திங்கள், 19 செப்டம்பர், 2011

மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் மறைந்தார் - அஞ்சலி

                ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான தோழர். சி.எஸ்.சுப்ரமணியன் அவர்கள் தனது  102 -ஆவது  வயதில் நேற்று சென்னையில் காலமானார். இவரது சொந்த ஊர்   மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள கோமல் கிராமம் ஆகும்.  இவரின் தந்தை சுந்தரம் அய்யர்  பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தாய் மீனாட்சி. இத்தம்பதியின் நான்கு மகன்களில், சி.எஸ்.சுப்ரமணியன் ஒருவர். இரண்டு சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள்.
             அந்தக் காலத்திலேயே, ஐ.சி.எஸ். படிக்க லண்டன் சென்ற தோழர்.சுப்ரமணியன், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பு ஏற்பட்டு, அக்கட்சியின், "டெய்லி ஒர்க்கர்'' என்ற பத்திரிகையில், இந்திய விவகாரங்கள் பற்றி எழுதி வந்தார். ரஷ்யப் புரட்சியின் நினைவாக, "அக்டோபர் கிளப்'' என்ற மாணவர் அமைப்பை லண்டனில் உருவாக்கி நடத்தி வந்தார். எனவே, ஐ.சி.எஸ்., படிப்பை முடிக்காமல், 1933 - ஆம் ஆண்டு  கம்யூனிஸ்ட்டாகவே  இந்தியா திரும்பினார். 
                தோழர் அமீர் ஹைதர்கானுடன் பாஷ்யம் (ஆர்யா) மூலம் சி.எஸ்.1934ல் தொடர்பு கொண்டார். அமீர் ஹைதர்கான் அமைத்த குழுவில் சி.எஸ்.- ம் சேர்ந்து கொண்டார். அந்தக் குழுதான் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையாகும். தோழர்கள் ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், கே.முருகேசன், ஏ.எஸ்.கே.அய்யங்கார் ஆகியோர் கொண்ட அந்தக் கிளைக்கு தோழர் சி.எஸ். தான் செயலாளர். 
              1940ல் ரகசிய மாநில மையத்தில் இயங்கிய தோழர் . சி.எஸ்., பி.ராமமூர்த்தி மற்றும் சிலருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 1941ல் தோழர்கள் பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், சி.எஸ்.சுப்ரமணியம், சுப்ரமணிய சர்மா, கேரளீயன், ஹனுமந்தராவ், உமாநாத் ஆகிய தோழர்கள்   மீது சென்னை சதிவழக்கு போடப்பட்டது. அதில் கடும் தண் டனை விதிக்கப்பட்டது. எனினும் 1942ல் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அது முதல் ஜனசக்தி நாளிதழ் அச்சகம் கட்சியின் மாநில மையம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக செயல்பட்டார். தோழர்கள் பி.ராமமூர்த்தி, பி.சீனி வாசராவ் ஆகியோருடன் மிக நெருக்கமாக இருந்தார்.
                 இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பலமுறை சிறைத் தண்டனை அனுபவித்தவர். ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஜுகுனாபாயை திருமணம் செய்து கொண்டார்.
1943ல் நடைபெற்ற முதல் அகில இந்திய மாநாட்டிற்குச் சென்றார். 1945ல் மார்க்சிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1950க்குப்பின் தென்னிந் திய ஆய்வுக் கழகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டு பல்வேறு நூல்களை பதிப்பித்தும் வெளியிட்டும் வந்தார். பின்னர் கோபிச்செட்டி பாளையம் சென்று அங்கு மனைவியுடன் தங்கியிருந்தார்.
               நூறு வயதுக்குப்பின்னால் சிபிஐ மாநில தலைமையால் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டார். தன் இறுதி மூச்சுவரை ஒரு கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்த தோழர்.சுப்ரமணியன், "தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் வரலாறு' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
              தோழர் சி.எஸ். கண்டிப்பானவர், நேர்மையானவர், சோசலிசம்தான் மாற்று, மார்க்சியம் வெற்றிபெறும் என உறுதியாக நம்பியவர். இளைய தோழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடந்து கொண்டவர்.
               மறைத்த தோழர். சி எஸ். அவர்களுக்கு எங்களின் வீரவணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




கருத்துகள் இல்லை: