செவ்வாய், 3 மே, 2011

எதோ ஒரு நாசவேலைக்கு தயாராகிறது அமெரிக்கா...



சோவியத் யூனியன் ஆதரவுபெற்ற  ஆப்கானிஸ்தானின் இடதுசாரி ஜனாதிபதி Dr.நஜிபுல்லாவை, ரத்தவேறிபிடித்த அமெரிக்கா மற்றும் அமெரிக்காவினால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒசாமா பின் லேடன் உதவியோடு தாலிபான்கள் துப்பாக்கியால் கொன்றும் வெறியடங்காமல் தூக்கில் தொங்கவிட்ட  காட்சி தான் இது.  ஒசாமா பின் லேடன் செய்த நாசகரச்செயல்களில்  இது மறக்கமுடியாதது.
ஒசாமா பின் லேடன்  உருவான கதை :
                  ஐநூறு ஆண்டுகள் கூட  இல்லாத அமெரிக்காவின் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ரத்தவாடை தான் அடிக்கும்.எப்போதும் இரத்தவெறி பிடித்து அலையும் நாடு. தனக்கு அடங்கி நடக்காத எந்த ஒரு நாட்டையும், தன்னுடைய ரௌடிதனத்தையும் கட்டப்பஞ்சாயத்தையும் தட்டிக்கேட்கும் எந்த ஒரு நாட்டையும் விட்டு வைக்காது. அப்படி பல நாடுகளை நாசப்படுத்தி இரத்தம் சிந்தவைத்து ஆனந்தமடையும் இரத்தவெறி பிடித்த ஓநாய். தன்னுடைய இந்த ஆனந்தமான வேட்டைக்கு இரத்தவெறி பிடித்த பல ஓநாய்களை உருவாக்கியது தான் இதனுடைய வரலாற்றுச் சாதனை. தனக்கு பிடிக்காத நாடுகளை சீரழிப்பதற்கென்றே பல தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் உருவாக்கி உலகெங்கும் பரவச்செய்தது. 
                    அப்படிப்பட்ட அமெரிக்காவின் கொடிய வரலாற்றின் பயங்கரமான பக்கங்களின் ஒரு பகுதி தான் இந்த ஒசாமா பின் லேடன். சோவியத் யூனியனுக்கு எதிரான கொரில்லா போர் நடத்துவதற்கும், ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் ஆதரவோடு ஆட்சிபுரிந்த  அதிபர் டாக்டர் நஜிபுல்லா தலைமையிலான இடதுசாரி அரசை வீழ்த்துவதற்கும் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இரத்தவெறி பிடித்த ஓநாய்  தான் இந்த ஒசாமா பின் லேடன்.    தாலிபான் பயங்கரவாதிகளுடன்  இணைந்து தீவிரவாத செயல்களில்  ஈடுபடுவதற்கு அமெரிக்கா பின் லேடனுக்கு நிறைய நிதியுதவி செய்திருக்கிறது. சோஷலிச நாடுகள் மற்றும் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் இந்த தீவிரவாதிகளை பயன்படுத்தி அமைதியை குலைத்துவந்த அமெரிக்கா நாளடைவில் பாலஸ்தீனம் மற்றும் வளைகுடா நாடுகள் இஸ்லாமிய நாடுகள் மீதும் தன்னுடைய இரத்தவெறி பிடித்த பார்வையை திருப்பியது. அந்த நாடுகளின் அமைதியை குலைத்தது. இப்படியாக உலகமெங்கும் தனது மேலாதிக்கத்தை உறுதி செய்ய இஸ்லாமிய மக்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட  இரத்தவெறி பிடித்த ஓநாய் ஒசாமா பி லேடன் தலைமையில் பாயத்தொடங்கியது. அமெரிககா மீது ஆத்திரமடைந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத - பயங்கரவாத சக்திகளெல்லாம் பின் லேடன் தலைமையில் ஓரணியில் திரண்டு அமெரிக்காவையே தாக்கத் தொடங்கியது என்பது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவு தான். அதற்காகத்தான் ஒசாமா பின் லேடன் அமெரிக்காவின் அமைதியை குலைப்பதற்கென்றே அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கினார். 
                    இந்த சூழ்நிலையில் தான், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் உலக வர்த்தக மைய அலுவலகம் இருந்த உயர்ந்த இரட்டைக் கோபுர கட்டடம் விமானங்களை விட்டு மோதச்செய்து தகர்க்கப் பட்டது. இதை தொலைக்காட்சியில் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. அமெரிக்காவோ உறைந்து போனது. அந்த கட்டடம் தகர்க்கப் பட்ட இடத்தில் அமெரிக்க காவல் துறையும் உளவுத்துறையும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போதே அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பத்திரிக்கையாளர்களிடம்  முந்திக்கொண்டு அந்த கட்டடத்தை தகர்த்தது  ஒசாமா பின் லேடன் தலைமையிலான் அல்கொய்தா  அமைப்பினர் என்றும், ஒசாமா பின் லேடனை பிடித்து தண்டிக்கப்போவதாகவும், உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஒழிக்கப்போவதாகவும் கொக்கரித்தார். 
                  அதன் ஒரு பகுதியாகத்தான் ஒசாமா பின்  லேடன் மறைந்திருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பெரும் போர் நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது என்பது இரத்தத்தில்  எழுதப்பட்ட வரலாறு.  அன்றையிலிருந்து இன்று வரை சல்லடைப்போட்டு தேடினார்கள். பின் லேடன் அமெரிக்காவின் கையில் சிக்கவில்லை. 
                 இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வருகிறது. 
இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டி இட்ட ஜார்ஜ் புஷ்க்கு, பின் லேடன் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் நிலவிய வேலையின்மை மற்றும் வேலையிழப்பு போன்ற பிரச்சனைகளும்  சவாலாக அமைந்தது. தேர்தலில் வெற்றிபெறுவது என்பது கேள்விக்குறியாகவும் இருந்தது. அந்த சமயத்தில் தான் மக்களின் பார்வை தன் பக்கம்   திரும்புவதற்கும் தேர்தலில் குறுக்கு வழியில் சுலபமாக வெற்றிபெருவதற்கும்  ஒரு திட்டம் தீட்டினார். அது தான் தேர்தல் நெருக்கத்தில் அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சிகளில் ஒசாமா பி லேடன் தோன்றி இரட்டை கோபுரத்தை தாக்கியது போல் மீண்டும் அமெரிக்காவை மீண்டும் தாக்குவேன் என்று சொல்வது போல் கிராபிக்ஸ் வித்தைகளை பயன்படுத்தி  ஒளிபரப்பப் பட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இதைப்பார்த்து மிரண்டு போன அமெரிக்க மக்கள் ஜார்ஜ் புஷ்ஷின் பக்கம் சாய்ந்தார்கள். புஷ்ஷும் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதும் வரலாறு. அமெரிக்காவைப் பொறுத்தவரை  பின் லேடன் ஒரு முக்கிய அரசியல் துருப்புச்சீட்டு.
                இப்போது கூட எந்த சூழ்நிலையில் பின் லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். 

வருகிற 2012-ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க மக்கள் தங்களது 57-வது அதிபரை தேர்ந்தெடுக்க  உள்ளனர். தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா தான் அந்த தேர்தலில் மீண்டும் போட்டி இட்டு வெற்றிபெற்று அதிபராக வேண்டுமென்று ஆசை படுகிறார். ஆனால், அவர் சொந்தக் கட்சி-யிலேயே அதிபர் தேர்தலில் வேட்பாளாராய் நிற்பதற்கே பலத்தப் போட்டி இருக்கிறது. ஜனநாயக கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கு ஒபாமாவுக்கு போட்டியாக நிற்கக்கூடியவர் ராண்டேல் டெர்ரி என்பவர் தான். ஒபாமா வேட்பாளர் தேர்வில் வெற்றிபெற்று பிறகு அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இவர் மற்ற அதிபர்களைப் போல் சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய அளவிலான போர் எதுவும் நடத்திக்காட்டவில்லை.  அதனால் தான்  ஒபாமாவுக்கு பின் லேடன் என்கிற துருப்புச்சீட்டுத் தேவைப்படுகிறது. 
                 கடந்த பத்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பின் லேடனை அமெரிக்க ராணுவ சிறப்பு அதிரடிப்படையினர் ஒருவழியாக கண்டுபிடித்து சுட்டுக்கொன்றத் தகவலை அதிபர் ஒபாமா தானே சுட்டுக்கொன்றது போல் ஒரு கதாநாயகனை போல் பத்திரிகையாளர்களிடம் எக்காலமிட்டார். அந்தச் செய்தியை கேட்டு அமெரிக்காவே அதிர்ந்து போனது. மக்கள் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிபோயினர். 
                  ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது. பின் லேடனைப் பற்றியோ  தீவிரவாதத்தைப் பற்றியோ அமெரிக்கா பேசுகிறது என்று சொன்னால் அது, தனக்கு வேண்டாத எந்த நாட்டின் மீதோ போர்தொடுக்க தாயாராகிறது என்று பொருள். எதோ ஒரு நாசவேலைக்கு தயாராகிறது என்று பொருள்.
                அமெரிக்க அதிபர் பின் லேடன் கொல்லப்பட்டச்  செய்தியை அறிவிக்கும்போது வேறு சில கருத்துக்களையும் ஒபாமா உதிர்த்தார். ஒசாமா பின் லேடனை கொன்றதன் மூலம்  உலகத்தில் தீவிரவாதமே முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் ஒபாமா  கர்ஜனை செய்தார். அமெரிக்காவின் இயற்கை குணம் மாறாத வரையில் எப்படி தீவிரவாதத்தை  ஒழிக்கமுடியும். அமெரிக்கா உருவாக்கியது ஒரு பின் லேடனை அல்ல. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையுமே  தொழிலாக - கொள்கையாக  கொண்ட இரத்தவெறி  பிடித்த  பல  பின் லேடன்களை உருவாக்கி இருக்கிறது. அவர்களை ஒழித்துக்கட்டாமல் உலகில் தீவிரவாதத்தை ஒருகாலும்  ஒழித்துக்கட்ட  முடியாது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அமெரிக்கா திருந்தவேண்டும். அமெரிக்கா திருந்தாமல் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியாது.

கருத்துகள் இல்லை: