செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

பிரதமரே செய்யும் நில அபகரிப்பு - மக்கள் எங்கே செல்வார்கள் ?

              
                   இந்திய பிரதமர் மன்மோகன் சிங்  தொடர்ந்து எட்டாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுகிறாராமா..!  இதற்கு முன் நேருவும், இந்திரா காந்தியும் தான் அதிக முறையாக கொடி ஏற்றியிருக்கிறார்களாமா..! அதிக முறை கொடியேற்றிய பிரதமர்களில் இவரு மூன்றாவது காங்கிரஸ் பிரதமராமாமாமா...! பத்திரிகைகள் மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரே பெருமை பீற்றல்.. பிதற்றல்.. தாங்க முடியல..
                             அன்றைய தினம் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவிட்டு நம் மக்களுக்காக நம் மக்களிடம் உரையாற்றுவார்கள். மன்மோகன் சிங்கோ நம்  தேசக்கொடியை ஏற்றிவிட்டு அமெரிக்க   முதலாளிகளுக்காக கண்ணாடிக் கூண்டிலிருந்து நம்  மக்களிடம்  மக்களிடம் உரையாற்றுவார்.   அப்படியே தான் இருக்கட்டும்.. இந்த எட்டு ஆண்டுகளில் அவர் என்ன தான் சாதித்தார். சொல்லமுடியுமா..? சொல்லமுடியும்.. பல்வேறு சட்டங்கள் மூலம் அமெரிக்க முதலாளிகளுக்கும்,  இந்திய பன்னாட்டு முதலாளிகளுக்கும் தைரியமாக இந்த தேசத்தையே  கூறு போட்டு விற்றவர்.. இன்றும் விற்பவர்.
                   நேற்றைய தினம் செங்கோட்டையில் அவர் பேசியது என்ன தெரியுமா..? ''புதிய தொழிற்சாலைகளை நிறுவவும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தவும் நகர்ப்புறங்களை விரிவுபடுத்தவும் அனைத்து தரப்பாரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுவது அவசியம். தொழிற்சாலைகளை நிறுவவும் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கவும் நகர்ப்புறங்களை விரிவாக்கவும் நிலங்கள் தேவைப்படுகின்றன. அந்த இடங்கள் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் சொந்தமானதாக இருக்கும்போது அவர்களுடைய வாழ்வாதாரங்களைப் பறிக்காமல், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடாமல் செயல்பட வேண்டியது அரசின் கடமையாகிறது. அதற்காகவே விவசாயிகள், நிலத்தைச் சார்ந்துள்ள நிலமற்ற விவசாயக்கூலிகள், கிராமப்புற மக்கள், பழங்குடிகள் போன்றோரின் நலன்களைக் காக்கும் வகையில் அனைத்து தரப்பாரிடமும் ஆலோசனைகள் பெற்று புதிய சட்டம் இயற்றப்படவிருக்கிறது'' இதை படிக்கும் போது ஏதோ நல்லவரைப்போல - மக்கள் மீது அக்கறையுள்ளவர் போல நமக்கு தோன்றும்.
                  மக்கள் நிலங்களை அபகரிக்கும் இந்த புதிய சட்டம் எதற்கு. ஏற்கனவே அரசின் தவறானக் கொள்கையினால் விவசாயத்தில் வருமானம் இல்லாமல், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, திருப்பித் தரமுடியாமல் இந்த நாட்டில் தினம் ஐம்பது விவசாயிகள் நொந்து போய் தற்கோலை செய்து கொண்டு சாகிறாகள். அவர்களைப் பற்றிய அக்கறை இந்த பிரதமருக்கு இல்லை.. விவசாயம் வீழ்ச்சியடைந்து  விட்டதால், வேலை இழந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இன்றைய தினம் கட்டுமான தொழில் செய்யவும், இரவு நேரங்களில் சாலைகளை பெருக்கும்   துப்புரவுப்  பணி செய்யவும்  கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிய சிந்தனை துளிக் கூட இந்த பிரதமருக்கு இல்லை.. ஆனால் விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், மலை வாழ் பழங்குடி இன மக்கள் - என இவர்கள் வயிற்றில் அடித்து விட்டு,  அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அவர்களின்  நிலங்களை அபகரிப்பது - அதற்கொரு சட்டம் போடுவது நியாயம் தானா..? 
                          நகர்புற விரிவாக்கம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பனிகளின் விமானப் போக்குவரத்துக்கு விமான நிலையம் அமைப்பதற்கும், ''வால்மார்ட் '' என்கிற அமெரிக்க சூப்பர் மார்க்கெட் -ஐ நம் நாட்டில் தொடங்கவும், (  சில்லறை வர்த்தகத்தில் நூறு சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை  மன்மோகன்  அரசு  அனுமதிக்கிறது. அதனால் நம் நாட்டில் பரம்பரை பரம்பரையாக  மளிகைக்கடை, காய்கறிக்கடை, மீன் கடை, துணிக்கடை வைத்திருந்து வியாபாரம் செய்பவர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போகவேண்டியது தான் )  தொழிற்சாலைகள் என்ற பெயரில் அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகளை - அதுவும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் தொழிற்சாலைகளை இங்கே அமைப்பதற்கு இலவசமாய் நிலத்தைக் கொடுத்து - மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்றவற்றை 24 மணிநேரமும்   இலவசமாய் விநியோகம் செய்து ( அதன் மூலம் மக்களுக்கு ஐந்து மணிநேர மின்வெட்டு - அதை பற்றியும் பிரதமருக்கு கவலை இல்லை என்பது வேறு விஷயம் ) அரசுக்கு வரவேண்டிய வரிகளிலும் அவர்களுக்கு விலக்களித்து - சிறப்புப் பொருளாதார மண்டலம்  என்ற பெயரில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் தான்  இன்றைக்கு  இந்திய பிரதமர் இந்திய மக்களிடமிருந்து சட்டப்பூர்வமாக செய்யப்போகும்  நில அபகரிப்பு என்பதை தான் நேற்று சுதந்திர தின  விழாவில் அவர்  பேசினார்  என்பதை  அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பெயர் தான் '' நாட்டின் வளர்ச்சி - முன்னேற்றம்'' என்கிறார் பிரதமர். ஆனால் இந்த  சட்டத்தால்  யாருக்கு வளர்ச்சி..? யாருக்கு முன்னேற்றம்..? என்பது நம்முடைய கேள்வி ஆகும்..
                 எனவே அமெரிக்க முதலாளிகளுக்காக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு கருத்தொற்றுமை அடிப்படையில் அனைத்து தரப்பாரிடமிருந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டு இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.   
                    எச்சரிக்கை : நாம் கொஞ்சம் ஏமாந்தா வேட்டியையும் உருவிக்கொள்வார் நம் பிரதமர் ஜாக்கிரதை.

கருத்துகள் இல்லை: