வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்..!

                                                                  
ஊழல் புற்றுநோயை                      
வேரறுக்க போராடுவோம்!         
தோழர் என்.சங்கரய்யா அழைப்பு
                                                                 
                                                                    
                                                                  

              அனைத்துப் பகுதி மக்களும் ஒன்று திரண்டு போராடி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அழைப்பு விடுத்தார்.

            நாட்டின் 65வது சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் “ஊழல் எதிர்ப்பு, பொதுவாழ்வில் தூய்மை, மக்கள் நலனுக்கே முன்னுரிமை” என்ற முழக்கத்தை முன்வைத்து சுதந்திரதின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய, கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் என். சங்கரய்யா இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:

               ''இன்று ஊழல் என்ற புற்றுநோய் நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகள் ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருகிறார்கள். அரசியல் வேறுபாட்டைக் கடந்து உழைப்பாளிகள், விவசாயிகள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் என மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும்.
              ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளை சில சக்திகள் திசைதிருப்ப முயற்சி செய்கின்றன. அவர்களுடைய அரசியலுக்கு நாட்டுமக்கள் பலியாகக்கூடாது. ஊழலை ஒழிக்கும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டா, இல்லையா என்ற சர்ச்சை எழுப்பப்படுகிறது. 120 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற நாடாளுமன்றம்தான் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் கொண்டது. நாடாளுமன்றம் சரியான - ஊழலை ஒழிக்கக்கூடிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
            பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண் டும். அவ்வாறு செய்தால் உறுதியற்ற நிலை உருவாகும் என்பது தவறு. சட்டத்தில் யாரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. தலைவர்களையும், அதிகாரிகளையும் இச்சட்டத்திற்குள் கொண்டு வந்தால் தான் ஒரு அச்ச உணர்வு இருக்கும்.
           நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்கப்பட்டது குறித்து தில்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அரைமனதோடு இந்த வழக்கை விசாரித்தனர் என்று உச்சநீதிமன்றம் விமர்சித் திருப்பதை நினைவுப்படுத்துகிறேன்''


 தோழர். என்.சங்கரய்யா  அவர்களை பற்றி...                             

                        தோழர். சங்கரய்யா அவர்கள் ஊழலை ஒழிப்பதற்காக திடீரென்று  அவதாரம் எடுத்த பரமாத்தமா கிடையாது. இவர்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். இந்த தேசத்தின் விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து போராடிய வீரம் செறிந்த போராளி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமலேயே, போராடியதாக பொய்சொல்லி ''தியாகி பென்ஷன்'' வாங்கும் காங்கிரஸ்காரர்கள் மத்தியில் , ''தேசத்தின் விடுதலைக்காக போராடியது என்பது எங்களது கடமை.  எங்கள் கடமைக்கு - வீரம் செறிந்த போராட்டத்திற்கு விலை பேசவேண்டாம் என்று  கூறி அரசு தரும் தியாகி பென்ஷன்- ஐ  இன்று வரை  அரசிடமிருந்து வாங்காத  வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களில் இவரும் ஒருவர் என்பது  நமக்கெல்லாம் பெருமையளிக்கக் கூடிய விஷயம் ஆகும்.
               இவரும்  இவரது கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியும் இந்தியாவில் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஊழலுக்கு எதிரான இயக்கங்களை நடத்தி வருகின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகவே பிரதமரையும், நீதித் துறையும் இணைந்த ''லோக்பால்'' மசோதா தேவை என்று தொடர்ந்து போராடிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக தோழர். என். சங்கரய்யா பணி  புரிந்து  வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நன்றி.

rajamelaiyur சொன்னது…

Really super post

rajamelaiyur சொன்னது…

Try to visit www.kingraja.co.nr