ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரேவின் நாடகம் முடிவுக்கு வந்தது - இறுதியில் அசாரேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது...!

                    தமிழ்நாட்டில் ஆடி மாதம் அம்மன் கோயில் திருவிழா மாதிரி கடந்த 13 நாட்களாக புதுடெல்லி ராம்லீலா மைதானம் விழாகோலம் கொண்டிருந்தது என்று தான் சொல்லவேண்டும். நாட்டில் பசியால் வாடிக்கொண்டிருக்கும் பல சாப்பிடுவதற்கு எவ்வளவு கோடி வேண்டுமென்றாலும் செலவு பண்ணலாம். ஆனால், ராம்லீலா மைதானத்தில் ஒருவர் சாப்பிடாமல் இருக்க கடந்த பதிமூன்று நாட்களாக பலகோடி ரூபாய்களை செலவு செய்திருக்கிறார்கள் என்பது தான் ஒரு கொடுமையான தகவலாகும். மேடையில் இருக்கும் அன்னா மட்டும் ஒன்றும் சாப்பிடாமல் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவரை சுற்றி இருப்பவர்களும், அவரை வேடிக்கை பார்க்க குழந்தைகளுடன் வந்தவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அன்னாவுக்கு மட்டும் அவ்வப்போது எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள்.
                        சிறு சிறு வியாபாரிகள் அன்னாவுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நம்ம ஊரு கோயில் திருவிழா போல் பல சாலையோரக் கடைகளும், பட்டாணி, மணிலா, பாணி பூரி, ஐஸ் கிரீம், குல்பி, பலூன், ஹசாரே தொப்பி, வெள்ளரி பிஞ்சு, குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள்  என சிறு சிறு கடைகளும்,  தள்ளுவண்டிக்கடைகளும், சிறிய உணவகங்களும் என கடந்த பதிமூன்று நாட்களாக ராம்லீலா மைதானமே கலை கட்டியது. இப்படி சாப்பிட்டு போடப்பட்ட குப்பைகள் எல்லாம் அந்த மைதானத்தில் மலை போல் குவிந்து கிடைக்கின்றதாம்.
          இன்னும்  அன்னா உண்ணாவிரதத்தை தொலைக்காட்சியில் தொடர்ந்து போட்டுக்காட்டி பலகோடி  ரூபாய்களை சுருட்டிய தொலைக்காட்சிகளும் உண்டு.   அதுமட்டுமல்ல, அன்னாவின் உண்ணாவிரதம்  இன்னும் சில நாட்கள் தொடர்ந்திருந்தால், ராட்டிணம் மற்றும் சிறுவர் ரயில் என அவைகளும் வந்திறங்கியிருக்கும்.
                     இப்படியான பதிமூன்று நாள் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் இன்று காலை முடிவுக்கு வந்தது. ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவர அன்னாவும், அன்னாவின் குழுவினரும் படாத பாடுபட்டுவிட்டனர் என்று தான்
சொல்லவேண்டும். 
               நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அன்னா அசாரே ''முன்மொழிந்த''  ''ஜன் லோக்பால்'' மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தான் அன்னாவின் உண்ணாவிரத நாடகம் அரங்கேறியது. ஆனால்  கழுதை தேய்ந்து  கட்டெறும்பு ஆனது போல் உப்புச்சப்பில்லாத மூன்று நிபந்தனைகளையாவது தீர்மானமாக நிறைவேற்றினால் போதும்  என்கிற  அளவுக்கு அன்னா இறங்கி வந்தார் என்பது தான் உண்மை. அந்த தீர்மானம் கூட பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு  இன்னும்  நாள் பிடிக்கும் என்கிற சூழ்நிலையிலும், உண்ணாவிரதமும் ஏழு  நாட்களை தாண்டி  கடந்துவிட்ட சூழ்நிலையிலும் உண்ணாவிரதத்தை எப்படி முடிவுக்குக்கொண்டுவருவது என்ற குழப்பத்திற்கு அன்னாவும் அவரது குழுவினரும் வந்துவிட்டனர். அதனால் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்தனர். இறுதியில் அன்னாவுக்கு நெருக்கமாய் இருக்கக்கூடிய ஆர். எஸ். எஸ் தூண்டுதலின் பேரில் பாரதீய ஜனதா கட்சி உதவிக்கரம் நீட்டியது. பா. ஜ. கட்சி தான்  தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் அழுத்தத்தைக் கொடுத்தது.
                                       அதன் காரணமாகத் தான், நேற்று சனிக்கிழமை ஒரு நாள்  சிறப்புக் கூட்டத்தை நடத்தி பாராளுமன்றத்தில் அன்னா சொன்ன நிபந்தனைகளை தீர்மானமாய் நிறைவேற்றப்பட்டது. அன்னா எதிர்பார்த்து - கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கியது போல் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப் பாடாமல் அன்னா அசாரே ஏமாற்றமடைந்தார் என்பது  யாராலும் மறுக்கமுடியாத உண்மை. தான் கேட்டுக்கொண்டது போல் ''ஜன் லோக்பால்'' மசோதா நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் தீர்மானத்தை காரணம் காட்டி அன்னா அசாரே ஒருவழியாய்  உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். வேஷத்தை கலைத்துக் கொண்டார்.
                       இதன் மூலம், பாராளுமன்றமும், அரசியலமைப்புச் சட்டமும் தான் நம் தேசத்தில் உயர்ந்தது என்பது நிருபணமாகியுள்ளது என்பது நிம்மதியளிக்கிறது.

கருத்துகள் இல்லை: