சனி, 30 ஜூலை, 2011

புதுச்சேரி ஜூலை - 30 தியாகிகளுக்கு அஞ்சலி...

ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள்
-எஸ்.சிவக்குமார்
             பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் , வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில்  தொழிற்சங்க உரிமைகள்  மறுக்கப்பட்டும் , உழைக்கும் மக்களை 
கொத்தடிமைகளாக வைத்துகொண்டு அவர்களை சுரண்டியும்  வெள்ளை முதலாளிகள்  கொழுத்து வந்தனர். தொழிற் சங்கம் அமைப்பது சட்டவிரோதம் என்று முதலாளிகள் கூறினர். தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை வாங்கி அடிமைப்படுத்தி வந்தனர். ஆண்-பெண், குழந்தை என்று அனைவரின் உழைப்பும் அட்டையை போல் உறிஞ்சப்பட்டது. தொழிலாளர்கள் எந்திரத்தில் அடிபட்டு உடல் உறுப்புகள் இழந்தாலும் அல்லது செத்தாலும் நஷ்ட ஈடு எதுவும் கிடையாது. இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து 3 பஞ்சாலைகளிலும் பணியாற்றிய (சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள்) தொழிலாளர்கள் கட்டுப்பாடாக திரண்டெழுந்தனர்.
                1935ம் ஆண்டிலிருந்து ரகசியமாக சங்கம் அமைத்து செயல்பட்டார்கள்; போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியில் ஏற்பட்ட அனுபவத்தை பெற்ற பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆட்சி இந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையின் பலத்தையும் அதன் போராட்டத்தையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டது.
              வேலை நேர உரிமைக்காக கோரிக்கை வைத்த தொழிலாளர்களை அழைத்து பேசுவதற்கு மாறாக,அவர்களை அடக்கி ஒடுக்கும் செயல்களில் வெள்ளைக்கார முதலாளிகள் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் இந்த அணுகு முறையை எதிர்த்து சவானா மில் (சுதேசி மில்) தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களை அடக்குவதற்காக,  பிரெஞ்சு அரசு ராணுவத்தையே ஆலைக்குள் திட்டமிட்டு அனுப்பியது. சுழல் பீரங்கி, துப்பாக்கி ஆயுதங்களோடு ராணுவப்படை ஆலைக்குள் நுழைந்தது. நிராயுதபாணியான தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, ஆயுத பாணி சகிதங்களோடு ராணுவம் மறுபுறம் நின்றது. கிட்டத்தட்ட போர்க்களமாகவே மாறியது சுதேசி பஞ்சாலை.
             சுழலும் பீரங்கிகளால் தொழிலாளர்களை சுட்டார்கள். அதில் பஞ்சாலை தொழிலாளர் தோழர்கள்-அமலோர்பநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 தோழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள். ஆனால் நெஞ்சுரமிக்க தொழிலாளர்கள் அஞ்சி ஓட வில்லை. ஒரு பக்கத்தில் தங்கள் அருமை தோழர்கள் குண்டு பாய்ந்து - குடல் சரிந்து - குருதி வெள்ளத்தில் மிதந்தது கண்டு பொங்கிவரும் ஆத்திரத்தையெல்லாம் நெஞ்சிலே தேக்கிக் கொண்டு வீறுகொண்டு எழுந்தனர்; கூலிப்படையை விரட்டியடித்தனர்.
                    ஆசியாவிலேயே எட்டு மணிநேர வேலை - எட்டு மணிநேர ஓய்வு  - எட்டு மணிநேர உறக்கம் என்கிற உழைப்பாளி மக்களுக்கான உரிமைக்கான வீரம் செறிந்த  போராட்டமும், உயிர்த் தியாகமும் புதுவையில் தான் நடைபெற்றது என்பது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதும், நம் உரிமைக்கான போராட்டங்களுக்கு உரம் சேர்ப்பதும் ஆகும். நமக்கான உரிமைக்காக ஜூலை 30 அன்று உயிர்த் தியாகம் செய்த அத்துணைத் தோழர்களையும் சிரம் தாழ்த்தி வணங்கி அஞ்சலி செலுத்துகிறோம்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

கருணாநிதியின் மற்றுமொரு நாடகம் - வெட்கமாக இல்லை..?

        தமிழக மாணவ - மாணவியர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு,  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று சமச்சீர் பாடப்புத்தக விநியோகத்தை உடனே துவக்கிட வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் ஜூலை 26 அன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துமாறு இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை  ஏற்று தமிழகம் முழுவதும் சென்ற ஜூலை 26 அன்று சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை பள்ளி - கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தை வெற்றிகரமாக  நடத்தினர்.
                இதைப் பார்த்து பொறுத்துக்கொள்ள   முடியாத திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சனையை அரசியலாக்கி தேர்தல் வியாபாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில்,    சமச்சீர் கல்வியை பாதுகாக்க வரும் ஜூலை 29 - ஆம் தேதி திமுக மாணவரணி என்ற பெயரில், மாநிலம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும், பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தான் இந்தப் போராட்டம் எனவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான உருக்கத்துடன்  வேண்டுகோள் விடுத்தார்.
                அதன்படி திமுக-வினர் இன்று வகுப்புப் புறக்கணிப்புக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் மாணவ - மாணவியர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும்  ஒருசில மாணவர்களே  பள்ளிகளை புறக்கணித்தனர். அதுவும் திமுக கட்சிக்காரர்களும் - குண்டர்களும் தங்களுக்கு வேண்டியப் பிள்ளைகளை தங்களுடன் சேர்த்துக்கொண்டு அரசுப் பள்ளிகளின் வாசல்களில் கோஷங்களை எழுப்பி இருக்கின்றனர்.
                மாணவர்கள் மீது அக்கறையோடு போராட்டம் நடத்திய திமுக மாணவரணி என்று  ஒன்று இதுவரை இருந்ததா..? அப்படி இருந்திருந்தால், இன்றுவரை எங்கே போனது..?  அதுமட்டுமல்லாமல், திமுக மாணவரணி சமச்சீர் கல்விக்காக இதுவரை போராட்டம் நடத்தாதது ஏன்?
               ‘பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவே இந்தப் போராட்டம்’ என்றால், அறிவிப்பு வெளியானவுடன், கலைஞர்  தொலைக்காட்சியில், அது வரை காட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஏதோ மாணவர் திரள் தன்னெழுச்சியாய் போராட்டம் நடத்தியது போல் காட்டப்பட்டதே... அதற்கு என்ன பொருள்..?
                அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக  சமச்சீர் கல்வி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று திமுக கூறுகின்றது. இப்பிரச்சனையின் தொடக்கத்திலிருந்தே இந்திய மாணவர் சங்கத்திற்கு இக்கூற்றில் உடன்பாடில்லை. தனியார்மயத்திற்கு ஆதரவான நிலைபாடே இதற்குக் காரணம் என்பது தான் வெளிப்படையான உண்மை. பல தனியார் பள்ளி நிர்வாகங்களின் நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என்றும்  இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது.
             சமச்சீர்கல்வி அமலானால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதை  தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள்  உறுதியாக நம்புகிறார்கள். அதனால் பாகுபாடுகள் தொடர வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம்.
ஆட்சியிலே இருந்தபோது, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவான இதே  நிலைப்பாட்டைத்தான் திமுகவும் எடுத்தது என்பதை தமிழக மக்கள் மறந்திருக்க முடியாது. இன்றைய சமச்சீர்கல்வி பிரச்சனைக ளுக்கு அடித்தளம் இட்டது திமுக ஆட்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
              இப்போது சமச்சீர் கல்விக்காக நாடகமாடும் திமுக தலைவர் கருணாநிதி தான் ஆட்சி செய்த காலத்தில், கடந்த 2009 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் தேதி இதே சமச்சீர் கல்விக்காக அமைதியான பேரணி நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி, கடுந்தாக்குதலுக்கு உள்ளாக்கி, பொய் வழக்கை போட்டதை இன்று வசதியாக மறந்திருப்பார். அதுமட்டுமல்லாமல், சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி, ‘சமச்சீர் கல்விக்காக அவசரப்படக்கூடாது. அதனால், சிலர் பாதிக்கப்படுவார்கள். யாரும் பாதிக்காமல் அதை நிறைவேற்ற காலதாமதம் ஆகும்’ என்று நா கூசாமல் கூறினார் என்பதை தமிழக  மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
                இப்படியாக, தான் ஆட்சியிலிருந்த  போது, கல்வி வியாபாரத்திற்கு சாமரம் வீசிவிட்டு, இப்போது, சமச்சீர் கல்வி கேட்டு போராட வாருங்கள் என அழைக்கும் திமுக தலைவர் கருணாநிதியின்  நாடகத்தை தமிழக மாணவர்கள் நன்கு அறிவார்கள்.     1967-இல் திமுக ஆட்சியமைக்க மாணவர்கள் போராட்டம் உதவியதைப்போல் இப்போதும் உதவும் என்று 
கனவு காண்கிறார் போலும். மீண்டும் மீண்டும் தமிழக மாணவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.   

வியாழன், 28 ஜூலை, 2011

இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சிங்களர்களின் மனதையும் திறந்திருக்கிறது...

          அண்மையில் நடைபெற்ற இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது, மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கின்றன. இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச்சே  ஆதரவுபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வாழும்  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்பது உற்று நோக்கத்தக்கது.   விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச்சே  மீதான இலங்கைத் தமிழர்களின் கோபத்தை ஒட்டுமொத்தமாக உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் பொருள்.
                 அதுமட்டுமல்ல இதுவரை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவந்த அக்கிரமங்களையும், கொடுமைகளையும் வேடிக்கைப் பார்த்துவந்த சிங்களத் தலைவர்களையும் இந்த தேர்தல் முடிவுகள் வாய் திறக்கவைத்திருக்கிறது.  தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்ச்சேவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளிஇருக்கிறது  என்று கூறியிருப்பது என்பது , இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத்தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்த உதவியாயிருக்கும்  என்று சந்திரிகா இன்று கூறுவது என்பது வரவேற்கத் தக்க மாற்றங்களாகும். இதே கருத்துக்களை  தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள் என்பதும் நாம் இத்தனை ஆண்டுகளாய் ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஒளி இங்கே நம்  அருகில் தெரிகிறது. 

நீலச் சாயம் வெளுத்துப் போச்சி - உத்தமர்கள் போல் வேஷம் போடும் பா.ஜ.க.

             உங்களுக்கு நினைவிருக்கிறதா...கர்நாடகா மாநிலத்தில்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்முறையாக  பாரதிய ஜனதா கட்சி  ஆட்சியை பிடித்தபோது “தென்னிந்தியாவில் தாமரை மலரத் துவங்கிவிட்டது; இனி பாஜகவுக்கு ஏறுமுகம் தான்” என்று பல பாஜக தலைவர்கள் பீற்றிக்கொண்டார்கள். இந்த முதல் பாஜக அரசின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள்  அந்த அரசு இன்று தனக்குத் தானே சேற்றை வாரிப் பூசிக்கொண்டு,  மக்கள் மத்தியில் களங்கப்பட்டு - அசிங்கப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை.    
          
            அம்மாநில அமைச்சரவையில் செல்வாக்கு மிகுந்த நபர்களாக விளங்கும் ரெட்டி சகோதரர்கள் ( அங்கும் ஒரு களவாணி சகோதரர்கள் ) ஆசைக்கு இன்று பாஜக அரசே பலியாகப் போவதை அந்த மாநிலம் மட்டுமன்றி இந்த நாடே பார்க்கப்போகிறது. கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் சட்ட விரோத இரும்பு சுரங்கங்களை அமைத்து, கோடி கோடியாக கொள்ளை அடித்துவரும் ஒரு  களவாணிக் கூட்டம்தான் ரெட்டி சகோதரர்கள் கூட்டம். கடந்த  
சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வரப்போகிறது என்றவுடன் பல ஆயிரம் கோடி ரூபாயை அக்கட்சிக்கு வாரி வழங்கி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
              
                இதையெல்லாம் அவர்கள் சும்மா செய்யவில்லை. பாஜக ஆட்சி அமைந்தவுடன் வட்டியும் முதலுமாக அதை அறுவடை செய்வதற்கு தான்  மிகவும் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  அதன் பிரதிபலனாகத் தான் இன்றுவரை  தொடர்ந்து அறுவடை செய்தும் வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தும் சட்ட விரோதமான செயல்கள் என்பதுதான் முக்கியமானதாகும். இந்த சட்ட விரோத சுரங்கங்கள் மூலம் நாள்தோறும் டன் டன்களாக இரும்புத் தாதுவை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடி கோடியாக சம்பாதித்தனர். இந்தக் கொள்ளையை தடுக்கவேண்டிய மாநில அரசே அதற்கு துணை போயிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயமாகும். 

             இந்த கொள்ளையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும்  அதற்கான  உறுதியான ஆதாரங்கள்  உள்ளன  என்றும்  மாநில மக்கள் நீதிமன்றம் (லோக் அயுக்தா) கூறியிருப்பதுதான் இன்றைய புதிய செய்தி. நீதி மன்றம் கூறியது வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம். ஆனால் கர்நாடக மக்களுக்கு - இந்திய மக்களுக்கு இது பழைய செய்தியாகும். கர்நாடகாவில் சட்ட விரோத சுரங்கங்கள் தொடர்பாக மார்ச் 2009 முதல் 2010 மே மாதம் வரை என்ன நடந்தது என்பது குறித்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையிலான மக்கள் நீதிமன்றம் நடத்திய விசாரணையில்தான் இது தெரியவந்தது. விசாரணை நடைபெற்ற 14 மாதங்களில் மட்டும் சட்டவிரோத சுரங்கங்களால் கர்நாடக மாநில அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு கோடியோ அல்லது இரண்டு கோடியோ அல்ல, 1800 கோடி ரூபாய். ஒராண்டு கொள்ளையே இவ்வளவு தொகை என்றால் 5 ஆண்டுகள் எவ்வளவு என்பதை சொல்லத் தேவையில்லை.

             இந்த பகல் கொள்ளையால் ரெட்டி சகோதரர்கள் கிட்டத்தட்ட அனைத்து சுரங்கங்களையும் தங்களது சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த அறிக்கையால் கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக அரசியலில் மீண்டும் புயல் வீசத் துவங்கியுள்ளது. மக்கள் நீதிமன்ற நீதிபதியே முதலமைச்சருக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக குற்றம் சாட்டியுள்ளதால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

              இதில் என்னவேடிக்கை என்றால், இந்த அறிக்கையில் எடியூரப்பா பெயர் இருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பாஜக அமைச்சர்கள் சிலர், எடியூரப்பா பெயரை அறிக்கையில் இருந்து நீக்கவேண்டும் என்று நீதிபதியை நிர்பந்தப்படுத்தியுள்ளனர். அறிக்கை வரும் வரை உத்தமர் போல் நடித்தார்கள். அறிக்கை வந்தவுடன் அதை அமுக்க என்ன செய்ய முடியுமே அதை செய்யப்பார்க்கிறார்கள்.
          
             கொள்ளையைப் பொருத்தவரை இந்த காவிச்சட்டைக்  கொள்ளைக்காரர்களுக்கும் கதர்ச்சட்டைக் கொள்ளைக்காரர்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அவர்கள் மத்திய அளவில் என்றால் இவர்கள் மாநில அளவில் என்பதே இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் ஆகும். மத்தியிலும் தாமரை மலர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு கர்நாடகா ஒரு சின்ன உதாரணம் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது.     

திங்கள், 18 ஜூலை, 2011

அடம் பிடிப்பது ஆட்சிக்கு அழகில்லை.. குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைத்துவிடாதீர்கள்..

                தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டிலேயே  சமச்சீர் கல்வித்திட்டமே தொடர வேண்டுமென்றும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும்,  ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. மேலும், குறைகளைக் களைய குழு அமைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்படியாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேற்கண்ட தீர்ப்பினை தமிழக மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டு வரவேற்கின்றனர்.   
                அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில் உச்சநீதின்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று  அறிவித்திருப்பது என்பது துரதஷ்டவசமானது. கோடை விடுமுறை முடிந்து,   பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் முடியப் போகிற  நிலையில் மேலும் காலம் தாழ்த்துவது என்பது,  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலையும், நடைமுறைச் சிரமத்தையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே,  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதைக் கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று சமச்சீர் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே உடனடியாக காலம் தாழ்த்தாமல் அமல்படுத்திட வேண்டுமென்பது தான் தமிழக மக்களின் - குறிப்பாக பெற்றோர்களின், ஆசிரியர்களின், மாணவர்களின் எதிர்பார்ப்புகளாகும்.  
                ''உண்மையான'' கல்வியாளர்கள், சமூக அக்கறையுள்ள சான்றோர்கள் ஆலோசனைபடியும், வழிகாட்டுதல்படியும் நடத்தலே சிறந்த ஆட்சிக்கு சான்றாகும். அது தான் தமக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு செல்வி ஜெயலலிதா செய்யும் நன்றிக்கடனுமாகும். அதை விடுத்து, ''போலி'' கல்வியாளர்கள், கல்வி வியாபாரிகள் விருப்பப்படி தான்தோன்றித்தனமாக கல்வி முறையை சீர்குலைக்கச் செய்தால் இன்றைய இளையத்தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.  

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தோழர். சாவேஸ் நலம் பெற வாழ்த்துவோம்...

            அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மாபெரும் உலகத்தலைவன் பிடல் காஸ்ட்ரோ-வின் வழித்தோன்றலாய், இன்று ஏகாதிபத்தியத்திற்கு மற்றுமொரு சிம்ம சொப்பனமாய் திகழும் வெனிசுலாவின் அதிபர் தோழர். ஹுகோ சாவேஸ்  புற்றுநோயோடு போராடிவருகிறார். அண்மையில் தான் கியூபா சென்று இந்த நோயிற்கான சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். நோயிலிருந்து குணமடைய சிகிச்சைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட சாவேஸ்  கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவோடு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சிந்தனையுடன் விவாதித்திருக்கிறார். தற்போது  மேல்சிகிச்சைக்காக மீண்டும் கியூபா நோக்கி சென்றிருக்கிறார். புரட்சியின் சின்னமாய் எப்போதும் செஞ்சட்டையுடன் காட்சிதரும் தோழர் சாவேஸ் இன்று கிளம்பும் போதும் அதே சிவப்பு சட்டையுடன் கம்பீரமாய் தான் நாட்டு மக்களிடம் விடைபெற்று சென்றார். "இது சாவதற்கான நேரமில்லை.. வாழ்வதற்கான நேரமிது.." என்று சாவேஸ் புறப்படும் முன்பு தன் மக்களிடம் முழங்கினார். அந்நாட்டு தேசியகீதம் முழங்க வெனிசுலா மக்கள் தங்கள் தலைவனை வழியனுப்பி வைத்தனர்.
           இந்த உலகம் வாழ தோழர். சாவேஸ் நீண்ட காலம் வாழவேண்டும்.. நாமும் அவர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்...                

அமெரிக்கா : நடுத்தெருவில் 75 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர்

அமெரிக்காவில் முன்னாள் இராணுவத்தினரின் அவலநிலை..
          அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ராணுவத்தினரில் சுமார் 75 ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 
              முன்னாள் ராணுவத்தினருக்கான அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களே இதைக் காட்டுகின்றன. ஏற்கெனவே மனரீதியாகப் பாதிக்கப்படும் இவர்கள் நாடு திரும்பியவுடன் தங்குவதற்கு குடியிருப்பு இல்லாத நிலையில் கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஜூன் மாதத்தில் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 75 ஆயிரத்து 700 பேர் இரவு நேரங்களில் தங்குவதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
                “இதற்கு முன்பும் இத்தகைய நெருக்கடிகளை முன்னாள் ராணுவத்தினர் சந்தித்துள்ளார்கள். ஆனால் தற்போது இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடியிருப்புகள் இல்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீடுகள் இன்றி முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள்” என்கிறார் வீட்டுவசதித்துறை இயக்குநரான அன்னே ஒலிவா.
       ஆக்கிரமிப்புப் பணியிலிருந்து சொந்த நாட்டிற்குத் திரும்பிய பிறகு வேலை கிடைப்பதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் இருக்கும் வேலைகளையே பலரும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாக முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைகிடைப்பது இல்லை. இதனால் அவர்களின் வருமானத்தில் திடீரென்று பெரும் சரிவும் ஏற்படுகிறது. இளம் வயதிலேயே வெளிநாடுகளுக்கு அமெரிக்கப் படைப் பணிக்காக சென்று திரும்பியுள்ளவர்களில் 21 விழுக்காட்டினருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
        முன்னாள் ராணுவத்தினரின் நிலைமைகள் குறித்து அதிகமாக எழுதியுள்ள எட்வர்டு ஸ்பான்னஸ், இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும் ஒரே வேலையே ராணுவத்தில் பணியாற்றுவதுதான். அமெரிக்கா எத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. பட்ஜெட்டில் ஏராளமான நிதி வெட்டு வரப்போகிறது. அதற்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகும் என்கிறார்.
               
ஆக்கிரமிப்புப் பணிகளுக்குச் சென்று விட்டு அமெரிக்கா திரும்பியுள்ள ராணுவத்தினரில் சுமார் 3 லட்சம் பேர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

கடும் நெருக்கடியில் இந்தியாவின் உயர்கல்வி..!

பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எச்சரிக்கை
       இந்தியாவின் உயர்கல்வித் துறை மிக ஆழமான நெருக்கடிக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பொருளாதார வல்லுநரும் கேரளத்திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத்தலைவருமான பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எச்சரித்துள்ளார்.
       வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் கூவி கூவி விற்பது போல இந்திய உயர் கல்வி என்பது இன்றைக்கு ஒரு முழுமையான வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
“உயர்கல்வி என்பது ஒரு அப்பட்டமான நுகர்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது; குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. கல்வித்துறையை முற்றிலும் வியாபாரமயமாக்கும் நடவடிக்கைகள், இந்திய கல்வியை நாசமாக்கும் நிலையை நோக்கி நகர்த்திச்செல்கிறது; இந்த நடவடிக்கை, இளைய தலைமுறையினர் சுதந்திரமாக சிந்திக்கிற, எதையும் துணிச்சலுடன் ஆராய்கிற மனநிலையை கடுமையாகத்தாக்குகிறது” என்பதை  பிரபாத் பட்நாயக்  சுட்டிக்காட்டியுள்ளார்.                                                                                                                
         கல்வி என்பது லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் அல்ல என்று உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது, ஆனால், நாடு முழுவதிலும் லாபம் சம்பாதிக்கிற கல்வி நிறுவனங்களை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
         மேற்கத்திய நாடுகளில் பிரபலமான பல்கலைக்கழகங்களாக புகழப்படும் ஸ்டான்போர்டு, ஹார்வர்டு, கொலம்பியா பல்கலைக்கழகங்கள் கல்வி அளிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன; இந்த நோக்கத்திற்காக பல்கலைக்கழகங்களை நிறுவியவர்கள் அறக்கட்டளைகள் என்ற பெயரில் நிதியை திரட்டி கல்விக்காக செலவிடுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
          நமது நாட்டில் தான் நிலைமை தலைகீழாக இருக்கிறது என்று கூறிய அவர், தேசத்தை கட்டமைப்பதில் உறுதிகொண்ட அறிவு ஜீவிகளை உருவாக்குகிற ஒரு கல்வி முறையே நமக்கு அவசியம் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

சனி, 16 ஜூலை, 2011

இதைப் படித்தும் உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் ..?

                தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. குறுகிய காலமாக இருந்தாலும் ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பாண்ட் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், கே.ஜி ஆற்றுப்படுகை ஊழல் என மெகா சாதனையை நிகழ்த்தியுள்ளது.
               கிராமப்புற தொலைபேசி சேவைக்காக மத்திய அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ரிலையன்ஸ் நிறுவனம் கிராமப்புற சேவையை செய்யாமல் ஒப்பந்த விதிமுறைகளை மீறி பாதியில் நிறுத்திக் கொண்டது. இதையடுத்து மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை சட்டத்துறையின் உதவியுடன் தொலைத்தொடர்புத்துறை வசூலிக்க வேண்டும். ஆனால் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல் 650 கோடி ரூபாய் அபராதத்தை ரூ.5 கோடியாக குறைத்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார். அதன் மூலம் அரசுக்கு ரூ.645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சேர வேண்டிய பணத்தை ரிலையன்ஸூக்கு தூக்கிக் கொடுத்ததன் உள் நோக்கம் என்ன? அதில் கபில்சிபலுக்கு ஏன் அவ்வளவு அக்கறை? அரசு கஜானாவில் சேரவேண்டிய பணம் ரிலையன்ஸூக்கு மட்டும் திருப்பிவிடப்பட்டதா? அல்லது கபில்சிபல் கணக்கிற்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறதா? என்பதுள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
                 ஆனால் இவ்வளவு அப்பட்டமாக நடந்துள்ள மோசடியில் நீதிமன்றம் “இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை எனவும், உத்தரவு ஏதும் பிறப்பிக்க விரும்பவில்லை” எனவும் கூறியிருக் கிறது. இப்படி நீதிமன்றமே ரிலையன்ஸ் விஷ யத்தில் ஒதுங்கிக் கொள்வது சரியா? சாமானி யனுக்கு ஒரு நீதி, பெரும் முதலாளிக்கு ஒரு நீதியா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் ஏட்டில் மட்டும்தானா? என்ற கேள்வி எழுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இவ்வளவு தூரம் அம்பலப்படுத்தியதில் உச்ச நீதிமன்றத்திற்கும் முக்கிய பங்குண்டு. ஸ்பெக்ட் ரம் வழக்கில் உச்சநீதிமன்றம் எடுத்த நிலையை ரிலையன்ஸ் நடத்தி வரும் மோசடி விஷயங்களி லும் எடுத்தால் மத்திய அரசின் முக்கிய அமைச் சர்கள் மட்டுமல்ல; பிரதமர் கூட தப்புவது கடினமே!
              ஏற்கனவே வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் அழைப்புகளாக மாற்றி ரிலையன்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது. அப்போதும் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
             அதே போல் கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு அரங்கேற்றப்பட்டது. ரிலையன்ஸூக்காக அரசின் விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள் என்று தணிக்கைத் துறை கூட கேள்வி எழுப்பியிருந்தது.
           தொழிலதிபர்களும் அரசும் சேர்ந்து தேசத்தின் சொத்தை கொள்ளையடிப்பதை வலுவான மக்கள் இயக்கத்தின் மூலமே தடுக்க முடியும்.

அரசியல் எனக்கு பிடிக்கும்...!

அன்றாட வாழ்வில் அரசியல்
-அறிவுக்கடல்
         மாணவர்களுக்கு சொல்லித்தரப்பட வேண்டியது அன்றாட வாழ்வில் அறிவியல். எதற்காக என்றால் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் 
நிகழ்ச்சிகள் ஏன், எப்படி, எதனால் நடக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக; அது புரிந்துவிட்டால் பிரச்சனைகளை சுலபமாகக் கையாள, எதிர்கொள்ள முடியும் என்பதற்காக. வெயிலில் விளையாடக் கூடாது என்று சொல்வதைவிட, வெயிலில் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனைகளை அறிவி யல் பூர்வமாக விளக்கிவிட் டால் அவர்களே அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள் அல்லவா? மாணவர்களுக்குப் புரிய அறிவியல்! நமக்கு? நமக்குப் புரிய வேண்டியவை பிரச்சனைகள்! நாம் எல்லாவற்றிலும் சரியாக இருந்துவிட்டால் நமக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா? தனிப்பட்ட பிரச்சனைகளை விடுங்கள்! விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்று நம் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணி?

         அரசியல் பேசலாமா, கூடாதா? “எனக்கு அரசியலே பிடிக்காது சார்!”, “அரசியலே சாக்கடை சார்!”. இதெல்லாம் நம்மில் பலர் பெருமையாகக் கூறிக் கொள்ளும் சொற்கள்! ஆனால், அடுத்தமாதம் நம் வீட்டு சமையற்கட்டுக்கு வரப் போகும் கேஸ் சிலிண்டரின் விலை என்ன என்பதை முடி வெடுக்கப் போவது அரசியல் தான்! நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாம் சந் திக்கும் பிரச்சனைகளின் அடிப்படை அரசியலாக இருக்கும்போது பேசாமல் இருப்பது சரியா?

                 ஒரு மாணவன் அரசியல் பேசினால் கேட்கப்படுகிற கேள்வி “படிக்கிற காலத்தில் அரசியல் தேவையா?”, வேலைக்குப் போனபின் பேசினால் “அரசு ஊழியருக்கு அரசியல் கூடாது!” ஓய்வு பெற்றபின் பேசினால் “காலம் போன கடைசியில் அரசியல் தேவையா?”. பின் எப்போதுதான் அரசியல் பேசுவது? உண்மையில் அதே மாணவனின் கல்வியில் இருந்து மக்களின் பொதுவான தேவைகள் அனைத்தும் அரசியல் முடிவுகளுக்குட்பட்டே கிடைக்கின்றன.

             நோய் முதல் நாடித்தான் அது தணிக்க முடியும் என்பது வள்ளுவர் வாக்கு. அது தெரியாததால்தான், மின்வெட்டுக்கு மின்வாரிய ஊழியர்கள் மீது கோபம் வருகிறது. தவறான இடத்தில் கோபப்பட்டு நம் சக்தியை வீணாக்குகிறோமே தவிர, பிரச்சனைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. உண்மையில் சரியான இடத்தில் தீர்வு கேட்டுப் போராடுபவர்களோடு துணை நிற்காமல் பிரச்சனையுடனே வாழப் பழகிக் கொள்கிறோம். நம் பொதுவான பிரச்சனைகள் அனைத்திலும் தீர்மானிக்கும் சக்தியாக அரசியலே உள்ளபோது, அதைப் பற்றிப் பேசாமல் ‘அது தணிக்கும் வாய்’ நாட முடியாதே?

நன்றி : சங்கக் குரல்

வெள்ளி, 15 ஜூலை, 2011

தேசத்தை நேசிப்பவரை நேசமுடன் வாழ்த்துகிறோம்...

 தோழர் சங்கரய்யாவுக்கு  இன்று வயது 90                                          
        
           சுதந்திர போராட்ட வீரரும், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று 90-வது பிறந்த நாள் காண்கிறார்.
        மாணவப் பருவத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதில் துவங்கிய அவரது தூய பொது வாழ்க்கை இன்றும் தொய்வின்றித் தொடர்கிறது.
       விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் சிறைவாசம்- சதி வழக்குகள்- அடக்கு முறைகளை இன்முகத்துடன் எதிர்கொண்டவர்.
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்- மத்தியக்குழு உறுப்பினர்- தீக்கதிர் ஆசிரியர் என தரப்பட்ட பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றியவர். செம்மலர் இலக்கிய ஏடு- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக மூல வித்துக்களில் ஒருவராக இருந்தவர்.
    மேடையில் ஏறினால் கோடை இடி - நேசத்தோடு பழகுவதில் முல்லைக்கொடி!
         இன்றும் சுடர்விடும் தேசபக்தி, தளராத தமிழ்க்காதல், களங்கமற்ற பொதுவாழ்க்கை எனத் தொடரும் தொண்டறத்தால் இன்றும் என்றும் அவர் இளைஞர்தான்.
        தேசத்தை நேசிப்பவரை  நேசமுடன் வாழ்த்துகிறோம்...  
வாழ்க பல்லாண்டு....                                                                                     

வியாழன், 14 ஜூலை, 2011

தமிழகத்தில் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்துங்கள்..

             அண்மையில் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா யாரும் எதிர்பாராத வண்ணம் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்தார். ஆனால், முந்தைய கருணாநிதி அரசின் அதே காப்பீட்டுத் திட்டம் தான் புதிய பாட்டிலில் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெளிப்படுத்துகிறது. முந்தைய திட்டத்தில் இல்லாத கூடுதல் பயன்கள் இருக்கின்றன என்பதற்காக இத்திட்டத்தைப் பாராட்டலாம் என்றாலும், இத்திட்டத்தால் அரசு மருத்துவமனைகள் மறுவாழ்வு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டனவே என்று நினைக்கும்போது பாராட்ட நா எழவில்லை. 
             அதுமட்டுமல்லாமல், தமிழகத்திலுள்ள அனைவரும்  சிகிச்சைக்காக  தனியார் மருத்துவமனைக்கு செல்லத் தொடங்கினால், எதிர்காலத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் படிப்படியாக மூடப்படும் அபாயமும் இருக்கிறது என்பது தான் வேதனையான விஷயமாகும். தற்போது இயங்கிவரும் மருத்துவக்கல்லூரிகளும் நோயாளிகளின் வருகை குறைவினால் மருத்துவ கவுன்சிலின்  அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்படும் என்பது  மட்டுமல்லாமல் புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கான அங்கீகாரம் கிடைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதும் உண்மையாகும்.
              காப்பீடு செய்வோருக்கு எந்த அளவுக்குப் பலன் அதிகரிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பிரீமியத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்தி நிர்ணயிக்கும் என்பது நிச்சயம். இதனால் சென்ற ஆட்சியில் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிடக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டம் சாத்தியம் ஆகும். அதாவது மக்கள் வரிப்பணம் அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படாமல், பிரீமியத் தொகை என்கிற பெயரில் காப்பீட்டு நிறுவனங்களையும், சிகிச்சைக்கான கட்டணம் என்கிற பெயரில் தனியார் மருத்துவமனைகளையும் வளப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது அரசின் ஏமாளித்தனத்தை தான் காட்டுகிறது.
               காப்பீட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இலவச பரிசோதனைக்கான இயந்திரங்களையும் உபகரணங்களையும் நிர்மாணம் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாய்  மருந்துகள் வழங்கவும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், மாவட்டங்கள் தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கவும் பயன்படுத்தினால், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் தரமான சிகிச்சை அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும் என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
                 அரசு தன் சொந்த மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கு பதிலாக, நான் இப்படித்தான் செய்வேன் என்று எப்போதும் போல் அடம் பிடித்து, ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு கொடுத்து, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தால், என் மருத்துவமனை சரியில்லை, அங்கு சரியான சிகிச்சை அளிக்கமாட்டார்கள், எனவே எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கே செல்லுங்கள் என்று தமிழக அரசே ஒப்புக்கொண்டு சொல்வதாகத் தான் பொருள் கொள்ளப்படும். 

பள்ளி நாட்கள் வீணாகிறது..! குழந்தைகளை படிக்கவிடுங்கள்..!

சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம்
-ஜே.கிருஷ்ணமூர்த்தி
              சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்கு விதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற் றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி விட்டுச் செய்ய வேண்டும் என்ற அவசியத் துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக்கொண்டே குறைகளைக் களை யலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
       தமிழக பாடத்திட்டம், மெட்ரிக்குலேசன் பாடத்திட்டம், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம் என்ற நான்கு முறைகள் மாற்றப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் நல்லது. இந்த நான்கு பிரிவுகளின் தேவை என்ன? தனியார் கல்வி நிறுவனங்கள் செழித்து வளரவும், பாடநூல் அச்சிடும் பல்வேறு வணிக புத்தக நிறுவனங்கள் கொள் ளை லாபம் அடிக்கவும்தான் பயன்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட ஆங்கில மோகத் திற்கு தீனிபோட இந்த மெட்ரிக் பள்ளிகள் உதவின. இதற்கு தரம் என்ற பெயரில் விளம்பரம் வேறு செய்யப்படுகிறது.
         மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் மற்றும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு சர்வே எடுப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்பட்டது. அதாவது அவர்கள் நடத்தும் பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு இந்தத்தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு முடிவில் 60-70 சதவிகிதம் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மிகவும் மோசமாகத் தேர்வை எழுதியிருந்தனர். ஆனால் அதே அளவு அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுதியிருந்தனர். இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வருவீ ர்கள்? இந்த நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் 90 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளிலும் தாய்மொழியிலும் படித்தவர்கள் தான். ஆக, தரம் என்பது எவ்வளவு அதிகமான அழுத்தமான பாடங்களை நடத்துவது என்பதில் இல்லை. எவ்வளவு தெளிவாக மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பது தான். தரம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் லாபவேட்டையைத் தொடரவே தனியார் கல்வி நிலையங்கள் திட்டமிடுகின்றன.
        நாம் அரசுப்பள்ளிகளின் பிரச்சனைகளைத் திறந்த மனதுடன் விவாதிக்கின்றோம். எனவேதான் தனியார் பள்ளிகள் திறமை என்ற வாதத்தால் இதனை திசைதிருப்பி மக்களை அழைக்கிறது. தனியார் பள்ளி களில் இருப்பதும் ஒருபக்க இயக்கம்தான். அது மதிப்பெண் சார்ந்த ஒரு பக்க இயக்கமாகும். அதாவது அங்கு தரமான கல்வி என் பது தேர்ச்சி சார்ந்த இயக்கமாக கட்டண மாக்கப்படுகிறது. அவர்களுக்கு அதுதான் முக்கியம். அங்கு இன்றைய நாட்டின் தேவை சார்ந்த சந்ததியை உருவாக்குவதில் 
அக்கறை இல்லை. சந்தைக்குத் தேவையான சந்ததியை உருவாக்குவது, அவர்களின் நோக்கமாக உள்ளது. அதுவும் 1990க்குப் பின் பன்னாட்டுச் சந்தையின் தேவையைக் கொண்டே சந்ததியை உருவாக்குகிறார்கள்.

       ஆக, கடுமையான உழைக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் முகம் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதுடன், வகுப்பறைகள் ஜனநாயகத் தன்மையுடன் இருபக்க இயக்கம் உள்ளதாகவும் இருக்கும் இரு விஷயங்களும் முக்கியமானவை.
           80 சதவிகித மக்கள் வறுமையில் உழல்கின்றனர். தொலைந்துபோன தங்கள் வாழ்க்கையை உழைப்பால் அவர்கள் தேடித்திரிகின்றனர். இப்படியான ஒரு சூழலில் மக்கள் குறித்தும், சமயச்சார்பு, இறையாண்மை போன்ற நடவடிக்கைகளில் மாணவ சமூகம் இயல்பாக கவனம் செலுத்தும் சந்ததியாக வெளிவராதது ஏன்? வகுப்பறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது எனில் அந்த இடத்தில் மேற்கண்ட விவாதங்கள் நடக்கிறதா? வகுப்பறை ஜனநாயகம் என்பது ஆசிரியரும் மாணவரும் சமமாக இணைந்து கற்றலில் பங்கேற்பது. ஆனால் நடப்பது என்ன? அதிகாரம் - அடங்குதல் என்ற ஒருபக்க இயக்கம்தானே. இது சமூகத்தில் ஒரு அங்கமாக வரும் மாணவனை அதிகாரம் செலுத்தும் அல்லது அடங்கிப்போகும் ஒருவனைத்தானே உரு வாக்கும்.
       ஆக, சமூகத்திற்கான மாணவர்களை சந்தைக்கான மாணவர்களாக மாற்றுவது சரியான வளர்ச்சியா? அதுவும் குறிப்பாக மதிப்பெண்களே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்றால், அவர்களின் சமூக அக்கறை எப்படி இருக்கும்.
       சிறந்த எதிர்கால சமுதாயத்திற்கான பாடத்திட்டம் என்பதிலிருந்து அன்றைய ஆட்சியாளர்களின் தேவையை உள்ளடக்கிய பாடத்திட்டங்களாக மாற்றப்படுவது வேதனைக்குரியது. கல்வியாளர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள். இருப்பினும் பாடத்திட்டம் அதிகபட்சம் நமது நாட்டின் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரதானஅம்சங்களை இன்னும் இழந்து விடவில்லை.
    பாடத்திட்டம் எப்படி இருப்பினும் அதை அடிப்படையாக வைத்து வகுப்பறையை எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியம். ஆசிரியர்கள் நினைத்தால் இந்தப்பாடத்திட்டத்தை வைத்தும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
    நமது நாட்டின் இருபெரும் தலைவர்களான ஜோதிபாசுவும் இந்திராகாந்தியும் வெளிநாட்டில் ஒரே பல்கலைக்கழகத்தில் தான் படித்தார்கள். அங்கு வரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில டியூசன் 
நடத்தினார்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு இரு துருவங்களாகப் பிரிந்து நின்றது. இதில் அவர்களின் வகுப்பறைக்குப் பங்கு இல்லை எனச் சொல்ல முடியுமா?
            நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1970களில் சோவியத் யூனியனில் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. அதாவது அப்போதெல்லாம் அங்கு ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால் அதே சமயம் அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்று வயது நிறைவடைந்தால் மழலையர் பள்ளிகளில் சேர்க்கலாம். இரண்டு வருடம் முன்பே குழந்தைகள் கல்வி நிலையத்திற்கு வரும் முறையை நாமும் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணிய சோவியத் அரசு, அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் அடங்கிய குழுக்களை உருவாக்கியது. ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவ்வப்போது பெற்றோர்களுடன் கலந்துரையாடல், குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிதல் என நடந்தது.
       இறுதியாக பெற்றோர்களின் உதவியுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1.வகுப்பறை செயல்பாடுகள் குறைந்த அளவு இருக்க வேண்டும். 2. விளையாட்டுக்கான நேரம் கூடுதலாக்கப்பட வேண்டும். 3.ஓய்வுக்கான சூழல் இருக்க வேண்டும். 4. எழுத்துப்பயிற்சி மிகக்குறைந்த அளவே வேண்டும் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சுற்றுக்கு விடப்பட்டது. பெற்றோர்களிடம் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டு வருடம் முன்பே கல்விக்கூட ஒழுங்கு முறைக்கு குழந்தைகள் பழகுவது மகிழ்ச்சி என்றாலும் “எங்கள் குழந்தையின் 
விளையாட்டுப்பருவம் இரண்டு வருடம் திருடப்பட்டு விடுமோ என அஞ்சுகிறோம்” என பெரும்பாலான பெற்றோர்கள் கருத்துச் சொன்னார்கள். இந்த எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படாத வண்ணம் அமலாக்க வேண்டும் என்றனர். அதற்கு பின்னரே சோவியத் அரசு இந்த முறையை ஏற்றுக்கொண்டது.
     எனவே பெற்றோர்-மாணவர் பங்கேற்புடன் கல்வித்திட்டம் அமலாவதுதான் ஒரு சிறந்த சமூக அமைப்பின் அடிநாதமாய் இருக்க முடியும்.
        ஏழைகள் மேலும் ஏழைகளாக, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறவே இன்றைய கல்வி இதுவரை பயன்பட்டுள்ளது. ஏழைகள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டாமா? இது நிகழ வேண்டுமெனில் கல்வியை அரசியல்மயப்படுத்தாமல் சமூக மாற்றத்திற்கு சாத்தியம் இல்லை. இது நிகழும் போதுதான் சமூகம் அரசியல்மயப்படுத்தப் படும். அரசியல் என்பதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டாம் என குறிப்பிட விரும்புகிறேன்.

ஏழைகள் அதாவது உழைப்பாளி மக்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு தேவையான கல்விச்சூழலும், கல்வி முறையும், நாளைய சமூகத்தை உருவாக்கும் ஜனநாயகப்படுத்தப்பட்ட வகுப்பறைகளும் தேவை. இதுவே சிறந்த அரசியலாக இருக்க முடியும்.

நன்றி: புத்தகம் பேசுது நேர்காணல் (ஜூலை 2011)

துப்பு கெட்ட சிதம்பரம் பொறுப்பு ஏற்பாரா ? அமைச்சர் பதவி விலகுவாரா ?

               மும்பையில் இன்று - ஜூலை 13 இரவு ஏழு மணிக்கு மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 141   பேர்  பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் எனவும் மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு என்பது பயங்கரவாதிகளின் தாக்குதலாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கிறது.
              2008 - க்கு பிறகு மும்பையில் நடைபெறும் மிகப்பெரிய குண்டுவெடிப்பு இது.  இன்று 2008 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட காசாப் - இன் பிறந்தநாள் அன்று நடந்திருக்கும் சம்பவம் இது. 
              இதைப்பற்றி முன்கூட்டியே உளவுத்துறைக்கோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கோ எப்படி தெரியாமல் போனது என்பது தான் நம் சந்தேகமே. இந்த இரண்டு பேரின் அலட்சிய போக்கே இத்தனை பேரை பலி கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காசாப் -இன் பிறந்தநாளை பற்றி ஊடகங்கள் முன்னமே செய்தியாக வெளியிடுகின்றன. இதைப்பற்றி அறிந்திருக்கும் மத்திய அரசு விழிப்போடு இருந்திருக்க வேண்டாமா என்பது தான் நமது கேள்வி. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் கோட்டைவிட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
              பயங்கரவாத செயல் என்பதும் குண்டுவெடிப்பு சம்பவம் என்பதும் இந்தியாவிற்கு புதிதான அனுபவம் கிடையாது. உலக வரைபடத்தையும் கடந்தகால வரலாற்றையும் உற்றுப்பாருங்கள். அமெரிக்காவுடன் உறவாடும் நாடுகளிலெல்லாம் பயங்கரவாதமும், குண்டுவெடிப்பும் சர்வசாதாரணமாக நடக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களைப்போல் நடித்துக்கொண்டே பயங்கரவாதத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து நாட்டின் அமைதியை குலைப்பது தான் ஏகாதிபத்தியத்தின் வழக்கமான கலாச்சாரம்.   என்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு ஒட்டி உறவாட ஆரம்பித்தார்களோ அன்றைக்கு ஆரம்பம் ஆனது தான் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் குண்டுவெடிப்பும். தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த சம்பவங்களுக்கு ஆட்சியாளர்களே  பொறுப்பேற்க வேண்டும்.
                 நாட்டில் தினமும் பல இடங்களில் அமைதி குலைந்துகொண்டே வருகின்றது. காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதிகளின்  பிரச்சனை, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் தீவிரவாதிகள் பிரச்சனை, தெற்கே தனி தெலுங்கானா  பிரிவினைவாதிகளின் பிரச்சனை... இப்படியான பல்வேறு பிரச்சனைகளுக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் பொறுப்பேற்கவேண்டும். பொறுப்பேற்று பதவி விலகவேண்டும். இதைத்தான் நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு பலியானது சூடான் - தெற்கு சூடான் விடுதலை

                   சென்ற  ஜனவரி 2011 - இல் ஐ. நா.வின்  மேற்பார்வையில் நடந்த கருத்துக் கேட்கும்  தேர்தலில்  99 சதவீத மக்களின் ஆதரவு பெற்று, ஒன்றுபட்ட சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் என்ற தனி நாடு  உருவாகி இருக்கிறது.  சென்ற ஜூலை 9ஆம் தேதியன்று ஜூபா நகரைத் தலைநகராகக் கொண்ட தெற்கு சூடான் அதிகாரபூர்வமாகத் தனி நாடாக அறிவித்துக்கொண்டு  உலக நாடுகளை அழைத்து விடுதலை நாள் கொண்டாட்டத்தை நடத்தியது.ஐ. நா. வின் அங்கிகாரம் பெற்ற 193 - வது புதிய நாடு என்றெல்லாம் ஊடகங்களும் கொண்டாடின.  
 
            தெற்கு சூடானைத் தனிநாடாக்குவதற்கான கருத்துக் கேட்கும் தேர்தல் நடந்ததற்கு அமெரிக்காவே காரணம்.ஒன்றுபட்ட சூடானின் பலநூறு ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பலவாறு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சூடான் ௧௯௫௬-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து தென் பகுதி மக்களுக்கு அடிப்படை உரிமைகளான கல்வி மற்றும் சுகாதாரம் மறுக்கப்பட்டன. தென் பகுதியில் பொருளாதார வளர்ச்சி இல்லாமை மட்டுமில்லாமல் அரசு மற்றும் நீதித் துறைகளில் தென் பகுதி மக்கள் நிராகரிக்கப்பட்டனர். வட பகுதியில்  வாழும் அரேபிய மொழி பேசும் முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. தென் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத கருப்பின ஆப்பிரிக்க இனத்தவர்கள் இரண்டாம் தர மக்களாக கருதப்பட்டனர். இவைகளெல்லாம் தனி நாடு என்ற கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாக கருதப்பட்டாலும், தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட வெறித்  தான்  சூடான் உடைவதற்கு முக்கியமான காரணமாகும்.  அந்த எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்காகவே  தனி நாடு கோரிக்கையை அமெரிக்கா உருவாக்கி வெற்றி கண்டுள்ளது. அது மட்டுமல்ல, அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலும் இப்போது புதிய நாடான தெற்கு சூடானுடன் கொஞ்சி விளையாடுகிறது.   
         மொத்தத்தில் ஒன்றுபட்ட ஒருநாட்டில் உருவாகியுள்ள பிரச்சனைகளுக்கு அமைதியான தீர்வு காண முயற்சி செய்யாமல் ஏகாதிபத்தியம் தன்னுடைய லாப வெறிக்கு  அந்த நாட்டையே துண்டாடிவிட்டது  என்பது தான் உண்மை. இந்த வேதனையான நிகழ்வு என்பது உலகில் வேறெங்கும் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பது தான் நமது எண்ணம்..புதிய நாடான தெற்கு சூடானை போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் அறிவித்திருப்பது என்பது வேடிக்கையானது. அதுமட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சனி, 9 ஜூலை, 2011

கருணாநிதியும் மமதையும் ஒட்டிப்பிறந்தது..!

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல'' என்று  சமீபத்தில் கொக்கரித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இது புதிதல்ல. ஆட்டைக்கடிப்பதும், மாட்டைக்கடிப்பதும் கருணாநிதிக்கு ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். கடந்த இவரது குடும்ப ஆட்சியில் தான் குடும்ப உறுப்பினர்கள் ஆடிய ஆட்டத்தையும் கொட்டத்தையும் அடுக்கடுக்காக ஆதாரத்தோடு ஊடகங்கள் வெளியிட்டபோது திருடனுக்கு தேள் கொட்டியது போல் உள்ளுக்குள்ளேயே வெந்துகொண்டிருந்த கருணாநிதி, நேற்று மகள்.. இன்று பேரன் என ஒவ்வொருவராக விசாரணை வையத்துக்குள் வரும்போது கொதித்துப்போய் ஊடகங்களின் மீது வார்த்தைகளைக் கொட்டுகிறார். ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும் தான் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த காலங்களில் காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி, இன்று எம் ஜி ஆர்., ஜெயலலிதா வரை  யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சீரழியும் போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது குறளோவியத்தில் ''பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்'' என்ற குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்பதை படிக்கச் சொல்லுங்கள். இந்த வயசிலாவது புரிகிறதா என்று பார்ப்போம்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

கமல்ஹாசனின் சமூக பார்வை...

                 உறுப்பு தானங்கள் செய்வது அதிகரித்து வரும் வேளையில், அது பற்றிய படம் ஒன்றை எடுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
                 நாடு முழுவதும் உறுப்பு தானம் வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உறுப்பு தானங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்திய நாட்டின் மாபெரும் தலைவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்தவர்களில் ஒருவருமான ஜோதிபாசுவின் உடல்தானம், மேற்கு வங்கத்தில் பெரும் எழுச்சியையே ஏற்படுத்தியது.
               தமிழகத்தில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், நடைமுறையில் தானம் செய்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது. அண்மையில் கேரளா சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் உறுப்பு தானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ''டிராபிக்'' என்ற மலையாளப்படத்தின் கதை தனக்குப் பிடித்துள்ளது என்று கூறி அதன் உரிமையை வாங்கியுள்ளார்.
இந்தக் கதை தமிழில் திரைப்படமாக உருவாகப்போகிறது. அதைத் தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், தான் நடிக்காமல் வேறு நடிகர்களை வைத்து அப்படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார். உறுப்பு தானம் செய்ய வலியுறுத்தும் ஆர்வலர்கள் மத்தியில் இந்த செய்தி நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
                 கமல்ஹாசனின் சமூகப்பார்வையை ''ஆயுத எழுத்து'' நெஞ்சார பாராட்டுகிறது          

முற்போக்குத் தமிழறிஞர், இடதுசாரிச் சிந்தனையாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பி காலமானார்

  ''ஆயுத எழுத்து'' இதய அஞ்சலியை செலுத்துகிறது


                     புகழ்பெற்ற உலகத்தமிழறிஞரும், இடதுசாரிச்சிந்தனையாளருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்புவில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79.
                    புதனன்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
                   இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கரவெட்டியில் 1932ம் ஆண்டு பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்புவில் படித்த அவர், கொழும்புவில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
                  இங்கிலாந்தின் பர்மிங்காம் பல் கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டம் பெற்றார். 17 ஆண்டு காலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல் கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் சிவத் தம்பி பணியாற்றியுள்ளார்.
                  அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நடித் துள்ளார். இலங்கைத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி யுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.
                 இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோயம்புத்தூரில் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஆகும்.

நன்றி : தீக்கதிர்

புதன், 6 ஜூலை, 2011

கோயில் சொத்துக்களை மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்துங்கள்..

                 மன்னராட்சியில் கட்டப்பட்ட கோயில்களெல்லாம் அன்றைய தினம் வழிபடும் தளமாக மட்டுமல்லாமல், அரசாங்கத்தின்  கருவூலமாகவும்  இருந்திருக்கிறது.  அன்றைக்கு  ரூபாய் நோட்டுகள் எல்லாம் இல்லாத காலம். பொற்காசுகள் மட்டுமே புழங்கிய காலம். அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எல்லாம் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்கு பொற்காசுகளையும் தங்க நகைகளையுமே காணிக்கையாக செலுத்தியிருக்கிறார்கள். அதனால் தான் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களிலும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் நிலத்தைத் தோண்டினால் இன்றைக்கும் இது போல புதையல்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி கிடைக்கும் பொருட்கள் எல்லாம்  நிச்சயமாக அரசாங்கத்திடம் தான் ஒப்படைக்கப்படுகிறது.
                     அதேப்போல் தான் , இன்றைக்கு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகளை திறக்கும் போது மிகபெரிய பொற்குவியலே கிடைத்திருக்கிறது. அங்கு பழமைவாய்ந்த தங்க நகைகளும், அறிய வகை வைரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு என்பது பல லட்சம் கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
                     இப்படி அந்தக் கோயிலில் கிடைத்த அந்த மதிப்புமிக்க பொருட்களுக்கு பலவாறு உரிமைக் கொண்டாடுகிறார்கள். சிலர், இது கோயிலுக்கு சொந்தமானது. எனவே கோயிலில் ஒப்படைக்கவேண்டும் என்றும், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்கள், இது அரசக் குடும்பத்துக்கு சொந்தமானது. எனவே அரசக் குடும்பத்தை சார்ந்தவர்களிடம் தான் ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர்.
                  ஆனால் வரலாற்று ஆசிரியர் கே. என். பணிக்கர் வரலாற்றுப்பூர்வமான  பல்வேறு விஷயங்களை விளக்கி, கிடைத்திருக்கும் இந்த பொற்குவியல் என்பது, அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமானது என்று கூறியிருக்கிறார். கோயிலில் கிடைத்திருக்கும் நகைகள் இந்த மாநிலத்தையே சார்ந்தவை. இவைகள் எல்லாம் கோயிலுக்கு பிரார்த்தனை மேற்கொண்ட மக்களால் அளிக்கப்பட்டவை ஆகும். மக்களிடம் வசூல் செய்த வருவாய் மற்றும் பிரார்த்தனைக்கு மக்கள் அளித்த நிதி இவைகளிலிருந்து மகாராஜா கோயிலுக்கான நகைகளை உருவாக்கியுள்ளார். எனவே இது அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமானது என்று ஆதாரப்பூர்வமாக  விளக்கியிருக்கிறார்.  
                 எது எப்படி இருந்தாலும், இது போன்று கிடைக்கும் பழைமை வாய்ந்த மதிப்புமிக்கப் பொருட்கள் நிச்சயமாக மக்களுக்கு தான் சொந்தமாக்க  வேண்டும். எனவே அவைகளை மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்துங்கள். சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் எந்த நலத் திட்டங்களும் சென்றடையாத கடைசி மனிதனுக்கும் திட்டங்கள் சென்று சேர இவைகளை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பத்மநாப சுவாமி  கோயிலில் அமர்ந்திருக்கும் ( படுத்திருக்கும் ) பத்மநாப சுவாமியை கேட்டாலும் அவரும் இதைதான் சொல்லுவார்.

எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!

                     சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 597 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நேற்று செவ்வாயன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச்செயலா ளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. இக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில், சமச்சீர் கல்வியை எதிர்க்கும் தனியார் மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளும் இடம்பெற்றனர். 

                    உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற் கண்ட குழுவின்அறிக்கை யில், நடப்புக்கல்வியாண் டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கவுன்சில் (என்சிஇஆர்டி) 2005ம் ஆண்டு வடிவமைத்த 
தேசியப் பாடத்திட்ட தரத்திற்கு ஏற்றவாறு சமச்சீர் பாடத் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
              சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அவசர கோலத்தில் வகுக்கப்பட்டுள்ளன என்றும், மெட்ரிக்குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்திருப்பதால் மாணவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
                 தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன என்றும், மொழிப் பாடத்தில் இலக்கணப்பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
                 மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சமச்சீர் பாடத்திட்டத்தைக்கொண்டு நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது. இந்தப் பாடத்திட்டம் முழுமை யாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும் 
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
                   அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் முன்னமே எதிர்பார்த்த ஒன்று தான். எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!