ஞாயிறு, 11 மே, 2014

இடது திசை பயணம் ( LEFT HAND DRIVE )

 கட்டுரையாளர் : தோழர். சீத்தாராம் யெச்சூரி, எம்.பி.,           
                                 அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,             
                            மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                                                                             
               ''இடது திசை பயணம்'' (லெஃப்ட் ஹேண்ட் டிரைவ்) என்ற தொடர் தலைப்பில் இந்த நாளேட்டில் நான் எழுதும் 200-வது கட்டுரை இது. 100 பௌர்ணமிகளும், 100 அமாவாசைகளும் வந்து போயிருக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில், எனது கட்டுரைகளைப் பிரசுரித்த `ஹிந்துஸ்தான் நாளேட்டின் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும் எனது நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். காரல் மார்க்சின் தீர்க்கதரிசனம்...! இந்த 200-வது கட்டுரை எழுதும் நேரத்தில் காரல் மார்க்சினுடைய 196-வது பிறந்த நாளில் இணைவது ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ் வொற்றுமை. மனிதகுல நாகரீக வளர்ச்சியில் பங்களித்தவர்கள் அனைவரையும் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள்.
              நமது அறிவினையும், புரிதலையும் விரிவுபடுத்திய விஞ்ஞானிகள் பலரும் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். இருப்பினும், இத்தகைய பங்களிப்பாளர்களில் மார்க்ஸ் முதல் இடத்தினை வகிக்கிறார். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புரிதல் நிலையை உச்சத்திற்கு எடுத்துச் செல்வதில் அவர் செலுத்தியிருக்கும் பன்முகப் பங்களிப்பிற்காக மட்டுமல்லாமல், மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுகிறார் என்ற வகையிலும் அவர் நினைவு கூறப்படுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தை சூழ்ந்து நிற்கும் நெருக்கடியின் வேர்களை அறிந்து கொள்வதற்கும், பொருளாதார ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், மனிதகுலத்தை தொடர்ந்து சித்ரவதை செய்துவரும் பல்வேறு சமூக முரண்பாடுகள் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்வதற்கும், தவிர்க்க இயலாதவாறு மார்க்சையே நாட வேண்டியுள்ளது.
                இன்றைக்கு நடைபெறும் தேர்தல்களில் பணபலம் ஒரு புறம் என்றால், ஒரே குடும்பத்தின் உடன்பிறப்புக்களை ஒருவருவருக்கு ஒருவர் மோதுவதற்கு நிர்ப்பந்திப்பது உட்பட, தேர்தல் வக்கிரம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதையெல்லாம் பார்க்கும் போது, சமகாலத்திற்கும் மார்க்ஸ் எப்படி பொருந்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் அவர் கூறுவதைப் பாருங்கள் : “மக்களால் மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு தொழிலின் மரியாதையினையும் பூர்ஷ்வாக்கள் அழித்து விட்டனர். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், மத குருமார்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் தங்களது கூலித் தொழிலாளிகளாக மாற்றிவிட்டனர். குடும்பங்களில் நிலவும் உறவுகள், உணர்வுகள் என்ற திரைச்சீலையினைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவினை வெறும் பண உறவாக மாற்றிவிட்டனர்.” இன்றைய நிலை குறித்து எத்தனை தீர்க்க தரிசனமான வார்த்தைகள் பாருங்கள்!

போலி அலை...!            

                மோடி அலை அடிக்கிறதென்றும், அது சுனாமியாக மாறி நாடு முழுவதையும் சுருட்டப் போகிறது என்றும் செய்யப்பட்ட ஊடகங்களின் பெருங்குரல் இப்போது சற்றுக் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும், வருங்காலப் பிரதமர் என மோடியின் உருவம் வரையப்பட்ட விளம்பரங்களை கடந்த ஓராண்டாகப் பார்த்து வந்திருக்கிறோம். இதுவே மோடிக்கு எதிரான உணர்வுகளையும் உருவாக்கியிருக்கிறது. பிஜேபிக்கு தெளிவான வெற்றி என்று ஊடகங்கள் பலவும் கூறி வருகின்றன. ஆனால், களச் செய்திகளைத் தொகுத்து நிருபர்கள் தரும் அறிக்கைகள், ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புக்களிடம் இருந்து, கள எதார்த்தம் முற்றிலும் வேறுபட்டிருப்பதை உணர்த்துகின்றன.

பிஜேபியின் விரக்தி...!                  

             இந்தி பேசும் மாநிலங்களில், “என்னதான், மோடி என்று சொன்னாலும், ஸ்தல மட்ட நிலைமைகளே விஷயங்களைத் தீர்மானிக்கின்றன” என்ற செய்தி, ஆர்.எஸ்.எஸ்சுக்கும் பிஜேபிக்கும் கவலை அளிப்ப தாகும். பீகார் மாநிலத்தின் தேர்தல்களில், பிஜேபியின் ‘ரதத்தினை’ இப்போது மீண்டும் லாலு பிரசாத் தான் தடுத்து நிறுத்துகிறார் என்றும், அரசின் வளர்ச்சித் திட்டங்களின் பயன்களை நித்தீஷ் குமார் அறுவடை செய்யவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன. உத்தரப் பிரதேசத்திலோ, முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதி என இருவரைச் சுற்றிய, சாதி ஆதரவு அணி சேர்க்கையாக, தேர்தல்கள் மாறி வருகின்றன என்பதும் செய்தி.இவ்வாறு அந்தந்த மாநிலங்களின் பிரச்சனைகளே மக்களின் வாழ்வில் பெருமளவில் செல்வாக்கு செலுத்தும் நிலையின் காரணமாக ஆர்எஸ்எஸ்சும், பிஜேபியும் விரக்தியடைந்திருக்கின்றன. எதிர்பார்த்ததைப் போல, மதவெறியினைத் தூண்டும் முயற்சியில் அவை இறங்கி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி தலைவரின் வலது கரம் எனக் கருதப்படும் ஒருவர் அதில் பெரும் பங்காற்றி வருகிறார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் போட்டியிடும் ஆசம்கார் தொகுதி “பயங்கரவாதிகளின் தளமாக” செயல்பட்டு வருகிறது என்றெல் லாம் மதவெறியினைத் தூண்டும் வகையில் அவர் பேசி வருகிறார்.

மோடியின் மதவெறிப் பேச்சு...!                

                இந்துக்களின் வாக்குக்களை மத ரீதியில் திரட்டும் மிகவும் மோசமான வாக்கு வங்கி அரசியல் இப்போது அங்கே மேலோங்கி வருகிறது. மே மாதம் 4ம் தேதி மேற்குவங்கத்தில் அசன்சால் நகரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில், தான் பிரதமராகிவிட்டால், பங்களாதேஷிகள் நாட்டை விட்டு வெளியேறும் வகையில், மூட்டை கட்டி தயாராக இருக்க வேண்டும் என்றார். பங்களாதேஷிகளில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே இந்த எச்சரிக்கை எனவும், பங்களாதேஷிகளில், இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்தி, மதவெறியின் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார். சட்டப்பூர்வமாக இந்தியாவில் வசிக்கும் வங்காளி முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறிப் பேச்சு இது. அண்மையில், அசாம் மாநிலத்தில் போடோ பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் 31 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலைகளுக்கு, மதவெறித் தூண்டுதல்களும் காரணம் என சில ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. புனிதமாகக் கருதப்படும் மனித உரிமைகள் இன்று தேர்தல் லாபத்திற்காக, பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

பந்தய சூதாட்ட ஒப்பந்தம்...!               

             இதே போன்று, மேற்கு வங்கத்தில் பிஜேபிக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில் பந்தய சூதாட்ட ஒப்பந்தம் (மேட்ச் ஃபிக்சிங்) ஒன்று உருவாகியிருக்கிறது. மக்களின் மத ரீதியான இடைவெளிகளை விரிவுபடுத்திக் கொண்டு, தத்தம் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டும் ஏற்பாடே அது. தன் பின்னால் அணிதிரண்டிருக்கும் இந்துத்துவா தளத்தினை பிஜேபி இழந்து விடக்கூடாது, அதே வேளையில், திரிணாமுல் மீது நம்பிக்கை இழந்து வரும் மைனாரிட்டி மக்கள் திரிணாமுல் ஆதரவு நிலையிலிருந்து வெளியேறி, இடதுமுன்னணி பக்கம் போய்விடக் கூடாது. இந்த அடிப்படையில்தான் அந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், தேர்தல்களுக்குப் பின் னர் பெரும்பான்மை எண்ணிக்கை என வரும்போது, தனக்கு கூட்டாளிகள் தேவைப்படு வார்கள் என்ற எதிர்பார்ப்பில், பிஜேபி தலைவர் மேற்குவங்கத்திற்கான ஒரு சிறப்புத் திட்டம் (பெங்கால் பேக்கேஜ்) குறித்துப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் / பிஜேபி வழக்கம் போன்று இந்த இரட்டை நாக்குப் பேச்சுக் களில் ஈடுபட்டு வருகின்றன.

மக்கள் கேட்பது நிவாரணங்களே...!                    

          இந்த வகை ஏமாற்றுக்களின் பின்னணியில், மக்களுடைய மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சனைகள் மறக்கப்படுகின்றன. அவர்களுக்கு பல நிவாரணங்கள் தேவைப்படுகின்றன. கடுமையான பணவீக்கம், வேலையின்மை, அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் பல்வேறு துன்ப துயரங்களிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுகிறது. அத்தகைய நிவாரணம் ஒரு மாற்றுக் கொள்கைகளின் மூலம் தான் கிடைக்க முடியும். அதாவது, இன்று காங்கிரசும் பிஜேபியும் முன் வைப்பதற்கு மாற்றான கொள்கைகளின் மூலம் மட்டுமே அது சாத்தியம். இந்தத் தேர்தல்களில் அலை என்று ஏதாவது ஒன்று இருக்குமானால், அது நிவாரணம் கோருகின்ற மக்களுடைய அலையே அது.

மக்களின் அலையே வெல்லும்...!                   

              வெளி நிர்ப்பந்தங்கள், வாக்குகளுக்காக லஞ்சம் போன்ற ஏதுமின்றி, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் தேர்தல்கள் நேர்மையாக நடந்தால் மட்டுமே இது சாத்தியம். ஏழாவது கட்ட வாக்குப் பதிவில், வன்முறை, அச்சுறுத்தல், தசை பலம், பண பலம் இவை அனைத்தும் தேர்தல் களத்தில் – குறிப்பாக, மேற்கு வங்கத்தில் - விளையாடுவது குறித்து இன்று செய்திகள் பல வந்து கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சிக்கு எதிரான காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைவரின் குற்றச் சாட்டுக்களையும் தேர்தல் கமிஷன் பரி சீலித்து ஏற்பட்டிருக்கும் தவறுகளைத் திருத்த வேண்டும். முக்கியமாக, மீதியிருக்கும் இரண்டு கட்ட வாக்குப்பதிவில், ஜனநாயக நடைமுறைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் நாம் சந்திப்பதற்கு முன், மக்களின் அலை வென்றிருக்கும் என நாம் நம்பலாம்.

தமிழில் : தோழர்.இ.எம்.ஜோசப்
நன்றி : `ஹிந்துஸ்தான் டைம்ஸ் 5.5.2014’

கருத்துகள் இல்லை: