திங்கள், 1 ஆகஸ்ட், 2011

நாங்கள் கேட்பது தனிநாடு அல்ல.. சுயாட்சி மாநிலம் தான்..

                 சென்ற ஜூலை 30 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டஇலங்கை தமிழர் சம உரிமை - அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர். பிரகாஷ் காரத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று அம்மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது இலங்கை நிலவரம் குறித்து அவர் பேசிய உருக்கமான பேச்சிலிருந்து நம் நெஞ்சை வலிக்கச் செய்யும்  சில முக்கியமான வரிகள் இதோ இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது..
               இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதையும், அவர்களின் பண்பாடு சிதைக்கப்படுவதையும், உரிமைகள் நசுக்கப்படுவதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப்போகிறதா? இந்தியா ஏற்கப்போகிறதா? ஜனநாயகத்தை விரும்புவோர் ஏற்கப்போகிறார்களா? என்ற கேள்வியை இந்த மாநாட்டின் மூலம் முன் வைக்கிறோம். நாங்கள் தமிழ் ஈழம் கேட்கவில்லை, தனி நாடு கேட்கவில்லை, ஆயிரக்கணக்கானவர்களை இழந்த பிறகும், வாழ்வுரிமைகளை பறித்த பிறகும், சிங்கள மக்களோடு இணைந்து வாழவே நாங்கள் விரும்பு கிறோம். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமையைத்தான் கேட்கிறார்கள். தாங்கள் வாழும் பகுதியை எப்படி மேம்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். எங்களின் மொழியை, எங்களின் வாழ்வை, எங்களின் பண்பாட்டை எப்படி வளர்க்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றுதான் கூறுகிறார்கள். 1987ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது திருத்தம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை அது நடை பெறவில்லை. அடுத்தடுத்து 5 முறை செய்யப்பட்ட வேறு திருத்தங்களால் அந்த ஒப்பந்தமும் நீர்த்துப்போய்விட்டது.
                 இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு மாறிமாறி ஆதரவு தருகின்றன. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ள அரசியல் நிர்பந்தமும், பொருளாதார நிர்பந்தமும் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவாக இருப்பவர்கள் தமிழர்கள் மட்டும்தான் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். இப்போதும் இந்தியாவைத்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம் என்ற சமஷ்டி முறையை அமல்படுத்தி வடகிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி உரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம். இதற்காக சர்வ கட்சிக் குழு ஒன்றையும், நிபுணர் குழு ஒன்றையும் இலங்கை அரசு நியமித்தது. அந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரை நல்லதாகவே இருந்தது. இதனடிப்படையில் பேச்சு வார்த்தையை துவக்கலாம் என்று கூறியபோது, மீண்டும் நாடாளுமன்ற குழு ஒன்றை அமைப்பதாக இலங்கை அரசு அறிவித்துவிட்டது. இது பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் தாமதப்படுத்தும் யுக்தியே தவிர வேறில்லை.
           இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வுகாண வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நம்பிக்கையோடு முன்வைக்கிறோம். ஏனென்றால் தில்லிவரை இந்தக் கோரிக்கையை ஒலிக்கச்செய்யும் வலுவான இயக்கம் இது என்பது எங்களின் கருத்தாகும்.
              இவ்வாறு இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை என்பது யுத்தக் காலத்தை விட மோசமாக உள்ளதை உருக்கமாக பேசி முடித்தார். அவர் பேசி முடித்தவுடன் தோழர். பிரகாஷ் காரத் வரும் ஆகஸ்ட் 9 - ஆம் தேதி புதுடெல்லியில் பாராளுமன்றத்தின் முன்பும், தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த மாநாட்டு மேடையிலேயே அறிவித்தார். 

கருத்துகள் இல்லை: