செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

தை - தமிழ்ப் புத்தாண்டு - மதச்சாயமோ அரசியல் சாயமோ பூசாதீர்கள்..

               சமச்சீர் கல்விக்குப் பிறகு, தமிழக சட்டமன்றத்தில் பிறந்து இரண்டே ஆண்டுகள் ஆன தை - தமிழ்ப் புத்தாண்டு திமுகச் சாயமும் மதச்சாயமும் பூசப்பட்டு  பலியிடப்பட்டது. இப்போதெல்லாம் தமிழக சட்டமன்றம் திமுக ஆட்சிக் காலத்து ஆடுகளை பலிகொடுக்கும் பலிபீடமாய் மாறிவிட்டது. தினமும் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் சட்டமன்றத்திற்குள் நுழையும் போதெல்லாம் இன்றைக்கு எந்த ஆடு பலியாகப் போகிறதோ என்று ஒரு மிரட்சியுடன் தான் உள்ளே நுழைகிறார்கள். 
                        அப்படித் தான் திமுக ஆட்சிக்காலத்தில் 2008 - ஆம் ஆண்டில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்ட தை - தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் இன்னொரு சட்டத்தின் மூலம் சித்திரை - தமிழ்ப் புத்தாண்டாக மாற்றிவிட்டனர். அதற்கு முதலமைச்சர் சோதிடம், வானசாஸ்திரம், மதம் போன்ற அறிவியலுக்கோ வரலாற்றுக்கோ பொருந்தாத சான்றுகளை அள்ளி வீசி, திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக தமிழ்ப் புத்தாண்டு  என்பது தை முதல் நாளாக மாற்றப்பட்டது என்று கூறி ''சுவாஹா'' என்று முடித்து விட்டார்.
                தை - தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பதற்கான நியாயமான சான்றுகள் கடந்த கால வரலாற்றிலும், இலக்கியங்களிலும் உள்ளன என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
                தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்பகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை தமிழ்மக்களிடம் பழக்கத்தில் வந்துள்ளது. இந்த ஆண்டு கணக்கீடு பற்சக்கர முறையில் அமைந்துள்ளது. அறுபது ஆண்டுகள் ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது தமிழறிஞர்களின் வாதம்.
              இதையொட்டி குமரிக் கண்டமாக தமிழர் நிலப்பரப்பு பரந்து விரிந்திருந்த காலம் தொட்டே தை முதல் நாளே தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடினர் என்று கூறி, தனித் தமிழர் இயக்கத் தலைவர் மறைமலை அடிகளும் 500க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களும் புலவர்களும் வரலாற்று ஆசிரியர்களும் ஒன்று கூடி விவாதித்து, கடந்த 1921-ம் ஆண்டில் அறிவித்தனர். இந்த அறிவிப்பை 1971ம் ஆண்டு ஆட்சியிலிருந்த தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
            அப்போதிலிருந்து தமிழர்களின் ஆண்டு என்பது திருவள்ளுவரின் பிறப்பை (இயேசு கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்கிறது தமிழ் வரலாறு) மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டது. தமிழக அரசுத் துறை சார்ந்த அனைத்து ஆவணங்களிலும் திருவள்ளுவராண்டும், தை முதல் நாளை மையப்படுத்திய புத்தாண்டு முறையும் நடைமுறையிலிருந்தது. அரசிதழிலும் இது வெளியாகியுள்ளது. தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று தமிழக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது

 பண்டை காலத்திலேயே தை புத்தாண்டு :

                   உலகில் பூர்வகுடி மக்களாக சில ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் குமரி கண்டம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு வாழ்ந்த தமிழர்கள் இயற்கையை வணங்கி வந்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை  என  இவை தான் மாறி மாறிப் பருவக் காலங்களாக  மனிதனை ஆண்டு வந்ததால்,  தமிழன் ''ஆண்டு'' என்று அழைத்தான் என்று சொல்லப்படுகின்றது.  மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் முன்னதானது  என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க  நூல்களிலும் காணப்படும் வானியல்  செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரே தமிழர்கள் வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.  பண்டையத் தமிழர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள்  சூரியன் மற்றும் சந்திரன்  ஆகியவற்றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் இயற்கையை  ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் கால பகுப்பு :

பொழுது, நாழிகை :   

"வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு,மாலை, யாமம்" என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக பகுத்திருந்தனர். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை அறுபது நாழிகைகள் எனவும் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன.
  1  நாழிகை -  24 நிமிடங்கள்
60  நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள்- 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்
இவ்வாறு இன்றைய நவீன காலக் கணிப்பீட்டு முறையுடன் அச்சொட்டாகப் பொருந்தும் வகையில், பண்டையத் தமிழரின் காலக் கணிப்பீட்டு முறைமை மிகவும் நுட்பமாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பருவ பகுப்பு

தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான்.
1. இளவேனில் - தை - மாசி மாதங்கள்
2. முதுவேனில் - பங்குனி - சித்திரை மாதங்கள்
3. கார் - வைகாசி – ஆனி மாதங்கள்
4. கூதிர் - ஆடி - ஆவணி மாதங்கள்
5. முன்பனி - புரட்டாசி – ஐப்பசி மாதங்கள்
6. பின்பனி கார்த்திகை - மார்கழி மாதங்கள்

தமிழர்களின் ஆண்டு பகுப்பு                                            

  • 2 கண்ணிமை - 1 நொடி
  • 2 கை நொடி - 1 மாத்திரை
  • 2 மாத்திரை - 1 குரு
  • 2 குரு - 1 உயிர்
  • 2 உயிர் - 1 சணிகம்
  • 12 சணிகம் - 1 விநாடி
  • 60 விநாடி - 1 நாழிகை
  • 2 1/2 நாழிகை - 1 ஓரை
  • 3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
  • 2 முகூர்த்தம் - 1 சாமம்
  • 4 சாமம் - 1 பொழுது
  • 2 பொழுது - 1 நாள்
  • 15 நாள் - 1 பக்கம்
  • 2 பக்கம்(30 நாள்) - 1 மாதம்
  • 6 மாதம் - 1 அயனம்
  • 2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
  • 60 ஆண்டு - 1 வட்டம்
-என்று தமிழர்களால் தெறிப்பளவு (Time Measure) முறையில் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வந்துள்ளன

அறிஞர்கள் பார்வையில் தமிழ் புத்தாண்டு

               பண்டையத் தமிழர் தம் தாய் மொழியாக தமிழையும், தமது நாகரீகத்தையும், தம் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை, தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியினரான உலகின் மூத்த தமிழ்க் குடியினர், அவர்களது மொழி மற்றும் வாழ்வியல் கூறுகளை பூமியின் சுழற்சியை சரியாக மதிப்பிட்டும், இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தும் தமது காலக் கணிப்பீட்டு முறைமைகளை உருவாக்கியவர்களாவர்.
                ''காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப் படுத்திக்கொண்டான்''
                 பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்றே அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முந்தைய  நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது - போகியது - போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது. எனவே போகி என்பது போக்கிய நாளானது. (பழைய ஆண்டு) புது நாள் என்பது புத்தாண்டாகவும் கொள்ளப்பட்டது. எனவே தமிழரின் புத்தாண்டு பழந்தமிழரின் காலக் கணிப்பீட்டுக்கு அமைவான தை மாதம் முதலாம் நாளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.

''தை'' முதல் நாளே தமிழன் புத்தாண்டு என்று கூறுவதற்கான சான்றுகள் :

               தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம். "தை பிறந்தால் வழி பிறக்கும்" எனும் தமிழர் முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்" என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.
              தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு இன மக்களும் தத்தமக்குரிய புத்தாண்டை இளவேனில் காலத்திலேயே கொண்டாடுகின்றனர்.  அன்றைய தினமே தத்தமது புதுப் பணிகளையும், நற்செயல்களையும் தொடங்குகின்றனர். ஆனால் சித்திரை மாதத்தில் குறிப்பாகத் தமிழர்கள் எந்த நற்செயல்களையும் தொடங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
              தை மாத தொடக்க நாளை தமிழர்கள் தைப்பொங்கல் நாளாக காலம்  காலமாக கொண்டாடி வருகின்றனர். அதில் தோரணங்கள் கட்டுதல், புதுப் பானையில் புது நீர் அள்ளி பொங்கல் வைத்தல், பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்” என ஆரவாரம் செய்தல், பொங்கலை பரிமாறி உண்ணல், புத்தாடை அணிதல், முன்னோர்க்கு படையல் இடுதல், மாடுகளுக்கு உணவளித்தல், பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல் போன்ற செயல்பாடுகள் தமிழர்களிடையே பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன.
              இவை அனைத்தும் நீண்ட நெடுங்காலமாக யப்பானியர்களாலும் கடைப்பிடிக்கப் படுகின்றது. இது அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஒருமைப்பாடு இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
               இந்த தைப்பொங்கல் நாள் பண்டையக் காலம் தொட்டே சமயச்சார்பற்று அனைத்து தமிழர்களது  திருநாளாக விளங்குகின்றது. அதேப் போன்றே தை மாதம் முதல் நாள் தொடங்கும் தமிழ் புத்தாண்டு நாள்; உலகில் தமிழ் பேசும் அனைவரதும் புத்தாண்டு பிறப்பு நாள் என்பது தமிழ் அறிவியலாளர்களின் ஆய்வில்  முடிவாகியுள்ளது.
                 தமிழ்ப் புத்தாண்டு  பற்றிய வரலாற்றை தமிழ்  மக்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ளவேண்டும்.

5 கருத்துகள்:

tamilan சொன்னது…

click and read


>>> ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள். <<<

.

Unknown சொன்னது…

தமிழன் சொல்வதை வ்ழிமொழிகிறேன்.

வடக்குபட்டி ராமசாமி சொன்னது…

தமிழ் புத்தாண்டை பொங்கல் அன்று கொண்டாட 1921 ஆம் ஆண்டு மறைமகை அடிகள் உள்ளிட்ட 500 தமிழ் அறிஞர்கள் ஆலோசனை சொன்னாராம்!!சரி 1967 இல திமுக ஆட்சிய பிடித்து 1969 இல மு.க முதல்வரானாரே!!அப்பவே ஏன் இதை செய்யல?ஒரு பண்டிகையை அரசு தன போக்கில் மாற்றும் கப்பிதனம் தமிழ்நாட்டில்தான் நடக்கும்!அப்புறம் இப்படி ஆராய்ச்சி பண்ணா ஆங்கில வருட பிறப்பு கூட அக்டோபரில் வரும்.அதையும் மாத்த வேண்டியதுதானே!!இந்த பகுதரிவுவாதிகளுக்கு இது பத்தி என்ன கவலை?இதை கொண்டாடுவதே இந்துக்கள்தான்!!சும்மா பகுத்தறிவு கொழுந்துகள் எல்லா மதத்தினரும் கொண்டாடுராங்கன்னு ரீல் உடுறாங்க.இந்து மடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடுவது சித்திரையில்தான்(கருணாநிதியின் சட்டத்திற்கு பின்னும்).மக்கள் என்ன பண்டிகை எப்போ கொண்டாடணும்னு சொல்ல இது ஒன்னும் சர்வாதிகார ஆட்சி இல்லை!!இப்படி செஞ்சதனாலதான் கருணாநிதியை மூலையில் குந்த வைத்துள்ளனர்!

Madhavan Srinivasagopalan சொன்னது…

// மாத்திரை, முகூர்த்தம், அயனம் //

இவையாவும் தமிழ்ச் சொற்களா ?

ஆமென்றால், உங்களுக்குத் தெரிந்தது அவ்ளோதான்....

இன்பச்சுடர் சொன்னது…

ஜெயலலிதா அம்மையாரின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு புராண வரலாறு.ஜெயலலிதா உண்மையான தமிழச்சியல்ல பார்பனச்சி.ஆகையால் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் பார்பனியத்துக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்.இவரது முடநம்பிக்கை புகுத்தலை தட்டிக் கேட்க தமிழக சட்ட சபையில் ஒரு சரியான ஆண்பிள்ளை கிடைக்கவில்லையா?