புதன், 17 ஆகஸ்ட், 2011

அரசால் செய்யப்படும் உயிர் கொலையே மரண தண்டனை..!


                     சென்ற ஒரு வாரமாக இப்போது வரை  தமிழகத்தில் ஒரே பரபரப்பு... கடந்த 1991 - ஆம் ஆண்டு  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு, சாட்சிகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில்  சிறப்பு நீதிமன்றத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டு, பிறகு உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்து பின் மத்திய அரசுக்கு கருணை மனு அளிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியாக தங்கள் கருணை மனுவை தாயுள்ளத்துடன் கவனித்து, தங்கள் மீது இறக்கம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்வார்கள் என்று நம்பிக்கையோடு எதிர் பார்த்திருந்த சூழ்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் அம்மா பிரதீபா பாட்டில் அவர்களும் அந்த கருணை மனுவை நிராகரித்து மரணதண்டனையை உறுதி செய்தது என்பது குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் மனித நேயம் கொண்டோர்க்கும், மனித உரிமைகள்  மீது அக்கறை உள்ளவர்களுக்கும் அது ஒரு பேரதிர்ச்சியாக தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
.     பொதுவாகவே, இன்றைக்கு மரணதண்டனையை எதிர்த்தும்  மரணதண்டனையை ரத்து செய்யக்கோரியும்  நாட்டின் பல பகுதியில் உள்ள மனிதநேயமிக்கவர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் என பலர்   உரத்த குரல் எழுப்பி வருகிறார்கள். பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை என்பது எழுப்பப் பட்டு தான் வருகிறது. இன்று ராஜீவ் கொலையாளிகள் என்று சொல்லப்படுகிற மேலே சொன்ன மூன்று பேரையும் தூக்குக்கயிறு நெருங்கி வருவதால்,  தங்களை தமிழினத் தலைவர்களாக பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள் எல்லாம் அவர்கள் மூவரையும் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறார்கள்.  
                   கடந்த பல ஆண்டு காலமாகவே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வரும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், '' மரணதண்டனை என்பது அரசின் கோழைத்தனத்தை குறிப்பதாகும். அது  எந்த பலனையும்  கொடுக்காது. மரணதண்டனை விதிப்பது என்பது முட்டாள்தனமானது. நீதித்துறையில் உள்ள தூக்குதண்டனை என்கிற இந்தக் கறையை நீக்கவேண்டும்'' என்று மரணதண்டனையைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
                   தண்டனை என்பது குற்றவாளிகளை திருத்துவதற்கு தானே அன்றி சாகடிப்பதற்கு அல்ல. கொன்றுவிடுவதால் அவன் திருந்துவதற்கு வாய்ப்பில்லையே. இதுவரை கொலைக் குற்றவாளிகளுக்கு நீதி மன்றத்தினால் தூக்கு தண்டனை கொடுத்ததில் நாட்டில் கொலைக்குற்றங்கள்
குறைந்தாதா என்றால், அப்படியொன்றும் இல்லையே..! மாறாக, ஆண்டாண்டு அதிகரித்துக்கொண்டு  தானே இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. கொலை  செய்வதவனை  தூக்கிலிடுவது  என்பது ஒரு  கொலைக்கு சமமானது. இது அரசே  செய்கிற  கொலை ஆகும்.  இது மனிதத்தன்மையற்றது. காட்டுமிராண்டித்தனமானது. உயிர் வாழும் உரிமை என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும்.  அரசும் சமூகமும்  மதிப்பு மிக்க மனித உயிர்களை மதித்திடவேண்டும்.
                      நீதியரசர். வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்பாவி இளைஞர்களை தூக்கிலிடுவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அன்றும் இன்றும் தூக்குதண்டனை என்பது ஆட்சியாளர்களின் கொடிய முகமாகவே இருக்கிறது.
               முன்பு ஒருமுறை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கமிஷன் மரணதண்டனையை தடை செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்திய போது, அந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாதது வெட்கக்கேடானது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குதண்டனையை - மரணதண்டனையை ரத்து செய்திருக்கின்றன. ஆனால்  இந்தியா உட்பட வெறும் 58 நாடுகளில் மட்டுமே மரணதண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
                   மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. அதற்கு நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் அவர்கள் தலைமையில் அணி திரள்வோம்.

           ராஜீவ் கொலை குற்றவாளிகளை கருணை அடிப்படையில் காக்க வேண்டி ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற  நீதிபதி நீதியரசர் வி. ஆர். கிருஷ்ண அய்யர் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


 ------------------------------------------------------------------------------------------------------

                                                                                                                                 ஆகத்து 14, 2011 

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

                 இந்தியாவின் தலைமை நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளைஞர்களும் தூக்கிலிடப்படப் போவதை அறிந்து மிகவும் மன வருத்தம்  அடைந்தேன். அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.இராசிவ்காந்தி அவர்களின் மனைவி சோனியா அவர்களும் இவர்களைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடன்படுவதாகக் கூறினார். இவர்களின் உயிரைக் காக்க நான் மேற்கொண்ட அனைத்து முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.

                 அன்புள்ளம் கொண்ட அம்மையார் அவர்களே, இவர்களின் உயிரைக் காக்க தண்டனைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கத் தங்களை வேண்டுகிறேன். தங்களின் பரந்த மனத்தோடு, மனிதநேய அடிப்படையிலும் கருணை அடிப்படையிலும் இம்மூவர் உயிர் காக்க வேண்டுகிறேன். இந்த மனிதநேயச் செயலுக்கு வையம் முழுதும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.  தங்களின் நல்லாட்சி சிறக்கவும் தங்களின் புகழ் பரவவும் அந்தக் கடவுள் உங்களுக்கு அருள்வாராக !

வாழ்த்துகளுடன்

தங்கள் உண்மையுள்ள,


(வி.ஆர். கிருஷ்ண அய்யர்)

பெறுநர்
மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா
முதல் அமைச்சர், தமிழ்நாடு
போயஸ் தோட்டம்
சென்னை
தமிழ்நாடு


கருத்துகள் இல்லை: