்யும் திராணி கொண்ட மேல்தட்டு வர்க்கத்தின் கூற்றே.“நம்ம வீடுகளில் கூட அதெல்லாம் இருக்காது; அவங்க டிவி, பிரிட்ஜ் எல்லாம் அந்தக் குடிசைக்குள்ள வச்சிருக்காங்க” என மக்களை வேடிக்கை பார்த்தபடி ஒருவர் சொன்னார். நிவாரணப் பணியின் போது ஒரு பெண் சொன்னார், “ஒரு வருசம் சீட்டு கட்டி வாங்குன பிரிட்ஜ்ம்மா, எட்டு வருசமா ஆசப்பட்டு இப்பதான் வீட்டு வேலைக்குப் போன காச சேத்தி வாங்கினேன்“ என்றார்.நடுத்தர வர்க்கக் குடும்பங்களே தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே பொருள் வாங்கும் நிலை கொண்ட நம் சமூகத்தில் இம்மக்களின் இழப்பை எப்படி ஈடு செய்வது?எல்லாம் போன நிலையில் எங்கிருந்து தொடங்குவது என்ற கேள்வியை அவர்கள் எப்படி எதிர் கொள்வது? இக்கேள்வி தரும் அழுத்தம் அம்மக்களின் மனங்களை அழுத்திக் கொண்டிருப்பதை எப்படி சரி செய்வது? குடிசைப் பகுதிகளில் பார்க்குமிடங்களிலெல்லாம் பெண்கள், வீட்டில் புகுந்திட்ட சாக்கடைச் சேற்றையும் அழுக்கையும் கழுவியே ஓய்கிறார்கள். அன்றாடம் சுரண்டலை சந்தித்த பெண்களின் உழைப்பை இவ்வெள்ள பாதிப்பும் சுரண்டுகிறது.வேறென்ன செய்வதென்பதறியா நிலையில் அவர்கள் துணி துவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதில் அவர்கள் தம் மனஅழுத்தத்தை துவைப்பது போல் இருக்கிறது.சாதி, மதம் கடந்து சோறு போட களத்தில் நின்றவர்கள் கூட அவர்களோடு வீடுகளை, வீதிகளை சுத்தம் செய்யவில்லை. மீண்டும் அதே ஒடுக்கப்பட்ட வர்க்கமே பாதுகாப்பற்ற இவ்வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.இவையெல்லாம் இயல்பென வழக்கம் போல் கடந்து போய்க் கொண்டிருக்கிறது சமூகம்.போதாக்குறைக்கு ‘இதுதான் சரியான சமயமென்று ஆற்றோர குடிசைகளை அரசு அகற்றி விட வேண்டும்‘ என்ற விசமத்தனமான கோரிக்கையை ஒரு கூட்டம் முன் வைக்கிறது . அப்படி சென்னை நகரிலிருந்து தூக்கியெறியப்பட்ட செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதி மக்கள் வெள்ளத்தால் அடைந்த பாதிப்புகள் அளவிட முடியாதது. ஆற்றோரத்தில் இருக்கும் மக்களை வீடு கொடுக்கிறோம் என பள்ளத்தாக்கில் தள்ளும் வேலையைத் தான் அரசுகள் செய்திருக்கின்றன என்பதை இவர்கள் உணராதவர்கள் அல்ல. சென்னை குடிசைகளுக்கானதல்ல என்ற அவர்களின் முதலாளித்துவக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பு அது.சூர்யா நகர் பகுதியை சேர்ந்த வீட்டு வேலை செய்யும் தோழி, வீட்டுப் பொருட்கள் முழுவதும் இழந்த நிலையில், தனக்கு உதவ முன் வந்த வேலை கொடுக்கும் வீட்டாரை தன் பகுதிக்கு அழைத்து வந்து தன்னை விட பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவுமாறு வேண்டினார். அவர்கள் அப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று உதவ முன் வந்திருக்கின்றனர். இதுதான் உழைக்கும் வர்க்கத்தின் மனநிலை. இப்படி மக்கள் நமக்கு நாமே என உதவி செய்து வருகின்றனர். நிவாரணப் பணி சற்றே ஓய்ந்து பல பகுதிகளில் மாணவர்கள்,இளைஞர்களால் தூய்மைப்பணி தொடங்கிவிட்டது.பள்ளிகளில் இருக்கும் மக்கள் தம் இருப்பிடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் . இனி அவர்கள் முதலில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கான மூலதனம் ஏதும் அவர்களிடம் இல்லை. கணக்கெடுப்பு முடிந்து வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் வரை நாங்கள் வாழ்வதெப்படி என்ற அம்மக்களின் கேள்விக்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?நிவாரணப் பணிகளில் செயலற்றுக் கிடந்தது போல், ஆயிரம் ஆயிரம் கோடிகளை வைத்துக்கொண்டு செயலற்று கிடக்க இந்த அரசாங்கத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.மக்கள் நலன் காக்கும் சக்திகள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணி செய்த அதே வீச்சில் அரசை இயங்கச் செய்ய வேண்டும். சொந்த நாட்டில் அகதிகளாக அல்லாடுமளவு மக்களை வஞ்சித்தவர்கள் மக்களிடம் பாடம் கற்பார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் பணி செய்வோம்! 

நன்றி : 
தீக்கதிர் 

செவ்வாய், 1 டிசம்பர், 2015

சகிப்புத்தன்மையின் அடையாளம் கம்யூனிஸ்ட்டுகளே...!


        சென்ற 29/11/2015 ஞாயிறன்று மதுரையில் நடைபெற்ற          
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்           
40ஆம் ஆண்டு  விழா மாநாட்டை துவக்கி வைத்து எழுத்தாளர்        
பிரபஞ்சன் ஆற்றிய உரையிலிருந்து சிறுபகுதி...                               

           தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமைக்கும் அடையாளமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  திகழ்கிறது. இந்தப் பிரபஞ்சனையும்   உருவாக்கியது முற்போக்கு அமைப்புகள் தான். யு.ஆர்.அனந்தமூர்த்தி, இப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்துக்கு வந்தால் நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தினம் தினம் அவருக்கு டார்ச்சர் கொடுத்தனர். அவர் மிகுந்த மனவேதனையுடன் தான் இறந்தார். அதுபோலத்தான் மதங்களை மறுத்து மனிதர்கள் பக்கம் நிற்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பன்சாரே, தபோல்கர், கல்புர்கி போன்ற அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகள் மதவெறியர்களால் நடத்தப்பட்டிருந்தாலும் காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியின் கீழேயே இது அரங்கேறியுள்ளது.
           சிவாஜியை உயர்த்தியும், திப்புசுல்தானை தாழ்த்தியும் தற்பொழுது விமர்சிக்கிறார்கள். இரண்டுமே தவறானது. சிவாஜியை தங்கள் நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தி அவரது உண்மை வரலாற்றை சிறு புத்தகமாக வெளியிட்டதற்காகத் தான் பன்சாரேவை கொலை செய்தார்கள் மதவெறியர்கள். எதிரி நாட்டு ராணி சாவித்திரி தேசாயை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதைக் கேள்விப்பட்ட சிவாஜி, தனது உயர்வுக்கு காரணமாக இருந்த  தளபதியையே  கண் இரண்டையும் தோண்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டான். ரஞ்சி பட்டேல் எனும் உயர் சாதிக்காரன் தெருவில் சென்ற பெண்ணை மானபங்கம் செய்துவிட்டதால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள் என்பதை கேள்விப்பட்ட சிவாஜி, ரஞ்சிபட்டேலின் இரு கைகளையும், இரு கால்களையும் துண்டித்து சிறையில் அடைத்தான். இத்தகைய உண்மைகளை எல்லாம் பொறுக்காமல் தான் மதவெறியர்கள் பன்சாரேவை கொலை செய்தார்கள். எல்லா காதலும் கைக்கிளையில்தான் துவங்குகிறது. ஆனால், அதை திணையிலேயே சேர்க்கவில்லை. மக்கள் மொழியில் பாடியதை இழிசனர் வழக்கு என்றனர். அது அக இலக்கியம் அல்ல. அகப்புற இலக்கியம் என்றே வகுத்துள்ளனர்.
            நதியாக இருந்த கூவம் சாக்கடையாக மாறியதைப்போல தான்  நமது சமூகம் மாறியிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்களைவிட பிரெஞ்சுக்காரர்கள் சிறந்தவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பாண்டிச்சேரியில் பொன்னுத்தம்பி என்ற வழக்கறிஞரை செருப்பும் கோட்டும் போட்டுக்கொண்டு வாதாடக்கூடாது என்று கட்டளையிட்டவர்கள் புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியாளர்கள். ஏகாதிபத்தியம் எத்தகையதானாலும் அது நல்லதாக இருந்தது இல்லை. 
       பிரான்ஸ் அறிஞர் ஜீன்பால் சர்தார் கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால், வருடம்தோறும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று தனது உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துக்கொள்வார். கம்யூனிஸ்ட் கட்சியை இவ்வளவு கடுமையான விமர்சனம் செய்யும் நீங்கள் ஏன் அதில் உறுப்பினராக நீடிக்கிறீர்கள் என்று கேட்ட போது, எனக்கு இப்படி விமர்சனத்தை முன்வைக்கக் கற்றுக்கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான். அவர்கள்தான் எத்தகைய விமர்சனத்தையும் சகித்துக்கொள்பவர்களாகவும் அதற்கு பதில் சொல்பவர்களாகவும் இருக்கின்றனர் என்றார். 
           எந்தக் காலத்திலும், எந்தத் தனிமனிதனும் அமைப்பைவிடப் பெரியவன் இல்லை. அமைப்புதான் நம்மை வழிநடத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.     

நன்றி :

புதன், 18 நவம்பர், 2015

வெள்ளம் கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்தை தோழர்.ஜி.ஆர் பார்வை...!

                மக்கள் நலப்பணியில் மார்க்சிஸ்ட்டுகள்...!            


அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து கடுமையாக பாதித்த கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியகாட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அம்மக்களுக்கு பாத்திரங்கள், அரிசி, போர்வை போன்ற நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரசு செய்யவேண்டிய இந்த பணிகளை எந்த ஒரு பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் தனியொரு அரசியல் கட்சி செய்வது என்பது பாராட்டுதற்குரியது.  













திங்கள், 16 நவம்பர், 2015

இப்படியும் ஒரு முதலமைச்சர்... அப்படியும் ஒரு முதலமைச்சர்...!

              வாராது வந்த மாமழை... எப்போது மழைக்காக ஏங்கி தவிக்கும் தமிழகம், கடந்த ஒரு வாரகாலமாக பொழிந்த மாமழையால் நீர் தேங்கி தவிக்கிறது. இயற்கைக்கு விரோதமாக குளம், குட்டை, ஏரிகளையெல்லாம் அழித்தொழித்து வீடுகளையும், மால்களையும், ரிசார்ட்டுகளையும், பஸ் ஸ்டாண்டுகளையும்  கட்டியதால், மழை நீரெல்லாம் சென்றடைய இடமின்றி, தனக்கு சொந்தமான குளம், குட்டை, ஏரிகள் இருந்த   பழைய   இடத்தை நோக்கிப் பாய்ந்ததினால் இன்று தமிழகத்தின் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்துவிட்டது. மக்கள் அல்லல்படுகிறார்கள். 
              இன்னொரு பக்கம் ஆற்றங்கரை, ஏரிக்கரைகளில் எல்லாம் ஆக்கிரமித்து, தண்ணீர் போகும் பாதைகளை அடைத்து வீடுகளை கட்டியதன் விளைவு, மழைநீர் வெள்ளமாக மாறும் போது, தான்  முன்பு ஒரு காலத்தில் சுதந்திரமாய் ஓடிய பாதைகளில் அடைத்து கட்டப்பட்ட வீடுகளில் புகுந்து அடித்து சென்றுவிட்டது. இயற்கைக்கு விரோதமாக செயல்படுபவர்களை ''ஓட்டு அரசியல்'' காரணமாக மாநில  அரசும் தடுத்து நிறுத்தாமல் கண்டுகொள்வதில்லை. 
              எனவே இந்த மாமழையினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகளும், உடமைகளும்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டன.   ஏராளமான சாலைகளும், பாலங்களும்,  சேதமடைந்திருக்கின்றன. அரசால் பராமரிப்பு   செய்யப்படாமல் கிடந்த அணைகளும், ஏரிகளும் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. இவைகளை எல்லாம் நேரிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து தமிழக மக்கள் அச்சத்தில் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவதிப்படும் மக்களை  சந்தித்து ஆறுதல் சொல்லவும், மீட்புப்பணிகளை முடுக்கிவிடவும் நேரில்வந்து களத்தில் இறங்கவேண்டிய ஒரு முதலமைச்சர் கொடநாட்டு உல்லாச பங்களாவில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து முடங்கிக்கிடக்கிறார். 
           இப்படியும் ஒரு முதலமைச்சர்... ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு...! மக்கள் தான் இந்த கோளாறுகளை எல்லாம் சரிசெய்யவேண்டும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
            இந்தியன் வங்கியில் உதவி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்ற ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் தன்னுடைய பதிவில் கல்கத்தா நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
            
          அவர் கல்கத்தாவில் இந்தியன் வங்கி கிளையில் வேலை செய்த போது, சென்னையில் இப்போது பெய்துவரும் பெரும் மழை போல் அங்கும் பெய்திருக்கிறது.  செல்வராஜ் சார் அவர்களும் தன் நண்பருடன் சாலையில் 2 அடி மழைநீரில் நடந்து இந்தியன் வங்கி கிளையை நோக்கி நடந்து சென்றுள்ளனர். அப்போது ஒரு லாரி அவர்கள் அருகில் வந்து நின்றதாம். நீங்கள் எங்கே போகவேண்டும்... சொல்லுங்கள்... அங்கே   இறக்கிவிடுகிறேன்  என்று லாரியில் இருந்தவர் சொல்லியிருக்கிறார். இவர்களோ  ''பரவாயில்லை நாங்கள் போய்விடுகிறோம்'' என்று சொல்லிக்கொண்டே  அழைத்தவர் யார் என்று பார்த்துள்ளார்கள். அவர் வேறு யாருமில்லை. மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தான். அவரைப்பார்த்ததும் இவர்களால் நம்பவே  முடியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள். முதல்வரோ இவர்களைப் பார்த்து, ''நீங்கள் சவுத் இந்தியனா...?'' -  ஆம்...  ''சரி வாருங்கள்'' என்று அழைத்து சென்றிருக்கிறார். 
          அளவுக்கு அதிகமான மழை என்பதால், முதல்வராகிய ஜோதிபாசு அவர்களே போர்க்கால நடவடிக்கை எடுத்து, லாரியில் வந்து சேதப்பகுதிகளில் அல்லல்படும் மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்துள்ளார். 
            இதை படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறதே... நேரில் பார்த்தவர்களுக்கு   எப்படியிருக்கும் என்று யோசித்துப்பார்க்கிறேன்.
             23 ஆண்டு காலம் தொடர்ந்து முதல்வராக இருந்தவர். 1996 இல் பிரதமர் பதவிக்கு வரவேண்டியவர். 2000ஆம் ஆண்டு தமது உடல்நிலையைக் காரணமாக முதல்வர்  பதவியிலிருந்து தானாக விலகியவர்.  இப்படிப்பட்ட மாமனிதர் அவ்வளவு சாதாரணமாக மக்கள் பணியில் இறங்கியது இந்த காலத்தில் நம்ப முடியாத ஒன்று. 
          அதுமட்டுமில்லாமல் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழைநீர் வடிய தொடங்கியதும் மொத்தம்  மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் உருளைக்கிழங்கு, பல்லாரி விலையை  ஏற்றாமல் இருக்க கேட்டுக்கொண்டு  கடைக் கடையாக ஏறி இறங்கினார்களாம். 
             இரயில்வே தொழிலாளர்கள் சங்கத் தலைவராக இருந்து சாமானிய மக்களிடம் பழகிய ஒரு மார்க்சிய போராளியான ஜோதிபாசு தலைமையில் இடதுசாரி  அரசு அத்தனை ஆண்டுகள் நீடிக்க காரணம், மக்கள் மீது அவர் கொண்ட அக்கறை தான் என்று திரு. ஸ்ரீராம் செல்வராஜ் அவர்கள் மெய்சிலிர்க்கக் குறிப்பிட்டுள்ளார்.   

சனி, 14 நவம்பர், 2015

மோடி அவர்களே... நீங்கள் விட்டுக்கொடுத்தால் நாங்கள் விட்டுக்கொடுப்போம்...!


LPG - சமையல் எரிவாயு மான்யம் வேண்டாமென்று              
பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா...?                   

                 கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -   “நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்ற  குரல் கேட்கும்  ( இந்தியில் தான்…!)


        ''நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் எரிவாயுக்கான மான்யத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள்'' என்றும்,  ''இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நீங்களும்  உதவலாமே''  என்றும்  நமக்கு அறிவுரை வேறு சொல்லுவார். எரிவாயு சிலிண்டரை பதிவு செய்ய நாம் அழைத்தால், மோடி நாம் அழைக்காமலேயே நமக்கு இந்த போதனைகளை சொல்லுவார். ஆனால் போன் செலவு நம்முடையது.


         சில மாதங்களுக்கு முன்பு  தான் பிரதமர் நரேந்திரமோடி இந்திய பெருமுதலாளிகள்   சம்மேளன கூட்டத்தில் பேசும்போது ''இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகி உள்ளது.  இது இந்த நாட்டின் ஏழைகளுக்கான  வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும். அதேப்போல் இன்னும் அதிகம் பேர் ''மான்யத்தை தியாகம் செய்ய'' முன் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 


                 இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக விவரித்து நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 

          “நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம் அமைந்திருக்கிறது. அந்த கடிதத்தின் தமிழ் வாசகம் கீழே...!

எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு, 

சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக்கொடுக்க
முன்வர வேண்டுமென்று, வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,என் செலவிலேயே – 
வேண்டி, விரும்பிகேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!


– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்யமுடியுமா…?


– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா…?


– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, பென்ஷன் போன்ற 
சலுகைகளை உயர்த்தி மசோதாக்கள் கொண்டு 
வரும்போது மட்டும் - அதெப்படி ஒருமித்த குரலில் 
ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி 
நிறைவேற்றிக்கொள்கிறீர்கள்…?


– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை -
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் எப்போது காண்பது…?


– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் 
திருமதி.ஏஞ்சலா மெர்கெல் - தன் அலுவலகப்பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –
கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்தியத்திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே 
ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு 
பயணிப்பது எப்படி…?


– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள்
நினைத்துப் பார்ப்பதே இல்லையா…?


– நீங்கள் ஒவ்வொருவரும் 
பயன்படுத்தும் தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணிப்பதற்காக – 
உருப்படியான வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர் சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –
எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரிப்பணமாக 
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் 
நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா...?


– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமா என்று குடிமக்களாகிய 
நாங்கள் எதிர்பார்க்கலாமா...?

– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவமனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. 
உங்கள் சகஇந்தியர்கள் எத்தனையோ பேர் சரியான 
மருத்துவ உதவி கிடைக்காமல் தினமும் செத்துக் 
கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா…?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்த செலவில் 
செய்துக்கொள்ளும் நாள் என்றாவது வருமா…?


– அப்படி என்ன உங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு ''Z'' என்றும்,
''Z+'' என்றும் சொல்லிக் கொண்டு நீங்களும், 
உங்கள்  மந்திரிகளும்  திரிகிறீர்கள்...?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரிப் பணத்திலிருந்து வருவது தானே...?
இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்றைக்குத்தான் மாறும்…?


–  ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு 
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –
உங்களுக்கு மட்டும்  ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள்…? 
அது நியாயம் தானா....?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே…!
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லை
என்றா இந்த மலிவு விலை…? இது தகுமா...?


– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் ஏழைக்குடிமகன் 
தான் காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உறுத்தவில்லையா...?


– நாங்கள் செலுத்தும் வரிகள் தான் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Toll Gate, 
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Road Tax, 
Automobile Registration Tax 
and 
Property Tax –

– மக்கள் சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் 
பிடித்துக்கொள்ளும் இந்த அரசு நிர்வாகம் 
உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு 
உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வரி வசூல்
செய்யப்படுகிறது…?


– உங்களுக்காகவே  நீங்களே இயற்றிக்கொண்ட 
சட்டங்கள் மூலம் கிடைத்துள்ள அத்தனை 
சலுகைகளையும் விட்டுக்கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் என்றாவது வருமா…?


– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – 
உங்களுக்கு நீங்களே எடுத்துக்கொண்ட இந்த சலுகைகள் 
அத்தனையையும் என்றைக்கு விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நிச்சயம் நாங்கள் 
அனைவரும் விட்டுக்கொடுப்போம்…!!! 

                                                                         இப்படிக்கு,

                                                                 சாமான்ய இந்தியன் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது வாட்ஸ் ஆப்பில் தோழர் ஒருவர் அனுப்பிய தகவல்