செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

புதிய மருத்துவமனை - மருத்துவக்கல்லூரிக்கு Dr. முத்துலட்சுமி ரெட்டி பெயரிடுங்கள்..

                 தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு விடிவுக்காலம் வந்தாச்சு. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் - குறிப்பாக ஏழை- எளிய மக்கள் அனைவரும் பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதே. இந்த மருத்துவமனை மூலம் ஏழை  - எளிய மக்களுக்கு இலவசமாய் மருத்துவம் கிடைப்பது மட்டுமல்லாது, மருத்துவம்  பயின்ற, மருத்துவம்  சார்ந்த கல்வி பயின்ற - வேலை தேடும் இளைஞர்கள்  ஆயிரக்கணக்கானோருக்கு    வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
    
தமிழக அரசுக்கு அன்பான ஆலோசனை :
                    அந்த புதியக் கட்டிடத்தில் உருவாகும் புதிய மருத்துவமனைக்கும் மருத்துவக்கல்லூரிக்கும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பெயரை வைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பல பெருமைகளைச் சேர்த்த முதல் இந்தியப் பெண்மணி என்பதில் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். அவரது வாழ்க்கை  வரலாறே இன்றையத் தலைமுறையினருக்கு  - குறிப்பாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். 
                     அவர் தன் மாணவப் பருவத்திலிருந்தே பல்வேறு முற்போக்கான செயல்களைச் செய்திருக்கிறார். இவர் அதுவரை ஆண்கள் மட்டுமே படித்து வந்த மருத்துவக்கல்லூரியில் இந்தியாவிலேயே  மருத்துவம் பயில சேர்ந்த முதல் பெண்மணி இவர் தான் என்பது மெய்சிலிர்ப்பாய் இருக்கிறது. அதுவரையில் இந்தியாவில் மருத்துவப் படிப்பென்றால் ஆண்கள் மட்டுமே சேர்ந்து படிக்கும் ஒருதலைப் பட்சமான சமூகத்தின் பழக்கத்தை தான் மருத்துவம் பயின்று  உடைத்தெறிந்தார். இந்தியாவிலேயே மருத்துவம் பயின்ற முதல் பெண்மணியும் இவர் தான்.
                           அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் இவர் தான் என்பது பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமாகும். தமிழக மேலவையின் முதல் பெண் துணைத் தலைவர்  என்கிறப் பெருமையும் இவரையே சாரும். இந்த காலத்தில் தான் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பெண்குழந்தைகளுக்கு இலவச கல்வி திட்டத்தைக் கொண்டுவந்தார் என்பதும் ஒரு மறக்க முடியாத வரலாறு ஆகும். சென்னையில் உள்ள அடையாறு புற்று நோய் மருத்துவமனையினை தொடங்கி வைத்து நடத்தியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாகும். பெண்ணுரிமை - பெண்விடுதலை ஆகியவற்றிற்கு ஓயாமல் போராடிய முற்போக்காளர். சுதந்திர போராட்ட வீரர்களான சரோஜினி நாயுடு அம்மையார், டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையார், காந்தி மற்றும் தந்தை பெரியார் போன்ற தலைவர்களோடு தொடர்பு வைத்திருந்தார். தந்தை பெரியார் அவர்களோடு இருந்த நட்பு தான் தேவதாசி முறை ஒழிப்புக்கு வழிகாட்டியது.
                          இப்படியாக பல்வேறு  பெருமைகளையும் திறமைகளையும் கொண்ட முத்துலட்சுமி ரெட்டி  அம்மையார் அவர்களின் 125 - ஆவது பிறந்தநாளை ( 30 ஜூலை 1886 ) கொண்டாடும் இந்த  நேரத்தில் அவரது பெயரை புதிய மருத்துவக்கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் சூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும். அவரது வாழ்க்கையே இன்றைய பெண் குழந்தைகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை: