ஞாயிறு, 1 மே, 2011

ஹையோ.. ஹையோ.. என்னைவெச்சி காமெடி கீமெடி பண்ணலையே..



             இன்று தினமணி பத்திரிகையில் இந்தச் செய்தியை படித்தபோது எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. ஒரே நகைச்சுவை தான் போங்க. நீங்களும் கொஞ்சம் படியுங்களேன்..

அச்சமின்றி செயல்படுங்கள்: சிபிஐ அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு
புதுதில்லி,ஏப்.30:                                                                                       
                    முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்வதில் மத்திய குற்றப்புலனாய்வு கழகம் - சிபிஐ அதிகாரிகள் அச்சமின்றி செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். 
                  மேலும் சிபிஐ மேற்கொள்ளும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 
                  புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்துப்பேசிய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்குகளை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய மன்மோகன்சிங், இந்த வழக்குகள் உங்களுக்கு பெரிய சோதனை. சிபிஐ மேற்கொள்ளும் வழக்குகளை அச்சமின்றி, சார்பு தன்மை இல்லாமல் விசாரிக்க வேண்டும். யார்-யார் தவறு செய்துள்ளார்களோ அவர்கள் மீது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு  உட்படுத்த வேண்டும். அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கக்கூடாது. தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். முறைகேட்டில் சிக்கியவர்கள் யார் என்று பார்க்காமல் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். இதில் விமர்சனத்துக்கு இடமளிக்காமல் விசாரிக்க வேண்டும்.
                  இதே செய்தி தான் தமிழ் ஆங்கில பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது.
இதில் என்ன நகைச்சுவை என்றால் மத்திய அரசின் துறையான சி பி ஐ என்கிற விசாரணை அமைப்பு என்பது  ஆட்சியாளர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் தனக்கு வேண்டாதவர்களுக்கு எதிராக பயன்படுத்தி  மிரட்டுவதற்கும் தன் கட்சியை சேர்ந்தவர்களின் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுமாகத் தான் இயங்கிவருகிறது. ஆட்சியாளர்கள் எப்போதுமே அந்த அமைப்பை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதே இல்லை. 
                  அப்படித்தான் 2007-2008-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் சுட்டிக்காட்டப்பட்டும், பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தனியாக கடிதமெழுதப்பட்டும்
சி பி ஐ - ஆல் கண்டுகொள்ளப்படாமல் மன்மோகன் சிங்கால் - மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்ட  2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் சி பி ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என்பது உலகமறிந்த உண்மையல்லவா. இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்பது பிரதமருக்கு தெரிந்திருந்தும்  அவர் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததை சுட்டிக்காட்டி உச்சநீதி மன்றம் மன்மோகன் சிங் தலையில் நறுக்கென்று குட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதுமட்டுமா.. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் சி பி ஐ தாக்கல் செய்த 80,000 பக்க குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரையோ தயாளு அம்மாள் பெயரையோ சரத்குமார் பெயரையோ சேர்ப்பதற்கு இடமில்லையா என்ன..? யாருக்கு சலுகை காட்ட முதலாவது குட்டப்பத்திரிக்கையில் அவர்கள் பெயரை சேர்க்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு இரண்டாவதாக தாக்கல் செய்த ''குட்டி'' குற்றப்பத்திரிக்கையில் கூட தயாளு அம்மாள் பெயர் விடுபட்டிருக்கிறதே.. இது 
யாருக்கு சலுகை காட்ட என்பது யாருக்கும் தெரியாதா..? வழக்கம் போல் மன்மோகன் சிங் இது எதுவுமே எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ள முடியாது.
               அப்படிப்பட்ட மன்மோகன் சிங் தான் யாரோ எழுதிக் கொடுத்ததை அந்த விழாவில் என்ன பேசுகிறோமென்று கூட  தெரியாமல் வாசித்திருக்கிறார் என்று அந்த செய்தியை படித்த உடன் குபீரென்று சிரிப்பு வந்துவிட்டது. 
                இப்படித்தான் மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரத்தில்  கூட இடது முன்னணி ஆட்சியில் மேற்குவங்கம் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்றும் கல்வி, சுகாதாரம், தொழில் துறையில் மேம்பாடு அடையவில்லை என்றும் குற்றஞ்சாட்டிப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தோழர்.சோம்நாத் சாட்டர்ஜி பேசும் போது பிரதமர் யாரோ எழுதிக் கொடுத்ததை படித்துள்ளார். களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு பிரதமரின் உரை தயாரிக்கப்பட்டுள்ளது குற்றம்  சாட்டினார்.  
                இனிமேலாவது பிரதமர் அவரது உரையை படிக்கும் முன்  உரையை எழுதி கொடுப்பவரிடம்...
''என்னைவெச்சி காமெடி கீமெடி பண்ணலையே. ஹையோ.. ஹையோ.. என்று வடிவேலு ஸ்டைலில் கேட்க வேண்டும். 


கருத்துகள் இல்லை: