செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை - பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவரின் பொறுப்பற்ற பேச்சு...!

               சுதந்திரம் பெற்று நேரு காலத்திலிருந்து இன்றைக்கு மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ்காரன்களாக இருந்தாலும் சரி - பி.ஜே.பி- காரன்களாக இருந்தாலும் சரி ஒருவரையொருவர் ஊழலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நாடே அறியும்.  நாடு சுதந்திரம் பெற்ற பிறகு,  1948 - லிருந்து  பல்வேறு ஊழல்களை இந்த நாடு  சந்தித்து வருகிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. 2009 - ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து நிற்கும்படி, வகை வகையான ஊழல்களை அரங்கேற்றி வருவதை இந்த நாடே அறியும். 2 G ஸ்பெக்ட்ரம்  ஊழல்,  ஆதர்ஷ் வீடு கட்டுவதில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், பிரச்சார் பாரதியில் ஊழல் என புற்றிலிருந்து பாம்புகள் வெளியே வருவது போல் வந்துகொண்டிருக்கின்றன. பிரதமரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு  காங்கிரஸ் - பா. ஜ. க. கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் முதலமைச்சர்களும் மாநில அமைச்சர்களும் ஊழல்  செய்து சிக்கி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் பார்த்து   நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. 
                    ஆனால் பிரதமரோ எது நடந்தாலும் வாயையே திறக்கமாட்டேன் என்கிறார். அப்படியே திறந்தாலும் '' எனக்கு எதுவும் தெரியாது'' என்று சொல்வதற்கு மட்டும் வாயை திறக்கிறார். எதுவும் தெரியாமல் நமக்கு ஒரு பிரதமர் எதற்கு..? என்பது தான் நம்முடையக் கேள்வியாகும். ஊழல் செய்து கைதானவர்களேல்லாம், இந்த  ஊழல் பற்றி பிரதமருக்கும் தெரியும் என்று ஒரே மாதிரி பதிலைத் தான் சொல்கிறார்கள்.
                  அப்படியென்றால் பிரதமர் ஊழல் செய்யட்டும் என்று வேடிக்கைப் பார்த்திருந்தாரா..? என்பதும் நமது கேள்வியாகும். அதுமட்டுமல்ல ஒரு அமைச்சர் தவறு செய்கிறார் என்றால் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தானே அந்த பொறுப்பை ஏற்கவேண்டும். பிரதமருக்கும் ''இணைந்த பொறுப்பு'' தானே( Joint responsibility ) உண்டு என்று தானே இந்திய அரசியல் சாசனமும் சொல்கிறது. எதுவும் தெரியாத பிரதமருக்கு இதுவும் தெரியாதா..? என்பது தான்
நமக்குத் தெரியவில்லை. 
                  இதற்கெல்லாம் பொறுப்பேற்று  பதவி விலகி வேண்டிய பிரதமர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என ஊழலுக்கெதிரான    பல்வேறு இயக்கங்கள் நாடு  முழுதும் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், நேற்று சுதந்திரதின விழாவில் மன்மோகன் சிங் பேசும் போது,   ''ஊழலை ஒழிப்பதற்கு  அரசிடம்       மந்திரக்கோல் இல்லை''    என்று திருவாய்  மலர்ந்திருக்கிறார். ஒரு பொறுப்பான பதவியிலிருப்பவரின் பொறுப்பான பேச்சா இது என்று சந்தேகமாய் இருக்கிறது.
                நாடு முழுதும் இவ்வளவு ஊழல்கள் நடந்த வண்ணம் இருக்கிறது.  அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும்  - நடவடிக்கையும் எடுக்காமல், ஊழலை ஒழிப்பதற்கு அரசிடம் மந்திரக்கோல் இல்லை என்று சொல்வது மன்மோகன் சிங்  பிரதமர் பதவிக்கே லாயக்கில்லாதவர் என்று  தான் பொருள்.    
               வெளிப்படையான அரசு நிர்வாகமும் - நிர்வாக நடவடிக்கைகளும் இருந்தால் போதும்  ஊழலை ஒழித்துவிட முடியும்... இதைச் செய்வாரா மன்மோகன் சிங்..? 

கருத்துகள் இல்லை: