புதன், 26 பிப்ரவரி, 2014

ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம் - மதவெறி பாஜகவை தடுப்போம்...!

இந்திய குடியரசின் திசைவழியை தீர்மானிக்கும் தேர்தல்...!
ஊழல், மதவெறியை ஒழிப்போம்...! 
உண்மையான கூட்டாட்சியை அமைப்போம்...! 11 கட்சிகள் கூட்டாக பிரகடனம்

            வரவிருக்கும் 16வது மக்களவைத் தேர்தலையொட்டி நாட்டில் உள்ள 11 பெரிய கட்சிகள் இணைந்து தலைநகர் தில்லியில் கூட்டாகப் பிரகடனம் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
               நாடு 16வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் தேர்தலுக்கு செல்ல இருக்கிறது. இந்தியக் குடியரசின் எதிர்காலம் எந்தத் திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பதற்கான தருணம் இது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி -2 அரசாங்கம் அனைத்துவிதமான பிரச்சனைகளையும், நாட்டு மக்களுக்கு கடும் துன்பங்களையும் இதுவரையில் கொடுத்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்தது மட்டுமல்ல, அது பணக்காரர்களுக்குச் சார்பாகவும் திருப்பி விடப்பட்டது.
              முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு மக்களின் வாழ்வைச் சூறையாடிவிட்டது. நாட்டில் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இளைஞர்கள் வேலையின்மையாலும் வேலையிழப்பாலும் மிகவும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்குமா என்பதற்கான சூழலே இல்லை. பல லட்சக்கணக்கான பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பெண்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பற்ற சூழலில் வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் என்பது நிர்வாகத்தில் புரையோடிப்போய்விட்டது.
           இதுவே மாற்றத்திற்கும், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதற்குமான தருணமாகும். காங்கிரசுக்கு தானே மாற்று என்று கூறிக்கொண்டிருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து எந்தவிதத்திலும் மாற்றுக்கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. இன்றைக்கு  பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் புரிந்துள்ள ஊழல்களும், பின்பற்றுகின்ற பொருளாதாரக் கொள்கைகளும் அக்கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதத்திலும் மாற்றுக்கட்சி என்று கூறமுடியாத வகையில்தான் இருக்கிறது. இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவைதான்.
            மேலும், பாஜக பின்பற்றும் தத்துவம் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதும், மதநல்லிணக்கத்திற்கு விரோதமானதும் ஒட்டுமொத்தத்தில் நம் மதச்சார்பற்ற ஜனநாயக வலைப்பின்னலையே ஆபத்திற்குள்ளாக்கக்கூடியதுமாகும். பாரதீய ஜனதாக் கட்சியும் மதவெறி சக்திகளும் தோற்கடிக்கப்படவேண்டும்; ஆட்சிக்கு வர முடியாத விதத்தில் தடுக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிகும் மாற்றாக ஓர் அணி சேர்க்கையை உருவாக்கிடவேண்டும்.
            அது ஜனநாயகப்பூர்வமான மதச்சார்பற்ற, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய விதத்தில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மக்கள் ஆதரவு வளர்ச்சிக் கொள்கையைப் பின்பற்றக்கூடியதாக அமைந்திடவேண்டும்.
            இங்கே கூடியிருக்கிற 11 கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஆட்சியாளர்களால் ஏற்றப்பட்டுள்ள சொல்லொண்ணாத் துன்ப துயரங்களிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய விதத்தில் ஒன்றிணைந்து பணியாற்றத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காக,
(1) அரசாங்கத்தில் ஊழலை ஒழித்திடவும், வெளிப்படைத்தன்மையை உத்தரவாதப்படுத்தவும் கூடிய விதத்தில் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்திடவும்,
(2) நம் சமூகத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, ஓர் உறுதியான மதச்சார்பற்ற மாண்பை நிலைநிறுத்திடவும்,
(3) தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், சமூக நீதி, விவசாயிகளின் நலன்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் மக்கள் சார்ந்த வளர்ச்சிப்பாதையை மேற்கொள்ளவும்,
(4) அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலையை மாற்றி, அனைத்து மாநிலங்களுக்கும் உரிமைகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய வகையிலும், மிகவும் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய விதத்திலும் ஓர் உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தை உருவாக்கிடவும் தீர்மானித்திருக்கிறோம்.
               எங்களின் இத்தகைய முயற்சியுடன் நாட்டில் உள்ள இதர மதச்சார்பற்ற-ஜனநாயகக் கட்சிகளும், சக்திகளும் இணைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி குடிமக்களும், எங்கள் கட்சிகளுக்கும், நாங்கள் முன்வைத்துள்ள கொள்கைகளுக்கும் தங்கள் ஆதரவினை நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். 
இவ்வாறு 11 கட்சிகளின் கூட்டுப் பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கிறது.
இதில், அஇஅதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜூ ஜனதா தளம், அசாம் கணபரிசத், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 
          ஊழல் காங்கிரசை தூக்கி எறிவோம்...!             
          மதவெறி பாஜகவை தடுப்போம்...!                    
       மக்கள் நல மாற்று அரசை அமைப்போம்...!        

கருத்துகள் இல்லை: