வெள்ளி, 16 செப்டம்பர், 2011

காவல்துறையின் அத்துமீறலே பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணம்

              கடந்த செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆய்வு நடத்திய  பிறகு அந்த அதிர்ச்சி மேலும் கூடுதலாகியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தியது  என்பது காவல்துறையின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தான் அந்த ஆய்வு நமக்கு எடுத்து காட்டுகிறது.
             படுகொலை செய்யப்பட்ட மண்டலமாணிக்கம் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த த.பழனிகுமார் என்ற தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜான்பாண்டியன் காவல் துறை அனுமதி  கேட்ட போது  காவல் துறை அனுமதி அளித்திருந்தால் அந்த நிகழ்ச்சி அமைதியாக முடிந்திருக்கும். ஆனால். அவர் சென்றால் கலவரம் நடக்கும் என்று  சொல்லி அனுமதி மறுத்து விட்டார்கள். ஆனால், அவர் கைது செய்யப்பட்டப் பின் தான் தேவையற்ற பிரச்சனையே  ஏற்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையின் அத்துமீறலும், உளவுத்துறையின் பொறுப்பற்ற தன்மையுமே காரணமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத்தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.
              இச்சம்பவம் நடந்த போது, சில நூறு பேர் தான் அந்த இடத்தில் இருந்துள்ளனர். அவர்கள் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவும் இல்லை. காவல்துறையின் ''வஜ்ரா'' வாகனத்தின்  அருகிலேயே காவலுக்கு காவலர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படி  இருக்கும் போது அதில் எப்படி தலித் மக்கள் தீ வைத்திருக்க முடியும்? காவல்துறையினர் தான் திட்டமிட்டு அவ்வாகனத்திற்கு தீ வைத்ததாக சிலர் கூறுகிறார்கள். தமிழகஅரசு நியமித் துள்ள நீதிபதியின் விசாரணையில் நிச்சயம் அந்த உண்மைகள் வெளி வரக்கூடும்.
                பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பது தவிர்க்க முடியாதது என அரசால் சொல்ல முடியாது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது அவர்களின் மார்பிலும், கைகளிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன. காலுக்குக் கீழே யாரும் சுடப்படவில்லை. கூட்டத்தைக் கலைக்க காவல்துறை நினைக்கவில்லை என்பதை இத்தாக்குதல் உறுதிசெய்துள்ளது. துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு காவல்துறை தடியடியும் நடத்தியுள்ளது என்பது அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

                  கூடிய கூட்டதைக் கலைக்க முன்னறிவிப்பின்றி தலித் மக்களின் நெஞ்சைக் குறி வைத்து காவல்துறை சுட்டது ஏன் என்ற வினாவையும் அவர் எழுப்பினார்.  காவல்துறை கடுமையாக சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறையாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
                  இந்த மரணத்திற்கு காரணமான - பலர் படுகாயம் அடைவதற்கு  காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக தமிழக அரசு இடைநீக்கம் செய்ய வேண்டும். ஆனால். இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர்களை வைத்துக் கொண்டு நீதி விசாரணை நடத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி.

கருத்துகள் இல்லை: